Wednesday 31 December 2014

ஞான மண்டலம் மரணத்திற்குப் பின்...

#ஞான மண்டலம் 

மரணத்திற்குப் பின்...

வாழ்க்கையின் முடிவு மரணம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். மரணத்திற்குப் பின் என்ன? என்பதை யாரும் அறிவதில்லை.
விஷய ஞானம் இல்லாத இடத்தில் பயம், பீதி முதலிய மனக் கஷ்டங்கள் தோன்றுவது சகஜம்.
மரணம் என்று நினைக்கும் பொழுது மரணத்திற்குப் பின் என்ன நிகழ்கின்றது என்ற சரியான அறிவில்லாததால் மரண பயம் உண்டாகின்றது.
மரணம் என்பது ஜீவனைப் பொறுத்தவரையில் புதிய சக்தியும், உற்சாகமும், புது ஆற்றல் திறமையும் உயிரில் உருவாகும் ஒரு புனிதமான நிகழ்ச்சி.
பகல் முழுவதும் உழைத்துக் களைப்படைந்தவர்களுக்கு இரவு உறக்கம் கலை தீர்த்துப் புத்துணர்வும், தென்பும் அளிப்பதைப் போன்று வாழ் நாள் முழுவதும் பல துறைகளிலும் செயலாற்றி வாழ்வில் களைப்படைந்த மனிதர்களுடைய ஜீவன் சுயமாகவே ஏற்றெடுத்த ஒரு தீர்க்க கால உறக்கம் அல்லது ஓய்வுதான் மரணம். பழுதடைந்த உடையை மாற்றிப் புது உடை அணிவது போன்று ஜீவன் தனது லட்சியத்தை அடையும் வரையும் பழுதடைந்த சரீரத்தை மாற்றிப் புதுச் சரீரத்தில் நுழைய வேண்டி இருக்கிறது.
மரணத்திற்குப் பின் உயிர்கள் என்ன நிலை அடைகின்றது என்பதைப் பற்றி இந்து சமய சாஸ்திரங்கள் விளக்கந் தருகின்றன.
கண்ணுவன், கபிலன் போன்ற மகா ரிஷிகளின் பரிணாம சித்தாந்த சாஸ்திரங்களில் இது விஞ்ஞான பூர்வமாகத் தெளிவு படுத்தப்பட்டு இருக்கின்றது.
நசிகேசன் நமனைக் குருவாக ஏற்பதற்குரிய காரணம், மரணத்திற்குப் பின் ஜீவனுடைய நிலையை அறிவதற் குரிய பெரும் அவா தான் என்பதை கடோபநிஷாதம் கூறுகின்றது.
ஒரு நோயாளி நோயை குணப் படுத்துவதற்காக ஒரு வைத்தியரைச் சந்திக்கச் செல்கிறான். பின்னர் சந்திக்க முடியாமல் திரும்பி வருகிறான். மீண்டும், மீண்டும் செல்லும் பொழுதும் அதே நிலைதான்.
மருத்துவரைச் சந்திக்கும் வரையும் வருத்தமுடையவர் வருவதும் போவதுமாகிய நிகழ்ச்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
மருத்துவரைச் சந்திப்பதுதான் நோயுடையவரின் நோக்கமாகையால் அது கைகூடும் வரையும் இவ்வாறு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
ஜீவன் சிவனுடன் ஐக்கியப் படுவதுதான் பிறவியின் நோக்கம் என்ற காரணத்தினால், ஜீவன் சுத்த சிவன் நிலை அடையும் வரையும் பிறப்பு,இறப்பு என்பன நிகழ்ந்து கொண்டிருக்கும்.
உயிரை பற்றிய சில அடிப்படைத் தத்துவங்களைத் தெரிந்து கொள்ளும் பட்சத்தில் இவ் விஷயத்தில் இருக்கும் பல சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு விடுகின்றன.

உயிரியல் சாஸ்திரம்:

இந்து மத உயிரியல் சாஸ்திரப்படி சகல சராசரங்களும் உயிருடையன. தூணிலும், துரும்பிலும் உயிர் ஊடுருவி நிற்கின்றது .மனிதனும், மனிதனுடைய நிழலும் போன்று உயிர் பரமாத்மாவின் பிரதி பாசம்.
ஆகையால் உயிரை ஆக்கவும், அழிக்கவும் முடியாது. உயிரை உண்டாக்க முடியாத காரணத்தால் ஒரு புதுச் சரீரம் உருவாகும் பொழுது, நிலையான பழைய உயிரைத் திரும்பவும் சுவீகரிக்க வேண்டியிருக்கிறது.
பழைய உடல் அழிந்து புதுப் புது உடல் உருவாகிக் கொண்டிருப்பதாலும், என்றும் இருக்கின்ற உயிரை அழிக்கவும், ஆக்கவும் முடியாதிருப்பதாலும் மறு பிறப்பு என்பது நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.

மரணம்:

ஒரு திரவத்தின் அடிப்படையான இறுதி அணுக்களில் இருந்து விஷேச ரீதியில் உருவாகும் அலைநீள சலன சக்தியே உயிரென்று நவீன அலைச் சித்தாந்த சாஸ்தி ரங்கள் கூறுகின்றன.
ஜீவன் தேகத்திலிருந்து பிரிவது (மரணம்) ஒரே நேரத்தில் ஒரே முறையில் நிகழ்வதில்லை.ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் இரண்டு தரமாக ஜீவன் பிரிந்து செல்கின்றது.
முதல் தரம் நிகழ்கின்ற மரணம் தைதீக மரணம் என்றும் இரண்டாம் முறை நிகழ்வது கோச மரணம் என்றும் சொல்லப்படும்.
வெறும் சரீரத்திலிருந்து மாத்திரம் உயிர் பிரிந்து சரீரம் செயலாற்றுப் போகும் நிலைக்கு தைதீக மரணம் என்றும், இறுதியில் பஞ்ச கோசத்திலிருந்து உயிர் பிரிவதை கோசீக மரணம் என்றும், பஞ்ச கோசத்திலிருந்து முற்றாக ஜீவன் பிரிந்தாற்றான் உண்மையான மரணம் சம்பவிக்கின்றது என்றும் கூறப் படுகிறது.
தைதீக மரணத்திற்குப் பின் இரண்டு அல்லது மூன்று மணித்தியாலத்திற்குள் கோசீக மரணம் நிகழ்கிறது.
அபூர்வமாக சில சந்தர்ப்பங்களில் கோசீக மரணம் நிகழ்வதற்கு முன், சரீரத்தி இருந்து பிரிந்து நின்ற ஜீவன் திரும்பவும் சரீரத்தில் நுழைவதுண்டு.
இதைத்தான் இறந்தவர் மீண்டும் உயிர் பெற்ற சம்பவமாகக் கேள்விப்படுகிறோம்.
எனவே சில சந்தர்ப்பங்களில் இவ்விதம் நிகழ்வதால் சரீரம் அதிகம் பழுதடையாத நிலையில் மரணம் சம்பவிக்கும் போது, குறைந்தது ஆறு அல்லது எட்டு மணித்தியாலங் களின் பின்னர் தகனம் செய்வதுதான் உசிதமானதாகும்.

ஞானம்:

முன் ஜென்மங்களைப் பற்றி அறிவதற்கு "பரித்துவாஜ தர்சனம்" என்ற ஒரு சாஸ்திரக் கிரந்தம் இன்றும் நடைமுறையில் இருக்கின்றது. இதை இதய சுத்தம் உடையவர்கள், நாலு ஆண்டுகள் அப்பியாசித்தால் தமது சொந்தப் பூர்வ ஜென்மங்களைப் பற்றியும், எட்டாண்டுகள் பயின்றால் மற்றவரகளுடைய பூர்வ ஜென்ம விருத் தாந்தங்களைப் பற்றியும் அறியத் தக்க ஞானம் சித்திக்கும்.
அல்லது மூலாதார சக்தியை ஆதார சக்கரங்கள் வழியே சகஸ்ராரத்தில் ஏற்றி நிறுத்திப் பழகிய மகா யோகிகள், சித்தத்தில் அடங்கிக் கிடக்கும் பூர்வ ஜென்ம வாசனை களில் சம்யமனம் செய்து பார்க்கும் பொழுது முன் ஜென்மங்களைப் பற்றிய அறிவு கிடைக்கின்றது.
ஜீவன் பிறவி தோறும் செய்த கர்ம பலாபலங்களுக்குத் தக்கபடி, அடுத்தடுத்துப் பிறவிகளை எடுத்துச் சுக துக்கங்களை அனுபவிக்கின்றது. முற்ஜென் மங்களில் செய்த கர்ம பலன்களைப் பற்றி மனிதன் அறிவாநாக்கில் பாப கர்மங்களைப் புரிவதற்கு அஞ்சி வாழ்வான்.
ஆகையால் பிறவி தோறும் வினையாற்றிக் களைப் படைந்த ஜீவன் களையைத் தீர்த்துப் புத்துணர்வு பெறுவதற்காக மரணம் என்ற ஒரு இடைக்கால ஓய்வெ டுப்பதைப் பற்றிச் சந்தோஷம் அடையாமல் பயப்படுவதேன்?

Tuesday 30 December 2014

புத்தாண்டுப் புதுக்கவிதை



புத்தாண்டில் பூத்து வரும் புதுக்கவிதை
பத்தாண்டில் பழங் கருவாய் போயிருக்க
மற்றாண்டில் நிகழ்ந்தவைகள் நினைவுமாக
மலரட்டும் மற்றுமொரு மகத்தான புத்தாண்டு.

ஆண்டாண்டு தோறும் வரும் புத்தாண்டு
ஆங்காங்கே தோன்றி வரும் புதுக்கவிதை
வேண்டாங்க, மற்றவங்க மனம் நோகுமென
வேண்டாத வரிகள் நீக்க மனைவி இல்லை.

தாங்காத என் வலியைக் கவியாய் சொல்ல
தடையாக நின்றவளும் புவியில் இல்லை
நீங்காத நினைவலைகள் வந்து போக அவள்
தாங்காத சிலவரிகள் அழிந்து போகும்.

அவள் வடித்த முதல் கவிதை என் தமக்கைகாக
அவள் படித்த பல கவிதை என் படைப்பிற்காக
அவள் துடித்த துடிப்பெல்லாம் என் வலியை பார்த்து
அவள் முடித்த கதையை நான் தொடருகின்றேன்.

புத்தாண்டே நீ வர வேண்டும்; புத்துணர்வை
அள்ளித் தரவேண்டும்; சத்தியத்தின் பாதையிலே
தர்மங்கள் தழைக்க வேண்டும்; அன்போடு
அமைதி இந்த அகிலத்தை ஆள வேண்டும். "ஜோ"

