Thursday 27 November 2014

சுயாதீன மனம்



#ஞான மண்டலம்


சுயாதீன மனம்


காட்டில் சூரப்பற்றை என்று கூறப்படும் ஒரு இன முட்செடி இருக்கின்றது.
இது வளைந்த கூரிய முட்களையுடையதாய் அடர்த்தியாக வளர்ந்திருக்கும் ஒருவகை முட்புதர்.
இந்த முட்செடியில் காய்த்துப் பழுக்கும் சிறு பழங்கள் வௌவாலுக்கு மிக ருசியான உணவு.

வௌவால்:

இதைத் தின்பதற்காகப் பறந்து வந்து இச்செடியில் தொங்கும் வௌவாலின் தோற செட்டைகள் இம் மரத்தில்
கொழுவிக் கொள்ளும்.
கொழுவிக் கொள்ளும் பகுதியை விடுவிக்க முயற்சிக்கும் பொழுது, ஏனைய பகுதிகளும் முள்ளில் கொழுவிக் கொள்கின்றன. இதனால் வௌவால் தன்னை விடுவிக்க முடியாமல் அதிலேயே கிடந்தது மடிகின்றது.
இதே போன்று மனிதரும் விஷய சுகங்களென்ற முட்புதரிற் சிக்கி, மீள முடியாமல் அந்தரப்படுகின்றனர்.
விவேகத்தை உபயோகித்துச் சிரத்தையோடும் பொறுமையோடும் இதிலிருந்து மீள முயற்சிக்காத வர்களுடைய ஜீவன் மீண்டும் இதனையே பற்றிக்கொண்டு வீணாக மாய்கின்றது.

மழை:

மழை உயிரினங்களை உயிர்ப்பிக்கின்றது. இருள் மயமான முகில்கள் இல்லாமல் மழையாகிய அமிர்தம் வர்ஷிப்பதில்லை.
அதே போன்று சுக துக்கங்களாகிய கருக்கூட்டல் இல்லாமல் ஈஸ்வர அநுபூதி என்ற தேவாமிர்தம் மனிதரில் பொழிவதில்லை.
ஆகாய விமானங்கள் ஏறி இறங்கும் விமானத் தளம் போன்று ஜீவாத்மாக்கள் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெருந் தளந்தான் இந்த கர்ம பூமி.
ஜீவிகளுடைய பிரயாண லட்சியத்தை அடைவதற்கு இதைத் தவிர பிறிதோரிடமில்லை. எனவே மட் புதர் நிறைந்ததாயினும் மண்டலங்களில் சிறந்த மண்டலமாகிய  இந்தக் கர்ம பூமியில் மனிதராய்ப் பிறந்தவர்கள் எல்லாம் பெரும் புண்ணியசாலிகள்.
நாம் காலூன்றி நிற்கும் இத்தளத்தை வெறுக்காமலும், அதே சமயம் இதிலிருக்கும் மட் புதரில் கொழுவிக் கொள்ளாமலும் ஜீவிதத்தைச் சம்பூர்ணமாக்க வேண்டும்.

பாஷாணம்:

நமக்கு பந்த மோட்சங்களைத் தருவது மனந்தான் என்பது அனைவரும் அறிந்த விஷயம். மனம் பாஷாணம் போன்று மிகக் கெட்டதும், நல்லதுமாயிருக்கின்றது.
பாஷாணத்தைச் சுத்திகரித்து ஔஷத வீரியமாக்கினால் அதைக் கொண்டு தீராத வியாதிகளையெல்லாம் தீர்க்கலாம்.
அதே போன்று அழுக்காறு நீங்கிய மனம் பிறவித் துன்பங்கள் என்னும் மகா ரோகத்தைத் தீர்க்கும் பெரும் சித்த ஔஷதமாகப் பரிணமிக்கின்றது.
மனிதரால் இலகுவில் கிரகிக்க முடியாத மனதின் இரகசிய நுண்ணிய கேந்திர ஸ்தானங்களைத் தடவிப் பார்த்துப் பிடிக்கவேண்டிய இடத்தில் பிடித்தால் "நாகெந்தி"மூலிகை நுகர்ந்த நாகம் போன்று மனம் அடங்கி நிற்கும்.
அடங்கிய மனம் நில்லென்றால் நிற்கும். போ என்றால் போகும். இவ்வாறு அடங்கிச் சுயாதீனப்பட்ட மனதை விட ஒருவருக்கு வேறென்ன பேறு பெறவேண்டியிருக்கின்றது.
இதற்குரிய மானசீகப் பயிற்சிகளை ஆத்மீக தர்மங்கள் நமக்குத் தருகின்றன.
ஒருவர் தன் மனம் சுயாதீனமடைந்த பின்னர் வாழுகின்ற வாழ்க்கைதான் எதார்த்தமான வாழ்க்கை.
உலகியல் இன்பங்களுக்காக பல வழியிலும் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருப்பவர்கள் நாள் தோறும் சிறிது நேரரமாவது மனப்பூர்வமாக ஜெபம், தியானம், பிரார்த்தனை, நாமசங்கீர்த்தனங்களாகிய ஆத்மீகப் பரிசீலனங்களைச் சிரத்தையோடு செய்து வ்ருவாராகில் லெளகீகமும் ஆத்மீகமுமான வாழ்க்கையில், இன்றிருப் பதைவிடக் கூடுதலான திருப்தியும் சுகமும் முன்னேற் றமும் அடைவார்கள்.
சிறிது சிறிதாகச் செய்யும் ஆத்மீகப் பயிற்சியால் காலக்கிரமத்தில் தன்னைத்தான் அரியும் ஞானம் என்ற பேரறிவைப் பெறலாம். இந்தப் பேரறிவுதானே பிறவிப் பயன் தரும் பேறு!

Sunday 23 November 2014

Face Book Posts

https://www.facebook.com/photo.php?fbid=10152560351124296&set=pcb.10152560352169296&type=1


மாவீரர் பலர் பிறந்த மண் எங்கள் மண்ணே அவர் 
தார்மீகப் போர்புரிந்த மண் எங்கள் மண்ணே
பூர்வீக நிலம் காக்கப் புறப்பட்ட மைந்தர் அவர்
போர்வீரர் போலிறந்த மண் எங்கள் மண்ணே.

கார்மேகம் மழைபொழிய குளிரும் எம் மண்ணே
செங்குருதிச் சேற்றினிலே குளிரந்தெழுந்த மண்ணே
தூர்வாரித் துரோகிகளைத் தூக்கியெறி மண்ணே
தீர்வாகத் தீந்தமிழோர் உரிமை பெறு மண்ணே.

மார்மீதும் மனைமீதும் குண்டுமழை பொழிந்தும்
யார்மீதும் தனிப்பகமை காட்டாத பண்பும் 
பார்மீது பலநாடு சென்றடைந்து வாழ்த்தும் 
பாசத்தால் எமை அனைத்த மண் எங்கள் மண்ணே.

