Wednesday 18 December 2013

வஜனாம்ருதம் தொடர்ச்சி 2



வஜனாம்ருதம் தொடர்ச்சி 





100. மயிலுக்கு தேவாங்கு ஜன்ம விரோதியாய் இருப்பது போன்று காமம் ஞானத்துக்கு ஜன்ம சத்துரு ஆகின்றது.

76. அசுர குணம் படைத்தவர்களுக்கு நல்லுபதேசம் செய்தல், குளிர் ஜுரம் உடையவர்களுக்கு கொடுக்கும் அன்னம் போன்று விஷமாக மாறும்.

77. அறநெறி ஒழுங்கில்லாத அரசியல்வாதிகளின் ஆட்சியில், பஞ்சமா பாதகங்கள் பெருகும்.

78. சொந்தச் சுக துக்கங்களுகுத் தானே காரணமென்பதை தன்னை ஆராய்ந்து அறிந்து கொண்டவர்களுக்கு நாளடைவில் நிறைந்த சாந்தியும் ஆத்ம சுகமும் கிடைக்கின்றது.

79. அறமில்லாதவனுக்கு இறைவனும், இறை உணர்வு இல்லாதவனுக்கு அறமுமில்லை.

80. அறநெறியும், அரசாட்சியும் பிராணனும் சரீரமும் போன்றவை. ஆறாம் குன்றிய ஆட்சி வீ ழ்ச்சியடைகிறது.

81. உலோகாயுதக் கல்வியால் புத்திக்குட்பட்ட காரியங்களைத்தான் கற்பிக்க முடியும். சமயக் கல்வியால் புத்திக்கும் அப்பாற்பட்ட விஷயங்களையும் அறியமுடியும்.

82. எல்லா மனிதருடைய அடிப்படைத் தேவைகளும் ஒன்றாயிருந்த போதிலும் அவை நிறைவேறும் முறைதான் கால தேச வர்த்தமானகளுக்கு ஏற்ப மாறுபடும்.

83. பன்றியின் சயன சுகம் சேற்றில் தங்கியிருப்பது போன்று நெறி கெட்டவர்களுக்குப் பஞ்சமா பாதகங்கள் சுகமாய்த் தோன்றும்.

84.எருதிலிருந்து பால் சுரந்தாலும், வஞ்சகர்களிடத்திலிருந்து அன்பு சுரப்பது அரிதிலும் அரிது.

85. உருக்கினால் உருகாத உலோகப் பொருள் உலகில் இல்லாதிருக்கலாம், எனினும் மூக்கரின் உள்ளம் உருகுவது மிகக் கடினம்.

86. வித்தினின்றும் மரம், மரத்திலிருந்து பூ, காய், பழம் உண்டானாலும் மரத்தில் காய்த்துப் பழுத்த பழம் மரத்திற்குரியதன்று. இது மரத்தின் நியதி. அதேபோன்று தவத்திலிருந்து ஞானம், ஞானத்திலிருந்து சுகம் பிறக்கும். ஞானசுகம் ஞானிக்கு மட்டும் உரியதன்று.

87. ஞானியின் ஞானசுகம் ஞானகாரகனாகிய ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படும் பொழுது இறை சிருஷ்டிகள் அதனைப் பகிர்ந்து கொள்கின்றன.

88. பிறருடைய நலத்தைப் பேணி வளப்பவர்களின் சுய சுகம், பர சுகமாக மாறிவிடுகிறது.

89. உனது சொந்த விருப்பு வெறுப்புகளைப் புறக்கணித்து இறைவனுடைய விருப்பத்திற்கு உன்னை ஆளாக்கி விடும் போதே இறை அருளுக்கும், அன்புக்கும் நீ பாத்திரமாகிறாய்.

90. உன்னிடமிருக்கும் சகலவிதமான உடைமைகள், உரிமைகளை முற்றாக விட்டுவிடு. உன்னை நிர்க்கதிக்கு உட்படுத்து. உனது சுயசிந்தனையிளிருந்தும் விலகு. பட்டம் பதவிகளை உதறு. கற்ற கல்வியை நிஷ்பிரயோசனப்படுத்து. இங்ஙனம் நீ செய்யமுடியுமானால் "சரணாகதி" என்ற உயர்ந்த நிலையால் ஞானத்தின் உச்சநிலை அடைவாய்.

91. இரத்த சோகையால் துன்புறும் நோயாளிக்கு இரத்த விருத்திக்குரிய மருந்தினாலன்றி வேறு ஒன்றினாலும் சுகம் கிடைக்காதது போன்று, அஞ்ஞானத்தினால் துன்பப்படுகிறவர்களுக்கு, ஞானத்தால் அன்றி, வேறொன்றினாலும் சுகம் கிடைப்பதில்லை.

92. தவத்தினாலன்றி உபதேசத்தினால் ஞானசக்தி உண்டாவதில்லை.

93. உபதேசத்தினாலும், உபதேசம் பெறுவதினாலும் பூரணத்துவம் அடையமுடியாது.பற்றின்மையாலேயே அதை அடையலாம்.

94. மதமும் தர்மமும், முத்துச்சிப்பியும் முத்தும் போன்றது.

95. சரிரம் இருக்கும்வரை ஞானிக்கும் பசி, தாகம், உறக்கம், பிணி போன்ற சரீர உபாதைகள் இருக்கத்தான் செய்யும்.

96. குளிர்ந்த கார்முகிலை உஷ்ணமுகில் உராயும் பொழுது இடியும்,மின்னலும் உண்டாவது போன்று தர்மத்திற்கும்,அதர்மத்திற்கும் நடக்கும் போராட்டத்தில் சத்தியம் என்ற மின்னல் தோன்றுகிறது.

97. குருவை குருவாகவும், தெய்வத்தை தெய்வமாகவும் கருதுகின்றவர்களுக்குத்தான் குரு தேவை. தெய்வம்தான் குரு என்று காணுகின்ற பேரறிஞனுக்கு குருவின் தேவைதான் என்ன?

98. நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற சில பறவைகள் போன்று ஞானியும், இகத்திலும் பரத்திலும் சஞ்ச்சரிக்கக்ககூடிய தகுதியுடையவர்.

99. பறவைகள் உண்பது, கூடுகட்டுவது, தேகசுத்தம் செய்வதாகிய மூவகைக் கருமங்களையும் தமது ஒரே ஒரு அலகினால் மாத்திரஞ் செய்து முடிக்கின்றன. அதேபோன்று ஞானியின் ஞானமும் அநேக கருமங்களைச் செய்து முடிக்கும் வல்லமையுடையது.

100. மயிலுக்கு தேவாங்கு ஜன்ம விரோதியாய் இருப்பது போன்று காமம் ஞானத்துக்கு ஜன்ம சத்துரு ஆகின்றது.







.வஜனாம்ருதம் தொடர்ச்சி 1

Saturday 7 December 2013

உதயம்


உதயம் 

படமும் போட்டு தலைப்பும் போட்டாயிற்று. படைப்பு எதுவாக இருக்கும் என்று இதுவரை எனக்கும் தெரியாது. நிறைய எழுத வேண்டும் என்று எண்ணிக் கொள்வேன். அனால் ஒரு சோம்பேறித்தனம் தாமச குணம் தடுத்து நிற்கும். "உதயம் " உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். நாம்தான் அதைக் காண அடுத்த நாளுக்காக ஏங்கிக் கொண்டிருப்போம். ஏனெனில் எம்மால் காலத்தோடு ஓடமுடியாது. 

இருந்த இடத்தில் இருந்துகொண்டு உதயத்தைக் காண இருபத்துநான்கு மணி நேரம் காத்துக் கொண்டிருக்கும் எமக்கு வாழ்வின் உதயமும் நீண்ட நாள் போராட்டத்தின் பின்னர் அல்லது எதிர்பார்ப்பின் பின்னர் வருமென்று ஏங்குகிறோம். உண்மையில் உதயம் என்பது கணத்துக்குக் கணம் எம்முள் நிகழ்கிறது. அதை நாம் காணத் தவறிவிடுகிறோம். அதுமட்டுமல்ல ஒரு அற்புதமாக அது நிகழ வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறோம்.

ஒவ்வொரு நாள் காலையிலும் எழும்போது எமது எதிர்பார்ப்புகள் ஏக்கங்களை ஒரு மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டு நின்மலமான மனதோடு அந்த நாளை எதிர் கொள்ளப் பழகுவோம். எந்தவொரு சம்பவங்களையும் உறவுகளையும் இருகரம் நீட்டி வரவேற்போம். நமது குடும்பத்தில் உள்ளவர்களைக் கூட புதியவர்களாகக் காணப் பழகுவோம். அவர்கள் பற்றிய இறந்தகால விம்பங்க்களை உடைத் தெறிந்துவிட்டு புதிய உறவுகளாகக் கொண்டாடுவோம்.

இதை ஒரு பயிற்சியாகக் கொள்ளாமல் இயல்பாகவே செய்து பாருங்கள். நீங்களே உங்களளவில் ஒரு புதிய மனிதராக மாறியிருப்பீர்கள். அது உங்களுக்கு ஒரு புதிய உதயமாகும். உங்கள் உள்ளம் உவகை கொள்ளும். முதல் நாள் பகைமையோ மனதைப் புண்படுத்திய செயல்களோ உங்களைப் பாதிக்காது. அன்று பிறந்த குழந்தை போல ஒவ்வொன்றையும் உற்று நோக்கத் தொடங்குவீர்கள்.

உதயம் உங்கள் இதயத்தின் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்தால் உங்களைவிட அதிஸ்டசாலி வேறேவராகவும் இருக்கமுடியாது.

Sunday 1 December 2013

மனைவி


மனைவிளங்க வந்ததனால் மனைவியானாள் - ஒரு
துணையாக நின்றதனால் துணைவியானாள் - வாழ்வின்
சாரத்தை புரியவைத்து சம்சாரமானாள் - ஒரு
ஆதார சுருதியாகி என்தாரமானாள்.

ஆட்டிப் படைத்ததனால் பெண்டாட்டியானாள் - ஏதோ
சாதிக்க வந்ததனால் பெஞ்சாதியானாள் - சம்மதம்பெற
சதிசெய்வதனால் சதியுமானாள் - தினம்
பத்துமணிக் கினிப்பதனால் பத்தினியானாள்.

அரிசியில்லை பருப்பில்லை என்பதனால் இல்லாளானாள்
அச்சம் மடம் நாணங்கொண்டு  குடும்பத்தலைவியுமானாள்
பாரிய சுமைகள் தாங்கி பாரியாரானாள் - அவள்சொல்
மீறிவிட்டால் மனையே ஆட்டி மனையாட்டியுமானாள்.

கூறிவிட்டேன் மனைவிக்கு பன்னிரு மறுபேர்கள்
குறையிருந்தால் மன்னிக்கவும் இதையிங்கு மறுப்போர்கள்
பாடிவிட்டேன் பக்கத்திலே அவளிருக்கின்றாள் - பயமிருக்கு
பன்னிரண்டில் என்னவாக மாறப் போகிறாள்.


நேரடி ஒளிபரப்பிற்காக நடாமோகன் நடத்திய கவியரங்கிற்கு என் மனைவி அருகிலிருக்க எழுதிய கவிதை. இன்று அவள் இவ்வுலகில் இல்லை என்றாலும் அன்று அவள் சிரித்த சிரிப்பொலி இன்னும் என் செவியில் ஒலிக்கிறது. என் மனைவியின் நினைவோடு இதைப் பகிர்கிறேன்.

Saturday 23 November 2013

வஜனாம்ருதம் தொடர்ச்சி 1

வஜனாம்ருதம் தொடர்ச்சி 



51. மனதை ஆத்மாவில் லயம் செய்தது நிறுத்தும் நிலைதான் மனோலயம். மன நாசம், மனத்தைக் கடந்தநிலை என்றெல்லாஞ் சொல்லப்படுவதுமஃதே.