Thursday 25 December 2014

இதயத் தியானம்

ஞான மண்டலம் 


இதயத் தியானம் 


மனிதன் மங்களகரமான பல சங்கர்பங்களுடந்தான் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றான். காலக் கிராமத்தில் குடும்பம், உற்றார் உறவினர், பொரு ளாதாரம், சரீரம், தன் மானம் போன்றவை களிளிருந் தெழும் உபாதிகளுடைய உபத்திரவங்களால் மனதின் சம நிலை கெட்டு மனம் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கின்றது.
சிறுகச் சிறுகப் பெருகிவரும் மனத் தொல்லைகளுடன் சில காலங் கழிய, ஏற்கனவே மனதில் வைத்திருந்த சங்கற்பங்களுக்கு எதிர் மாறாக அன்றாட அனுபவங்களும் நிகழ்ந்து கொண்டுவர, மனமானது மென்மேலும் கலக்கமடைந்து புத்தியும் தடுமாறி சமுத்திர அலைகளில் அகப்பட்ட பந்து போல் தத்தளிக்கின்றது.
எண்பத்து நான்கு லட்சம் பிறவிகளில் அபூர்வமாகப் பெற்றெடுத்த இந்த மனித ஜென்மம் அஞ்ஞானத்தால் இப்படி ஒரு சோக நாடகமாய் முடிவடைகிறது.
ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் உலகியல் இன்பங்கள் எல்லாம் இன்று வரும், நாளை வரும் என்று எதிர் பார்த்துக் காலத்தை விரயமாக்காது எஞ்சிய காலத்தை யாவது ஞான தர்மங்களை அனுசரித்து வாழ்ந்து இருளில் இருந்து ஒளிக்கு வர முயற்சிக்க வேண்டும்.
ஜீவித கிலேசங்களில் இருந்து விமோசனம் அடைவதற்கு ஞான தர்மங்களை அன்றாட வாழ்க்கையுடன் இணைப் பதைத் தவிர வேறு வழியில்லை என்பதையும் உணர வேண்டும்.
பரிசுத்தமான இருதயத்தில் இருந்துதான் களங்கமற்ற பெரும் சுகத்தைத் தரும் தெய்வீக அமிர்தக் கசிவு ஊற்றெடுக்கின்றது. அந்த அமிர்தக் கசிவில் இருந்து ஒரு சிறு துளியேனும் ஒருவன் ஒருமுறை உட்கொள்ள முடியுமேயானால் அனுடைய வாழ்க்கைச் சேற்றில் முளைத்த வெண்டாமரை போல் அருள் மழை பொழிந்து மலரும்.
இந்தத் தெய்வீக மாற்றங்கள் வெறுமனே ஞான நூல்களை வாசிப்பதாலோ அருளுரை கேட்பதாலோ உண்டாவது இல்லை. அப்பியாச - அதொன் றினாலன்றி வேறொன்றினும் அது சித்திப்பதில்லை. எனவே உறுதியான வைராக்கியத்துடன் ஒரு ஆத்மீக உள்முகப் பயிற்சிக்கு உங்களைத் தயார் படுத்திக் கொள்வீர்களாக.
முத்துச் சிப்பியில் விழும் ஒரு சிறு மழைத் துளி விலை மதிக்க முடியாத ஒரு முத்தை உருவாக்குவது போன்று ஒழுங்கான ஒரு சிறு ஆத்மீகப் பயிற்சி கூட ஒருவனைக் கடைத்தேற செய்யப் போதுமானது.
வைகறையில் உறக்கமுணர்ந்து சிறிதளவு குளிர்ந்த ஜலம் பருகிக் காலைக் கடன்களை முடித்துக் கொள்க. நேர வசதிக் கேற்றவாறு தேகப் பயிற்சிகள் செய்து முடிந்த பின்னர் நீராடுக. தேகசுகம் குறைந்தவர்கள் ஈரச் சீலையால் சரீர சுத்தி செய்தல் போதுமானது.
அதற்குப் பின் வழிபாட்டறையில் அல்லது தூய்மையான இடத்தில் விளக்கேற்றி நறுமணம் வீசும் மலர்களை வைத்துத் தக்க ஆசனத்தில் நேரே நிமிர்ந்து அமர்ந்திருக்கவும். மனம் கசிந்துருகும் வண்ணம் பக்திப் பாடல்கள் சிலவற்றைப் பாடிய பின்னர் குரு வணக்கமும் இறை வணக்கமும் செய்து முடிக்க வேண்டும்.
பின்னர் சுருக்கமான முறையில் ஆராதனைகளைச் செய்க. உடம்பை நேராக வைத்திருந்து மூக்கு நுனியைப் பார்த்தபடி சிறிது நேரம் இருந்த பின் நாசியை விரலால் பிடிக்காமல், இரு நாசித் துவாரங்களாலும் சுவாசத்தை நிதானமாக உள்ளிழுக்கவும். நெஞ்சில் வைத்திருக்கக் கூடிய அளவுக்கு வைத்திருந்து மெல்ல மெல்ல வெளி விடவும். சுவாசத்தை உள்ளுக்குள் இழுக்கும் பொழுதும், வெளி விடும் பொழுதும் சுவாசம் ஆடாமல் முறியாமல் பார்த்துக் கொள்ளவும்.
சுவாசத்தை ஏற்றி இறக்கும் பொழுது மனதை அதில் லயப் படுத்துவது அவசியம். இதனைச் செய்யக் கூடிய அளவுக்குச் செய்து (ஆரம்பத்தில் ஐந்திலிருந்து பதினைந்து தடவை) முடிக்கவும்.
பின்னர் நாசி வழியாக ஓடித் திரிந்து கொண்டிருக்கும் சுவாசத்தை ஊன்றிக் கவனித்தபடியே இருக்கவும். இது சரியாக அமைந்தால் கொஞ்ச நேரத்திற்குள் எண்ணங்கள அடங்கி மனம் சாந்த நிலையடையும்.
சாந்த நிலை அடைந்து வரும் மனதைச் சகுணத் தியானத்தில் நிறுத்திப் பழக வேண்டும். இறைவனுடைய ஏதாவதொரு திருவுருவத்தை நெற்றி, இருதயம், நாபி போன்ற தியான ஸ்தானங்களில் சங்கல்பித்து அதில் மனதை இடையறாது நிறுத்திப் பழகுவதுதான் சகுணத் தியானம் என்பது.
இதனை இருவேளை செய்க. தியானம் முடிந்த பின் எழுந்து தியான சித்திக்காக இறைவனுடைய தாளிணைகளை மனப் பூர்வமாக வணங்கி சாந்த சீலனாய் அன்றாடக் கடமைகளைச் செவ்வனே செய்து வருக. வீட்டில் இட வசதி இல்லாவிடில் ஆலயம் போன்ற இடங்களில் செய்வது நலம்.
பயிற்சிக் காலத்தில் தாது புஷ்டிக்கும் மன ஒருமைப் பாட்டிற்கும் உதவக் கூடிய பசும்பால், பசு நெய், தேன் போன்றவைகளை உட்கொள்ள வேண்டிய வசதியும் தேக நிலையும் இருப்பவர்கள் பகல் வேளையில் மாத்திரம் உட்கொள்ளவும், இரவு படுக்கைக்குப் போகும் முன் திரிபலாதி சூரணம் ஒரு களஞ்சியம் அளவில் எடுத்துச் சர்க்கரையில் குழைத்து உண்டு இளம் வெந்நீர் பருகிப் படுக்கவும். இது மல சுத்தியைச் செய்து வாத, பித்த, கப தோஷங்களைத் தீர்க்கும்.தேகத்தையும் ஆரோக்கியமாய் வைத்திருக்க உதவும்.
ஆசார சீலராயிருந்து ஒரு மண்டலம் தொடக்கம் மூன்று மண்டல காலம் வரையில் (ஒரு மண்டலம் நாற்பத்தொரு நாள்) தொடர்ந்து பழகி வரும் பொழுது உடலிலும் உணர்விலும் நல்ல மாற்றங்கள் தென்படும்.
சுபாவத்திலும் இம்மாற்றன்களைக் காணலாம். இடை யிடையே தெய்வீக தரிசனங்கள் கிடைக்கும். அவை மனம் ஒரு முகப் பட்டு வரும் பொழுது காணும் மானசீக தரிசனங் களைத் தவிர ஞான சித்திகளல்ல.
அநுபவங்களை அடக்கமாக வைத்திருக்கவும். இந்த சாதனையை அன்றாட வாழ்க்கையுடன் இணைத்து வாழுகின்ற ஒருவருக்கு அருளொளி வீசும். ஒரு புதுக் கோணத்தில் இருந்து வாழ்க்கையைப் பார்ப்பதற்கும் அனுபவிப்பதற்கும் முடியும்.
அது மாத்திரமல்ல, ஜீவிதப் பிரச்சனைகளில் யதார்த்த காரணத்தைக் கண்டறிந்து, அதிலிருந்து விமோசனம் அடைவதற்குரிய மார்க்கங்களைத் தெளிந்து காண்பான். பட்ட மரத்தைத் துளிர்க்க வைக்கும் விருஷியூர் வேத காயகற்ப சிகிச்சை போன்று, இச்சிறு ஆத்மீகப் பயிற்சி தளர்ந்து போன வாழ்க்கையை மீண்டும் துளிர்க்க வைக்கும்.
பயிற்சியின் ஆழமும் சக்தியும் கூடிவரும் பொழுது அண்ட சராசரங்களுடைய சூத்திரதாரியாகிய இறை வனுடைய சூத்திரக் கயிற்றில் கோத்து ஆடிக் கொண்டிருக்கும் பாவைகள்தான் இப் பிரபஞ்ச வஸ்துக்களும், அதில் உட்பட்ட நாங்களும் என்ற பரமார்த்தீக போதம் வரும். இந்தப் பெரும் அநுபவ அறிவுதான் ஜன்மக் கிலேசங்களைத் தீர்க்கும் சம்பூரண ஞானம்.

Pictures


Friday 19 December 2014

மெய்யுணர்வு




#ஞான மண்டலம்

 

மெய்யுணர்வு 


உலகம் உணர்வு மயம். பதியிலிருந்து பசுக்கள் வரை சங்கிலித் தொடர்பு போல் நீண்டு விரிந்து நிற்கின்றது உணர்வு. உணர்வின் மாற்றத்திற்குத் தக்கபடி உயிர் பல வடிவங்கொள்ளும். உணர்வு இரண்டு வகைப் படும். ஒன்று சிற்றுணர்வு அல்லது பொய்யுணர்வு. மற்றது உள்ளுணர்வாம் மெய்யுணர்வு. சிற்றுணர்வு மனம், புத்தி, காயங்களுடன் சம்பந்தப்பட்டு புறவாழ்வைத் தூண்டி நிற்கும். மெய்யுணர்வு இதயத்தின் ஆழ்ந்த பகுதியில் மெய்ப்பொருளை ஊடுருவி நின்று அகவாழ்வை உணர்த்தி நிற்கும். அறிவும் உணர்வும் ஒன்றோடொன்று சம்பந்தப் பட்டவை. உணர்வு விரிந்து இறுதியில் எப்பொருளில் கலந்து நிற்குமோ அதில் அறிவு வளர்ந்து முற்றுப்பெறும். அதாவது சிற்றுணர்வு மாறி மெய்யுணர்வு ஆகுங்கால் சிற்றறிவு மெய்யறிவாக மாறும். புறவுணர்வு புற வாழ்வினால் வரும் அற்ப சுகங்களைத் தந்து இறுதியில் துன்பத்தில் ஆழ்த்தி நிறுத்தும். உள்ளுணர்வு அகவாழ்வை உணர்த்தி அகப் பொருள் ஒன்றையே நாடி நின்று அதன் வழி வரும் முடிவில்லாத இறை இன்பத்தை அனுபவிக்கச் செய்யும். மனிதனில் இந்த இரண்டுவித உணர்வுகளும் கலந்து நிற்கின்றன. சிற்றுணர்வும் மெய்யுணர்வும் கலந்த கலவையின் வடிவமே மனிதன். மனித உணர்வில் ஒளியும், இருளும், அறிவும்,அறியாமையும் கலந்திருக்கும்.

புற உணர்வு மேலோங்கி நிற்குங்கால் நிலையற்ற குறுகிய இன்பங்களைத் தரும் விஷயாதிகளை நாடிச் செல்ல மனம் தூண்டி நிற்கும். உள்ளுணர்வு மேலோங்கி நிற்கும் பொழுது பந்த பாசங்களைக் கடந்த மெய்ப் பொருளின் இன்பத்தை நாடி மனம் உயர்ந்து செல்லும். நிலையற்ற பொருளை வருந்தி அடைவதும் அதன்பின் இழக்க நேரிடும் பொழுது சினம் கொள்வதும், சினத்தினால் கோபமும், கோபத்தினால் மனங் கலங்கிப் புத்தி தடுமாறுவதும், புத்தி தடுமாற்றத்தினால் அழிவும் உண்டாவதற்குச் சிற்றுணர்வின் ஆதிக்கமே காரணம். சமுகத்திற் காணும் புன்மையான குணங்களும், கபட முயற்சியால் வரும் அழிவுகளும் புறவுணர்வின் விளைவால் வருவனவே. சிற்றுணர்விற்குக் கீழ்ப் படிந்து நிற்கும் மனமானது நஞ்சு கலந்து அமைதியும் இன்பமும் காண முடியாமற் கலங்கி நிற்கும். உலகமனைத்தையும் அடக்கியாளும் வல்லமை பெற்றாலும் சிற்றுணர்வின் வழி நிற்பவன் தன்னில் ஒளியும் இன்பமும்,அமைதியும் காண்பது அரிது. புற வுணர்வுக்குப் பின்னால் சத்தியத்தை நாடி நிற்கும் மெய்யுணர்வின் வழி சென்று, உட்புருஷனின் தொடர்பால் வரும் அருட் சக்திக்கு நமது வாழ்வைத் திறந்து கொடுத்து நிர்போமாகில் ஒளியும், ஆற்றலும், தன்னறிவும் நிறைந்த ஒரு பகுதிக்கு நாம் உயர்ந்து சென்று அத்வைத இன்பத்தில் கலந்து நிற்போம்.

அநேக குறைபாடுகள் நிறைந்து, குழப்ப நிலையிலும் தீராத துன்பத்திலும் திரும்பத் திரும்பச் செல்லும் சங்கட நிலை மாற வேண்டுமாகில், சிற்றுணர்வைப் புறக்கணித்து உள்ளுணர்வின் வழி ஊடுருவிச் சென்று, உட்புருஷனைக் கண்டு தெளிந்து, அவன் ஆணையின் கீழ்ப்படிந்து வினையாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. துவேஷமும், வஞ்சனையும், வேற்றுமைகளும் வளர்ந்து அமைதி குறைந்து அழிவின் வரம்பை மோதி நிற்கும் மனித குலம் இருளில் நின்று ஒளிக்கும், அறியாமையினின்றும் அறிவுக்கும், வேற்றுமையிநின்று ஒற்றுமைக்கும், சென்று பூரண அமைதியும், அன்பும்,இன்பமும் நிறைந்த ஒரு புது உலகம் காண அருள் வழியை நாடிச் செல்ல வேண்டி யிருக்கிறது.

மனம், புத்தி, பிராணன்களில் வீறிட்டு நிற்கும் புன் னெறியை நீக்கி மெய்யுணர்வால் அப்பகுதிகளை நிரப்பி அதனால் வரும் பக்தி, ஞானம், ஆனந்தம் என்ற ஈஸ்வர குணங்களை வாழ்வுடன் சம்பந்தப் படுத்த முடியுமானால் கற்பனையில் இருக்கும் சகல நன்மைகளும் அனுபவத்துக்கு வந்தே தீரும். "உள்ளுணர்வு அல்லது மெய்யுணர்வின் வழியே அருள் வழியாம்". அருள் வழி செல்பவன் அருளாளன்.அவன் குறைவற்றிருப்பான். பந்த பாசங்களைத் தரும் சிற்றுணர்வின் முடிச்சறுத்து, உள்ளுணர்வின் வழி நடத்தலுக்கு நெஞ்சந் திறந்து கொடுப்போமாகில் அது நம்மை ஆணவ மலங்கள் நிறைந்த துன்பப் பாதையினின்று விலக்கியெடுத்து அருள் பொழியும் ஒளி பொந்திய பாதையில் வழி நடத்திச் சென்று இறுதியில் தனது இருப்பாகிய மெய்ப்பொருளில் அழுத்தி நிறுத்தும்.  சத்தியத்தின் அல்லது அந்தராத்மாவின் உணர்வுக்கு இசைந்து நின்று அது வழி வரும் அருட் சக்தி வழி நடத்திச் செல்லும் பொருட்டு நம்மை ஒரு சாதனமாய்க் கருதி நிற்பதே "சும்மா இரு" என்று சான்றோர்களால் கூறப்படுவதின் சாரமாகும்.

கிணற்றுத் தவளையின் பூலோக அறிவு போலிருக்கும் மனமும், புத்தியும் தனக்குப் பின்னால் உண்மையின் வழி நிற்கும் மெய்யுணர்வை ஆராய்ந்தறிய இடந் தருவ தில்லை. தகுந்த ஆத்ம சாதனங்களால் மெய்யுணர்வு அல்லது கடவுளுணர்வு விருத்தியடைந்து வருங்கால் பலவீனங்களும், அறியாமையும், இடர்களும் படிப் படியாய் விலகி நின்று அருளின்பந் ததும்பிப் பரவத் தொடங்கும். மெய்யுணர்வு கிளம்பி வருமிடத்து உட்பார்வையால் உன்னிப் பார்த்து, அறிந்து, தெளிந்து அதுவழி மெய்ப் பொருளின் இருப்பை அகமுகமாய்க் கண்டறிவதே "தன்னைத் தானறிதல்" என்றதன் பொருளாம். மெய்யுணர்வு கிளம்பிப் பரவத் தொடங்குங்கால் உட்பகுதிகள் அனைத்திலும் விளங்க முடியாத அமைதியும், இன்பமும், தூய்மையும் குடி கொள்ளும். மனப் பிராணன்களின் கிளர்ச்சிகள் அடங்கி அமைதி பெறும். மெய்யுணர்வின் வெளிப் பாட்டை விழிப்புட னிருந்து கவனித்து வருவோமாகில் பண்பற்ற அஞ்ஞான உணர்வு விலகி அமைதியும் இன்பமும் நிறைந்த ஒளிமயமான ஒரு தூய சக்தி நம்மில் இறங்கி வந்து அல்லது வெளிப்பட்டு நின்று சகல துறைகளிலும் அது தானாக நம்மை வழி நடத்திச் செல்வதைக் கண்கூடாகக் காணலாம்.

இது மிகச் சிரமமான காரியமாயிருந்தாலும் முயற்சியால் சாதிக்க முடியாததொன்றல்ல.ஆர்வத்தோடு தக்க சாதனா முறைகளை மேற்கொண்டொழுகினால் நிச்சயம் பயன் அளிக்கும். ஆத்ம சாதனா முறைகள் சகலதும் பொய் யுணர்வை அடக்கி மெய்யுணர்வை வெளிப்படுத்தும் பொருட்டே வகுக்கப் பட்டிருக்கின்றன. சிற்றுணர்வாம் பொய்யுணர்வு மெலிந்து மெய்யுணர்வு தடிப்பேற ராஜஸ, தாமஸ, குணங்களின் தன்மை மாறி அகந்தையின் எழுச்சியும் அடங்கி நின்று தெவீக குண விஷேசங்கள் மலர்ந்து நிற்கும். பொய்யுணர்வடங்கி மெய்யுணர்வின் வழி வரும் அருட் பொலிவுக்கு நம்மை முற்றாக அர்ப்பணித்து நிற்போமாகில் பழைய வாசனைகளையும், இன்னும் கேடுடைய யாவற்றையும் அதுவே விலக்கித் தந்து குறைவற்ற அருளின்பத்தில் நம்மை அணைத்துச் சேர்த்து நிறுத்தும். கேவல புத்தியால் பிரியும் படிப்பினாலும், தர்க்க வாதங்களினாலும் பலனில்லை. அவைகள் குழப்பத்தைப் பெருக்கும். தெளிவு காண முடியாது. சாதனையினாலேயே சாத்தியம் கைவரும். விதிப்படி "இதயத் தியானம்" பழகி வந்தால் மெய்யுணர்வின் வழி தெளிந்து காணும். மெய்யுணர்வின் எழுச்சியாலும் அருள் நிறைந்த ஒளியின் பொழிவினாலும் சக்தியும், ஞானமும் வாழ்வில் படர்ந்து நின்று குறைவற்ற தெய்வீக இன்பத்தை அனுபவிக்க இதயத் தியானத்தை மேற் கொள்வீராக.

