Friday 16 May 2014

அசாதாரணமான ஒரு சாதாரண மனிதர்



பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களால் எழுதப்பட்டது.

அசாதாரணமான ஒரு சாதாரண மனிதர் 

இயற்கை அற்புதமானது. அதன் விதிகள் அற்புதமானவை. அவற்றை மீறிய நிகழ்வுகள் என்ற வகையில் அற்புதங்கள் என எதுவும்மில்லை. நாம் இயற்கையை அறிய அதன் விதிகளை அறிய முயல்கிறோம். அதேவேளை அவ்விதிகளை மீறும் அற்புதங்களுக்காக காத்திருக்கிறோம்.அவற்றை நிகழ்த்துவதற்கு இயற்கையில் மிக சாதாரணமான படைப்பான மனிதரிடையே எவரையாவது எதிர் நோக்கி இருக்கிறோம். ஜோசியக்காரர்கள் வருகிறார்கள். வித்தைக்காரர்கள் வருகிறார்கள். துறவு வேடம் பூண்டோர் வருகிறார்கள். நாம் அவர்களிடம் மயங்குகிறோம். பகுத்தறிவுக்கு எட்டாதது என்று நாம் கூறும் பரம்பொருளின் இருப்பை நிலைநிறுத்த தர்க்க முறையிலான வாதங்களையும் விஞ்ஞானத் தகவல்களையும் துணைக்கு அழைக்கிறோம். மனித இருப்பு வெகு சாதாரணமானது என்பதாலேயே அது அற்புதமானது. எளிய விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கான முயற்சி இல்லாமலே அறிவதற்கு எட்டாத விஷயங்கள் பற்றி நம்மால் தீர்ப்பு வழங்க இயலுமாகிறது. இவ்வாறான முரண்கள் ஆன்மிகம், ஞானம், யோகம் என்ற பேர்களில் ஊக்குவிக்கப்படுகின்றன. தெளிவான சிந்தனையும் நேரான மதியும்  தீர்க்கக்கூடிய விஷயங்களுக்கு யார் யாரையோ தேடி அலையும் நிர்ப்பந்தம் எமக்கு.

புற வளர்ச்சிக்கு மேலாக அக வளச்சியையும் உலக ஞானத்திற்கு மேலாக ஆன்மீகத்தையும் சமுதாயப் பொறுப்புகட்கும்,நீதிக்கும் மேலாக தவயோகத்தையும் வலியுறுத்துகிற சாமிமாரைப் பணக்காரர்களும், பிரமுகர்களும் சூளுகிறார்கள். விளம்பர யுகம் யாரை விட்டுவைக்கிறது. கைக் கெட்டுத் தொலைவிலுள்ள சுடர்விலக்கைவிடத் தொலைவில் மின்னும் வண்ண விளக்குகள் நம்மைக் கவருகின்றன. இவ்வாறான மயக்கங்களினின்று நாம் மீளுமுன் நம் கைக்கு எட்டக் கூடியன காணாமற் போய்விடுகின்றன. சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் பற்றி நான் எழுதுவதற்கு ஜோதி என்னைக் கேட்டது மட்டுமே காரணமல்ல. நான் அறிந்த நல்ல மனிதர்களுள் அவர் ஒருவர் என்பதும் அவரிடமிருந்து கற்கவேண்டிய நிறைய உள்ளது என்பதும் முக்கியமானவை.

அவரைப் பெயர் குறிப்பிட்டு எழுதுவதோ, பேசுவதோ இதுவே முதன்முறையாக இருக்கலாம். அவரது பிள்ளைகளுடைய பெயரைக் குறிப்பிட்டு, இவரை அவரது அப்பா என்றோ அவரது குடும்பத்தினருடன் போகும்போது அப்புச்சி என்று அவரது பிள்ளைகள் அழைப்பது போலவோ தான் அழைப்பது வழக்கம். அம்மா சந்திரசேகரத்தார் என்று சொல்வது நினைவு. மற்றப்படி அந்த வீடு அயல் எல்லாம் புளியடிமச்சி என்ற பெயராலேயே குறிப்பிடப்படும். அசாதரமானவை என்று நாம் வழமையாகக் கருதும் எதுவிதமான பண்பும் அவரிடமில்லை. பணம், பட்டம், பதவி என்றவாறான அளவுகோளால் மதிப்பிடும் வெற்றிகள் அவருக்குரியனவல்ல. அவற்றின் மீதான மோகமும் அவரிடமிருந்ததாகத் தெரியவில்லை. அதேவேளை மனிதரது தேவைகளும் உணர்வுகளுஞ் சார்ந்த ஆபாசங்கட்கு அப்பாற்பட்டவராகவும் அவர் இருக்கவில்லை. தனக்குத் தெரிந்த வாழ்க்கையை தனக்குத் தெரிந்த நெறிகட்கமைய ஆரவாரமில்லாமலேயே வாழ்ந்தவர் என்று சொல்லலாம்.