கார்த்திகை நிலவினில் ஏற்றிடும் தீபம் 
காற்றினில் ஆடிடும் கார்த்திகைப் புஷ்பம் 
ஊட்டிடும் உணர்வெல்லாம் மண் எங்கள் மண்ணே
மாவீரர் நாள்மறவா மண் எங்கள் மண்ணே.

https://www.facebook.com/photo.php? 
fbid=10152559921584296&set=pcb.10152559923584296&type=1


கண்ணீர் சிந்தும் கார்த்திகை புஷ்பங்கள் 
மண்ணின் மைந்தரை மறப்பதில்லை.
செந்நீர் சிந்தி செத்து மடிந்தனர்
மண்ணில் மாந்தர்கள் மறக்கவில்லை.

பன்னீர் குளிப்பும் பஞ்சு மெத்தையும் பாவிகட்கு
கண்ணீர் குளிப்பும் நஞ்சு குப்பியும் பாரிவர்க்கு
விண்ணில் கார்மேகம் வீசிடும் மாதம் பூத்திடுவாய்
மண்ணில் இவர்தேகம் போர்த்திட நீயுமுதிர்ந்திடுவாய்.

சொன்னீர் சொன்னீர் உம் சோகக் கதைகளை
கேட்டிட இங்கு யாரும் இல்லை
மண்ணில் தர்மம் மாண்டதில்லை
மாபதகம் என்றும் வாழந்ததில்லை.

இருந்தும் இறந்தவர் போல்வாழ்வார் உலகில் 
இறந்தும் இருப்பவர் மேலாவார்.



Friday 21 November 2014

தர்சனம்

தர்சனம்

புதுக்கவிதை என்ற பெயர் தற்காலீகமானது. கவிதையின் பெயர் கவிதையே. இப்பெயர் பெறத் தகுதியற்ற யாவும் செய்யுள்கள்; செய்யப்பட்டவை. கவிதை எல்லாவகையான சொற்களையும் உதறுகிறது.நிதர்சனத்தில் திளைக்கிறது. யாப்பு என்ற திட்டமிடப்பட்ட உருவத்தை துறக்கும் கவிஞன் ஒரு புதிய உருவை நாடி இத்துறவை மேற்கொள்ளவில்லை.நிதசர்ணத்தை உணராத செய்யுள் வாதிகள், யாப்பு என்ற உருவில் ஒரு சௌகர்யத்தைக் கண்டு அதன் கதிக்குள் இயற்கைப் பொருள்களின் வர்ணனைகளையும், சாமான்ய மனிதனுக்குக்கூடத் தெரியும் அற முறைகளையும் அதீதமானவை என்று பிரமை காட்டி எழுதினர். இவர்கள் ஆழ்ந்த வாழ்வின் அதீத ரகசியங்களையோ மானுஷ்ய தர்மங்களையோ உணராதவர்கள். பிரத்தியட்சத்தின் மீது காதல் கொண்ட மனிதன் செய்யுள் வாதியிலிருந்து உயர எழுந்து ஸ்தூல நிதர்சனங்கள் வாழ்வின் அதீத ரகசியங்களுக்குக் குறியீடுகளாக, தார்மிக சக்திக்கு உரமாகக்கண்டான். போலி வர்ணனைகளையும் போலி தர்மங்களையும் துறந்தான். அந்தத் துறவோடு உடனிகழ்வாக யாப்பையும் துறந்தான். கவிதை தமிழில் புனர்ஜன்மம் பெற்ற கதை இது.

வசனத்தை உடைத்துப்போட்டு கவிதையை சாதித்துவிட முடியாது.

இன்றைய வாழ்வின் ஒரு உடைந்த கதி, நகர் என்ற பிரத்தியட்சத்தின் சிதறிச் சிதறித் தோன்றும் காட்சிகள், சீரற்றுத் தோன்றி மறையும் உருவப் பிரதிகள். பஸ்கள், பஸ்களினால் மறைக்கப்பட்டுத் தோன்றி ராஷஸ சொரூபமான கட்டிடங்களிடையே சிறை கொண்ட அஸ்தமனங்கள்,எட்ட இருந்துவந்து மறைந்து தொடர்பற்று அவசரத்தில் பேசி, கைகாட்டிச் சிரித்துப் பேசாது போய், மறையும் நண்பர்கள். இவையாவும் பிரத்தியட்சம். யாப்பின் கதிக்கு இந்த பிரத்தியட்சத்தில் இடமேது? எமது இன்றைய பிரக்ஞையின் இந்த சீரற்ற ஒரு புதிய தன்மையில் யாப்பு அங்கதத்திற்கே உதவும்.

In the room women come and go Talking of Michelangelo
என்ற வரியிலும்
I grow old, I grow old
I shall wear the bottoms of my frousers rolled
என்ற வரியிலும் சப்தம் அதீத உணர்வுக்காக உபயோகமாகவில்லை. கேலிக்கு அங்கதத்திற்கே உபயோகமாகிறது இன்று.

பண் என்பார் பாட்டென்பார்
கண்ணைச் சொருகிக் கவியென்பார்
அண்ணாந்து
கொட்டாவி விட்டதெல்லாம்
கூறுதமிழ் பாட்டாச்சே
முட்டாளே இன்னமுமா பாட்டு?

என்ற யாப்புருவம் கேலிக்கே -- அங்கதத்திற்கே உபயோகமாகிறது இன்று. அன்றைய சாவதானம் இல்லை. எனவே சாவதானத்தில் விளைந்த யாப்பு எமது பிரக்ஞையின் நடுவே நிகழும் போது அங்கதமாகிறது.பழைய வாழ்வின் கதியையோ, நாம் அதன் யாப்புருவோடு சேர்த்தே பருகுகிறோம்.

சீரும், அடியும், தளையும் யாப்பின் ஆதாரங்கள். சப்த அணிகளையும் யாப்பு மேற்கொள்ளும். இந்த அம்சங்களிலேயே உழல்வது சௌகர்யம். செய்யுள்வாதிகள் கவிதை என்ற ஆதாரத்தை இழந்தே இந்த உழலில் ஈடுபட்டனர். கவிதை என்பது அதன் பொருளாகவே உருப் பெறவேண்டும் என்பதுதான் இன்றைய சித்தாந்தம். நிதர்சனத்தை ஹ்ருதயமும் புத்தியும் தத்துவ தார்மிக உணர்வும் கொண்ட கண்களோடு சந்தித்தால்தான் 'பொருள்' என்ற அம்சம் செழிக்கும். செய்யுள்வாதிகளோ புலமைவாதிகளாயினர்.பழைய கவிஞர்களும் புலவர்கள் என்றே அவர்களது சமயத்தில் அழைக்கப்பட்டிருந்ததால் புலமையை நூல்களின் மூலமும் செய்யுள் இயற்றும் பயிற்சி மூலமும் பெற்று இவர்களும் புலவர்களாயினர். இதன் அபத்தத்தை உணர்ந்து பழைய புலவர்களை இந்த புதிய புலவர்களிளிருந்து பிரித்த கவிஞன்,

கண்டவன் கலைஞன்
பொருள் சொன்னவன் புலவன்
என்ற புதிய சித்தானந்தத்தை எழுதினான்.