Saturday 13 December 2014

ஹட யோகம்




#ஞான மண்டலம்


ஹட யோகம்:


"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்" என்பது பழமொழி. வாழ்க்கையின் அடிக்கல் போன்ற அதி முக்கியமான ஒரு காரியத்தை இந்தப் பழமொழி நமக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
வாழ்க்கை என்பது கர்மங்களின் ஒரு தொகுப்பு. உறங்குவது கூட ஒரு கர்மம் அல்லது ஒரு செயல். சரீர சுகம் இல்லாதவர்களிடத்தில் உறக்கம் என்ற கர்மம் ஒழுங்காக நிகழ்வதில்லை.
இதே போன்று தேகாரோக்கியம் இல்லாதவரால் யாதொரு கர்மமும் சரிவரச் செய்து முடிக்க முடியாததால் ஆரோக்கியத்தைப் பேணி வளர்க்க வேண்டியது மனிதருடைய முதற் கடமையாகும். இதுதான் முன் கூறிய பழமொழியின் அர்த்தம்.
ஜீவித தர்மங்களைச் செவ்வனே செய்வதற்கும், அனுபவிப்பதற்கும் சரீரம் முதற் காரணமாய் இருப்பதால் அதைப் பலப் படுத்திச் சுகமாய் வைத்திருக்க வேண்டும்.

யோக மார்க்கம்:

மனித ஜென்மத்தைக் கடைத்தேற்றி எடுப்பதற்கு அநேக யோக மார்க்கங்கள் இருக்கின்றன.
அதில் ஹட யோகம் பிரசித்தமானது. ஹடயோகம் சரீர மன சாஸ்திரங்களுடைய ஒரு சபூர்ண ஞானக் களஞ்சியம்.
ஹட யோகம் முக் கரணங்களிலிருக்கின்ற மலங்களை நீக்கி ஞான மார்க்கத்தி தடையின்றி சஞ்சாரம் செய்வதற்குத் தகுதி உடையவராக்கித் திகழ்வதுதான் இதன் அந்தரங்க நோக்கம்.
எனினும் ஞானயோக மார்க்கங்களைக் கடைப் பிடித்தொழு காதவரும் சரீர மன சுத்திக்கு மாத்திரம் பிரயோசனப் படக்கூடிய பகுதிகளை அப்பியாசித்து சுகமடைவதற்கும் தடையேதுமில்லை.
இதன் ஆரம்பப் பயிற்சிகள் ஒவ்வொருவருக்குப் போதிய மன வலிமையையும் தேகாரோக்கியத்தையும் கொடுக்கத் தக்கது.
தீர்க்காயுள், நோயற்ற வாழ்க்கை, மனச்சாந்தி முதலியவற்றை விரும்புகிறவர்கள் மூப்பு, பிணி, ஆண், பெண் வித்தியாச மில்லாமல் நோக்கத்திற்குரிய சாதனைகளைச் செய்து சுகமாய் வாழலாம்.

ஹட யோகம்:

"ஹ" என்றால் இட கலையில் (இடது நாசியில்) ஓடிக் கொண்டிருக்கும் சுவாசத்தையும், "ட" என்றால் பிங்கலை என்ற வலது நாசியில் ஓடிக் கொண்டிருக்கின்ற சுவாசத்தையும் குறிக்கின்றன.
இடகலை பிங்கலையை ஒன்று சேர்த்து இணைப்பதற் குரிய யோக மார்க்கத்திற்குக் ஹடயோகம் என்று பெயர்.
வலது இடது கலையில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் சுவாசத்தை பிராணாயாமத்தால் ஜடராக்கினியுடன் சேர்த்து  மூலாதார பத்மத்தில் உரக்க நிலையில் கிடக்கும் குண்டலினி என்ற மகா சக்தியைத் தட்டி உணர்த்தி, முது கெலும்பிலி ருக்கும் சுழுமுனைத் துவாரம் வழியாக உச்சியிலிருக்கும் பிரமாந்திர வாசலில் ஏற்றி நிறுத்த வேண்டும்.
அப்படி நிறுத்தினால் பிரமாந்திர வாசல் திறக்கப் படும். இது திறந்த பின், பகிர்முக மனம் அல்லது வெளிமனம் அடங்கி, அந்தர்முக மனம் (உள்மனம்) பிரகாசிக்கத் தொடங்கும்.
அந்தர்முக மனப் பிரகாசத்தால் சமாதி என்றொரு அவஸ்தை மூலமாக ஞானம் சித்திக்கிறது.
இந்த இறுதி வைபவத்தை நோக்கித்தான் மனிதனிலிருந்து பிராணிகளீறாக வாழ்க்கை என்ற யாத்திரையைச் செய்து கொண்டிருக்கின்றன.

உயிர்ச் சக்தி:

சரீரத்தில் அதி பிரதான பகுதி சுவாசம். பரிபாஷையில் இதைக் கலையென்றும் சரமென்றும் கூறுவார்கள்.
உடம்பில் ஒரு சில நிமிடங்கள் சுவாசங்கள் ஓடாதிருந்தால் தேகம் உயிரற்று விடுவதால் உயிச்சக்தி சுவாசத்தில் தான் தங்கி இருக்கின்றதென்பதை அறியலாம்.
சகல சராசரங்களும் இந்தப் பிரதான சக்தியால் இயக்கப்படுகின்றன.
தேகம் தனது இயக்கத்திற்குத் தேவையான பிராண சக்தியைப் பஞ்ச பூதங்களிலிருந்து பெறுகின்றது.
சரீரத்தில் பிராண சக்தி குறைந்தால் வியாதி வரும். நின்றால் மரணமும் சம்பவிக்கும்.
இரத்தத்தை ஓடச் செய்வது, உண்ணும் உணவை ஜீரணிக்கக் கூடிய ஜீரண சக்தியைக் கொடுப்பது, ஹிருதயத் துடிப்புண்டாக்குவது, நுண் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் பலவிதமான் ரசங்களை உற்பத்தி செய்வது போன்ற அதி அற்புதகரமான வேலைகள் பிராண சக்தியால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதே பிராண சைதன்னியம் தான் ஜீவிகளுடைய ஜீவனாகவும் அந்தராத்மாவாகவும் குடிகொண்டிருக் கின்றது.

நரம்பு மண்டலம்:

மனித சரீரத்தில் அநேகம் கரந்திகள் அல்லது நரம்பு மண்டலங்கள் இருக்கின்றன.
நரம்பு மண்டலங்கள் நாடி நரம்புகளில் இருக்கின்ற வாத, பித்த, கப தொஷங்ககளைச் சமப்படுத்தி அவைகளை நிலை தவறாமல் இயக்குதல், மனம், புத்தி, காயங்களை இணக்கிச் செயல் படுத்துவது போன்ற நுட்பமான கருமங்களை ஆற்றிக் கொண்டிருக்கின்றன.
வெளி மனதின் விகாரங்கள் உணர்வுகளை எல்லாம் உள்மனம் வாங்கி அதற்குரிய சுக துக்கங்களை நாடி நரம்புகள் வழியாகச் சரீரம் முழுவதற்கும் அனுப்பி வைப்பதில் நரம்பு மண்டலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இப்படித்தான் நாம் சுக துக்கங்களை உணர்ந்து கொள்ளு கிறோம்.
ஆசனம், நாடி, சுத்திப் பிராணாயமம், கும்பபகப் பிராணாயாமம், பந்தனம், கிரியைகள் போன்றவை ஹட யோகத்தின் அதிமுக்கியமான பகுதிகள்.
சாஸ்திர ரீதியான ஆசனங்கள் எண்பத்திநான்கு. இவைகள் சரீரத்திற்கும் மனத்திற்கும் உபாதிகளை உண்டாக்குகின்ற ராஜச தமோ குண தர்மங்ககளை நாசஞ் செய்து, சோம்பல், சோர்வு, தடுமாற்றம், சந்தேகம், சஞ்சலம் போன்றவைகளை நீக்கி மனத்திற்கு ஸ்திரத் தன்மையையும், சரீரத்த்ற்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கின்றன.
பிரதான பிராணாயாமங்கள் எட்டு. அவைகள் சூரிய பேதனம், உஜ்ஜாயி, சீல்க்காரி, சீதலி, பஸ்திரிகா, பிராமரி, மூர்ச்சை, ப்ளாவினி, என்பனவைகளாகும்.
இந்த எட்டு வித பிராணாயாமத்தால் வியாதிகள் குணமடைவதுடன் நாடி நரம்புகளிலிருக்கின்ற கொழுப்பையும் கரைத்துச் சுவாசத்தை முழுச் சரீரத்திலும் தட்டுத் தடை இல்லாமல் ஏற்றவும் இறக்கவும் வேண்டிய நேரம் வரை சுவாச பந்தனம் செய்வதற்கும் இதனால் முடியும்.
முத்திரைகள் பத்து. அவைகள் மகாமுத்திரை, மகாபந்தம், மகாவேதம், கேசரி, உட்டியாணா, மூலபந்தம், ஜாலந்திர பந்தம், விபரீத கரணி,  வச்சிரோளி, சக்தி சாலனம் என்பவைகள்.
இந்தப் பத்து முத்திரைகளையும் குரு சந்நிதானத்தில் தக்க சில நோன்புகளுடனிருந்து சாதனை செய்து சித்தி யடைந்தால் சப்த தாதுக்கள் சுத்திகரிக்கப்பட்டு பெரும் பயன் பெறலாம்.
அதி நுட்பமான சித்திகளால் சகஸ்ராதாரக் கதவுகள் திறந்து அதிலிருக்கின்ற ஞானானந்த ரசத்தைச் சரீரத்திலும் ஜீவனிலும் ஒழுகச் செய்து ஜீவிதம் ஆனந்தமாகித் திகழ்கின்றது.
இப்படி தேகத்திற்கும், தேகிக்கும் பரம சுகத்தைத் தருவதாகிய ஹட யோக வித்தைகள் நமது பூர்வீக சொத்தாகவே இருக்கையில் அவற்றை அறிவதிலும் அப்பியாசிப்பதிலும் உதாசீனர்களாயிருப்பது ஏனோ?

அங்குசம்:


யானையை அங்குசத்தால் மடக்குவது போன்று தொல்லைகளைச் சிருஷ்டிக்கும் மனதைப் பக்தி என்ற அங்குசத்தால் மடக்கிச் சுயாதீனப் படுத்தும் பக்தன், சமுத்திர அலைகளுக் கிடையில் மிகச் சந்தோஷமாக நீந்திக் கரையேறும் சிறந்த ஒரு நீச்சல் வீரனைப் போன்று இம் மண்ணுலக வால்க்கையின் வெப்பம், குளிரால் தாக்கப் பட்டாமல் நீந்திக் கரையேறுகின்றான்.
ஆகையால் பக்தர்களுடைய பக்தி விசுவாசங்களைப் பாண்டவர்களைப் போன்று நிலை குலையாமல் உறுதிப் படுத்தினால் இப் பூவுலகப் பிரச்சனைகள் எல்லாம் பக்தனுக்கு அர்ச்சனை மலர்கள் போன்றவையாகவே இருக்கும்.
பாரத மகா காவியம் போன்ற நுல்களைக் கற்றறிவதால் மாத்திரம் பெரும் பயன் என்ன?
பாரதக் கதையை நன்றாகக் கற்றறிந்த ஏழைப் பிராமணன் இருந்தான்.பெருத்த குடும்பம். வறுமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்தப் பிராமணனுக்கு வறுமையைப் போக்குவதற்கு அவனுடைய மனைவி ஒரு ஆலோசனை கூறினாள்.
"மிகவும் நல்லவராகிய நம் மன்னர் ஒரு பெரும் புலவர் சபையை வைத்திருக்கிறார். நீக்கள் மன்னரிடம் போய் புலவர் சபையில் பாரதக் கதையை விரிவுரை செய்வதற் குரிய ஒரு சந்தர்ப்பத்தைக் கேளுங்கள். கிடைத்தால் அதற் கொரு மானியத்தையும் தந்து கொண்டிருப்பார். அதைக் கொண்டு நாம் சீவிக்கலாம்" என்று கூறிப் பிராமணனை வழியனுப்பினாள்.
பிராமணன் மனனரிடத்தில் சென்று வந்த நோக்கத்தைத் தெரிவித்தான். மன்னர் அதற்கு சம்மதித்தார். ஆனால் அதற்கு முன் பாரதக் கதையை நன்கு மீண்டும் படித்து விட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பி விட்டான்.
ஏகாந்த இடத்திற்குச் சென்று தனிமையிலிருந்து பாராயணம் செய்யத் தொடங்கினான் அந்தப் பிராமணன்.
நாளடைவில் பாரதக் கதையின் உட்பொருளில் இரண்டறக் கலந்து குடும்பம், வறுமை யாவற்றையும் மறக்கலாயினான்.
இறுதியில் இவ் வையக ஆசைகளெல்லாம் பிராமணனை விட்டு அழிந்தொழிந்தன.மாசு படியாத இறையின்பத்தில் லித்தான்.
கற்ற ஞானம் வாழ்வாக மலரும் போதுதான் கற்றதனால் பலன் ஏற்படும்.
இப்பிரபஞ்ச்சத்தைப் பந்தாக்கி விளையாடிக் கொண்டி ருக்கும் இறைவனுடைய திருவிளையாடலை ஞானானுபூதியினால் உணர்ந்தவர்களுக்கு இவ்வியக வாழ்வு பேரானந்தம் தரும் ஒரு விளையாட்டு.
பேராசையால் மத யானைகள் போன்று கலகஞ் செய்து திரியும் மனிதர்கள், கற்றவைகளில் நல்லவற்றை ஜீவித மயமாக்கினால் இந்த உலகம் ஆனந்த மயமாயிருக்கும்.

Tuesday 9 December 2014

சனாதன தர்மம்



#ஞான மண்டலம்

சனாதன தர்மம்

இறைவனனுக்கு சனாதனன் என்றொரு விசேட நாமம் இருக்கின்றது. சனாதனன் என்றால் என்றும் இருப்பவன் என்று பொருள்.
தர்மம் சனாதனனாகிய இறைவனிடத்திலிருந்து தோன்றி யதாகையால், அதற்க்குச் சனாதன தர்மம் அல்லது எப்பொழுதும் இருக்கின்ற தர்மம் என்று அர்த்தம்.
தர்மம் என்பது ஒரு மத விஸ்வாச சம்பிரதாயமன்று. தர்மம் வாழ்க்கையின் பீஜ சக்தி.
இதன் கர்ப்பாசயத்தில் கருக் கொண்டு வளரும் மனிதர்கள் ஜீவித தர்மங்களை நல்லவண்ணம் அனுபவித்து ஜீவித இலட்சியத்தை அடைகின்றனர்.