52. அரசியல், பொருளாதாரத் தத்துவங்கள் சமயக்கொள்கைகளுக்கு மாரானதன்று. அவை சில மகத்தான உண்மைகளின் அடிப்படையில் சிந்தனை செய்து செயற்படுத்தும் பொழுது சமயம் அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளும்.

53. ஆத்ம சுகம், மனச்சுகம், சரீரசுகம் என்ற மூவகைச் சுகங்கள் மனிதனுக்குத் தேவை. சரீரசுகம் இல்லாதவனுக்கு மனச் சுகம் இல்லை. மனச் சுகம் இல்லாதவனுக்கு ஆத்ம சுகம் இல்லை.ஆத்மசுகம் பூரணமாயிருப்பவனுக்கு மனச் சுகத்திலும், சரீர சுகத்திலும் நாட்டமுமில்லை.

54. தர்மத்தையுணர்ந்து அதன் வழி நில்லாதவர்க்கு ஞானம் என்பது பிறப்பதில்லை.

55. தர்மம் காய் போன்றது எனில், ஞானம் பழம் போன்றதாகும். வாழ்க்கையில் தர்மம் என்ற காய் முற்றி ஞானம் என்ற பழமாகப் பழுக்கிறது.

56. அடிப்படையில் விடுதலை வெளிப்படையில் உலக ஷேமமும் தான் ஒரு மத விசுவாசியின் இலட்சியமாக இருக்கவேண்டும்.

57. தர்மத்திற்கு இருக்கும் அதே ஆயுள் அதர்மத்திற்கும் இருக்கின்றது.

58. உயர்வதும் தாழ்வதுமாகிய இயற்கை நியதிகளைப் போன்று தர்மமும் அதர்மமும் காலாகாலத்தில் தேய்வதும் வளர்வதுமாகத் தோற்றமளிக்கிறது.

59. மத விசுவசமுடைய சிறந்த அரசாட்சியின் துணையால்தான் அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நிறுத்த முடியும். மக்கள் தர்மத்தை அனுஷ்டிக்கும் வகையில் ஆட்சி செலுத்தி தர்ம நெறியில் மக்கள் ஒழுகத் தொடங்கும் பொழுது ஆட்சியின் அவசியம் மக்களுக்கு தேவையற்றதாகிவிடுகிறது.

60. தர்மத்தின் அடிப்படையில் அரசாட்சி இருந்தால்தான், மதகுருமார்களினாலும் மதப்பிரசாரத்தாலும் பிரயோசனம் ஏற்படும்.

61. தர்ம சிந்தனைக்கு இடமில்லாத நிர்வாகமும், கல்வி முறையும் இருக்கும் இடத்தில், எக்காலமும் அமைதி நிலவுவதற்கு இடமில்லை.

62. தர்ம சிந்தனை இல்லாத மக்கள் இருக்குமிடத்தில் எத்தகைய அரசாட்சியும் நிலைத்திருப்பதில்லை.

63. அரசாட்சியை விட தர்மம் பெரியதென்று மக்கள் நினைக்கும் பொழுதுதான் அரசாட்சி அதன் உண்மையான குறிக்கோளை அடையும்.

64. வேற்றுமையில் ஒற்றுமையிருக்கும் இயற்கை இரகசியத்தை அறிந்தவகள் உள்ளத்தில் சமரசம் தானாகவே பிறக்கிறது.

65. பிராணன், மனம், புத்தி மூன்றும் ஆத்மாவில் லயக்கும்பொழுதுஅதி அற்புதமான சுகம் பிறக்கிறது.

66. எங்கு பண்பு குறைந்திருக்கின்றதோ அங்கு தருமமில்லை. தர்மத்தின் செயலுருவம்தான் பண்பு.

67. தாய் தந்தையின் அந்தரங்க எண்ணங்களின் உருவ வடிவமாகத்தான் குழந்தைகள் பிறந்திருக்கின்றன.

68. தாய் தந்தையர்களின் அடிமனதில் பதிந்திருக்கும் எண்ணங்களுக்கு தக்கபடி, பிறக்கும் குழந்தைகளின் அடிப்படைச் சுபாவமும், அமைந்திருக்கும்.

69. தர்ம சிந்தனைகள் அடி மனதில் பதியாதவர்களுக்கு நன்மக்கள் பிறப்பதில்லை.

70. தர்மத்தை உபாசிக்கின்றவர்களுக்குத் தர்ம தேவதை புத்திரனாகப் பிறக்கின்றது.

71. நல்லறமிக்க இல்லறத்திலிருந்து ஒழுக்கமுடைய மக்கள் பிறக்கின்றனர்.

72. நல்லறமில்லாத இல்லறமே ஒழுக்கங் கெட்ட பிரஜைகளுக்குக் காரணம்.

73. மாதா, பிதா, குரு, அரசன் இந்நால்வரும் அறநெறியில் வாழ்பவராகில், கெட்ட பிள்ளையும், கெட்ட சிஷ்யனும், கெட்ட பிரஜையும் இருக்க முடியாது.

74. சத்தியம், தர்மம் இவற்றை இரு கண்களாக வைத்து வாழ்கின்றவர்களுக்கு அரசியல் சலுகையும் பாதுகாப்பும் எதற்கு?

75. சுயநலம் கருதி கடமையும், சேவையும் செய்கின்றவர்களுக்கு இறுதியில் அதுவே துன்பத்திற்குக் காரணமாகின்றது.























Thursday 21 November 2013

கவிஞனின் அனுபவம்

கடகட எனவொரு இசைபட வருகிற
ரெயிலினி லனுதின மிடர்பல படுகிற
கவிஞனி  னனுபவ மிகைபட மிகைபட
தினமொரு கவிய மனதினி லமைவுற
அதையொரு காகித மிசைபட இயம்பிட
 பலரதை ஒருமுறை புகழுரை நயம்பட
உரைத்திட உணர்வது தாய்மையி னின்பம்.