அவரது உலகநோக்கு மரபு சார்ந்ததும், பழமை பேணுவதுமான ஒன்று. அதை எல்லார் மீதும் திணிக்கும் நோக்கம் அவரிடம் இருந்ததில்லை.தன்னுடைய வயதையும் அனுபவத்தையும் மற்றவர்களை அடக்கும் ஒரு ஆயுதமாக அவர் பிரயோகித்ததாக நினைவில்லை. வயதுக்கேற்ற மரியாதை என்பது மனிதருடன் பேசுவதிலும் பழகுவதிலும் உள்ள பண்பு என்று மட்டும் வரையறுத்துக் கொள்ளாமல் அதிகாரத்துக்கான தகுதி என்று கருதுகிற மனோபாவம் அவரிடம் இருக்கவில்லை. இதனால் அவருடன் எந்த நேரத்திலும் எந்த சூழலிலும் எதைப்பற்றியும் சமத்துவமான முறையில் பேச இயலுமாயிருந்தது.என்னைவிட நாற்பத்தாறு வயது மூத்தவர் என்ற உணர்விற்கே இடமில்லாமல் பன்னிரண்டு பதின்மூன்று வயதில் கூட அவருடன் உரையாட முடியுமாயிருந்தது.

அவர் கோபப்படாதவரோ கடுமையான மொழி பேசாதவரோ இல்லை. நியாயவீனமானவையும் ஏமாற்றும் கடுமையான கோபத்தை வரவழைப்பதுண்டு. சிலசமயம் நெருக்கமானவர்களுடன் குரலை உயர்த்திப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். புளியடிமச்சியுடன் இவ்வாறான சூடான வாக்குவாதங்கள் அடிக்கடி நிகழும். ஆனால் அவர்களைப் போல நெருக்கமான கணவன் மனைவி என்று பலர் இல்லை.

பிறர் பொருள் மீது ஆசைப்படாதவர்கள் கூட மற்றவர்களது நல்ல நிலையைப் பார்த்துப் பொறாமைப்படுவதுண்டு. தன்னுடைய நிலையை மற்றவர்களது நிலையுடன் ஒப்பிடுகிற அக்கறைகூட அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. பொய்ப் புகழ்ச்சிக்கான தேவையும் அவருக்கு இருக்கவில்லை. பிள்ளைகளுடைய படிப்பு, தொழில் போன்ற அலுவல்களிலும் அவர் அதிகம் குறுக்கிடவில்லை. இதனால் அதிகம் கெட்டுப் போனதாகவும் தெரியவில்லை. சில பெற்றோர்களினளவுக்கு மிகுதியாக குறிப்பிட்டிருப்பதாயின் அதன் விளைவுகள் எவ்வாறு அமைந்திருக்குமென யாரும் வேண்டுமானால் ஊகிக்கலாம். ஆனால் உறுதியான முடிவுகட்கு வருவது கடினம்.