இணைக்கும் கருவி:


மின்சார சக்தியையும், மின் விளக்கையும் இணைக்கின்ற மின்கம்பி போன்று, இறைவனுடைய தெய்வீக சக்தியை மனித இருதயத்துடன் இணைக்கும் இணைப்புக் கருவிதான் சனாதன தர்மம்.
உலகம் என்னென்ன அபிவிருத்திகளைப் பெற்றிருந்த போதிலும் தார்மீக நெறிகளையிழந்த மனித வர்க்கம் மின்சார இணைப்பற்ற மின் விளக்கைப் போன்றதே.
பஞ்சமா பாதகங்களைத் தீண்டாத ஜீவிதம், இருதய சுத்தியோடு கூடிய ஈஸ்வர பக்தி, சமபாவனை, பரோபகாரம், இணங்கி வாழும் குணம், தன்னலம் குறைந்த சுபாவம் இவைகள் தர்மத்தின் அவயவங்கள்.
மனித சக்திக்கும் அறிவுக்கும் மீறிய உலகப் பிரச்சனைகள்,  இன மத துவேஷங்கள், அதிகரித்து வரும் சமுதாய விரோதச் செயல்கள், அனுகூலமில்லாத கால நிலைகள் போன்ற விபரீத சம்பவங்களெல்லாம் தர்மத்தின் அவயவ சக்திகள் தளர்ந்து வருவதன் அறிகுறிகள்.
ஜனந்களுக்கிடையில் பக்தி விஸ்வாசம் மேம்பட்டு வருவதாகத் தோன்றினாலும் கூட, தற்பொழுது தர்மத்தின் உண்மையான நிலை, "தர்மங்கரோதுபறவை" களின் கதை போன்றிருக்கிறது.

வினோத பறவை:


ஒரு தேசத்தில் தர்மம் குன்றி அதர்மம் பெருகிக் கொண்டிருந்த சமயத்தில் தர்மப் பிரசாரத்திற்காக "தர்மங்கரோதர பறவைகள்" என்ற பேரில் ஒரு பறவைக் கூட்டம் அங்கு வந்து சேர்ந்தது.
அப்பறவைகள் மக்கள் போற்றும் வண்ணம் தர்மப் பிரசாரம் செய்து வந்தன.
அந்த நாடு பசு சம்ரட்சனையில் பேர் பெற்ற நாடு. காலப் போக்கில் அங்கு வளர்க்கப்படும் பசுக்களுடைய கண்கள் களவு போய்க் கொண்டிருந்தன.
ஊர்மக்கள் இதனைக் கண்டு பிடிக்க முடியாமையால் மன்னனிடம் முறையிட்டனர்.
இதன் காரணத்தைக் கண்டறிவதற்கு மன்னன் தனது அதிகாரிகளைப் பணித்தான். சில நாட்களின் பின்னர் அதிகாரிகள் மன்னனிடம் வந்து காரணத்தை அறிவித்தனர். "தர்மம் கரோது பக்ஷீனாம் இராத்தி ரௌகோ நேத்திரௌ பக்ஷ்ணம்" என்பதுதான் காரணம் என்றனர்.
"பகல் முழுதும் தர்மப் பிரசாரம் செய்து வரும் பறவைகளே இராக் காலத்தில் பசுக்களின் கண்களைக் களவெடுத்து வருகின்றன. அவைகளுக்குப் பசுக் கண்களே உணவு. வேறொன்றும் உண்பதில்லை." என்று சொல்லி முடித்தார்கள்.
இந்தப் பறவைகளின் கதை போன்றதுதான் இன்றைய உலகப் போக்கு.
இன்னும் இதே நிலை போய்க் கொண்டிருந்தால் பாரத யுத்தத்திற்குப் பின் கௌரவர் குலத்திற்கு நேர்ந்ததுதான் நமது எதிர்கால சமுதாயத்திற்கு நேரலாம்.
ஆகையால் மனிதர்களைப் பேயராய்ப் பித்தராய் அலைய விடாமல் தடுத்தாட் கொண்டுவரும் சனாதன தர்மம் சிறப்புற்று வளருவதற்கு ஒவ்வொருவரும் தன் தன் கருமத்தைச் சுத்திகரிக்க வேண்டும்.

தார்மீக சமுதாயம்:

தேசத் தலைவர்கள், மதகுமார்கள், சமயப் பிரசாரர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் போன்ற தேசத்தின் இரத்த நாளங்களாய் இருப்பவர்கள்; ஆசார சீலராயிருந்து சிரத்தையோடும், கருணையோடும் பாமர மக்களைத் தார்மீக போதமுடையவர்களாக்க வேண்டும்.
தேசாபிவிருத்திக்குரிய சகல துறைகளிலும் சனாதன தர்மத்தின் அமிர்தம் பொழியும் பொழுது இன்று வரையும் உபத்திரவப் படுத்திக் கொண்டிருக்கும் சகல கஷ்டங்களும் சகஜமாகவே தீர்ந்து சாந்தியும் சுகமும் நிறைந்த ஒரு தார்மீக சமுதாயம் உதயமாகும்.

Thursday 27 November 2014

சுயாதீன மனம்



#ஞான மண்டலம்


சுயாதீன மனம்


காட்டில் சூரப்பற்றை என்று கூறப்படும் ஒரு இன முட்செடி இருக்கின்றது.
இது வளைந்த கூரிய முட்களையுடையதாய் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் ஒருவகை முட்புதர்.
இந்த முட்செடியில் காய்த்துப் பழுக்கும் சிறு பழங்கள் வௌவாலுக்கு மிக ருசியான உணவு.

வௌவால்:

இதைத் தின்பதற்காகப் பறந்து வந்து இச்செடியில் தொங்கும் வௌவாலின் தோற செட்டைகள் இம் மரத்தில்
கொழுவிக் கொள்ளும்.
கொழுவிக் கொள்ளும் பகுதியை விடுவிக்க முயற்சிக்கும் பொழுது, ஏனைய பகுதிகளும் முள்ளில் கொழுவிக் கொள்கின்றன. இதனால் வௌவால் தன்னை விடுவிக்க முடியாமல் அதிலேயே கிடந்தது மடிகின்றது.
இதே போன்று மனிதரும் விஷய சுகங்களென்ற முட்புதரிற் சிக்கி, மீள முடியாமல் அந்தரப்படுகின்றனர்.
விவேகத்தை உபயோகித்துச் சிரத்தையோடும் பொறுமையோடும் இதிலிருந்து மீள முயற்சிக்காத வர்களுடைய ஜீவன் மீண்டும் இதனையே பற்றிக்கொண்டு வீணாக மாய்கின்றது.

மழை:

மழை உயிரினங்களை உயிர்ப்பிக்கின்றது. இருள் மயமான முகில்கள் இல்லாமல் மழையாகிய அமிர்தம் வர்ஷிப்பதில்லை.
அதே போன்று சுக துக்கங்களாகிய கருக்கூட்டல் இல்லாமல் ஈஸ்வர அநுபூதி என்ற தேவாமிர்தம் மனிதரில் பொழிவதில்லை.
ஆகாய விமானங்கள் ஏறி இறங்கும் விமானத் தளம் போன்று ஜீவாத்மாக்கள் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெருந் தளந்தான் இந்த கர்ம பூமி.
ஜீவிகளுடைய பிரயாண லட்சியத்தை அடைவதற்கு இதைத் தவிர பிறிதோரிடமில்லை. எனவே மட் புதர் நிறைந்ததாயினும் மண்டலங்களில் சிறந்த மண்டலமாகிய  இந்தக் கர்ம பூமியில் மனிதராய்ப் பிறந்தவர்கள் எல்லாம் பெரும் புண்ணியசாலிகள்.
நாம் காலூன்றி நிற்கும் இத்தளத்தை வெறுக்காமலும், அதே சமயம் இதிலிருக்கும் மட் புதரில் கொழுவிக் கொள்ளாமலும் ஜீவிதத்தைச் சம்பூர்ணமாக்க வேண்டும்.

பாஷாணம்:

நமக்கு பந்த மோட்சங்களைத் தருவது மனந்தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். மனம் பாஷாணம் போன்று மிகக் கெட்டதும், நல்லதுமாயிருக்கின்றது.
பாஷாணத்தைச் சுத்திகரித்து ஔஷத வீரியமாக்கினால் அதைக் கொண்டு தீராத வியாதிகளையெல்லாம் தீர்க்கலாம்.
அதே போன்று அழுக்காறு நீங்கிய மனம் பிறவித் துன்பங்கள் என்னும் மகா ரோகத்தைத் தீர்க்கும் பெரும் சித்த ஔஷதமாகப் பரிணமிக்கின்றது.
மனிதரால் இலகுவில் கிரகிக்க முடியாத மனதின் இரகசிய நுண்ணிய கேந்திர ஸ்தானங்களைத் தடவிப் பார்த்துப் பிடிக்கவேண்டிய இடத்தில் பிடித்தால் "நாகெந்தி"மூலிகை நுகர்ந்த நாகம் போன்று மனம் அடங்கி நிற்கும்.
அடங்கிய மனம் நில்லென்றால் நிற்கும். போ என்றால் போகும். இவ்வாறு அடங்கிச் சுயாதீனப்பட்ட மனதை விட ஒருவருக்கு வேறென்ன பேறு பெறவேண்டியிருக்கின்றது.
இதற்குரிய மானசீகப் பயிற்சிகளை ஆத்மீக தர்மங்கள் நமக்குத் தருகின்றன.
ஒருவர் தன் மனம் சுயாதீனமடைந்த பின்னர் வாழுகின்ற வாழ்க்கைதான் எதார்த்தமான வாழ்க்கை.
உலகியல் இன்பங்களுக்காக பல வழியிலும் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருப்பவர்கள் நாள் தோறும் சிறிது நேரரமாவது மனப்பூர்வமாக ஜெபம், தியானம், பிரார்த்தனை, நாமசங்கீர்த்தனங்களாகிய ஆத்மீகப் பரிசீலனங்களைச் சிரத்தையோடு செய்து வ்ருவாராகில் லெளகீகமும் ஆத்மீகமுமான வாழ்க்கையில், இன்றிருப் பதைவிடக் கூடுதலான திருப்தியும் சுகமும் முன்னேற் றமும் அடைவார்கள்.
சிறிது சிறிதாகச் செய்யும் ஆத்மீகப் பயிற்சியால் காலக்கிரமத்தில் தன்னைத்தான் அரியும் ஞானம் என்ற பேரறிவைப் பெறலாம். இந்தப் பேரறிவுதானே பிறவிப் பயன் தரும் பேறு!

Sunday 23 November 2014

Face Book Posts

https://www.facebook.com/photo.php?fbid=10152560351124296&set=pcb.10152560352169296&type=1


மாவீரர் பலர் பிறந்த மண் எங்கள் மண்ணே அவர் 
தார்மீகப் போர்புரிந்த மண் எங்கள் மண்ணே
பூர்வீக நிலம் காக்கப் புறப்பட்ட மைந்தர் அவர்
போர்வீரர் போலிறந்த மண் எங்கள் மண்ணே.

கார்மேகம் மழைபொழிய குளிரும் எம் மண்ணே
செங்குருதிச் சேற்றினிலே குளிரந்தெழுந்த மண்ணே
தூர்வாரித் துரோகிகளைத் தூக்கியெறி மண்ணே
தீர்வாகத் தீந்தமிழோர் உரிமை பெறு மண்ணே.

மார்மீதும் மனைமீதும் குண்டுமழை பொழிந்தும்
யார்மீதும் தனிப்பகமை காட்டாத பண்பும் 
பார்மீது பலநாடு சென்றடைந்து வாழ்த்தும் 
பாசத்தால் எமை அனைத்த மண் எங்கள் மண்ணே.

கார்த்திகை நிலவினில் ஏற்றிடும் தீபம் 
காற்றினில் ஆடிடும் கார்த்திகைப் புஷ்பம் 
ஊட்டிடும் உணர்வெல்லாம் மண் எங்கள் மண்ணே
மாவீரர் நாள்மறவா மண் எங்கள் மண்ணே.

https://www.facebook.com/photo.php? 
fbid=10152559921584296&set=pcb.10152559923584296&type=1


கண்ணீர் சிந்தும் கார்த்திகை புஷ்பங்கள் 
மண்ணின் மைந்தரை மறப்பதில்லை.
செந்நீர் சிந்தி செத்து மடிந்தனர்
மண்ணில் மாந்தர்கள் மறக்கவில்லை.

பன்னீர் குளிப்பும் பஞ்சு மெத்தையும் பாவிகட்கு
கண்ணீர் குளிப்பும் நஞ்சு குப்பியும் பாரிவர்க்கு
விண்ணில் கார்மேகம் வீசிடும் மாதம் பூத்திடுவாய்
மண்ணில் இவர்தேகம் போர்த்திட நீயுமுதிர்ந்திடுவாய்.

சொன்னீர் சொன்னீர் உம் சோகக் கதைகளை
கேட்டிட இங்கு யாரும் இல்லை
மண்ணில் தர்மம் மாண்டதில்லை
மாபதகம் என்றும் வாழந்ததில்லை.

இருந்தும் இறந்தவர் போல்வாழ்வார் உலகில் 
இறந்தும் இருப்பவர் மேலாவார்.



Friday 21 November 2014

தர்சனம்

தர்சனம்

புதுக்கவிதை என்ற பெயர் தற்காலீகமானது. கவிதையின் பெயர் கவிதையே. இப்பெயர் பெறத் தகுதியற்ற யாவும் செய்யுள்கள்; செய்யப்பட்டவை. கவிதை எல்லாவகையான சொற்களையும் உதறுகிறது.நிதர்சனத்தில் திளைக்கிறது. யாப்பு என்ற திட்டமிடப்பட்ட உருவத்தை துறக்கும் கவிஞன் ஒரு புதிய உருவை நாடி இத்துறவை மேற்கொள்ளவில்லை.நிதசர்ணத்தை உணராத செய்யுள் வாதிகள், யாப்பு என்ற உருவில் ஒரு சௌகர்யத்தைக் கண்டு அதன் கதிக்குள் இயற்கைப் பொருள்களின் வர்ணனைகளையும், சாமான்ய மனிதனுக்குக்கூடத் தெரியும் அற முறைகளையும் அதீதமானவை என்று பிரமை காட்டி எழுதினர். இவர்கள் ஆழ்ந்த வாழ்வின் அதீத ரகசியங்களையோ மானுஷ்ய தர்மங்களையோ உணராதவர்கள். பிரத்தியட்சத்தின் மீது காதல் கொண்ட மனிதன் செய்யுள் வாதியிலிருந்து உயர எழுந்து ஸ்தூல நிதர்சனங்கள் வாழ்வின் அதீத ரகசியங்களுக்குக் குறியீடுகளாக, தார்மிக சக்திக்கு உரமாகக்கண்டான். போலி வர்ணனைகளையும் போலி தர்மங்களையும் துறந்தான். அந்தத் துறவோடு உடனிகழ்வாக யாப்பையும் துறந்தான். கவிதை தமிழில் புனர்ஜன்மம் பெற்ற கதை இது.

வசனத்தை உடைத்துப்போட்டு கவிதையை சாதித்துவிட முடியாது.

இன்றைய வாழ்வின் ஒரு உடைந்த கதி, நகர் என்ற பிரத்தியட்சத்தின் சிதறிச் சிதறித் தோன்றும் காட்சிகள், சீரற்றுத் தோன்றி மறையும் உருவப் பிரதிகள். பஸ்கள், பஸ்களினால் மறைக்கப்பட்டுத் தோன்றி ராஷஸ சொரூபமான கட்டிடங்களிடையே சிறை கொண்ட அஸ்தமனங்கள்,எட்ட இருந்துவந்து மறைந்து தொடர்பற்று அவசரத்தில் பேசி, கைகாட்டிச் சிரித்துப் பேசாது போய், மறையும் நண்பர்கள். இவையாவும் பிரத்தியட்சம். யாப்பின் கதிக்கு இந்த பிரத்தியட்சத்தில் இடமேது? எமது இன்றைய பிரக்ஞையின் இந்த சீரற்ற ஒரு புதிய தன்மையில் யாப்பு அங்கதத்திற்கே உதவும்.