படபட எனபல உரைபல உரைத்திடு
மடமயில் மங்கையர் குரல்பல இணைந்திட
கடகட ரயிலொலி காற்றினி லோய்ந்திட
இடையிடை கூவிடும் இஞ்சினி னொலியது
தொலைவினி லொருரெயில்  வருவது போலவே
செவியினில் விழுவதால் தலையினை அடிக்கடி
வெளியினில் விடுவதால் விழியினில் விழுவது
கரித்திடவருவது கண்களில் கண்ணீர்.

ஒருகர மதிற்சில பொருள்பல இருந்திட
மறுகர மதுவொரு துணைஎனு மளவிலே
அகப்படு பொருளினை  குரங்கென பிடித்திட
பரபர எனவொரு துருதுருப் புடன்ரெயில்
புறப்படு வேளையில் நாணலாய் வளைவரேல்
சடசட வெனவொரு சரிவது காண்கிலர்
முதலதை பயின்றிட லவசியம் 'அரிவரி'
முழுவதும் பயின்றவ ரதிசயம் சரிவரின்.

பலபல நிறங்களில் பாவையர் சேலை
பலவித வகையினிற் பார்ப்பவர் சேட்டை
தினமிதைப் பொறுத்திட செல்வதோ ஆலை
இடையிடை நினைத்திட செய்வதே வேலை
ஒருபடி ஓய்ந்திட வந்திடும் மாலை
மறுபடி தொடர்ந்திடு மதுதான் வாழ்க்கை
அதையிதைச் சொன்னதால் ஆத்திரம் வேண்டாம்
அடுத்தவர் சுதந்திரம் காத்திட வேண்டும்.

கடகட எனவொரு இசையொடு போகிற
ரெயிலினி லனுதின மிடர்படசாகிற
கவிஞனி னனுபவ மதுவொரு தனிரகம்.

எழுபதுகளில் காகிதாலை வேலைக்குப் போகும் காலங்களில் கவிஞனின் பார்வையில் மட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை காகித ஆலைக்கு நாளாந்தம் ரெயிலில் செல்லுகையில் ஏற்ப்பட்ட அனுபவத்தை இக் கவிதையில் தந்தேன்.

Tuesday 29 October 2013

சுவாமிஜியும் நானும்



















உள்ளதெல்லாம் இங்கொன்றே                                               

ஆழ்துயில் தொட்டு அறிதுயில் மட்டும் 
ஆத்மானுபவம் பட்டேன் 
மூழ்வதுஎங்கே   மீள்வதுஎங்கே 
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

கருவறை தொட்டுக் கல்லறை மட்டும்
கண்ணிருந்தும் நான் குருடே
கருமையுமென்ன வெண்மையுமென்ன 
காண்பதெல்லாம் இங்கொன்றே!

ஆராரோ தொட்டு அழுகுரல் மட்டும் 
யாராரோ சொல்லக் கேட்டேன் 
அறிவுரைஏது அருளுரைஏது 
செவிடன் காதூதும் சங்கே!

பால்சுவை தொட்டு மதுச் சுவைமட்டும் 
பலவித சுவைகளைத் தொட்டும் 
இனிப்பது ஏது கசப்பது ஏது
சுவை அறியாத வாழ்வே!

பிறந்தமண் மணமும் இறந்தபின் மண்ணும்                                             பிழைபடா நாசியில் முட்டும் 
சுகந்தங்கள் பாதி கந்தங்கள் மீதி 
நுகர்ந்திடும் நுகர்வும் பொய்யே!

அன்னையின் ஸ்பரிசம் தந்தையின் ஸ்பரிசம்
ஆண்பெண் ஸ்பரிசங்கள் எல்லாம்
எல்லையில்லாத இன்பங்கள் தாமோ?
இல்லை இவையும் இங்கு பொய்யாமே!

பொய்மையில் தொட்டு மெய்மைக்கு மட்டும்
போவதே ஜீவனின் திட்டம் அதில் 
உண்மையும்மில்லை பொய்மையும்மில்லை
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

ஜயனி என் மனைவி



உதிரும் நினைவில் உதிரா நினைவாய் 
மலரும் நினைவில் மலராய் வருவாள் 
புதிதாய் புதிதாய் உறவுகள் வரினும் 
புரியாப் புதிராய் உறவுகள் பிரியும்.

அரிதாம் அரிதாம் மனிதம் அரிதாம் 
அதனினும் அரிதாம் அறிவை அறிதல்
அறிவால் உறவை அறிபவன் மனிதன்
அன்பால் உறவைப் புரிபவன் புனிதன்.

மனிதம் மறைந்து புனிதன் பிறந்தால்
இனிநம் உலகே இறைவன் வீடாம்
அறிவை மறந்து அன்பால் உணர்ந்தால்
தெளிவை அடைந்து தெய்வம் ஆவாய்.

தெய்வம் ஆன தேவதை அவளே
தெய்வம் ஆகின் தேவைகள் இல்லை
தெய்வம் அடிநான் சேரும் வரையென்
மலரும் நினைவில் மலராய் வருவாள்.

நாளொருமேனி பொழுதொருவண்ணம்




நாளொருமேனி பொழுதொருவண்ணம் 
நடப்பவை எல்லாம் நன்மைக்கே 
நானொருபோதும் கவலையில் ஆழேன் 
நம்பிக்கை கொள்வேன் உண்மைக்கே
.
மாதொருபாகன் ஆகிய நாதன் 
கங்கையைக் கரந்தான் தலையினிலே 
ஏனொருகேள்வி எழுந்ததே இல்லை 
என்னதான் தத்துவம் இக்கதையினிலே?

தத்துவம் சொல்லத் தத்துவமுள்ளோர்
தத்துவந் தந்து உதவட்டுமே
பக்குவமில்லா மனிதனின் மனதை
பக்குவப் படுத்தி உயர்த்தட்டுமே
.
மாலவன் மண்ணில் ராமனாய்வந்து
மனைவி ஒன்றென உரைத்தானே
ஆனவன் பின்னால் ஆண்டவனாகி
ஆயிரம் மனைவிகள் கொண்டானே.