இன்றைய கவிஞனுக்கு யாப்பின்மை ஒரு குற்றமாக முடியாது. கவிதையின் பொருளம்சத்தில் குற்றம் இருக்கக் கூடாது என்பதே இவனது அக்கறை. தங்கள் தங்கள் அளவில், அந்தந்த பிரசுர கர்த்தாக்கள் இன்று தமது திறமைக்கேற்ப பொருளம்சத்தையே யாப்பற்ற கவிதைகளில் முக்கியமானதாகக் கண்டு அந்த அடிப்படையிலேயே கவிதைகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இங்கேதான் கூறியது கூறல்,மிகைப்படக் கூறல், சென்று தேய்ந்திறுதல் என்றெல்லாம் பொருளம்சத்தைப்பற்றிக் குறிப்பிட்ட குற்றங்களை அவதானிக்கும் சாத்யம் இருக்கிறது. இது போன்ற குற்றங்கள் எக்காலத்திலும் குற்றங்களே. யாப்பை மீறிய கவிதை பிறக்கக் காரணமே யாப்புருவக் கவிதையுள் இவ்வகைக் குற்றங்கள் களைகளாக வளர்ந்து மலிந்தமைதான் என்போரும் உளர். களைகளைப் பிடுங்கி எறிந்த போது ஒழுங்கற்று, திட்டுத் திட்டாக உண்மையான கவிதைப் பயிர் தெரிந்த நிலைமை யாப்பின்மையாயிற்று. அதுவே ஓர் அழகாயிற்று.

யாப்பற்ற கவிதைக்கு யாப்பாக அமைவது பொருளின் ஒழுங்கு. வசனத்தை உடைத்துத் தூவி இந்த ஒழுங்கை நிகழ்விக்க இயலாது. அறிவிற்கு போருட்கிடை தரும் அதிர்ச்சிகளின் ஒழுங்கிற்கேற்பவே யாப்பற்ற கவிதையின் வரிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. இது வசனத்தை உடைத்துத் தூவுவதாகாது.

வசனத்தை
உடைத்துப்
போடுவதல்ல
கவிதை

என்ற ஒழுங்கு எவ்வித அதிர்ச்சியையும் தரவில்லை. எனவே இது செய்யுள்! யாப்புருவினுள் மட்டும் அல்ல, யாப்பற்ற உருவினுள் கூட செய்யுள் சாத்தியம் என்பதற்கு இன்றைய நிலைமையில் ஆதாரங்கள் உள. விகடக் கூற்றுக்களை மேற்படி ஒழுங்கைப் போன்ற வகையில் உடைத்துப் போட்டுப் பிரசுரித்துக் கொள்வோருமுளர்.

நிரோத் உபயோகியுங்கள்
நிரோத் உபயோகியுங்கள் என்று
விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன
வாயேன்.

என்ற ஒழுங்கு செய்யுள்தான். இதை வசனமாக எழுதிப்பார்த்தால் தன போலித்தன்மையை இது காட்டி விடுவதை உணரலாம்.

நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள் என்று விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன, வாயேன்.

ஒரு முதிர்ச்சியற்ற, மனிதத்தன்மையற்ற, செக்ஸின் ஆழத்தை உணராத இளம்பிள்ளை (adolescent) மன நிலையில் பிறக்கும் விகடத்தனமான கூற்று. இந்த மன நிலைக்கும் இவ்வகை விகடத்துக்கும் கவிதை அகப்படாது.

மேலே உள்ள இரண்டு உதாரணங்களில் வரிக்கு வரி நாம் நிறுத்த வேண்டிய அவசியத்தை அந்த வரிகள் ஏற்படுத்த வில்லை. 'வசனத்தை' என்ற பிரயோகம் ஒரு தனி வரியாக நிகழ வேண்டுமானால், அது பொருள்வழியில் நிகழ வேண்டும். அவ்வரியின் பொருள் தொடர்ந்து வரும் சொல்லான 'உடைத்து' என்ற வரியுடன் வசன கதியில்தான் உறவு கொள்கிறது.எனவே இந்த வரிக்குத் தன்நிகழ்வு இல்லை.

'நிரோத் உபயோகியுங்கள் என்று....
என்று? அதற்கப்புறம்?

'விளம்பரங்கள் வலியுறுத்துகின்றன' அதுதான் தெரியுமே, என்று சலித்துக் கொள்கிறோம். 'நிரோத் உபயோகியுங்கள் என்று' என நிறுத்தப்பட்டவுடன் நாம் தயாராவது ஒரு அதிர்ச்சிக்காகும். கடைசி வரியான 'வாயேன்' கூட அறிவுக்கு அதிர்ச்சி தரவில்லை. முகச் சுளிப்பையோ கேலியுணர்வையோதான் தருகிறது. அறிவு அதிர்ந்து விரியவில்லை.

கழுத்திறுக்க
கண்பிதுங்க
நெற்றியில் வேர்வை
முத்தாகி உருண்டோட
சந்தைக்குச் சுமையோடு
செல்கிறேன்,
சுமைமாற்றி, ஏதேனும்
இருக்கலாகாதா?

இங்கே ஒவ்வொரு வரியும் தன்னிகழ்வு பெறுகிறது. 'கழுத்திறுக்க, கண்பிதுங்க, நெற்றியில் வேர்வை முத்தாகி உருண்டோட, சந்தைக்கு சுமையோடு செல்கிறேன். சுமைமாற்றி ஏதேனும் இருக்கலாகாதா?' என்று இதை வசனமாக எழுதிப் பார்க்கும் போதும் நாம் இதை வாசிப்பதும் கவிதையின் கதியில்தான். நெற்றியில் வேர்வை' என்றவுடனேயே நம் பிரக்ஞை நிற்கின்றது. காரணம் கழுத்திறுக்க-- கண்பிதுங்க--என்று ஒரு பெரிய பாரத்தைச் சுமப்பதன் விளைவுகள் நின்று நின்று பிறந்து முதல் இரண்டு சொற்களுமே தனித் தனி வரிகளாக ஒரு கதியை ஏற்படுத்துவதுதான். ஒரு புடவையை வித்துக் கிடத்தி அதன் ஒரு கோடியில் பிடித்து உதறி ஓர் அலையைப் பிறப்பித்ததும் அவ அலை புடவையின் முழுப் பரப்பிலும் ஓடி வருவது போல, முதல் இரண்டு வரிகளிலும் ஏற்பட்ட லயம் முன்றாவது வரியிலும் தொற்றிக் கொள்கிறது. நான்காவது வரி ஆரம்பம் 'நெற்றிக்கும் முத்து'க்கும் ஒற்றேளுத்துச் சப்த உறவு கொண்டு எதிரொலிக்கிறது. 'சந்தைக்குச் சுமையோடு' என்ற வரிக்கு அடுத்து 'செல்கிறேன்' ஆரம்பித்து ச, செ யிலுள்ள சகர உறவோடாகும்.