In the room women come and go Talking of Michelangelo
என்ற வரியிலும்
I grow old, I grow old
I shall wear the bottoms of my frousers rolled
என்ற வரியிலும் சப்தம் அதீத உணர்வுக்காக உபயோகமாகவில்லை. கேலிக்கு அங்கதத்திற்கே உபயோகமாகிறது இன்று.

பண் என்பார் பாட்டென்பார்
கண்ணைச் சொருகிக் கவியென்பார்
அண்ணாந்து
கொட்டாவி விட்டதெல்லாம்
கூறுதமிழ் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு?

என்ற யாப்புருவம் கேலிக்கே -- அங்கதத்திற்கே உபயோகமாகிறது இன்று. அன்றைய சாவதானம் இல்லை. எனவே சாவதானத்தில் விளைந்த யாப்பு எமது பிரக்ஞையின் நடுவே நிகழும் போது அங்கதமாகிறது.பழைய வாழ்வின் கதியையோ, நாம் அதன் யாப்புருவோடு சேர்த்தே பருகுகிறோம்.

சீரும், அடியும், தளையும் யாப்பின் ஆதாரங்கள். சப்த அணிகளையும் யாப்பு மேற்கொள்ளும். இந்த அம்சங்களிலேயே உழல்வது சௌகர்யம். செய்யுள்வாதிகள் கவிதை என்ற ஆதாரத்தை இழந்தே இந்த உழலில் ஈடுபட்டனர். கவிதை என்பது அதன் பொருளாகவே உருப் பெறவேண்டும் என்பதுதான் இன்றைய சித்தாந்தம். நிதர்சனத்தை ஹ்ருதயமும் புத்தியும் தத்துவ தார்மிக உணர்வும் கொண்ட கண்களோடு சந்தித்தால்தான் 'பொருள்' என்ற அம்சம் செழிக்கும். செய்யுள்வாதிகளோ புலமைவாதிகளாயினர்.பழைய கவிஞர்களும் புலவர்கள் என்றே அவர்களது சமயத்தில் அழைக்கப்பட்டிருந்ததால் புலமையை நூல்களின் மூலமும் செய்யுள் இயற்றும் பயிற்சி மூலமும் பெற்று இவர்களும் புலவர்களாயினர். இதன் அபத்தத்தை உணர்ந்து பழைய புலவர்களை இந்த புதிய புலவர்களிளிருந்து பிரித்த கவிஞன்,

கண்டவன் கலைஞன்
பொருள் சொன்னவன் புலவன்
என்ற புதிய சித்தானந்தத்தை எழுதினான்.

இன்றைய கவிஞனுக்கு யாப்பின்மை ஒரு குற்றமாக முடியாது. கவிதையின் பொருளம்சத்தில் குற்றம் இருக்கக் கூடாது என்பதே இவனது அக்கறை. தங்கள் தங்கள் அளவில், அந்தந்த பிரசுர கர்த்தாக்கள் இன்று தமது திறமைக்கேற்ப பொருளம்சத்தையே யாப்பற்ற கவிதைகளில் முக்கியமானதாகக் கண்டு அந்த அடிப்படையிலேயே கவிதைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இங்கேதான் கூறியது கூறல்,மிகைப்படக் கூறல், சென்று தேய்ந்திறுதல் என்றெல்லாம் பொருளம்சத்தைப்பற்றிக் குறிப்பிட்ட குற்றங்களை அவதானிக்கும் சாத்யம் இருக்கிறது. இது போன்ற குற்றங்கள் எக்காலத்திலும் குற்றங்களே. யாப்பை மீறிய கவிதை பிறக்கக் காரணமே யாப்புருவக் கவிதையுள் இவ்வகைக் குற்றங்கள் களைகளாக வளர்ந்து மலிந்தமைதான் என்போரும் உளர். களைகளைப் பிடுங்கி எறிந்த போது ஒழுங்கற்று, திட்டுத் திட்டாக உண்மையான கவிதைப் பயிர் தெரிந்த நிலைமை யாப்பின்மையாயிற்று. அதுவே ஓர் அழகாயிற்று.

யாப்பற்ற கவிதைக்கு யாப்பாக அமைவது பொருளின் ஒழுங்கு. வசனத்தை உடைத்துத் தூவி இந்த ஒழுங்கை நிகழ்விக்க இயலாது. அறிவிற்கு போருட்கிடை தரும் அதிர்ச்சிகளின் ஒழுங்கிற்கேற்பவே யாப்பற்ற கவிதையின் வரிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இது வசனத்தை உடைத்துத் தூவுவதாகாது.

வசனத்தை
உடைத்துப்
போடுவதல்ல
கவிதை

என்ற ஒழுங்கு எவ்வித அதிர்ச்சியையும் தரவில்லை. எனவே இது செய்யுள்! யாப்புருவினுள் மட்டும் அல்ல, யாப்பற்ற உருவினுள் கூட செய்யுள் சாத்தியம் என்பதற்கு இன்றைய நிலைமையில் ஆதாரங்கள் உள. விகடக் கூற்றுக்களை மேற்படி ஒழுங்கைப் போன்ற வகையில் உடைத்துப் போட்டுப் பிரசுரித்துக் கொள்வோருமுளர்.

நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள் என்று
விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன
வாயேன்.

என்ற ஒழுங்கு செய்யுள்தான். இதை வசனமாக எழுதிப்பார்த்தால் தன போலித்தன்மையை இது காட்டி விடுவதை உணரலாம்.

நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள் என்று விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன, வாயேன்.

ஒரு முதிர்ச்சியற்ற, மனிதத்தன்மையற்ற, செக்ஸின் ஆழத்தை உணராத இளம்பிள்ளை (adolescent) மன நிலையில் பிறக்கும் விகடத்தனமான கூற்று. இந்த மன நிலைக்கும் இவ்வகை விகடத்துக்கும் கவிதை அகப்படாது.

மேலே உள்ள இரண்டு உதாரணங்களில் வரிக்கு வரி நாம் நிறுத்த வேண்டிய அவசியத்தை அந்த வரிகள் ஏற்படுத்த வில்லை. 'வசனத்தை' என்ற பிரயோகம் ஒரு தனி வரியாக நிகழ வேண்டுமானால், அது பொருள்வழியில் நிகழ வேண்டும். அவ்வரியின் பொருள் தொடர்ந்து வரும் சொல்லான 'உடைத்து' என்ற வரியுடன் வசன கதியில்தான் உறவு கொள்கிறது.எனவே இந்த வரிக்குத் தன்நிகழ்வு இல்லை.

'நிரோத் உபயோகியுங்கள் என்று....
என்று? அதற்கப்புறம்?

'விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன' அதுதான் தெரியுமே, என்று சலித்துக் கொள்கிறோம். 'நிரோத் உபயோகியுங்கள் என்று' என நிறுத்தப்பட்டவுடன் நாம் தயாராவது ஒரு அதிர்ச்சிக்காகும். கடைசி வரியான 'வாயேன்' கூட அறிவுக்கு அதிர்ச்சி தரவில்லை. முகச் சுளிப்பையோ கேலியுணர்வையோதான் தருகிறது. அறிவு அதிர்ந்து விரியவில்லை.

கழுத்திறுக்க
கண்பிதுங்க
நெற்றியில் வேர்வை
முத்தாகி உருண்டோட
சந்தைக்குச் சுமையோடு
செல்கிறேன்,
சுமைமாற்றி, ஏதேனும்
இருக்கலாகாதா?

இங்கே ஒவ்வொரு வரியும் தன்னிகழ்வு பெறுகிறது. 'கழுத்திறுக்க, கண்பிதுங்க, நெற்றியில் வேர்வை முத்தாகி உருண்டோட, சந்தைக்கு சுமையோடு செல்கிறேன். சுமைமாற்றி ஏதேனும் இருக்கலாகாதா?' என்று இதை வசனமாக எழுதிப் பார்க்கும் போதும் நாம் இதை வாசிப்பதும் கவிதையின் கதியில்தான். நெற்றியில் வேர்வை' என்றவுடனேயே நம் பிரக்ஞை நிற்கின்றது. காரணம் கழுத்திறுக்க-- கண்பிதுங்க--என்று ஒரு பெரிய பாரத்தைச் சுமப்பதன் விளைவுகள் நின்று நின்று பிறந்து முதல் இரண்டு சொற்களுமே தனித் தனி வரிகளாக ஒரு கதியை ஏற்படுத்துவதுதான். ஒரு புடவையை வித்துக் கிடத்தி அதன் ஒரு கோடியில் பிடித்து உதறி ஓர் அலையைப் பிறப்பித்ததும் அவ அலை புடவையின் முழுப் பரப்பிலும் ஓடி வருவது போல, முதல் இரண்டு வரிகளிலும் ஏற்பட்ட லயம் முன்றாவது வரியிலும் தொற்றிக் கொள்கிறது. நான்காவது வரி ஆரம்பம் 'நெற்றிக்கும் முத்து'க்கும் ஒற்றேளுத்துச் சப்த உறவு கொண்டு எதிரொலிக்கிறது. 'சந்தைக்குச் சுமையோடு' என்ற வரிக்கு அடுத்து 'செல்கிறேன்' ஆரம்பித்து ச, செ யிலுள்ள சகர உறவோடாகும்.

இங்கே இக்கவியே குறிப்பிடும் வகையாக சப்த அணிகூட ஒரேயடியாக நீக்கப்படவில்லை. சிக்கனமாகிறது. "சவுக்கந் தோப்பினூ டே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஓயுமொலி அளவுக்கு சப்தம் சிக்கனமாகிறது.

இக் கவிதை வரிகளில் வரிக்கு வரி ஒருமனநிலையின் பிரதிமை படிப்படியாக எழும்புவதில்தான் அறிவு விருந்தடைகிறது. படிப்பவன் மௌனம் கொள்கிறான். பிரத்தியட்ச வாழ்வின் பங்கங்களில் ஒன்றைக் கவியோடு பகிர்ந்து கொள்கிறான். 'முத்தாகி உருண்டோட'என்பது வரை ஒரு கடினமான சமயத்தில் உடல் கொள்ளும் இயல்புகள். சந்தைக்குச் சுமையோடு செல்கிறேன் என்றதும் இயல்பின் காரியம் காரணம் கொண்டு விரிவடைகிறது. கவி வெறும் ஸ்தூலச் சுமையைப் பற்றிப் பேசவில்லை. 'சுமை'என்ற ஸ்தூல நிதர்சனம் ஒரு ஆழ்ந்த பரிமாணத்திலுள்ள நிதர்சனத்துக்கு இட்டுச் செல்கிறது.

கழுத்திறுக்க
கண்பிதுங்க
நெற்றியில் வேர்வை
முத்தாகி உருண்டோட
சந்தைக்குச் சுமையோடு
செல்கின்றேன்.
சுமைமாற்றி ஏதேனும்
இருக்கலாகாதா?
தானே அழுதழுது
பிள்ளைபெற வேணுமென்று
நெஞ்சற்ற டாக்டர்களும்
முதியவரும் சொன்னபடி
செய்ய முயன்றேன்,
முயல்கிறேன்.
இடுப்பில் கையும்
இருளூடே முனகலுமாய்
ஒடிந்து குமைகின்றேன்.
சுமைமாற்றி ஏதேனும்
இருக்கலாகாதா?
உணர்வை விளக்கி
உள்ளொளியை எள்ளி
தன்னறிவு வழிச் செல்லும்
தனிச்சுமையை ஏற்று
வாழ்வின் அடிப்படையைக்
குடைந்தறிய முற்பட்டேன்
சப்பாத்திப்பழம் சடைத்த
வெறுமையே வாழ்வாயிற்று
வேதனையே அரசாயிற்று......

சரீரத் தளத்திலிருந்து கவி சுமை என்ற படிமத்தை ஆன்மிக பிரச்னை வரை ஈர்த்துச் செல்லும் ஒழுங்கு அற்புதமானது.

இது புலனாகிய பின்பு மீண்டும் 'கழுத்திறுக்க' என்று இரண்டாவது தடவை படிக்கிறோம். முதற் சொல்லே அதிர்ச்சி தருகிறது.தன்னறிவின் தனிச்சுமைக்கும் இந்த கழுத்திறுப்ப்தற்கும் உள்ள உறவு இப்போது பலமாகிவிட்டது. எனவே திரும்பத் திரும்பப் படிப்பதற் கேற்ப எதிரொலிகளின் செறிவு உள்ளதுதான் கவிதை. நிரோத்தைப் போன்று உபயோகித்து விட்டு கழற்றி வீசுவதற்கல்ல கவிதை.முன் குறிப்பிட்ட நிரோத் 'கவிதை'யில் 'வாயேன்' என்ற பிரயோகத்தோடு 'கவிதை' தீர்ந்தே விடுகிறது. திரும்பப் படித்து அதிசயிக்க அங்கே ஏதுமில்லை.

துருப்பிடித்த
இரும்புக் கோடுகளினூடே
சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப்பாறைகள்

மேலே குறிப்பிட்ட 'ஓயுமொலி' என்ற அம்சம் கூட குறைவாகவே உள்ள கவிதை இது. இங்கே உடைவு நேர்வதற்கு, சப்தத்தின் அனுகூலம் கிஞ்சித்தும் இல்லை. பொருளே யாப்பு. 'கோடு'என்பது ஒரு குணம். இரும்புக் 'கோடு'என்ற பிரயோகம் ஒரு அதிர்ச்சி தருவது.'துருப்பிடித்த' அம்சத்தில் நிறுத்துவதானால் நாம் எதற்கோ தயாராகிறோம். எதிர்பார்த்ததற்கேற்ப இரும்புக்கோடுகளினூடே, என்ற பிரயோகம் 'துறுத்' தன்மையையும் ஏற்று அதிர்வுதந்து விரிகிறது.'இரும்புக்கோடு' என்பது தனிச் செறிவுள்ள பிரயோகம். எனவே தனிவரியாகக் கூடியது. இத்தகைய தகுதி பெறாத பிரயோகங்கள் ஒன்றன் பின்னாக  ஒன்று வந்தும், கவித்துவத்தின் சாயலே மிகுதியாக உள்ள பிறவிகளைத்தான் 'வசன கவிதைகள்' என வேண்டும். 'சிதறும்' 'பயனற்ற' என்று நிறுத்தப்பட்டதற்கும் காரணம் சிதறல், பயனின்மை ஆகிய இரண்டு தன்மைகளும் தனித் தனியாக அழுத்தம் பெருவதாலாகும். தொடர்ந்து  வரும் பிரயோகத்தைக் கவனித்தால் அது, இதுவரை வந்த பிரயோகங்களை வெற்றென விளக்குவதாக இல்லை.விளக்கி விரிவு கொள்வதாகவே உள்ளது. 'சிதறும் பயனற்ற அலைகள்' என்றிருந்தால் வெற்றின் விளக்கம். அதே சமயத்தில் தர்க்கத்துக்கு ஒவ்வாதது. அலைகள் சிதறலாம். பயனற்றவையா? என நம் அறிவு முகம் சுளிக்கும்.பயனின்மைக்குக் காரணம் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால்

சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப்பாறைகள்

எனும்போது, 'அலைகள்' என்று குறிப்பிடாமலே 'அலைகள்' குறிப்பிடப்பட்டு, பயனின்மைக்கு உப்பு நீரும் இணங்கி விரிகின்றன. முன்னிரு வரிகளும் மூன்றாவது வரியில் பொருள்வாயிலாகக் கலக்கிறது. இக்கலப்பிலேயே அறிவு சமாதானம் கொள்ளும், விரியும்,வியப்படையும். இக்கலப்பு 'அலைகள்' என்ற பிரயோகத்தில் நிகழாமல் அறிவும் ஏமாறும். வெறுப்படையும்.தொயும். கவிதையும் ஊர்வனவற்றைச் சாரும்.