வேகமாக மாறி வருகிற சமுதாயச் சூழலில் மூர்க்கத்தனமான பொருள் முதல்வாத விழுமியங்கட்கு நாம் பலியாகி வருகிறோம். மரபின் பெயரால் வெறும் சடங்குகளையே பற்றிக்கொண்டு நம்மையே இழந்து வருகிறோம். அந்த மரபில் மனித வாழ்வும் மனித உறவுகளும் தொடர்பான சமுதாய விழுமியங்கள் பற்றிய ஆழமான அக்கறையில்லாதபோது மரபின் நல்ல பண்புகளை இழந்து புதிய சூழலில் தவறான பண்புகளையே நாம் தழுவிக்கொள்ளும் அபாயம் உண்டு. இந்த வகையில் நவீன உலகத்துக்குள் வர ஆயத்தமில்லாத நிலையிலும், அதனுடன் பகையின்றித் தன் வாழ்வைத் தனக்குத் தெரிந்த விதிகட்கு அமையத் தனக்கு உண்மையாக வாழ்கிறவர்கள் போற்றத்தக்கோர். சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் அவர்களுள் ஒருவர். அவரது பெருந்தன்மை பற்றி அம்மா பலமுறை குறிப்பிட்டிருக்கின்றார். அவரது குறைபாடுகலாகக் காணப்பட்டவை பலவற்றை மீள நோக்கினால் அவை அவரது குறைபாடுகள் அல்லாமல் எங்களது பார்வையின் குறைபாடாகவும் கருத இடமுண்டு. அவருடைய  அந்தக் குறைபாடு மற்றவர்களுக்குக் கேடு செய்யும் வகையிலாவதில்லை. உலகில் உள்ள கபடும் வஞ்சனையும் பற்றி அவர் அறிவார். ஆயினும் தன்னை அவற்றில் ஈடுபடுத்திக்கொள்ள அவர் என்றுமே ஆயத்தமாக இருக்கவில்லை. இதைவிடப் பெரிய  வெற்றி என வாழ்க்கையில் அதிகம் இல்லை.

அவரிடமிருந்து திருக்கோணமலையின் பழைய நாட்கள் பற்றிக் கொஞ்சம் கேட்டறிந்திருக்கிறேன். சம்பிரதாயங்களின் பேரால் நடக்கும் பம்மாத்துக்கள் பற்றிய அவர் கூறிய நகைச்சுவையான கதைகளையும் கேட்டிருக்கிறேன். மேலும் கேட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு நிகழவில்லை.வாழ்வின் பல நெருக்கடிகளின் மத்தியில் அவரால் தடுமாற்றமின்றி வாழ முடிந்தது.இது நாம் கற்க வேண்டிய ஒன்று. இதை நன்கு அரிய முடிந்தால் ஞானிகளாகவும் சித்தர்களாகவும் உலா வருகிறவர்களின் பின்னால் ஓட வேண்டிய தேவை இராது என நினைக்கிறேன்.

Thursday 1 May 2014

வஜனாம்ருதம் தொடர்ச்சி-5

THURSDAY, 01 MAY 2014
வஜனாம்ருதம் தொடர்ச்சி 5 




ஆன்மீகப் புத்தகமோ 
அத்வைத வித்தகமோ 
"நான்" கடந்த தத்துவமோ 
ஞானத்தின் மெய்த்தவமோ 
தேன் கடந்த தித்திப்போ 
தேவ நிலை சித்திப்போ 
வான் கலந்த குருமணியே!
வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!!

214. இதில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளை நீங்களாகவே உங்களில் கண்டறிந்து சுயம் செயல்படுத்துவீரகளாக.

"பரமேஸ்வர ஸ்மரணம்"

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"

201. சீரிய குணந்தான் செல்வங்களில் சிறந்த செல்வம்.


202. தனது இதயத்தைப் பரிசுத்தப் படுத்தி எடுப்பதுதான் நிலையான சம்பத்து. அது எதனாலும் அழிக்கப்படுவதில்லை.



203. என்னதான் இருந்தாலும் நல்ல குணம் இல்லாவிட்டால் ஜீரண சக்தி குறைந்தவர்கள் உண்ணும் உணவு போன்று பிரயோசனமற்றது.

204. நீ ஒரு சக்திக் கனலாக மாறும் பொழுது உன்னை நோக்கி வரும் பிரச்சனைகள் தானாகவே கருகிவிடும்.



205. உலகம் உலகியல் தேவைகளில் தன்னிறைவு எய்தினாலும்,ஆத்மீக சைதன்யத்தின் உட்செறிவு இல்லாவிட்டால், சமுதாயத்தின் நிலை நாய்க்கூட்டத்தினுள் வீசப்பட்ட மாமிசத்துண்டு போலாகிவிடும்.


