Saturday 17 December 2011

வைக்கோல் பட்டறை..

சின்ன சிறுவனிவன்..
கன்னி கவிதைகளை..
எண்ணி எழுதையிலே - சிலர்
... எள்ளி நகைப்பார்.

என்ன ஏது என்று
எண்ணியறியாமலே..
திண்ணை காலியானால்..
தள்ளியும் படுக்கார்- தானும் படுக்கார்

புத்தன் அவனுக்கோர்
போதி மரம் - என
எத்தன் இவனுக்கோ - என்ன
விதித்ததென ஏங்கியிருக்கையிலே!

இத்தை உலகத்தில்
போதி மரம் என்று
ஒத்தை மரம் தான்
எஞ்சியிருப்பதைப்போல்...

சத்தக் கவிதைக்கு..
போதியும்.. பேதியும்..
சித்தக் கலக்கத்தில்..
ஒத்து வருவதா????

ரெகு ராமின் பாடலுக்கு ஒரு பதில்

ஞானம் பிறக்க நல்லாசிகள்

கன்னிக் கவிதைகள்
எண்ணிக் கவிபாடும்
சின்னஞ் சிறுவர்களே!
நீங்கள்
பண்ணிப் படைக்கின்ற
பாட்டையும் கேட்டையும்
பார்த்துக் கிடப்பதற்கா?
நாங்கள்
எண்ணித் தவங்கிடந்தோம்?
கண்ணில் படுகின்ற
கருத்துக்கள் பிழை என்றால்
உங்கள்
திண்ணைக் கதைஎதர்க்கு? போதிமர
எண்ணிக்கைதான் எதற்கு?
மண்ணைக் கவ்வியும்
எங்கள்
மீசையில் மண் ஒட்டல்ல
கோஷங்கள் இங்கெதற்கு?
வார்த்தை ஜாலங்கள் ஏனுனக்கு?
தாங்கள்
பாடும் கவிதைகள்
கன்னியா? கிழவியா?
காலங் கணிக்கட்டுமே! உனக்கு
ஞானம் பிறக்கட்டுமே!

அருள்ஜோதிச்சந்திரன்

Friday 16 December 2011

எங்கே எனது போதிமரம்?


இறை தேடல்...

இறையென்று உண்டென்று நானறிவேனே

இறை தேடும் வழிதன்னை யானறியேனே

வழிதேடும் திசை கூட யாமறியோமே - திரும்பிய

திசையெல்லாம் சுவையாக கண்டேனே


பொருள் தேடும் பூமியில் - நான்

பொருள் வென்ற போதிலே

ஒரு திசை தன்னை வென்றேனே - இனி

பொருள் போதும் என்றேனே




புகழ் தேடும் மனிதருள் - நான்

புகழ் தேடி தானேயோ - இப்

புவிமாறி போனேனோ - இன்னும்

புகழ் தேடல் தொடருதே..




அருள் நாடும் உலகத்துள்

திரும்பிய திசை எல்லாம் நான் வென்று

இறுதியில் இறுமாப்பையும் கொன்று

அருள் கூடி இருள் நீங்கிச்செல்வேனோ - இல்லை




சிறு போக ஆசையில் சுழன்று

பொருள் தேடி.. பின் புகழ் தேடி..

வரன் தேடி..பின் இல் அறம் தேடி - மீண்டும்

சிறை நாடி செக்கிழுபட்டிருப்பேனோ


ரெகுராம்
Posted by Sidharthan at 15:25 1 comments:
அருள்ஜோதிச்சந்திரன் said...
ஒரு பதில்

இரை தேடும் உலகில்
இறை தேடல் உருவில்
உரையாடும் உந்தன்
கவியாடல் கண்டேன்.

குறை கூறி இங்கு
கவி பாட வில்லை
நிறைவாக எதையும்
நீ கூற வில்லை.

இறை யறிந்தாய் இறை
தேடும் வழி யறியாய் தேடிய
திசை எல்லாம் சுவை யறிந்தாய்
சுவைத்தவனை அறிந்தாயா?

பொருள் தேடி ஒருதிசை
வென்றாய் நீ - வாழ்க்கையின்
பொருள் தேடி எத்திசை
சென்றாய் நீ என்றும்?

புகழ் தேடி இப்புலம்
மாறி வந்தாய் நீ
பகல் தேடி கதிரவன்
பயணித்தல் அறிவாயா?

அருள் நாடும் உலகென்று
வைத்தாயே ஒரு ஆப்பு
அதுவே உன் கவிதைக்கு
ஒரு பெரும் முஸ்தாப்பு.

சிறு போக ஆசையில்
எல்லாமே அடங்கிவிட
பெரும் போக ஆசைகளை
பேரிட்டு எழுதிவிடு.

போதி மரத்தடியில் வெறும்
பேதிக்கு ஒதுங்காதே - பாவம்
இன்னும் சில புத்தர்களும்
ஒதுங்க சுத்தமாய் இருக்கட்டும்.

அருள்ஜோதிச்சந்திரன்

16 December 2011 18:33
Post a Comment

Saturday 10 December 2011

மன வேதனை

தேவனைத் தொழுதேன் மனவேதனை அகல
நாதனைத் தொழுதேன் நரவேதனை அகல
ஆர்தனைத் தொழுதென் ஆரிடம் அழுதென்
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

மனதிலோ கவலை உடலிலோ முதுமை
அறிவிலோ அவலம் ஆத்மாவின் சபலம்
தனதில்லா பொருளை தனதென்றலையும்
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

உறவினைப் பகையென் றுணர்ந்த பின்னாலே
உறவினர் பகைவர்கள் உறவின் முன்னாலே
கரவில்லா அன்பை காண்பதற்கில்லை என்று
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

நெடுவழிப் பயணம் நெருங்கிய மரணம்
தருமொரு பாடம் சாதனையாக
கருவறை உறவும் கசந்ததைக் கண்டு
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

அருள்ஜோதிச்சந்திரன் 10 /12 /2012