தீட்சண்யத்தோடு இயங்கக் கூடியவனுக்குத்தான் கவிதையுலகில் இடமுண்டு. வரிக்கு வரி பொருளம்சத்தில் தர்க்கம் நிகழ்ந்துகொண்டு போவதுதான் சிருஷ்டி முறை. இன்றைய பெரும்பாலான யாப்பற்ற கவிதைகளிலோ இந்த தீட்சண்யம் இல்லை. ஒரு புறத்தில் விகடக்கூற்றுக்களும், ஹிருதய மின்மையையே 'பரிசோதனை' என்று சொல்லி உருவாகும் பிதற்றல்களும்,மறுபுறத்தில் கட்சி அரசியலுக்கு ஒத்தூதி அதீத சொற்பிரயோகங்களை எவ்வித கவித்வ நியாயமுமற்று அடுக்குவோரும் மலிந்திருக்கின்றனர்.பயங்கர ஆடை மொழிகளை இவ்வகையினர் கவித்வ தர்க்கம் அற்று பிரயோகிக்கின்றனர்.

அடைமொழிகளின் கடமையை பெயர்ச சொற்களும் வினைச் சொற்களும் ஏற்று தனித்து வரும்போது கவிதையின் உறுதி பெருகுகிறது. அடைமொழி உபயோகப்படும் பட்சத்தில், அது பெயர்ச் சொல்லுடன் பின்னிப் பிணைந்து தீவிரம் பெற்றாக வேண்டும். இன்றைய பிரக்ஞையில் சாங்கோபாங்கமான அடைமொழி அடுக்குகளுக்கு இடமில்லை.அத்தகைய அடுக்குகள் யாப்பின் சாவதான பிரக்ஞியைச் சார்ந்தவை.அடைமொழியும் உவமையும் எழுவாய்ப் பெயரைவிட்டுத் தனித்து நிற்பவை. எனவே எழுவாய்க்கு, வினைக்கு,கவிதைக்கு தீவிரம் தரமாட்டாதவை. இந்நிலையில் இருமுறைகள் கையாளப்படும் சமயத்தில் இவை புதிய பிரக்ஞையின் படிமங்களாகவே பிறந்தாக வேண்டும். இன்றைய பிரத்தியட்சத்தின் கவி நிகழ்ச்சிகளாக வேண்டும்.

இனி,
கவிதையில் ஏற்படும் சிக்கல் தெளிவின் அடிப்படையில் நிகழ்ந்தாக வேண்டும்.

சிலையை உடை 
என் சிலையை உடை 
கடலோரம் 
காலடிச் சுவடு 

உறுதிமயமான சிலையை உடைக்கும்படி சொல்வது தெளிவாகிறது. கடலோரம் காலடிச் சுவடு இருப்பதும் தெளிவாகிறது. இரண்டு பிரயோகங்களும் பின்னப்ப்படும்போதும் ஏற்படும் அறிவில் அதிர்ந்து உள்ளோடி விரிகிறது.

இன்னும் வரும் 21/01/2014

இன்னும் வரும் 20/01/2014

இன்னும் வரும் 18/01/2014

இன்னும் வரும் 17/01/2014

கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு மார்ச் 1973

"ஃ" ஓர் எழுத்தாயுத மாத ஏடு

கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு மார்ச் 1973

மணிவிழா கொண்டாடும் சி.சு.செல்லப்பாவுக்கு சமர்ப்பணம்

வெங்கட் சாமிநாதன்
பிரமிள் பானுச்சந்ரென்

நம் உணர்வுலகு அநுபவ உலகு பல பரிமாணங்களைக் கொண்டது. உணரக் கிடைக்கும் அனந்தம் முழுமையும் சிந்தனையின் வாய்ப்படுவதில்லை. நம்மில் பெரும்பாலோர்க்கு அவரவர் சிந்தனை மொழிவழிப்பட்டதாகும். இதன் விளைவாக அவர்கள் சிந்தனை மொழியின் பரிமாணச் சிறைக்குள் அடைபட்டுப்போகிறது. இச்சிறைச் சுவருக்குள்ளேயே, அநுபவ உணர்வுலகமும் அடங்கி விட்டதாக அவர்கள் தீர்மானித்துக் கொள்கிறார்கள். வேறு வார்த்தைகளில் நமக்குச் சாத்தியமாகவிருக்கும் அநுபவ, உணர்வுலகு ஒரு பெரும் வட்டம் எனக் கொண்டால், அதனுள் ஒரு சிறு வட்டம் சிந்தனை உலகு. அதனுள்ளும் சிறிய வட்டம் மொழி சாத்திய உலகு. ஒரு லட்சிய நோக்கில், மொழி சாத்திய சிறு வட்டம் படிப் படியாக விரிந்து, ஆழ்ந்து, உக்கிரஹித்து அநுபவ உணர்வுலகின் பெரு வட்டத்தில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்ளவேண்டும். நம் கலைஞனர்கள், இலக்கியாசிரியர்கள், "பெரும் பெரும் " விமரிசக தகைகள் எல்லாம் மொழி சாத்திய உலகான சிறு வட்டத்தையே அநுபவ உணர்வுலக பெருவட்டமாகக் கண்டு மயங்குகிறார்கள். இது பரிதாபத்திற்குரியது.

மொழி சாத்திய சிறு வட்டம் என்று யான் சொன்னது இப்போதைய சந்தர்ப்ப சௌகர்யத்திற்காகத்தான். ஏனெனில் இக்கட்டுரை எழுதும் சந்தர்ப்பத்தில் என் சர்ச்சைக்குட்படுவது மொழி என்னும் குறியீடு. வேறு சந்தர்ப்பங்களில், அச்சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு வண்ணம், கோடு, சப்தம், காட்சி என ஆரம்பச் சிறு வட்டத்தின் குறியீடுக் குணத்தை மாற்றிக்கொள்வேன்.இருப்பினும் வெவ்வேறு வகைக் குறியீட்டுச் சாதனங்களின் சிறுவட்டமாக ஆரம்பிக்கும் ஒன்று அநுபவ உணர்வு பெரும் வட்டத்திற்கும் போகும் விரிவில், ஆழத்தில், உக்கிரத்தில் ஒருமை பெற்று இனங்காட்டிப் பிரிக்க முடியாத ஒரு முழுமையை அடைகிறது. அதனால்தான் நம் உணர்வு அநுபவ உலகு பல பரிமாணங்களைக் கொண்டது என்றேன்.

பெரு வட்டம், சிறு வட்டம் எனச் சொன்னதால்தான், ஒன்றிலிருந்து மற்றுன்றிற்கு நிகழும் நகர்வு எனக் கொள்வது தவறு. இது நிகழ்வது முழுக்க முழுக்க 'இடமற்ற' மன விஸ்தாரத்தில். சிறு வட்டச் சிறையோ, பெரு வட்ட விரிவோ அவரவர் மனதில், பிரக்ஞையில் நிகழ்வது. ஒருவன் பெருவட்ட இருப்பை மறுத்து தான் சிறைப்படும் சிறு வட்ட அணைப்புதான் வாழும் சந்தர்ப்பங்களையும் அவன் சிந்தனையின் பரிமாணங்களையும் பொறுத்தது.


பெரு வட்ட உணர்வுலகோ, சப்தம், மொழி என்ற பரிமாண எல்லைகளில் சிறைப்படுவதில்லை. மொழிச் சாதன சிறு வட்டத்தில், பயிற்சி, வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள், ஈடுபாட்டின் ஓரச் சாய்வு ஆகியவற்றின் காரணமாக சிறைப்படுபவன், பெருவட்ட உணர்வுலகில் , மொழியின் பரிமாணம் மூலம் தான் தரிசிப்பதை மாத்திரமே எடுத்துக் கொள்கிறான். அவனுக்குக் கிடைப்பது ஒரு சிதைந்த உலகு. மூளியான சத்தியம். "எனக்கு இலக்கியம் ஒன்றில்தான் குறி, மற்றவற்றைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை" என்பவன் எவ்வளவு பெரும், பெரும், இலக்கிய கர்த்தாவானாலும் அவன் உலகு சிதைந்த உலகுதான். உண்மையின் தரிசனத் தேடல் கொண்ட இலக்கிய கர்த்தா அவ்வாறு சொல்ல மாட்டான். சிதைபட்ட உலகை மூளியான சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவும் மாட்டான். அவன் தேடலில் பெருவட்ட உணர்வுலகின் மற்ற பரிமாணங்களின் சாயல் நிழல் தட்டியிருக்கும். இருக்காவிட்டால், சத்தியத் தேட்டையின் வெறும் சாதனமேயாகிய மொழியை சத்தியமாகக் கண்டு மயங்கியவன் அவன். சாதனங்களில் ஏதும் பவித்ரத்வம் இல்லை. சத்தியம் இல்லை.

சந்தர்ப்ப வசமாகவோ, ஈடுபாட்டின் விளைவாகவோ, வண்ணங்களையும், கோடுகளையும் தான் சிறுவட்ட ஆரம்பமாகக் கொண்ட வான்கோ, பெரு வட்ட உணர்வுலகில் உள்மன உளைச்சல் என்ற பரிமாணத்தையும் கண்டான். "முதுமை" கவிதையில் பரிதி, "பரிதிப் பிணம்" ஆகிறது. வான்கோவின் ஓவியத்தில் சூரியனும், ஸிப்ராஸ் மரங்களும் வயல்வெளிகளும் சைத்ரிகனின் மன உளைச்சலை ஸ்வீகரித்துக் கொள்கின்றன. பெரும் சந்தேகக் குறிகளில் ஆரம்பித்து ஐன்ஸ்டின், உணர்வு அநுபவித்தறியாத பிரபஞ்சத்தின் கூறுகளைக் கண்டான். அன்றாட வாழ்வின் பரிதவிப்பில் பிரயாணத்தைத் தொடர்ந்த கார்ல் மார்க்ஸ் சமுதாயத்தின்,மனித சரித்திரத்தின் பிரவாஹ கதியை, அலையாடலை நிர்ணயித்து விட்டான். வண்ணப்புள்ளிகளின் சிறு வட்டத்திலிருந்து காட்சிப் பதிவின் ஒளிச் சேர்க்கைக் கூறுகளைக் காணும் எல்லையை அடைந்தவன் ஸுராட் (Seurat). ஜப்பானிய சித்திர எழுத்துக்களின் அமைப்பு முறை, ஐஸ்ன்டினையும், நரம்பு பலவீனங்களின் ஆராய்ச்சி பாவ்லோவையும், மனித மனத்தின் இயல்புகளுக்குக் கொண்டு சேர்த்தது. இப்படி, மனித வரலாற்றின் சிந்தனா சரித்திரத்தில், ஒரு பரிமாண சாதனா ஆரம்பத்திலிருந்து அதன் வழியே தொடங்கிய பிரயாணம் மற்ற வேறு பரிமாண சாதனா எல்லைகளுக்குத் தாவிய நிகழ்ச்சிகள் அனந்தம். இருந்த இடத்தை விட்டு நகராத பிரகிருதிகள் தாலுகா ஆபீஸ் டெஸ்பாச் கிளார்க்குகள் மாத்திரமல்ல, தமிழ் நாட்டு இலக்கிய விமர்சகப் பெரும் புள்ளிகளும்தான்.

பிரமிள் பானுச்சந்ரென் மொழிவழி சாதனைக்குள் காலெடுத்து வைக்குமுன் இந்த ஆரம்ப அறிமுக எச்சரிக்கை தேவைப்படுகிறது. பானுச்சாந்ரெனின் "கவிதைகள்' இன்ன உலகில் இன்ன பரிமாண எல்லையில்தான் இயங்கும் என நம் தமிழ்தந்த மொழிவழிச் சாதனா சிருவட்டச் சிறைக்குள் இருந்துகொண்டு நிர்ணயிபபதோ, எதிர் பார்ப்பதோ தவறாக முடியும். பானுசந்ரெனின் அநுபவ உணர்வுலகப் பெரு வட்டம் மொழி வழி சாதனா வட்டமாக (கவனிக்கவும், சிறு வட்டமாக அல்ல) தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறது. அவர் எழுத்துக்களில் - இங்கு அவர் கவிதைகளில் சிறு வட்டம் பெரு வட்டமாகத் தன்னை விரித்துக் கொள்கிறது. உக்கிரஹித்துக் கொள்கிறது. அவ்விரிதலில், உக்கிரஹிப்பில், அதன் பரிமாண எல்லைகள் மாறியிருப்பதைக் காணலாம், காணச் சக்தி உள்ளவர்கள் ஏனெனில் முதலும் கடைசியுமாக மொழி வெறும் குறியீடே. வாடிப்பட்டி வைரமுத்துப் பிள்ளையிடம் 'Icicles' (ஐஸ் படிமம்) என்று மட்டுமே சொல்லி அதை உணர்த்த முடியாது. பானுச்ச்ந்ரெனின் உணர்வுலகில் கொஞ்சமாவது தானே எட்டிப் பார்த்திருக்க வேண்டும். அவர் காட்டும் பரிமாண விஸ்தாரங்களில் கொஞ்சமாவது தாமும் உணரும் சக்தி வேண்டும்.

நமக்கும் பரிச்சயமான, பாதுகாப்புத் தரும் நம்பிக்கை உணர்வு ஊட்டும் உலகங்களும் பரிமாணங்களும் பானுச்சாந்ரெனின் உலகில் தகர்க்கப்படுகின்றன. கண்களின் வீச்சுத் தொடும் அடிவானம் வரையாவது நீங்கள் சென்று, அடிவானத்திற்கப்பால் அகன்று விரியும் உலகத்தைப் பற்றிய ஞானம் இருந்தால்தான், அடிவானம் வரை மொழிவகுத்த பாதை வழியே சென்று அதற்கும் அப்பால் பானுச்சாந்ரென் அமைக்கும் மொழிவழிப் பாதை வழியே அவர் இட்டுச் செல்லும் உலகத்திற்குப் பயணம் செல்ல சாத்தியமாகும். இல்லையெனில் "எனக்கு இலக்கியம் தான் குறி" என்று தெரு முனையிலேயே டேரா போட்டுக் குருட்டு வாழ்க்கை நடத்த உங்களுக்குச் சுதந்திரம் உண்டு.

இன்று பெரும்பாலான தமிழ்க் கவிதை செல்லும் பாதை, ஏற்கனவே மொழி மொழி சிரமைத்துத் தந்துவிட்ட பாதையில் நீங்கள் அமைத்துக்கொண்ட சௌகரியமான ஒரு நடை பாதையேயாகும். இந்த நடைபாதைக்குள்தான் செப்பனிடுதல், கல்பதித்தல், சீரமைத்தல், அரசியலில் அலங்கார தர்ம கோஷங்கள் எழுதுதல் எல்லாம் நடைபெறுகின்றன. இன்னொரு சிலரோடு பானுச்சாந்ரெனும் மொளிவழிப் பாதைக்கப்பால் உள்ள உலகின் தரிசனங்களைக் காட்டுபவர்.