இங்கே இக்கவியே குறிப்பிடும் வகையாக சப்த அணிகூட ஒரேயடியாக நீக்கப்படவில்லை. சிக்கனமாகிறது. "சவுக்கந் தோப்பினூ டே காற்று பாய்ந்து சென்ற பிறகு தோன்றும் ஓயுமொலி அளவுக்கு சப்தம் சிக்கனமாகிறது.

இக் கவிதை வரிகளில் வரிக்கு வரி ஒருமனநிலையின் பிரதிமை படிப்படியாக எழும்புவதில்தான் அறிவு விருந்தடைகிறது. படிப்பவன் மௌனம் கொள்கிறான். பிரத்தியட்ச வாழ்வின் பங்கங்களில் ஒன்றைக் கவியோடு பகிர்ந்து கொள்கிறான். 'முத்தாகி உருண்டோட'என்பது வரை ஒரு கடினமான சமயத்தில் உடல் கொள்ளும் இயல்புகள். சந்தைக்குச் சுமையோடு செல்கிறேன் என்றதும் இயல்பின் காரியம் காரணம் கொண்டு விரிவடைகிறது. கவி வெறும் ஸ்தூலச் சுமையைப் பற்றிப் பேசவில்லை. 'சுமை'என்ற ஸ்தூல நிதர்சனம் ஒரு ஆழ்ந்த பரிமாணத்திலுள்ள நிதர்சனத்துக்கு இட்டுச் செல்கிறது.

கழுத்திறுக்க
கண்பிதுங்க
நெற்றியில் வேர்வை
முத்தாகி உருண்டோட
சந்தைக்குச் சுமையோடு
செல்கின்றேன்.
சுமைமாற்றி ஏதேனும்
இருக்கலாகாதா?
தானே அழுதழுது
பிள்ளைபெற வேணுமென்று
நெஞ்சற்ற டாக்டர்களும்
முதியவரும் சொன்னபடி
செய்ய முயன்றேன்,
முயல்கிறேன்.
இடுப்பில் கையும்
இருளூடே முனகலுமாய்
ஒடிந்து குமைகின்றேன்.
சுமைமாற்றி ஏதேனும்
இருக்கலாகாதா?
உணர்வை விளக்கி
உள்ளொளியை எள்ளி
தன்னறிவு வழிச் செல்லும்
தனிச்சுமையை ஏற்று
வாழ்வின் அடிப்படையைக்
குடைந்தறிய முற்பட்டேன்
சப்பாத்திப்பழம் சடைத்த
வெறுமையே வாழ்வாயிற்று
வேதனையே அரசாயிற்று......

சரீரத் தளத்திலிருந்து கவி சுமை என்ற படிமத்தை ஆன்மிக பிரச்னை வரை ஈர்த்துச் செல்லும் ஒழுங்கு அற்புதமானது.

இது புலனாகிய பின்பு மீண்டும் 'கழுத்திறுக்க' என்று இரண்டாவது தடவை படிக்கிறோம். முதற் சொல்லே அதிர்ச்சி தருகிறது.தன்னறிவின் தனிச்சுமைக்கும் இந்த கழுத்திறுப்ப்தற்கும் உள்ள உறவு இப்போது பலமாகிவிட்டது. எனவே திரும்பத் திரும்பப் படிப்பதற் கேற்ப எதிரொலிகளின் செறிவு உள்ளதுதான் கவிதை. நிரோத்தைப் போன்று உபயோகித்து விட்டு கழற்றி வீசுவதற்கல்ல கவிதை.முன் குறிப்பிட்ட நிரோத் 'கவிதை'யில் 'வாயேன்' என்ற பிரயோகத்தோடு 'கவிதை' தீர்ந்தே விடுகிறது. திரும்பப் படித்து அதிசயிக்க அங்கே ஏதுமில்லை.

துருப்பிடித்த
இரும்புக் கோடுகளினூடே
சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப்பாறைகள்

மேலே குறிப்பிட்ட 'ஓயுமொலி' என்ற அம்சம் கூட குறைவாகவே உள்ள கவிதை இது. இங்கே உடைவு நேர்வதற்கு, சப்தத்தின் அனுகூலம் கிஞ்சித்தும் இல்லை. பொருளே யாப்பு. 'கோடு'என்பது ஒரு குணம். இரும்புக் 'கோடு'என்ற பிரயோகம் ஒரு அதிர்ச்சி தருவது.'துருப்பிடித்த' அம்சத்தில் நிறுத்துவதானால் நாம் எதற்கோ தயாராகிறோம். எதிர்பார்த்ததற்கேற்ப இரும்புக்கோடுகளினூடே, என்ற பிரயோகம் 'துறுத்' தன்மையையும் ஏற்று அதிர்வுதந்து விரிகிறது.'இரும்புக்கோடு' என்பது தனிச் செறிவுள்ள பிரயோகம். எனவே தனிவரியாகக் கூடியது. இத்தகைய தகுதி பெறாத பிரயோகங்கள் ஒன்றன் பின்னாக  ஒன்று வந்தும், கவித்துவத்தின் சாயலே மிகுதியாக உள்ள பிறவிகளைத்தான் 'வசன கவிதைகள்' என வேண்டும். 'சிதறும்' 'பயனற்ற' என்று நிறுத்தப்பட்டதற்கும் காரணம் சிதறல், பயனின்மை ஆகிய இரண்டு தன்மைகளும் தனித் தனியாக அழுத்தம் பெருவதாலாகும். தொடர்ந்து  வரும் பிரயோகத்தைக் கவனித்தால் அது, இதுவரை வந்த பிரயோகங்களை வெற்றென விளக்குவதாக இல்லை.விளக்கி விரிவு கொள்வதாகவே உள்ளது. 'சிதறும் பயனற்ற அலைகள்' என்றிருந்தால் வெற்றின் விளக்கம். அதே சமயத்தில் தர்க்கத்துக்கு ஒவ்வாதது. அலைகள் சிதறலாம். பயனற்றவையா? என நம் அறிவு முகம் சுளிக்கும்.பயனின்மைக்குக் காரணம் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால்

சிதறும்
பயனற்ற
உப்பு நீர்ப்பாறைகள்

எனும்போது, 'அலைகள்' என்று குறிப்பிடாமலே 'அலைகள்' குறிப்பிடப்பட்டு, பயனின்மைக்கு உப்பு நீரும் இணங்கி விரிகின்றன. முன்னிரு வரிகளும் மூன்றாவது வரியில் பொருள்வாயிலாகக் கலக்கிறது. இக்கலப்பிலேயே அறிவு சமாதானம் கொள்ளும், விரியும்,வியப்படையும். இக்கலப்பு 'அலைகள்' என்ற பிரயோகத்தில் நிகழாமல் அறிவும் ஏமாறும். வெறுப்படையும்.தொயும். கவிதையும் ஊர்வனவற்றைச் சாரும்.