ஏனிவை எல்லாம் ஏறுக்குமாறாய்
எங்கள் மதத்தில் ஏறினவோ?
மானுடம் இதனால் நேருக்குநேராய்
எதைத்தான் உணர்ந்திடக் கூறினவோ?

பாருக்குப் பலதும் கூறிடும் பெரியோர்
பதிலுரை கூறி உதவட்டுமே
யாருக்குக் கூறி ஆவதுஎன்ன?
என்றோர் எண்ணத்தை உதறட்டுமே.



Monday 28 October 2013

கண்ணா நீ




கண்ணா நீ முகங் காட்ட வா பெண் மனம் 
கண்ணாடி பொருள்போல் அன்றோ!
மன்னா நீ மறை போற்றும் மாதவனே ஆனாலும் 
முன்னால்  நீ வரும் போது முற்றும் எனக்கன்றோ!  





தேய்ந்து வளரும் சந்திரன் போல நம் வாழ்வும் இருந்தால் நாம் பல பிழைகளை மீண்டும் மீண்டும் செய்யாது வாழ்ந்திருப்போம்.

வஜனாம்ருதம் தொடர்ச்சி...

அஸதோ மா ஸத்கமய 
தமஸோ மா ஜ்யோதிர்கமய 
ம்ருத்யோர் மா அம்ருதம்கமய 
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி.



50. அறிவினாலும், அப்பியாசத்தினாலும் மனதைத் தன்வசப்படுத்தத் தெரிந்தவனுக்கு வாழ்க்கை என்பது காற்பந்து விளையாட்டுப் போன்று சுவைமிக்க விளையாட்டாகும்.

26. மனித வாழ்க்கை அருவருக்கத் தக்க நிலைக்குத் தாழ்ந்துவிடும் பொழுதும், சமுதாயப் பண்புகள் நஷ்டப்படும் பொழுதும் இவ்வுலகில் மனிதனாகப் பிறப்பதற்குரிய சந்தர்ப்பம் கிடைத்த நன்றிக்கடனுக்காவது நாம் மேலான வாழ்வு வாழக் கடமைப்பட்டிருக்கிறோம். இதை உணராமல் செய்யுஞ் செயல் எல்லாம் தன்னைத்தான் வஞ்சிப்பதாகும்.வஜனாம்ருதம்

27. தங்கள் தங்களுடைய தேசிய கலை, கலாச்சாரத்திற்குத் தனி மதிப்பளிக்கும் ஒரு அரசியலமைப்புக்கு மாத்திரந்தான் ஆதரவளிக்க வேண்டும். ஏன்?... இதில்தான் எங்களுடைய முழுச் சுதந்திரமும் தங்கியிருக்கின்றது.

28. காலமெல்லாம் பாலூட்டிவளர்த்த பாம்பும் ஒரு நாள் ஊட்டிய கரத்தில் கொத்தும். அவ்விதமே செய் நன்றி மறந்த மனிதனும்.

29. சான்றோர் மனம் புண்பட நடந்தால் தீர்த்தால் தீராத பிரம்ம சாபம் உன்னை விட்டு அகலாது.

30. உன் குற்றம் மற்றவர் குற்றமாவதில்லை.குற்றத்தை உணர்ந்தால் திருத்துவதும், திருந்துவதும் எளிது.

31. நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி, தெய்வம் உன்னைக் கணப்பொழுதிலும் கைவிடுவதில்லை. உயிர்த்துடிப்பின் ஆதார சத்தி தெய்வமாய் இருக்கும்பொழுது அது கைவிட்டால் நீ வாழ்வது எங்ஙனம்?

32. அழிய வேண்டியது அழியும் பொழுது அதனைப் பார்த்துத் துயரம் கொள்ளாதே.

33. புயல் சமுத்திரத்தில் கொந்தளிப்பை உண்டு பண்ணினாலும் சமுத்திரம் சமுத்திரமாகவே இருப்பது போன்று பக்குவம் அடைந்தவர்களுடைய மனமும்,வாழ்க்கையும் உலக விகாரத்தினால் கொந்தளிப்பதில்லை.

34. புனித யாத்திரைகள், ஆலய தரிசனம் போன்றவைகளை இறைவனோடு இணையும் முறையில், திரிகரண சுத்தியுடன் சிறுமைக் குணங்களை நீக்கிச் செய். அழுக்காறுகள் நீங்கும்வண்ணம் அது புனிதமாய் இருக்கட்டும்.

35. அந்தரங்க சுத்தி இல்லாத நாம ஜெபம் தியானம் போன்றவைகள் எள்ளளவிலும் பயன்
அளிப்பதில்லை. அது வெறும் நாடகமாயும், தன்னையும் மற்றவர்களையும் ஆத்மவஞ்சனைக்கு உட்படுத்தும் ஒரு தந்திரமாகவும் மாறலாம்.

36. நல்லொழுக்கக் குறைவால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் துயரம், கடவுளே! கடவுளே! என்று சொல்லிக் கொண்டிருப்பதால் மட்டும் தீர்ந்துவிடாது. நற்செயலால் மனதைப் பரிசுத்தப்படுத்தும் பொழுது எல்லாம் சுகமாய் முடியும்.

37. பசி,தாகமில்லாத இறைவனுக்கு வேளா வேளைக்கு நீரும், உணவும் அளிக்கிறீர்கள். தூணிலும், துரும்பிலும் குடியிருக்கத் தகுதியுடையவனுக்குத் தனித்ததோர் இடவசதியும் செய்து கொடுக்கின்றீர்கள். உங்களுடைய அதே உணர்வும், செயலும்  மனிதனாகப் பிறந்தும், மனித உரிமையற்று நிர்க்கதியாய் ஊர்ந்து செல்லும் மனித உருவங்களுக்கு அளிக்கப்படுமானால், அதுவே இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சிறந்த நிவேதனமாகும்.