புதுக்கவிதையில் மரபில், பிரமிள் பானுச்சாந்ரெனின் கவிதைகளைத் தனித்துக் காட்டும் குணங்கள் இரண்டு. ஒன்று அவரது படிம உலகம். இவ்வாறாக நான் பிரித்துக் காட்டியது ஒரு விளக்க சௌகர்யத்திற்காகத்தான். மன--பிரபஞ்ச உணர்வுலகம்தான் படிம ரூபமாக நமக்குக் காட்சியளிக்கிறது. படிமம், காட்சி வழிப்பட்டது. ஓவிய சிற்ப உலகிலிருந்து இடம் பெயர்ந்தது. மன--பிரபஞ்ச உணர்வுலகம், சிந்தனை வழிப்பட்டது. மனோதத்துவ--பிரபஞ்ச ஆராய்வு வழிப்பட்டது. ஆகவே "இலக்கியக்குறி" கொண்ட கற்பரசிகள், மொழிக் கண்ணகிகள் இங்கு கால்வைப்பது ஆபத்தானது. அநுபவ உணர்வுலகில் மற்ற பரிமாணங்களும் உண்டு என அறிந்து அவ்வுலகில் சஞ்சரிக்க விரும்புகிறவர்களுக்கு இங்கு இடம் உண்டு.

மேலே செல்லுமுன் இன்னுமொரு விளக்கம் அவசியம். படிமம் என்பது இங்கு உத்தி அல்ல. காட்சி அனுபவம். அநுபவ சத்தியம். அநுபவ உணர்வுலகமும் படித்தறிந்த தகவல் சேர்க்கை அல்ல, அதுவும் அநுபவ சத்தியம். உத்திகளாகவும், புதுமைகளாகவும், அநுபவ சத்தியத்தைக் காண்பவர்கள் வான்கோழி நட்டியமாடுபவர்கள். அவர்களில் ஒருவரின் கவிதை ஒன்றை மாதிருக்கென தரலாம்.

மலைகள் என்னும் 
குறும்பற்கள் 
முளைத்திராத 
பூதலத்தின் 
கொக்கு போலக் 
காலூன்றி 
நிற்கும் மரங்கள் 
அதற்கப்பால் 
எழுந்து வீழ்ந்து 
தடுமாறும் 
நடக்கத் தெரியாத கடலலைகள் 
யார் சென்றாலும் 
விரல் நீட்டும்.

இங்கு வான்கோழி படிம நடனம் ஆடுகிறது.

மலைகள் என்னும் 
குறும்பற்கள்  
முளைத்திராத ... போயிற்று. இதற்குள்ளேயே பூனை சாக்குப்பைக்கு வெளியே தலை நீட்டி தப்பித்தோடி விட்டது. 


எண்சீர் விருத்தத்திலிருந்து, அறுசீர் விருத்தத்திற்கும், களிப்பாவுக்கும், அகவலுக்கும் என்று கிளைக்குக்கிளை தாவும் பண்டித லாவகம், படிமத்தையும் கிளையாகக் கணித்து தாவியதன் விளைவு இக்கால் முறிவு. இப்படியும் பானுச்சாந்ரென் 70 வருடத்திற்கு முந்தைய ஐரோப்பிய முயற்சிகளிலிருந்து கற்றதல்ல.இன்று இன்னொருவர் பானுச்சந்ரெனிடமிருந்து கற்க.

இவ்வான்கோழி நடனத்திற்குக் காரணமே நம் விமரிசகப் பெருந்தகைகள் தாம். சோதனை என்ற இயக்கத்தின் தாத்பர்யத்தையும், உள்ளார்ந்த உந்துதலையும் முன் வைக்காமல், இப் பெருந்தகைகள், "சோதனை, சோதனை" என்று இலக்கியக் கற்பு நச்சு பண்ணியதன் வினைதான் இவ்வான்கோழி நடனம். சோதனையின் உந்துதலே, ஒரு பரிமாண அநுபவத்திலிருந்து இன்னொரு பரிமாண சோதனைக்குத் தாவும் இயக்கம் தான் என்பதை இலக்கிய கண்ணகிகள் உணரவும் இல்லை, ஆதலால் அதை எடுத்துரைக்கவும் இல்லை.

படிமம் என்பது சம்பிரதாயமாக (கவனிக்கவும்) "சம்பிரதாயமாக" ஓவிய, சிற்ப வழி அநுபவம் ஆகும். மன உளைச்சல்கள், சம்பிரதாயமாக, சொல் வழி, இலக்கிய வழி அநுபவம் ஆவது போல, மன உளைச்சல்கள் வான்கோ என்ற ஓவியனிடம் சாதனையாக பதிவு பெற்றது போல, படிம அநுபவங்கள் மொழிவழி வெளியீடு பெறும் சந்தர்ப்பங்கள் தாம் 70 வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் நடந்த படிம கவிதை முயற்சிகள். இங்கு பிரமிள் பானுச்சாந்ரெனின் கைகளில் இன்று தமிழும் நிகழ்ந்திருக்கிறது.இந்நிகழ்ச்சியின் ஊற்றுக் கண்ணை, பானுச்சாந்ரெனின் அநுபவ உணர்வுலகின் நிதர்ஸனத்தில் தான் காண வேண்டும். 1961-ம் வருட "எழுத்து" 36-ல் வெளிவந்த கவிதை "விடிவு" 

பூமித் தோலில் 
அழகுத் தேமல்.
பரிதி புணர்ந்து 
படரும் விந்து.
கதிர்கள் கமழ்ந்து 
விரியும் பூ.
இருளின் சிறகைத் 
தின்னும் கிருமி.
வெளிச்சச் சிறகில் 
மிதக்கும் குருவி.

இங்கு ஒரே காட்சி ஐந்து ரூபங்களில் ஐந்துவித தோற்றங்களில் ஒன்றையழித்து மற்றொன்றாக தோன்றி மறைகிறது.இது தமிழில் முதன் முதல் படிமக் கவிதை. இதன் பிறப்பிற்குக் காரணங்களாக இன்னொரு படிமக் கவிஞரை நாம் தேட வேண்டிய அவசியத்தை பனுச்சாந்ரென் வைக்கவில்லை. இதன் தோற்றத்திற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, "எழுத்து" தொடங்கிய புதுக்கவிதை மரபு அளித்த சுதந்திர இயக்கம், மற்றொன்று மிக முக்கியமானது. உணர்வுலகக் குணா விசேஷம். "விடிவு" கவிதையில் கண்ட படிம இயல்பின் ஆரம்பங்களைப் படிமக்கவிதை அல்லாத 1960. ஜனவரி "எழுத்து"--வில் வந்த "நான்" கவிதையில் காணலாம்.

ஆரீன்றாள் என்னை 
பாரீன்று பாரிடத்தே 
ஊரீன்று உயிர்க்குலத்தின் 
வேரீன்று பெரும் வெளியில் 
ஒன்று மற்ற பாழ் நிறைந்து 
உருளுகின்ற கோளமெல்லாம் 
அன்று பெற்று விட்டவளென்
தாய்!

வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடு(ம்) அரன் தீவிழியால் 
முடிஎரித் துயிரறுத்த 
காடு ஒத்துப் பேய்களின்றி 
ஆருமற்ற சூனியமாய் 
தளமற்ற பெரு வெளியாய் 
கூரையற்று நிற்பது என் 
இல்!

யரோ நான்?--ஓ!--ஓ!
யாரோ நான் என்றதற்கு 
குரல் மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும் 
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில் தேடியின்னும் 
இருள் முனுகும் பாதையிலே 
பிறந்திறந்து ஓடுவதோ 
நான்?

இக்கருவின் வளர்ச்சியை, இதற்கடுத்து நவம்பர் 1960 23-ம் "எழுத்து" இதழில் வெளிவந்த "பயிர்" என்ற கவிதையில் பார்க்கலாம்.

வேலி கட்டா வானத்தில் 
வெள்ளிப்பயிர் வளர்க்க 
தாலிகட்டிச் சத்தியினை 
ஈர்ப்பென்ற நீர் பாய்ச்சி 
காலமெல்லாம் காத்திருக்க 
வைத்து விட்டாய்; வைத்து மென்ன?
ஊழியென்ற பட்சி அவன் 
அயர்ந்திருக்கும் வேளையிலே 
வேலி கட்டா வானத்தில் 
வெள்ளி விதைக ளெல்லாம் 
அள்ள விழுங்கும் வரை 
நீர் பாய்ச்சி என்ன பயன் 
வேர்  முளைக்கக் காணோமே!


இதையடுத்து வளர்ந்து முதிர்ந்ததுதான் "விடிவு" கவிதை காட்டும் படிமவியல், நேரிசை வெண்பாவிலிருந்து தாவிய அடுத்த கிளையில்ல பானுச்சாந்ரெனின் படிமங்கள்.

"சமூகம் கெட்டுப் போய் விட்டதடா?
சரி, சோடாப் புட்டி உடைக்கலாம் வாடா"

என்று வேறொருவர் தமது அங்கத சமூகப் பார்வைக்கிளையிலிருந்தும்,

"அடுக்கி வைத்த செங்கற் சூளையிலே 
தனித்த செங்கல்லொன்று சரிகிறது"

என்ற செங்கற் சூளை சித்தாளின் காவல் பார்வைக்கிளைக்கு அவரே தாவ முயல்வது போல, படிம உலகுக்குத்தாவ முடியாது.

ஏன்?

பானுச்சாந்ரெனின் மன-- பிரபஞ்ச உணர்வுலகம் தான் படிமங்களாக காட்சி தருகின்றன. இவற்றை இரு வேறு அம்சங்களாக பிரித்து என் விளக்க சௌகர்யங்களுக்காக என நான் முன்னரே சொன்னேன்.

இம் மன-- பிரபஞ்ச உணர்வு கற்றுத் தெரிந்ததல்ல. கலைஞனின் உடன் பிறந்த ஆளுமை. பிரபஞ்சத்தின் பரப்பு அனந்தம் என்ற இடபரிமாணம், மன எழுச்சியின் உக்கிரமாக எழும் உணர்வுப் பரிமாண மாற்றம், படித்தறிந்து கொள்ளும் தகவல் சேர்க்கை அல்ல. ஆளுமையின் உள்ளிருந்து விகசிக்கும் பார்வை அநுபவம். உணர்வின் மலர்ச்சி. சான்றுகளைக் கவிஞனின் வளர்ச்சியில் காணலாம்.

படிமம், உணர்வு ஆகிய இரு குணங்களின் மங்கலான ஆரம்பங்களை, பானுச்ச்ந்ரென் தன் 20,21-ம் வயதில் எழுதிய 'நான்' கவிதையில் பார்க்கலாம். "பயிர்" என்ற கவிதையில் மங்கல் சிறிது நீங்குகிறது. தெளிவு தோன்றுகிறது. முற்றிலும் படிமத் தெளிவு பெறுவது "விடிவு"  "மின்னல்" ஆகிய கவிதைகளில்.

ஒரு ஓவியனின் பண்புகள், "எழுத்து" பத்த்ரிகை அளித்த சந்தர்ப்பவசமாக, இங்கு தூரிகையையும், வண்ணங்களையும் தேடுவதற்குப் பதிலாக, சொற்களைக் கையாள வைத்துக் கவிதைகளைப் பிறப்பித்திருக்கின்றன. "நான்" கவிதையில் எழுந்த ஒரு கருவின், தெளிவும், உருவும் மங்கலாகத் தெரிந்த  ஒரு கருவின், படிமம் பரிணாமம் மாத்திரம் "மின்னல்", "விடிவு", கவிதைகளில் தெளிவும் உருவும் பெறுகிறது. "நான்" கவிதையில் மங்கலாகத் தொடங்கிய, தெளிவும் உருவம் பெறாத இன்னொரு பரிமாணமாகிய, உணர்வு மனவெழுச்சி "பயிர்" கவிதையிலும் தலைகாட்டியது. அதை "விடிவு", "மின்னல்" கவிதைகளில் நாம் காண்பதில்லை.அதன் தெளிவு, ரூப முதிர்ச்சியை "மறைவு" (எழுத்து - 36, டிசம்பர் 61) கவிதையில் காணலாம்.

ஆக இங்கு பரிமாணங்களும் கிளைவிட்டுப் பிரிவது ஆரம்ப காலங்களில்தான். பின் வருடங்களில், காட்சித் தோற்றத்திலும், உணர்வுப் பாங்கிலும் அவை எப்போதும் ஒன்றிணைந்து முழுமையாகின்றன.

இம் முழுமையின் சீரான பிரவாஹத்தை 60-ன் ஆரம்ப காலங்களிலிருந்து இன்று எழுதப்பட்ட "கன்னாடியுளிருந்து" என்ற குறுங்காவியம் வரை நாம் காணமுடியும்.

இப் பிரவாஹம் ஒரு மன--பிரபஞ்ச உணர்வுலகம். தெளிவிற்காக சற்று விரித்துச் சொல்வதானால், மனம் என்பது மன உள்வெளிப் பிரபஞ்சம், பிரபஞ்ச உணர்வு என்பது பிரபஞ்ச வெளி மன இயக்கம்.

மன உள் வெளி பிரபஞ்சமாக விரிகிறது (the inner cosmos of the mind). பிரபஞ்ச வெளியின் அனந்த விரிவு மன இயக்கமாக எழுச்சி அடைகிறது (the cosmos as the mind ). இவ்விரண்டும் ஒரு தனித்த புள்ளியிலிருந்து உள் நோக்கியும், வெளியில் விரிந்தும் பெறப்படும் பிரயாணம் என்று சொல்வது புரிந்துகொள்ள சாத்தியமாகத் தரப்படும் விளக்கமாகக் கொள்ளலாமே தவிர, அது உண்மையின் முழுப் பரிமாணமும் ஆகாது. இது தனித்த ஒரு புள்ளியிலிருந்து இரு வேறு பரிமாணங்களில் சஞ்சரிப்பது அல்ல. இவ்விரு உலகங்களும் பரிமாணங்களும் ஒன்றேயாகும். உதாரணத்திற்கு, உள் நுழைந்து வெளி நீளும் ஒன்றேயான டெலஸ் கோப் போல, உட்சுழன்று, விரிந்தாலும் நீர்ச் சுழல்போல, சுழற்காற்றுப் போல எனக் கொள்ளலாம். பிரைக்ஞையின் உள்நோக்கிய பிரயாணந்தான், பிரபஞ்ச வெளியின் அகண்டத்தைப் பார்வையில் அணைக்கும் முயற்சிதான் மன உள் வெளியின் பிரபஞ்சத்திற்கு இட்டுச் செல்கிறது. உபநிஷத ஞானிகள் தம் சிந்தனையை உள்நோக்கிய தியானம் அகண்ட பிரபஞ்சத்தைத் தரிசிக்க உதவியது. பிரபஞ்சத்தின் அனந்த வெளியை நோக்கிச் சென்ற அமெரிக்க அஸ்ட்ரோ நாட்'கள் ஒவ்வொருவரும் திரும்பி வந்தும் கண்டது உள் நோக்கிய மனச் சஞ்ச்சாரம்தான். வெறும் மனித யந்திரங்களாக பயிர்சிக்கப் பெற்று உருவாகிய ஒவ்வொரு அஸ்ட்ரோ நாட்'டும் பிரமிக்கத்தக்க வகையில், கவிஞர்களாகவும் தியானிகளாகவும், உலகு துறந்த ஆன்மிகர்களாகவும், மனிதகுல நேயர்களாகவும் மாறிவிட்டனர். இவ்வாறு மாறுவார்கள் என யூகிக்கக்கூட, அவர்களது விண்வெளிப் பிரயாணத்திற்கு முந்தைய வாழ்க்கையில் ஏதும் வாய்ப்பு இருக்கவில்லை. விண்வெளியின் சஞ்சாரம் அவர்கள் மனவியக்கத்தை முற்றிலும் மாற்றிவிட்டது.விண்வெளியின் அகன்ற விஸ்தாரத்தில் (அதாவது) ஓர் இடபரிமாண அநுபவத்தில், உள் வெளி பிரபஞ்சத்தின் (அதாவது) உணர்வு பரிமாண அநுபவத்தின் தரிசனம் கிடைத்துள்ளது. ஏக சாதனா (இலக்கிய, மொழி ) விரதிகள் கவனிக்க வேண்டும்.

