Sunday 17 May 2015

இனிய துணையை நினைந்து நினைந்து...

சிலசில ஆண்டுகள் முன்னம் 
பலரும் போற்றும் வண்ணம்
சேர்ந்து வாழ்ந்தது ரெண்டன்னம்.

காலையில் அலைகள் மேலோடி
களிப்புடன் நீந்திடும் இரைதேடி
மாலையிலே இருள்வேளையிலே
அவை வந்திடும் தங்கள் இடம்நாடி.

அன்னம் பொரித்தது ஒரு குஞ்சு
ஆனந்த வாழ்வின் இளம் பிஞ்சு
ஆசையாக வளர்த்தது நாளும்
ஆணும் பெண்ணும் கொஞ்சியே!

இப்படி இருந்திடும் நாளையிலே
எழுந்து பெரிய கொடும் புயலே
அற்புதம் போலே சொற்பன வாழ்வு 
தூள் தூளாகி மறைந்ததுவே!

தனியே பிரிந்த ஓரன்னம் 
தஞ்சமின்றி அலைகிறதே
இனியதுணையை நினைந்துநினைந்து
ஏங்கி கண்ணீர் விடுகிறதே!