தீட்சண்யத்தோடு இயங்கக் கூடியவனுக்குத்தான் கவிதையுலகில் இடமுண்டு. வரிக்கு வரி பொருளம்சத்தில் தர்க்கம் நிகழ்ந்துகொண்டு போவதுதான் சிருஷ்டி முறை. இன்றைய பெரும்பாலான யாப்பற்ற கவிதைகளிலோ இந்த தீட்சண்யம் இல்லை. ஒரு புறத்தில் விகடக்கூற்றுக்களும், ஹிருதய மின்மையையே 'பரிசோதனை' என்று சொல்லி உருவாகும் பிதற்றல்களும்,மறுபுறத்தில் கட்சி அரசியலுக்கு ஒத்தூதி அதீத சொற்பிரயோகங்களை எவ்வித கவித்வ நியாயமுமற்று அடுக்குவோரும் மலிந்திருக்கின்றனர்.பயங்கர ஆடை மொழிகளை இவ்வகையினர் கவித்வ தர்க்கம் அற்று பிரயோகிக்கின்றனர்.

அடைமொழிகளின் கடமையை பெயர்ச சொற்களும் வினைச் சொற்களும் ஏற்று தனித்து வரும்போது கவிதையின் உறுதி பெருகுகிறது. அடைமொழி உபயோகப்படும் பட்சத்தில், அது பெயர்ச் சொல்லுடன் பின்னிப் பிணைந்து தீவிரம் பெற்றாக வேண்டும். இன்றைய பிரக்ஞையில் சாங்கோபாங்கமான அடைமொழி அடுக்குகளுக்கு இடமில்லை.அத்தகைய அடுக்குகள் யாப்பின் சாவதான பிரக்ஞியைச் சார்ந்தவை.அடைமொழியும் உவமையும் எழுவாய்ப் பெயரைவிட்டுத் தனித்து நிற்பவை. எனவே எழுவாய்க்கு, வினைக்கு,கவிதைக்கு தீவிரம் தரமாட்டாதவை. இந்நிலையில் இருமுறைகள் கையாளப்படும் சமயத்தில் இவை புதிய பிரக்ஞையின் படிமங்களாகவே பிறந்தாக வேண்டும். இன்றைய பிரத்தியட்சத்தின் கவி நிகழ்ச்சிகளாக வேண்டும்.

இனி,
கவிதையில் ஏற்படும் சிக்கல் தெளிவின் அடிப்படையில் நிகழ்ந்தாக வேண்டும்.

சிலையை உடை 
என் சிலையை உடை 
கடலோரம் 
காலடிச் சுவடு 

உறுதிமயமான சிலையை உடைக்கும்படி சொல்வது தெளிவாகிறது. கடலோரம் காலடிச் சுவடு இருப்பதும் தெளிவாகிறது. இரண்டு பிரயோகங்களும் பின்னப்ப்படும்போதும் ஏற்படும் அறிவில் அதிர்ந்து உள்ளோடி விரிகிறது.

இன்னும் வரும் 21/01/2014

இன்னும் வரும் 20/01/2014

இன்னும் வரும் 18/01/2014

இன்னும் வரும் 17/01/2014

கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு மார்ச் 1973

"ஃ" ஓர் எழுத்தாயுத மாத ஏடு

கண்ணாடியுள்ளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு மார்ச் 1973

மணிவிழா கொண்டாடும் சி.சு.செல்லப்பாவுக்கு சமர்ப்பணம்

வெங்கட் சாமிநாதன்
பிரமிள் பானுச்சந்ரென்

நம் உணர்வுலகு அநுபவ உலகு பல பரிமாணங்களைக் கொண்டது. உணரக் கிடைக்கும் அனந்தம் முழுமையும் சிந்தனையின் வாய்ப்படுவதில்லை. நம்மில் பெரும்பாலோர்க்கு அவரவர் சிந்தனை மொழிவழிப்பட்டதாகும். இதன் விளைவாக அவர்கள் சிந்தனை மொழியின் பரிமாணச் சிறைக்குள் அடைபட்டுப்போகிறது. இச்சிறைச் சுவருக்குள்ளேயே, அநுபவ உணர்வுலகமும் அடங்கி விட்டதாக அவர்கள் தீர்மானித்துக் கொள்கிறார்கள். வேறு வார்த்தைகளில் நமக்குச் சாத்தியமாகவிருக்கும் அநுபவ, உணர்வுலகு ஒரு பெரும் வட்டம் எனக் கொண்டால், அதனுள் ஒரு சிறு வட்டம் சிந்தனை உலகு. அதனுள்ளும் சிறிய வட்டம் மொழி சாத்திய உலகு. ஒரு லட்சிய நோக்கில், மொழி சாத்திய சிறு வட்டம் படிப் படியாக விரிந்து, ஆழ்ந்து, உக்கிரஹித்து அநுபவ உணர்வுலகின் பெரு வட்டத்தில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்ளவேண்டும். நம் கலைஞனர்கள், இலக்கியாசிரியர்கள், "பெரும் பெரும் " விமரிசக தகைகள் எல்லாம் மொழி சாத்திய உலகான சிறு வட்டத்தையே அநுபவ உணர்வுலக பெருவட்டமாகக் கண்டு மயங்குகிறார்கள். இது பரிதாபத்திற்குரியது.

மொழி சாத்திய சிறு வட்டம் என்று யான் சொன்னது இப்போதைய சந்தர்ப்ப சௌகர்யத்திற்காகத்தான். ஏனெனில் இக்கட்டுரை எழுதும் சந்தர்ப்பத்தில் என் சர்ச்சைக்குட்படுவது மொழி என்னும் குறியீடு. வேறு சந்தர்ப்பங்களில், அச்சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு வண்ணம், கோடு, சப்தம், காட்சி என ஆரம்பச் சிறு வட்டத்தின் குறியீடுக் குணத்தை மாற்றிக்கொள்வேன்.இருப்பினும் வெவ்வேறு வகைக் குறியீட்டுச் சாதனங்களின் சிறுவட்டமாக ஆரம்பிக்கும் ஒன்று அநுபவ உணர்வு பெரும் வட்டத்திற்கும் போகும் விரிவில், ஆழத்தில், உக்கிரத்தில் ஒருமை பெற்று இனங்காட்டிப் பிரிக்க முடியாத ஒரு முழுமையை அடைகிறது. அதனால்தான் நம் உணர்வு அநுபவ உலகு பல பரிமாணங்களைக் கொண்டது என்றேன்.

பெரு வட்டம், சிறு வட்டம் எனச் சொன்னதால்தான், ஒன்றிலிருந்து மற்றுன்றிற்கு நிகழும் நகர்வு எனக் கொள்வது தவறு. இது நிகழ்வது முழுக்க முழுக்க 'இடமற்ற' மன விஸ்தாரத்தில். சிறு வட்டச் சிறையோ, பெரு வட்ட விரிவோ அவரவர் மனதில், பிரக்ஞையில் நிகழ்வது. ஒருவன் பெருவட்ட இருப்பை மறுத்து தான் சிறைப்படும் சிறு வட்ட அணைப்புதான் வாழும் சந்தர்ப்பங்களையும் அவன் சிந்தனையின் பரிமாணங்களையும் பொறுத்தது.