இங்குதான் நான் முன்னர் சொன்ன, வெளிவட்டத்தில் நிகழும் பரிமாண மாற்றத்தை, அல்ல, ஒன்றியைந்த கலப்பை, பார்க்கிறோம். திரும்பவும், பெருவட்ட அநுபவ உணர்வுலகு, சிறு வட்ட தொடக்கத்தைத் தன்னுள் அணைத்துக் கொண்டுள்ளது.

பிரமிள் பானுச்சாந்ரெனின் மன சஞ்சாரம், உள்ளுணர்வுப் பாங்கானது (intuitive). இடசஞ்சாரம் பிரபஞ்சத்தையே அணைத்து உறவாடும் தன்மையது. இந்த ஊஞ்ச்சலாட்டத்தை "நான்" கவிதையிலிருந்து, "கண்ணாடியுள்ளிருந்து" வரை காணமுடியும். தாயின் நினைப்பு, "ஒன்றுமற்ற பாழ் நிறைந்து உருளுகின்ற கோளமெல்லாம் அன்று பெற்றவளிடம்" கொண்டு சேர்க்கிறது. ஆருமற்ற, சூனியம், தளமற்ற பெருவெளி, "இல்" ஆகிற்று. குரல் மண்டிப் போனது, இருள் முனகும் பாதையில் பிறந்திறந்து ஓடுவது, நான் என எஞ்சுகிறது.

கண்ணாடியுள்ளிருக்கும் தன்னை நோக்கிய விசாரம் பிரபஞ்சத்தின் அகன்ற விஸ்தாரம் முழுமையுமே அரவணைத்துக் கொள்கிறது. இட விஸ்தாரம் மன இயக்கமாக எழுச்சி பெறுகிறது. உள் மன இயக்கம் இட விஸ்தாரமாக விரிகிறது.

கண்ணாடியின் படிம விஷேசம், பார்வை சாதனா விஷேசம் இங்கு கவனத்திற்குரியது. கண்ணாடி நமக்கு நம்மைக் காட்டுகிறது.நமது பிரதிபிம்பத்தை,நமது வெளித் தோற்றத்தைக் காட்டுகிறது. நமது வெளித்தோற்றத்தின் கூரிய ஆராய்வு, நம்மிலிருந்து நம்மை வேறுபடுத்தி, ஆராய்பவனிலிருந்து ஆராயப்படும் பொருளை தனித்துக் காட்டுகிறது. ஒரு கூரிய பார்வை, தன்னை, "தான்"ஐ மறந்த பார்வை, வெளித் தோற்றத்தை ஊடுருவுகிறது. இது மன உணர்வு, இயக்க பரிமாணம்.

அதே சமயம்,

வேறு நோக்கில், இடவிஸ்தாரமாக, கண்ணாடி 'தன்'னின் இருப்பை மறைத்து, எல்லையற்ற ஒரு அகண்ட பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறது.சுற்றியும் உள்ள கண்ணாடிகள் (கண்ணாடிச் சுவர்கள்) சிருஷ்டிக்கும் பிரபஞ்ச வெளி, அதனுள் தோன்றும் கோடானு கோடி பிரதிபிம்பங்கள்:

வெறுமை மீது 
ஒன்றை யொன்று உற்று நோக்கும் 
இரண்டு கண்ணாடிகளினுள் 
வெளியினுள் வெளி 
எங்கும் கோடானு கோடி 
பிரதிபிம்பங்கள் 
கர்ப்பக் கிரஹத்து 
வௌவால்களாய்த் தவிக்கும் நிழல்கள் 

இங்கு இட-மன வெளி பிரபஞ்ச விஸ்தாரத்தில், இட-கால-மன பரிமாணங்கள் மடிகின்றன. உக்கிரமடைகின்றன.காலம் ஸ்தம்பிக்கிறது. ஒளிவருட வேகமும் கொள்கிறது. எது உண்மை? எது தோற்றம்? எது சத்தியம்? எது நிதர்சனம்?நேற்று, இன்று, நாளை எல்லாம் ஒரே புள்ளியில் சமைகின்றன. உணர்வுகள்,பிம்பத் தோற்றங்கள், படிமங்களாக எழுந்து மறைந்து ...

இவ்வுனர்வுப் பிரவாஹம் படிமப் பிரவாஹம்,பிரபஞ்ச நீட்சி சிரமம் தரும். இப்பிரவாஹம் எனக்குள் பல ஞாபகங்களை எழுப்புகிறது. எல்லா ஞாபகங்களும் அலையாடி ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன. ஒன்று: விண்வெளியில் பிரயாணம் செய்த அஸ்ட்ரோ நாட்'கள், காஸ்மோ நாட்'கள் மூலம் தெரிந்த பிரபஞ்ச வெளி அநுபவங்கள், அவர்களது அப்போதைய மன எழுச்சிகள், பரவசங்கள், பின்னர் அல்டஸ் ஹக்ஸ்லியின் Doors of Perception என்ற புத்தகம். மெஸ்காளினைச் சாப்பிட்டுத் தன்னுள் அது நிகழ்வித்த  பிரக்ஞை மாற்றங்களை அநுபவங்களை அல்டஸ் ஹக்ஸ்லி அப்புத்தகத்தில் கூறியிருக்கிறார். அவரைப் போலவே ஹிப்பிகளும் நிர்மல ஆனந்தம் என, L.S.D.யையும், சரஸ்ஸையும் சாப்பிட்டு அனுபவம் தேடுகிறார்கள். இவ்வற்றின் உந்துதலைப் பற்றியெல்லாம் டிமொதி லிரி (Timothy Leary) எழுதியிருக்கிறார். இக்குறுக்கு வழிகளெல்லாம் மாரீஸத் தோற்றங்கள் என லீரியே ஒப்புக்குக் கொண்டிருக்கிறார். நம் மரபிலும், கஞ்சாவும், அபினியும் உண்ட யோகிகள் உண்டு. இந்த யோகிகளிடமிருந்துதான் ஹிப்பிகள் தங்கள் ஆனந்த மார்க்கத்தைக் கற்றனர். ஆனால் இவர்களுக்கெல்லாம் ஆதர்ஸனமாக இருந்தது நம் மரபின் புராதன ரிஷிகளின் தியான வழித்தேட்டை. தியான வழித் தேட்டை நிச்சயமானது. முறையும் உண்மையும் ஆனது. மனக் கட்டுப்பாட்டிற்கு அடங்கியது. அல்டஸ் ஹக்க்கியும், ஹிப்பிகளும் தேடுவது நிச்சயமில்லாதது. அநுபவம் எத்தகையதாக இருக்கும் என்பதை L.S.D.யோ மற்றதோ உட்கொள்ளுமுன் நிர்ணயிக்க இயலாதது. நிகழப் போவது நிர்மல ஆனந்தமா, அல்லது பயங்கர சொப்பனமா என்பது எவ்வளவு நீண்டகால, சரஸ், L.S.D.பழக்கத்திலும், பயிற்சியிலும் தீர்மானிக்க இயலாதது. ஹிப்பிகளுடன் உடன் சேர்ந்து சோதனை செய்த டிமொதி லீரி (Timothy Leary) இதையெல்லாம் உணர்ந்து சொல்லியிருக்கிறார். இந்த அநுபவ மனமயக்கம் பிரக்ஞையின் பேதலிப்பு. இருப்பினும் இவையெல்லாம் (ஹிப்பிகளின் அநுபவத்தில் பல சமயங்களில் நேரும் பயங்கர சொப்பனங்களைத் தவிர்த்து) ஒரு படிம ஒற்றுமை கொண்டவை. ஆனால் சுயமன எழுச்சி அற்றவை.

எதற்காக இவ்வளவும் சொல்ல நேர்ந்தது என்றால் பானுச்சந்ரெனின் "கண்ணாடியுள்ளிருந்து" காவியத்தில் தோன்றும் படிமங்கள் இவற்றையெல்லாம் ஞாபகப்படுத்தியும், ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்,மேற்சொன்னவர்கள் எல்லோரின் அக்கண அனுபவத்திற்கும், அவர்களது எஞ்சிய வாழ்க்கைக்கும் ஏதும் சம்பந்தமில்லை. ஒன்றிற்கொன்று உறவு கொண்டு பிறப்பன அல்ல. அது மாத்திரமல்ல இவை பானுச்சாந்ரெனின் கவிதை இயக்க முழுமையுடனும் இக்காவியத்தின் படிமப் பிரவாஹம் உறவு கொண்டது. எல்லாமே ஒரு முழுமையும், சம்பந்தமும் கொண்டவை.

"கண்ணாடியுள்ளிருந்து" குறுங்காவியத்தின் படிமப் பிரவாகமும், உணர்வு எழுச்சிகளும் ஒரே நாணயத்தின் இரு முகங்கள் அவை. பிரக்ஞை விழிப்பில் உள்ளுணர்வின் (intuitive) இயக்கத்தில் பிறப்பவை. ஒவ்வொன்றிற்கும் ஆதார நிதர்ஸனம் உண்டு.

"தசைச் சுவர்கள் வீசும் இப் 
புவன நிழல் வெளியில் 
சுடர்கள் ஆடுகின்றன 
ஒவ்வொரு சுடரும் 
பெண்குறி விரிப்பு 
தசை நிழல் பிளவு.
அவற்றை நோக்கி 
(எனத் தொடர்ந்து)

....   ....   ....   ....

கண்ணாடி 
இக்கணம்.
இக்கணம்,"  (வரை)

இது போல ஒவ்வொன்றிற்கும் ஆதார சிந்தனை உண்டு.

"மூடிய கதவின் 
சாவித் துவாரத்தில் 

(இங்கே ஒரு பக்கம் விடுபட்டிருக்கலாம்)

கள். மற்ற பரிமாணங்களும், அனுபவங்ககளும், கலைச் சாதனங்களும் இலக்கியத்துடன் சம்பந்தமற்றவை என்பவர்கள், எங்கோ பெரும் தவறு செய்கிறார்கள். இத்தகையவர்களின் இயக்கமும் சாதனையும் கலையாவதில்லை.

அது வெறும் தொழிற்திறன். சொல்வழி தொழிற்திறன். வியாபாரப் பொருள். சத்தியத்தின் தரிசனமற்றது. தச்சன் மரத்தைக் கையாளுவதைப் போல, சொல் அவர்களது படைப்புகளுக்கு ஒரு மரச் சாதனம். வியாபார raw material. இவ்வாறான அஞ்சறைப் பெட்டி நோக்கு (அனுபவம் ஓர் அறையில், படிப்பு ஓர் அறையில், சொந்த வாழ்வும் தர்மமும் ஓர் அறையில்,எழுத்து ஓர் அறையில்.....) இத்தொழில்  காரர்களுக்கு பல சௌகர்யங்களைக் கொடுக்கிறது.

மனித நேயமற்றவர்கள், சதிக்குணம் கொண்டவர்கள், சூழ்ச்சி மனத்தவர்கள், சுயநலக்காரர்கள், மற்றவர்களை அழுத்தி தான் முன்னேற விரும்புகிறவர்கள் எல்லாம் மிக அழகாக கேடிழைக்கப்படும்.பரிதவிக்கும் மனிதர்களுக்காக, அல்லல்படும் ஜீவன்களுக்காக இரக்கம் சொட்டச் சொட்ட கண்ணீர் உகுத்துக் கதைகள் புனையலாம், மிகுந்த தொழில் திறனோடு.

சுல்ச்சிக்காரனும், சதிகாரனுமான தச்சன் செய்த நாற்காலி பயனுள்ளதாகவே இருக்கும்.ஏன்னெனில் தச்சனின் மனத்திற்கும் நாற்காலிக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் கற்பழிப்பை அன்றாட வேலையாகக் கொண்டவர் செய்யும் ராமாயணக் காலட்சேபம் அசத்தியமாவது போல, வெறும் தொழில் ஆவது போல சூழ்ச்சிக்காரனும் சதிகாரனுமான ஒருவன் எழுத்தும் கைத்திறன் வாய்ந்த எழுத்தில், நிறைந்து வழியும் இரக்கமும் கருணையும் அசத்தியமானது.

ஏன்னெனில் தான் வாழ்வுக்கும் எழுத்துக்கும் பொதுவாகவும் ஒருமையாகவும் ஊற்றுக்கண்ணாகவும் இருக்கவேண்டிய மனவெழுச்சி,இங்கு முரண்படுகிறது. எழுத்துக்கு வரும்போது தான் வாழ்வுண்மைக்கு மாறான ஒரு அசத்திய மனவெழுச்சி தயார் செய்து கொள்ளப்படுகிறது.

அந்தத் தயாரிப்புப் பொருள் தொழிலுக்கு வேண்டிய raw material. அவன் எழுத்து வெறும் தச்சு வேலை.

இருப்பினும் எழுத்துக்கும் சொந்த வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்? எழுத்து நன்றாக இருக்கிறதா இல்லையா பார் என்கிறார்கள்.இது தொழில் திறனுக்கும் சத்திய தரிஸ னமேயாகும் கலைக்கும் வித்தியாசம் தெரியாத குறைதான்.

மனித நேயமும், 'தான்' அழிந்த பார்வையும் அடிப்படையான தர்மங்களும் சத்தியத்தின் பரிமாணங்கள் எனக் காணாது, 'இலக்கியக் குறி' கொண்டவர்களுக்கு மேற்கண்ட தொழில் திறனாளர்கள், இலக்கியாசிரியர்களாகத் தென்படலாம். சத்தியத்தின் இக்குறியிட்ட பரிமாணங்கள் அற்ற மனிதனும் அவன் தொழில் திறனான எழுத்தும் வேறுபடும் பொழுது அவ்வெழுத்து கலையோ.இலக்கியமோ ஆகாது என்பது இன்னும் நம் 'பெருந்தகைகள்' பலருக்குத் தெரியவில்லை. மனிதனும் எழுத்தும்,பார்வையும், அடிப்படை தர்மங்களும் வேருபடுத்தப்படமுடியாத ஒரு முழுமை. அம்முழுமை புரிந்துகொள்ளப்படும் பொழுது,பிரமில்  பானுச்சந்ரென் அவர் கவிதைகள், அவர் அநுபவ உலகம், அவர் எழுத்துக்கள், ஓவியங்கள், சிந்தனை நிலை, இன்னும் மற்றவை எல்லாமே வேறுபடுத்தப்படி முடியாத ஒரு முழுமையாக இருப்பதை  நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

வெங்கட் சாமிநாதன் 
புதுடில்லி 
ஜனவரி  16 1973

இன்னும் வர இருப்பது பிரமில் பானுசாந்ரெனின் 'கண்ணாடியுளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு.


22/01/2014


இன்னும் வரும் 15/01/2014


இன்னும் வரும் 14/01/2014


இன்னும் வரும் 13/01/2014


இன்னும் வரும் 12/01/2014


இன்னும் வரும் 10/01/2014


இன்னும் வரும் 10/01/2014


இன்னும் வரும் 08/01/2014


இன்னும் வரும் 06/01/2014


இன்னும் வரும் 05/01/2014

இன்னும் வரும் 04/01/2014

இன்னும் வரும்...03/01/2014


இன்னும் வரும் 02/01/14

இன்னும் வரும்...01/01/2014