38. இரைப்பை பழுதடையும் வண்ணம் உண்டு உறங்கும்பொழுது, இலை தளைகளைத்தின்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஏழை மக்களைப் பற்றி நினையாத இருதயத்தில் இறைவன் கடுகளவும் நுழைவதில்லை.

39. மனதால் வாழ்கிறவன் மனிதன். நீதி நியாயத்திற்கு பொறுத்த மில்லாத ஆதிக்க மனமுடையவர்களுடைய மனதைவிட உங்களுடைய மனதை அதீத சக்தியுடையதாக மாற்றிவிடுங்கள். அங்ஙனம் நீங்கள் சுயரட்சகர்களாக மாறிவிடும் பொழுது விடுதலைக்குரிய வழிதானே பிறக்கும்.

40. சொல்லும் செயலும் சிந்தனையும் தாய் மொழிமூலம் செயற்படும் போது விடுதலையின் முதற்கதவு திறக்கப்படுகிறது.

41. மூர்க்கத்தனமான அசுரசக்தியைக் கூரிய புத்தியாலும் நுணுக்கமான உபாயத்தாலும் எளிதில் வென்றுவிடலாம்.


42. வாழ்க்கை உரிமைகளுக்குரிய சமசந்தர்ப்பம் மனிதனுக்கு மாத்திரமன்று, விலங்கினத்திற்கும் இருக்க வேண்டும்.அதைப் பகிர்ந்தளிக்கும் தேசம்தான் தர்மதேசம்.

43. தங்கள் தங்களை இன்னும் ஆழமான ரீதியில் அறிவதற்கும், நாள்தோறும் கூடுதலான கர்ம சக்தியைப் பெறுவதற்கும் பழகிக் கொள்ள வேண்டும். சொந்தப் பிரச்சனைகளை நேரடியாக பார்த்தறிவத்ற்கும், அதைச் சுயமாகவே தீர்ப்பதற்கும் இதைத் தவிர வேறு வழியில்லை.

44. கிடைக்கும் சுதந்திரம், சந்தர்ப்பம் இவற்றை சரிவர உபயோகப்படுத்தத் தவறினால் அது மீண்டும் கிடைப்பதரிது.

45. இராவணன், கம்ஸன், துரியோதனன், சூரன் போன்றவர்களுக்குத் தண்டனைக்குப் பின்புதான் பாவ மன்னிப்புக் கிடைத்திருக்கிறது.

46. பொருளின் தாரதம்மியங்களைக் கொண்டு வாழ்க்கையின் உயர்வு தாழ்வை நிச்சயிப்பது மடமை.மனதின் தராதரத்தைக் கொண்டுதான் அதை நிச்சயிக்க வேண்டும். மனத் தெளிவுடையவனுக்கு இலாபமும் நஷ்டமும் ஒன்றேயாகும்.

47. தேவையானதை வைத்துத் தேவையில்லாததை விட்டுவிடும் இயற்கையான அறிவு சகல ஜீவராசிகளிடத்திலும் இயல்பாக அமைந்திருக்கிறது. மனிதனில் அது விவேகம் அல்லது பகுத்தறிவு என்ற சிறப்பான குணத்துடன் இருந்தும் பேராசையால் அது அறியப்படுவதில்லை.

48. மனம் எப்பொருளில் கலந்திருக்கிறதோ அப்பொருளின் வடிவம் கொள்ளும்.

49. மனம் ஒரு நுண்மையான பொருளாதலால் அதை முறையாக ஆராய்ந்தால் எளிதில் அறியக் கூடியதேயாகும். 










Wednesday 16 October 2013

அம்மா

அன்னை என்று உன்னை எந்தன்
அறிவில் கொண்ட நாள் முதல்
முன்னை பின்னை என்றில்லாமல்
மூவுலகத்திலும் உன்னையல்லதோர்
தெய்வமும் உண்டாங் கொள்ளோ.

இன்று (28/10/2013) எமதன்னையரின் 48வது சிரார்த்த தினம்.திதியல்ல. கந்த சஷ்டி விரத நான்காம் நாள் வரும் சதுர்த்தி திதியே அன்னாரின் திதி ஆகும். நானும் என் மைந்தனும் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு முன் விளக்கேற்றி மலர்தூவி நம் வணக்கங்களைத் தெரிவித்தோம். என் சகோதர - சகோதரியாருடன் தொடர்பு கொண்டு சொன்ன போது அவர்கள் முற்றாகவே இன்றைய தினத்தை மறந்து விட்டிருந்தது என் மனத்துக்குக் கொஞ்சம் நெருடலாயிருந்தது. அவசர உலகம், பரபரப்பான வாழ்க்கை என்று ஆயிரம் காரணங்கள் சொல்ல வந்தாலும் பெற்றோரின் இறந்த தினம் கூடமறந்து போகுமா?





என் அன்னையை நான் எனது பதினாறாவது வயதில் இழந்தேன்.
ஆறில் இழந்தால் அறியாத வயது. தேறியிருப்பேன்.
அறுபதில் இழந்தால் அனுபவித்த வயது. ஆறியிருப்பேன்.
பதினாறில் இழந்ததில் பழியானது எனது கல்வி மட்டுமல்ல; வாழ்வின் சுவையான பகுதியுந்தான்.
அன்று என் அன்னையின் நினைவாஞ்சலி மலரில் நான் எழுதிய வரிகளில் சில துளிகள்.

ஈன்றெடுத்த தாய் எனக்கின்றில்லை
நாளையெனைச் சான்றோனெனக்
கேட்க வருவளோ - இனி யார்தமக்கு
தோன்றும் பேரவலம் துடைத்து நின்று
சான்றோன் எனச் சார்தல்.

28.10.1965 இல் எழுதிய கவிதை. இனறு 48 வருடங்களின்
பின்னர் எதிரொலித்ததில் என்னுள்
நானே உடைந்து போகிறேன்.