பெரு வட்ட உணர்வுலகோ, சப்தம், மொழி என்ற பரிமாண எல்லைகளில் சிறைப்படுவதில்லை. மொழிச் சாதன சிறு வட்டத்தில், பயிற்சி, வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள், ஈடுபாட்டின் ஓரச் சாய்வு ஆகியவற்றின் காரணமாக சிறைப்படுபவன், பெருவட்ட உணர்வுலகில் , மொழியின் பரிமாணம் மூலம் தான் தரிசிப்பதை மாத்திரமே எடுத்துக் கொள்கிறான். அவனுக்குக் கிடைப்பது ஒரு சிதைந்த உலகு. மூளியான சத்தியம். "எனக்கு இலக்கியம் ஒன்றில்தான் குறி, மற்றவற்றைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை" என்பவன் எவ்வளவு பெரும், பெரும், இலக்கிய கர்த்தாவானாலும் அவன் உலகு சிதைந்த உலகுதான். உண்மையின் தரிசனத் தேடல் கொண்ட இலக்கிய கர்த்தா அவ்வாறு சொல்ல மாட்டான். சிதைபட்ட உலகை மூளியான சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவும் மாட்டான். அவன் தேடலில் பெருவட்ட உணர்வுலகின் மற்ற பரிமாணங்களின் சாயல் நிழல் தட்டியிருக்கும். இருக்காவிட்டால், சத்தியத் தேட்டையின் வெறும் சாதனமேயாகிய மொழியை சத்தியமாகக் கண்டு மயங்கியவன் அவன். சாதனங்களில் ஏதும் பவித்ரத்வம் இல்லை. சத்தியம் இல்லை.

சந்தர்ப்ப வசமாகவோ, ஈடுபாட்டின் விளைவாகவோ, வண்ணங்களையும், கோடுகளையும் தான் சிறுவட்ட ஆரம்பமாகக் கொண்ட வான்கோ, பெரு வட்ட உணர்வுலகில் உள்மன உளைச்சல் என்ற பரிமாணத்தையும் கண்டான். "முதுமை" கவிதையில் பரிதி, "பரிதிப் பிணம்" ஆகிறது. வான்கோவின் ஓவியத்தில் சூரியனும், ஸிப்ராஸ் மரங்களும் வயல்வெளிகளும் சைத்ரிகனின் மன உளைச்சலை ஸ்வீகரித்துக் கொள்கின்றன. பெரும் சந்தேகக் குறிகளில் ஆரம்பித்து ஐன்ஸ்டின், உணர்வு அநுபவித்தறியாத பிரபஞ்சத்தின் கூறுகளைக் கண்டான். அன்றாட வாழ்வின் பரிதவிப்பில் பிரயாணத்தைத் தொடர்ந்த கார்ல் மார்க்ஸ் சமுதாயத்தின்,மனித சரித்திரத்தின் பிரவாஹ கதியை, அலையாடலை நிர்ணயித்து விட்டான். வண்ணப்புள்ளிகளின் சிறு வட்டத்திலிருந்து காட்சிப் பதிவின் ஒளிச் சேர்க்கைக் கூறுகளைக் காணும் எல்லையை அடைந்தவன் ஸுராட் (Seurat). ஜப்பானிய சித்திர எழுத்துக்களின் அமைப்பு முறை, ஐஸ்ன்டினையும், நரம்பு பலவீனங்களின் ஆராய்ச்சி பாவ்லோவையும், மனித மனத்தின் இயல்புகளுக்குக் கொண்டு சேர்த்தது. இப்படி, மனித வரலாற்றின் சிந்தனா சரித்திரத்தில், ஒரு பரிமாண சாதனா ஆரம்பத்திலிருந்து அதன் வழியே தொடங்கிய பிரயாணம் மற்ற வேறு பரிமாண சாதனா எல்லைகளுக்குத் தாவிய நிகழ்ச்சிகள் அனந்தம். இருந்த இடத்தை விட்டு நகராத பிரகிருதிகள் தாலுகா ஆபீஸ் டெஸ்பாச் கிளார்க்குகள் மாத்திரமல்ல, தமிழ் நாட்டு இலக்கிய விமர்சகப் பெரும் புள்ளிகளும்தான்.

பிரமிள் பானுச்சந்ரென் மொழிவழி சாதனைக்குள் காலெடுத்து வைக்குமுன் இந்த ஆரம்ப அறிமுக எச்சரிக்கை தேவைப்படுகிறது. பானுச்சாந்ரெனின் "கவிதைகள்' இன்ன உலகில் இன்ன பரிமாண எல்லையில்தான் இயங்கும் என நம் தமிழ்தந்த மொழிவழிச் சாதனா சிருவட்டச் சிறைக்குள் இருந்துகொண்டு நிர்ணயிபபதோ, எதிர் பார்ப்பதோ தவறாக முடியும். பானுசந்ரெனின் அநுபவ உணர்வுலகப் பெரு வட்டம் மொழி வழி சாதனா வட்டமாக (கவனிக்கவும், சிறு வட்டமாக அல்ல) தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறது. அவர் எழுத்துக்களில் - இங்கு அவர் கவிதைகளில் சிறு வட்டம் பெரு வட்டமாகத் தன்னை விரித்துக் கொள்கிறது. உக்கிரஹித்துக் கொள்கிறது. அவ்விரிதலில், உக்கிரஹிப்பில், அதன் பரிமாண எல்லைகள் மாறியிருப்பதைக் காணலாம், காணச் சக்தி உள்ளவர்கள் ஏனெனில் முதலும் கடைசியுமாக மொழி வெறும் குறியீடே. வாடிப்பட்டி வைரமுத்துப் பிள்ளையிடம் 'Icicles' (ஐஸ் படிமம்) என்று மட்டுமே சொல்லி அதை உணர்த்த முடியாது. பானுச்ச்ந்ரெனின் உணர்வுலகில் கொஞ்சமாவது தானே எட்டிப் பார்த்திருக்க வேண்டும். அவர் காட்டும் பரிமாண விஸ்தாரங்களில் கொஞ்சமாவது தாமும் உணரும் சக்தி வேண்டும்.

நமக்கும் பரிச்சயமான, பாதுகாப்புத் தரும் நம்பிக்கை உணர்வு ஊட்டும் உலகங்களும் பரிமாணங்களும் பானுச்சாந்ரெனின் உலகில் தகர்க்கப்படுகின்றன. கண்களின் வீச்சுத் தொடும் அடிவானம் வரையாவது நீங்கள் சென்று, அடிவானத்திற்கப்பால் அகன்று விரியும் உலகத்தைப் பற்றிய ஞானம் இருந்தால்தான், அடிவானம் வரை மொழிவகுத்த பாதை வழியே சென்று அதற்கும் அப்பால் பானுச்சாந்ரென் அமைக்கும் மொழிவழிப் பாதை வழியே அவர் இட்டுச் செல்லும் உலகத்திற்குப் பயணம் செல்ல சாத்தியமாகும். இல்லையெனில் "எனக்கு இலக்கியம் தான் குறி" என்று தெரு முனையிலேயே டேரா போட்டுக் குருட்டு வாழ்க்கை நடத்த உங்களுக்குச் சுதந்திரம் உண்டு.