206. ஆத்ம சித்திகள் மனம் புத்தியைக் கொண்டு அப்பியாசித்து அடையக் கூடியதன்று. மனம் புத்திகள் அகந்தையால் செயற்படுபவை.ஆகையால் அகங்கார நாசத்திற்குப் பின் தோன்றும் விசேஷ பேறுகள்தான் ஆத்ம சித்திகள்.


207. நீ ஏதோ ஒரு துறையில் சிறிதளவு அறிவு பெற்றிருக்கலாம். அதை வைத்துக்கொண்டு படித்தவன், அறிவுடையவன்,நாகரீகமானவன் என்றெல்லாம் அகங்கரித்தால் அது உன்னை சர்வநாசத்தில் ஆழ்த்திவிடும்.


208. நீ எதைக் கற்றைந்தாலும் உன்னுடைய சொந்தப் பிரச்சனைகளுக்கு நீயாகவே தீர்வு கானமுடியாதிருந்தால் கற்றதின் பயன் என்ன?

210. மனதைச் சரியான முறையில் கட்டுப்படுத்துவதற்குரிய பயிற்சியும், மனித சக்திகளுக்கெல்லாம் ஆதாரமாய்  இருக்கின்ற கடவுள் சக்தியில் முழு நம்பிக்கையும் இல்லாவிடத்தில் மற்றெல்லாம் இருந்தாலும் நிலையான சுகமும் சாந்தியும் உண்டாவதில்லை.


211. இன்று வரையில் நீ செய்துவரும் கர்மங்களில் அதிக பங்கும், உன்னுடைய சரீரம், மனம் இவைகளின் சக்தியைக் குறைக்கக் கூடியதும், சொந்த ஆத்மாவை வஞ்சிக்கக் கூடிய செயல்களும்தான் செய்து வருகின்றாய். ஒரு நாளைக்கு ஒருதரமாவது தனிமையிலிருந்து ஆழமாய் சிந்தனை செய், இந்த உண்மை விளங்கும். எனவே சிந்தனை செய்து தெளிவுபடுத்திய பிறகு மனம், சரீரம், புத்தி இவைகளைப் பலப்படுத்தக்கூடியதும், ஆத்மாவின் சுகத்திற்கேற்றவாரும் உரிய கர்மங்களை மாத்திரம் செய்தால் சுகமுடன் வாழலாம்.


212. முறையறிந்து செய்தால் ஒரு சிறு செயல் மூலமாக இறைவனுடைய திருவருளை எளிதில் பெறலாம்.


213. நீ இறைவனை நோக்கி கீழ் வருமாறு பிரார்த்தனை செய். என்னுடைய பலவீனத்தாலும், அஞ்ஞானத்தாலும் பல குற்றங்கள் செய்தும், நல்லது பலதும் செய்யாமலும் விட்டேன். கருணைகூர்ந்து என்னை மன்னித்து விடு. இங்ஙனம் உன்னுடைய நெஞ்சுருகும் வண்ணம் பிரார்த்தனை செய்து வந்தால் இந்தப் பிறவியிலேயே பாவங்கள் நீங்கி திருப்தியும் சுகமும் பெறலாம்..


214. இதில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளை நீங்களாகவே உங்களில் கண்டறிந்து சுயம் செயல்படுத்துவீரகளாக.

"பரமேஸ்வர ஸ்மரணம்"

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"



வஜனாம்ருதம் - இரண்டாம் பாகம் 

1.
இறைவனைக் காண்பது கடினமான காரியமன்று. அதனைப் பார்ப்பதற்குரிய கண்ணாடியாகிய ஹிருதயத்தைப் பரிசுத்தப்படுத்துவதுதான் மிகக் கடினமானது.


2.
இறைவன் பொருட்டு தனக்கு மிகப் பிரியமானதை விட்டு விடுவதற்கும்,மிகவும் வெறுப்பானத்தை ஏற்றுக் கொள்வதற்கும் தயாராயிருப்பவனே யதார்த்தமான இறைபக்தன்.