இவர்களில் எண்மர் எனது தாயாரின் மைத்துனரும் மைத்துனியும் ஆவர்.
இவர்களில் சிலர் தங்களின் தாய் தந்தையரொடும் அப்பப்பா அப்பம்மாவோடும்
உள்ள 1909ஆம் ஆண்டுப் படம் விரைவில் போடவுள்ளேன்.






மூன்றெழுத்துக் கவிதை 'அம்மா'
முதலெழுத்து இல்லாட்டில் 'ம்மா'(பெரிய)
முடிவெழுத்து மட்டுமெனில் 'மா'
எல்லாமே பெரிதைத்தான் குறிக்கும்
அம்மா.

Wednesday 9 October 2013

வஜனாம்ருதம்

அஸதோ மா ஸதகமய தமஸோ மா ஜ்யோதிர்கமய ம்ருத்யோர் மா அம்ருதம்கமய ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி.


25. மனச்சாந்தியை இழந்தவர்கள், தன்னையும் உலகத்தையும் வெறுக்கின்றனர். அன்றியும் தான் கொண்டதுதான் சரி என்ற ஆபத்தான பிடிவாத குணம் உடையவராயும் இருப்பர். எனவே தனக்கும் சமுதாயத்திற்கும் உபத்திரவம் இல்லாது வாழ மனச் சாந்தியை வளர்த்தெடுக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------------------வஜனாம்ருதம்

அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர் மா அம்ருதம்கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி

1. உனது வாழ்வில் நிரந்தரமான சுகத்துடன் நிம்மதியாக வாழ முடியுமா? என்ற விஷயத்தில் என்னனவும் சந்தேகப்படாதே. கருகிய கரி நெருப்புடன் சம்பந்தப் படும் பொழுது அதன் இயற்கையான கருமை மாறி ஒளிர்கின்றது. அதே போன்று உனது மனம் தெய்வீக ஒலியில் கலந்திருந்தால் ஜீவசுகம் நிறைந்த சம்பூரண மனிதனை உன்னில் காணலாம்.

 2. கறல் ஏறிய இரும்பைக் காந்தம் ஈர்க்காதது போன்று அழுக்கு நிறைந்த மனதைத் தெய்வீக ஒளி கவர்ந்தெடுப்பதில்ல.

3. உனது இதயத்தை தூய்மைப் படுத்துக. அப்பொழுது சிந்தனா சக்தியும் செயலாற்றும் திறமையும் அற்புதமான ரீதியில் பெருகும்.

4. நீ தெய்வத்தைப் பார்க்கவில்லையென்றாலும் தெய்வம் உன்னைப் பார்க்கிறது.

5. கண்கள் உலகத்தைப் பார்க்கும்  சக்தியை இழந்தாலும், தெய்வத்தைப் பார்க்கும் சக்தியை இழப்பதில்லை.

6.உனது சிறு செயலிலும் சிற்றறிவிலும்கூட பேராற்றலும் பேரறிவும் மறைந்திருக்கிறது. அதை உணரக்கூடிய அளவிற்கு இதயத்தைப் புனிதப்படுத்துக.

7.தார்மீக வழியில் தேடிய பணம் அவ்வழியில் செலவழித்தால் பாபங்கள் தேய்ந்துவிடும்.

8.உன் மனக்குற்றம் மற்றவர்களின் குற்றமாகத் தோற்றமளிக்கிறது.

9. அழுக்காறு நீங்கியபின் செய்யுந் தொண்டுதான் தொண்டு.

10. குறுகிய மனமுடையவனின் பக்தி நஞ்சு கலந்த அமிர்தம் போன்றது.

11.தன்னைத்தான் அளந்து பார்க்கத் தெரியாதவன் மற்றவர்களை அளந்து பார்ப்பது எங்ஙனம்?

12.உலோபியின் செல்வம் பாம்புப் புற்றிலிருக்குந் தேன் போன்றது.

13. நல்லதாயினும் அது நல்லோர்களிடத்திளிருந்து வரவேண்டும். 

14. கர்ம ரகசியம் தெரிதவனுக்கு  வாழ்க்கை விளையாட்டரங்கம் போன்றது. 

15. சேர்ந்து வாழ்ந்தாலும் நீரிற் கலந்த என்னேய்யைப்போல் வாழ்.

16. உன்னை உன்வசப்படுத்தினால், மற்றவர்கள் உன் வசப்படுவார்கள்.

17. உண்மை இருக்கும் இடத்தில் அழகும், இளமையும் பொழியும்.

18. அடிமைகள் வாழ்ந்தாலும், நலன் பெறுவதற்கு ஒன்றுமேயில்லை.

19. மரணபயம் இருக்கின்றவன் விடுதலையின் உயர்ந்த சுகத்தை அறிவதில்லை.

 20. அரிய சந்தர்ப்பங்கள் பலதும் உன் எதிரில் நிற்கின்றன. குழைத்து ஊட்டும்போது உண்ண மறுக்கும் குழந்தையைப்போல், சந்தர்ப்பத்தை உணர்ந்து செயற்படுத்தத் தெரியாதவர்கள்,துன்பத்திலிருந்து மீளுவதில்லை.

 21. காலத்தைப் பிரயோசனப்படுத்தத் தெரியாதவர்களுக்குக் காலமும், காலனும் ஒன்றே.

22. உபயோகமுறை தெரிந்தால் நஞ்சும் அமுதமாகும்.

23. உரிமை இல்லாத இடத்தில் உரித்துடன் பேசி விரோதிகளைத் தேடாதே.

24. மனிதா! உனது மெய்யன்பை உணர்ந்து ஏற்றுக்கொள்ளும் வகையில், இவ்வுலகம் இல்லை. அதை உணர்ந்து அன்புடன் அரவணைக்கும் இறைவனிடம் அன்பு செலுத்தினால், வஞ்சனை இல்லாத பேரன்பில் முழ்கி வாழலாம்.

25. மனச்சாந்தியை இழந்தவர்கள், தன்னையும் உலகத்தையும் வெறுக்கின்றனர். அன்றியும் தான் கொண்டதுதான் சரி என்ற ஆபத்தான பிடிவாத குணம் உடையவராயும் இருப்பர். எனவே தனக்கும் சமுதாயத்திற்கும் உபத்திரவம் இல்லாது வாழ மனச் சாந்தியை வளர்த்தெடுக்க வேண்டும்.