இன்று பெரும்பாலான தமிழ்க் கவிதை செல்லும் பாதை, ஏற்கனவே மொழி மொழி சிரமைத்துத் தந்துவிட்ட பாதையில் நீங்கள் அமைத்துக்கொண்ட சௌகரியமான ஒரு நடை பாதையேயாகும். இந்த நடைபாதைக்குள்தான் செப்பனிடுதல், கல்பதித்தல், சீரமைத்தல், அரசியலில் அலங்கார தர்ம கோஷங்கள் எழுதுதல் எல்லாம் நடைபெறுகின்றன. இன்னொரு சிலரோடு பானுச்சாந்ரெனும் மொளிவழிப் பாதைக்கப்பால் உள்ள உலகின் தரிசனங்களைக் காட்டுபவர்.

புதுக்கவிதையில் மரபில், பிரமிள் பானுச்சாந்ரெனின் கவிதைகளைத் தனித்துக் காட்டும் குணங்கள் இரண்டு. ஒன்று அவரது படிம உலகம். இவ்வாறாக நான் பிரித்துக் காட்டியது ஒரு விளக்க சௌகர்யத்திற்காகத்தான். மன--பிரபஞ்ச உணர்வுலகம்தான் படிம ரூபமாக நமக்குக் காட்சியளிக்கிறது. படிமம், காட்சி வழிப்பட்டது. ஓவிய சிற்ப உலகிலிருந்து இடம் பெயர்ந்தது. மன--பிரபஞ்ச உணர்வுலகம், சிந்தனை வழிப்பட்டது. மனோதத்துவ--பிரபஞ்ச ஆராய்வு வழிப்பட்டது. ஆகவே "இலக்கியக்குறி" கொண்ட கற்பரசிகள், மொழிக் கண்ணகிகள் இங்கு கால்வைப்பது ஆபத்தானது. அநுபவ உணர்வுலகில் மற்ற பரிமாணங்களும் உண்டு என அறிந்து அவ்வுலகில் சஞ்சரிக்க விரும்புகிறவர்களுக்கு இங்கு இடம் உண்டு.

மேலே செல்லுமுன் இன்னுமொரு விளக்கம் அவசியம். படிமம் என்பது இங்கு உத்தி அல்ல. காட்சி அனுபவம். அநுபவ சத்தியம். அநுபவ உணர்வுலகமும் படித்தறிந்த தகவல் சேர்க்கை அல்ல, அதுவும் அநுபவ சத்தியம். உத்திகளாகவும், புதுமைகளாகவும், அநுபவ சத்தியத்தைக் காண்பவர்கள் வான்கோழி நட்டியமாடுபவர்கள். அவர்களில் ஒருவரின் கவிதை ஒன்றை மாதிருக்கென தரலாம்.

மலைகள் என்னும் 
குறும்பற்கள் 
முளைத்திராத 
பூதலத்தின் 
கொக்கு போலக் 
காலூன்றி 
நிற்கும் மரங்கள் 
அதற்கப்பால் 
எழுந்து வீழ்ந்து 
தடுமாறும் 
நடக்கத் தெரியாத கடலலைகள் 
யார் சென்றாலும் 
விரல் நீட்டும்.

இங்கு வான்கோழி படிம நடனம் ஆடுகிறது.

மலைகள் என்னும் 
குறும்பற்கள்  
முளைத்திராத ... போயிற்று. இதற்குள்ளேயே பூனை சாக்குப்பைக்கு வெளியே தலை நீட்டி தப்பித்தோடி விட்டது. 


எண்சீர் விருத்தத்திலிருந்து, அறுசீர் விருத்தத்திற்கும், களிப்பாவுக்கும், அகவலுக்கும் என்று கிளைக்குக்கிளை தாவும் பண்டித லாவகம், படிமத்தையும் கிளையாகக் கணித்து தாவியதன் விளைவு இக்கால் முறிவு. இப்படியும் பானுச்சாந்ரென் 70 வருடத்திற்கு முந்தைய ஐரோப்பிய முயற்சிகளிலிருந்து கற்றதல்ல.இன்று இன்னொருவர் பானுச்சந்ரெனிடமிருந்து கற்க.

இவ்வான்கோழி நடனத்திற்குக் காரணமே நம் விமரிசகப் பெருந்தகைகள் தாம். சோதனை என்ற இயக்கத்தின் தாத்பர்யத்தையும், உள்ளார்ந்த உந்துதலையும் முன் வைக்காமல், இப் பெருந்தகைகள், "சோதனை, சோதனை" என்று இலக்கியக் கற்பு நச்சு பண்ணியதன் வினைதான் இவ்வான்கோழி நடனம். சோதனையின் உந்துதலே, ஒரு பரிமாண அநுபவத்திலிருந்து இன்னொரு பரிமாண சோதனைக்குத் தாவும் இயக்கம் தான் என்பதை இலக்கிய கண்ணகிகள் உணரவும் இல்லை, ஆதலால் அதை எடுத்துரைக்கவும் இல்லை.

படிமம் என்பது சம்பிரதாயமாக (கவனிக்கவும்) "சம்பிரதாயமாக" ஓவிய, சிற்ப வழி அநுபவம் ஆகும். மன உளைச்சல்கள், சம்பிரதாயமாக, சொல் வழி, இலக்கிய வழி அநுபவம் ஆவது போல, மன உளைச்சல்கள் வான்கோ என்ற ஓவியனிடம் சாதனையாக பதிவு பெற்றது போல, படிம அநுபவங்கள் மொழிவழி வெளியீடு பெறும் சந்தர்ப்பங்கள் தாம் 70 வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் நடந்த படிம கவிதை முயற்சிகள். இங்கு பிரமிள் பானுச்சாந்ரெனின் கைகளில் இன்று தமிழும் நிகழ்ந்திருக்கிறது.இந்நிகழ்ச்சியின் ஊற்றுக் கண்ணை, பானுச்சாந்ரெனின் அநுபவ உணர்வுலகின் நிதர்ஸனத்தில் தான் காண வேண்டும். 1961-ம் வருட "எழுத்து" 36-ல் வெளிவந்த கவிதை "விடிவு" 

பூமித் தோலில் 
அழகுத் தேமல்.
பரிதி புணர்ந்து 
படரும் விந்து.
கதிர்கள் கமழ்ந்து 
விரியும் பூ.
இருளின் சிறகைத் 
தின்னும் கிருமி.
வெளிச்சச் சிறகில் 
மிதக்கும் குருவி.

இங்கு ஒரே காட்சி ஐந்து ரூபங்களில் ஐந்துவித தோற்றங்களில் ஒன்றையழித்து மற்றொன்றாக தோன்றி மறைகிறது.இது தமிழில் முதன் முதல் படிமக் கவிதை. இதன் பிறப்பிற்குக் காரணங்களாக இன்னொரு படிமக் கவிஞரை நாம் தேட வேண்டிய அவசியத்தை பனுச்சாந்ரென் வைக்கவில்லை. இதன் தோற்றத்திற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, "எழுத்து" தொடங்கிய புதுக்கவிதை மரபு அளித்த சுதந்திர இயக்கம், மற்றொன்று மிக முக்கியமானது. உணர்வுலகக் குணா விசேஷம். "விடிவு" கவிதையில் கண்ட படிம இயல்பின் ஆரம்பங்களைப் படிமக்கவிதை அல்லாத 1960. ஜனவரி "எழுத்து"--வில் வந்த "நான்" கவிதையில் காணலாம்.