3.
ஞானம், அது ஒரு இரவில் அடையக் கூடிய காரியமல்ல. நாகமணியைச் சுற்றிக் கிடக்கும் நாகம் போன்று, ஜீவனைச் சிற்றுக் கிடக்கும் தீய வாசனைகள் கடுந் தவத்தால் நீங்கும் பொழுது மாத்திரந்தான் ஞானம் பிரகாசிக்கும்.


4.
பார்க்கப் பார்க்க, பழகப் பழக அலுப்பும் வெறுப்பும் தட்டாமலிருப்பது எதுவோ அதுதான் சாஸ்வதமான அன்பும் இன்பமுந் தரும் முழுமுதற் தெய்வம்.


5.
புலனுணர்வுகள் கடுகளவேனும் இருக்கும் வரை ஞான ஒளியைக் காண்பதென்பது வெறும் ஒரு மனச் சங்கற்பம்.


6.
பக்தியென்பது மன உணர்வுகளை மீறிச் செல்லும் பொழுது அனுபவப்படுகின்ற ஒரு தனித்த பேரானந்தம்.


7.
இந்தப் பிரபஞ்சத்தை நாங்களோ எங்களுடைய பாட்டனாரோ படைக்கவில்லை. அதைப் படைத்தவன் இன்னொருவன் இருக்கிறான். நீ அணிந்திருக்கும் ஆடைகளை நிர்மாணிப்பவரை நேரில் கண்டிருக்காவிட்டாலும் அப்படியொருவர் இருக்கின்றார் என்பதை நம்பித்தானாக வேண்டும். இப் பிரபஞ்சம் சூனியத்திலிருந்து தோன்றவில்லை. இதைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்ற பிரத்தியட்ச ஞானம் உண்டாகும் பொழுது நீயும் மற்றவர்களும் கர்த்தாக்களல்ல, வெறும் கருவிகளேயென்ற அறிவு வரும்,அகங்காரம் ஒழியும்.


8.
அடிக்கடி உனது குருவினிடத்தில் அமர்ந்திருந்து குரு முகத்திலிருந்து வரும் வார்ததைகளை ஹிருதயம் கொடுத்துக் கேள். அது உனது மனச் சலனங்களை தீர்த்து மனத்தென்பைத் தரும்.


9.
உனது துன்பங்களைத் தீர்க்கும் சக்தி உனக்கில்லாமல் இருக்கலாம். ஆயினும் அதனைத் தீர்க்கக் கூடிய ஒரு சக்தி உன்னிடம் இருக்கின்றது. அதற்கு உன்னைச் சுயாதீனப்படுத்தினால் காற்றில் பறந்து போகும் சாம்பல் போன்று துன்பங்களெல்லாம் பறந்து விடும்


10.
முழு மாணவ சமுதாயத்தையும் நம்முடன் வாழுகின்ற தெய்வமென்று கருதிக் கொண்டால் உயிர் ஐக்கியம் தானாகவே உண்டாகும்.


11.
நெஞ்சில் திருக்கை வால் ஏற்றுத் திரிபவர்களிடத்தில் எட்டத்தில் நின்று கொள்.


12.
பூமி முழுவதிலும் எவ்வளவோ குப்பை கூளங்கள் மண்டிக் கிடக்கின்றன. அவையெல்லாம் உன்னால் சுத்தஞ் செய்ய முடியுமா? இல்லை. ஆனால் பூமியின் ஒரு பகுதியாகிய உனது முற்றத்தை தினசரி கூட்டிச் சுத்தமாய் வைத்திருக்க முடியும். அதே போன்று உலகத்தவர்களுடைய மனதை உன்னால் சுத்திகரிக்க முடியாவிட்டாலும் உனது சொந்த மனதின் அழுக்காறுகளை நீக்கிச் சுத்தமாய் வைத்திருக்க முடியும்.


13.
மனிதருடைய மனக் குற்றங்கள்தான் இவ்வுலக துன்பங்களையெல்லாம் சிருஷ்டிக்கின்றன. ஜனங்கள் மனக் குற்றமற்றவர்களாயிருந்தால் இப்பூவுலகம் உண்மையில் ஒரு பூவுலகமாகவே இருக்கும்.