வஜனாம்ருதம் தொடர்ச்சி...

Monday 23 September 2013

Enru thaniyum intha suthanthira thaakam




என்று தணியும் இந்த சுதந்திர தாகம் 
என்று முடியும் எங்கள் அவலத்தின் ஓலம் 
என்றெமதன்னை கை விலங்குகள் போகும் 
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும் 

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ 
பாரினில் இன்னல்கள் வேறினியார்க்கோ 
தஞ்சம் அடைந்தபின் கைவிடலாமோ 
தாயுந்தன் பிள்ளையைத் தள்ளிடப் போமோ 

அன்றுநம் மண்ணில்நாம் ஆயிரம் மடிந்தோம் 
இன்றுநம் மண்ணில்நாம் போராடிட வாழ்ந்தோம் 
என்றுநம் கனவுகள் வென்றெடுப்போமோ
நம்மை நாம் ஆண்டிடும் நாளும்வாராதோ.







தமிழ் ஆழிக் கரையினிலே
வெறும் சோழி பொறுக்கிடும்
சிறுவனைப்போல் நல்ல சொற்களைத்
தேடியலைகின்றேன்

வாழும்வடிவான கவிதைகள் செய்திடவே 
இவ்வையகந் துயரறவே எந்நாளுந்
தமிழ் ஆழிக் கரையினிலே நானோடி
சிறு சோழி சேகரிப்பேன்

மூழ்கித் தவங்கிடந்து சிலர்நல்
முத்துக்கள் கொண்டு வந்தார்
கூவிக் கடை விரித்து அவர்
கூட்டத்திலே விற்றுவிட்டார்

தமிழ் ஆழிச் சங்கெடுத்து சிலர்
ஆபரணங்கள் செய்தார் அதை
அரிந்து எடுத்ததனால் அவர்
அங்கங்கள் ரணமாக்கிக்கொண்டார்

வலம்புரிச் சங்கெடுத்து சிலர்வானதிலூதி
இனம்புரியாத ஒரு இன்பத்தை நுகர்கின்றார
தினந்தினங் காணும் காட்சிகள்தான் நான்
சோழிகள் தேடிடும் சிறுபிள்ளைதான்.



Ullathellaam ingonre


உள்ளதெல்லாம் இங்கொன்றே

ஆழ்துயில் தொட்டு அறிதுயில் மட்டும் 
ஆத்மானுபவம் பட்டேன் 
மூழ்வதுஎங்கே   மீள்வதுஎங்கே 
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

கருவறை தொட்டுக் கல்லறை மட்டும்
கண்ணிருந்தும் நான் குருடே
கருமையுமென்ன வெண்மையுமென்ன 
காண்பதெல்லாம் இங்கொன்றே!

ஆராரோ தொட்டு அழுகுரல் மட்டும் 
யாராரோ சொல்லக் கேட்டேன் 
அறிவுரைஏது அருளுரைஏது 
செவிடன் காதூதும் சங்கே!

பால்சுவை தொட்டு மதுச் சுவைமட்டும் 
பலவித சுவைகளைத் தொட்டும் 
இனிப்பது ஏது கசப்பது ஏது
சுவை அறியாத வாழ்வே!

பிறந்தமண் மணமும் இறந்தபின் மண்ணும் 
பிழைபடா நாசியில் முட்டும் 
சுகந்தங்கள் பாதி கந்தங்கள் மீதி 
நுகர்ந்திடும் நுகர்வும் பொய்யே!

அன்னையின் ஸ்பரிசம் தந்தையின் ஸ்பரிசம்
ஆண்பெண் ஸ்பரிசங்கள் எல்லாம்
எல்லையில்லாத இன்பங்கள் தாமோ?
இல்லை இவையும் இங்கு பொய்யாமே!

பொய்மையில் தொட்டு மெய்மைக்கு மட்டும்
போவதே ஜீவனின் திட்டம் 
அதில் உண்மையும்மில்லை பொய்மையும்மில்லை
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

உள்ளதெல்லாம் இங்கொன்றே

ஆழ்துயில் தொட்டு அறிதுயில் மட்டும் 
ஆத்மானுபவம் பட்டேன் 
மூழ்வதுஎங்கே   மீள்வதுஎங்கே 
உள்ளதெல்லாம் இங்கொன்றே!

கருவறை தொட்டுக் கல்லறை மட்டும்
கண்ணிருந்தும் நான் குருடே
கருமையுமென்ன வெண்மையுமென்ன 
காண்பதெல்லாம் இங்கொன்றே!

ஆராரோ தொட்டு அழுகுரல் மட்டும் 
யாராரோ சொல்லக் கேட்டேன் 
அறிவுரைஏது அருளுரைஏது 
செவிடன் காதூதும் சங்கே!

பால்சுவை தொட்டு மதுச் சுவைமட்டும் 
பலவித சுவைகளைத் தொட்டும் 
இனிப்பது ஏது கசப்பது ஏது
சுவை அறியாத வாழ்வே!

பிறந்தமண் மணமும் இறந்தபின் மண்ணும் 
பிழைபடா நாசியில் முட்டும் 
சுகந்தங்கள் பாதி கந்தங்கள் மீதி 
நுகர்ந்திடும் நுகர்வும் பொய்யே!

அன்னையின் ஸ்பரிசம் தந்தையின் ஸ்பரிசம்
ஆண்பெண் ஸ்பரிசங்கள் எல்லாம்
எல்லையில்லாத இன்பங்கள் தாமோ?
இல்லை இவையும் இங்கு பொய்யாமே!

பொய்மையில் தொட்டு மெய்மைக்கு மட்டும்
போவதே ஜீவனின் திட்டம் 
அதில் உண்மையும்மில்லை பொய்மையும்மில்லை
உள்ளதெல்லாம் இங்கொன்றே!