ஆரீன்றாள் என்னை 
பாரீன்று பாரிடத்தே 
ஊரீன்று உயிர்க்குலத்தின் 
வேரீன்று பெரும் வெளியில் 
ஒன்று மற்ற பாழ் நிறைந்து 
உருளுகின்ற கோளமெல்லாம் 
அன்று பெற்று விட்டவளென்
தாய்!

வீடெதுவோ எந்தனுக்கு?
ஆடு(ம்) அரன் தீவிழியால் 
முடிஎரித் துயிரறுத்த 
காடு ஒத்துப் பேய்களின்றி 
ஆருமற்ற சூனியமாய் 
தளமற்ற பெரு வெளியாய் 
கூரையற்று நிற்பது என் 
இல்!

யரோ நான்?--ஓ!--ஓ!
யாரோ நான் என்றதற்கு 
குரல் மண்டிப் போனதென்ன?
தேறாத சிந்தனையும் 
மூளாது விட்டதென்ன?
மறந்த பதில் தேடியின்னும் 
இருள் முனுகும் பாதையிலே 
பிறந்திறந்து ஓடுவதோ 
நான்?

இக்கருவின் வளர்ச்சியை, இதற்கடுத்து நவம்பர் 1960 23-ம் "எழுத்து" இதழில் வெளிவந்த "பயிர்" என்ற கவிதையில் பார்க்கலாம்.

வேலி கட்டா வானத்தில் 
வெள்ளிப்பயிர் வளர்க்க 
தாலிகட்டிச் சத்தியினை 
ஈர்ப்பென்ற நீர் பாய்ச்சி 
காலமெல்லாம் காத்திருக்க 
வைத்து விட்டாய்; வைத்து மென்ன?
ஊழியென்ற பட்சி அவன் 
அயர்ந்திருக்கும் வேளையிலே 
வேலி கட்டா வானத்தில் 
வெள்ளி விதைக ளெல்லாம் 
அள்ள விழுங்கும் வரை 
நீர் பாய்ச்சி என்ன பயன் 
வேர்  முளைக்கக் காணோமே!


இதையடுத்து வளர்ந்து முதிர்ந்ததுதான் "விடிவு" கவிதை காட்டும் படிமவியல், நேரிசை வெண்பாவிலிருந்து தாவிய அடுத்த கிளையில்ல பானுச்சாந்ரெனின் படிமங்கள்.

"சமூகம் கெட்டுப் போய் விட்டதடா?
சரி, சோடாப் புட்டி உடைக்கலாம் வாடா"

என்று வேறொருவர் தமது அங்கத சமூகப் பார்வைக்கிளையிலிருந்தும்,

"அடுக்கி வைத்த செங்கற் சூளையிலே 
தனித்த செங்கல்லொன்று சரிகிறது"

என்ற செங்கற் சூளை சித்தாளின் காவல் பார்வைக்கிளைக்கு அவரே தாவ முயல்வது போல, படிம உலகுக்குத்தாவ முடியாது.

ஏன்?

பானுச்சாந்ரெனின் மன-- பிரபஞ்ச உணர்வுலகம் தான் படிமங்களாக காட்சி தருகின்றன. இவற்றை இரு வேறு அம்சங்களாக பிரித்து என் விளக்க சௌகர்யங்களுக்காக என நான் முன்னரே சொன்னேன்.

இம் மன-- பிரபஞ்ச உணர்வு கற்றுத் தெரிந்ததல்ல. கலைஞனின் உடன் பிறந்த ஆளுமை. பிரபஞ்சத்தின் பரப்பு அனந்தம் என்ற இடபரிமாணம், மன எழுச்சியின் உக்கிரமாக எழும் உணர்வுப் பரிமாண மாற்றம், படித்தறிந்து கொள்ளும் தகவல் சேர்க்கை அல்ல. ஆளுமையின் உள்ளிருந்து விகசிக்கும் பார்வை அநுபவம். உணர்வின் மலர்ச்சி. சான்றுகளைக் கவிஞனின் வளர்ச்சியில் காணலாம்.

படிமம், உணர்வு ஆகிய இரு குணங்களின் மங்கலான ஆரம்பங்களை, பானுச்ச்ந்ரென் தன் 20,21-ம் வயதில் எழுதிய 'நான்' கவிதையில் பார்க்கலாம். "பயிர்" என்ற கவிதையில் மங்கல் சிறிது நீங்குகிறது. தெளிவு தோன்றுகிறது. முற்றிலும் படிமத் தெளிவு பெறுவது "விடிவு"  "மின்னல்" ஆகிய கவிதைகளில்.

ஒரு ஓவியனின் பண்புகள், "எழுத்து" பத்த்ரிகை அளித்த சந்தர்ப்பவசமாக, இங்கு தூரிகையையும், வண்ணங்களையும் தேடுவதற்குப் பதிலாக, சொற்களைக் கையாள வைத்துக் கவிதைகளைப் பிறப்பித்திருக்கின்றன. "நான்" கவிதையில் எழுந்த ஒரு கருவின், தெளிவும், உருவும் மங்கலாகத் தெரிந்த  ஒரு கருவின், படிமம் பரிணாமம் மாத்திரம் "மின்னல்", "விடிவு", கவிதைகளில் தெளிவும் உருவும் பெறுகிறது. "நான்" கவிதையில் மங்கலாகத் தொடங்கிய, தெளிவும் உருவம் பெறாத இன்னொரு பரிமாணமாகிய, உணர்வு மனவெழுச்சி "பயிர்" கவிதையிலும் தலைகாட்டியது. அதை "விடிவு", "மின்னல்" கவிதைகளில் நாம் காண்பதில்லை.அதன் தெளிவு, ரூப முதிர்ச்சியை "மறைவு" (எழுத்து - 36, டிசம்பர் 61) கவிதையில் காணலாம்.

ஆக இங்கு பரிமாணங்களும் கிளைவிட்டுப் பிரிவது ஆரம்ப காலங்களில்தான். பின் வருடங்களில், காட்சித் தோற்றத்திலும், உணர்வுப் பாங்கிலும் அவை எப்போதும் ஒன்றிணைந்து முழுமையாகின்றன.

இம் முழுமையின் சீரான பிரவாஹத்தை 60-ன் ஆரம்ப காலங்களிலிருந்து இன்று எழுதப்பட்ட "கன்னாடியுளிருந்து" என்ற குறுங்காவியம் வரை நாம் காணமுடியும்.

இப் பிரவாஹம் ஒரு மன--பிரபஞ்ச உணர்வுலகம். தெளிவிற்காக சற்று விரித்துச் சொல்வதானால், மனம் என்பது மன உள்வெளிப் பிரபஞ்சம், பிரபஞ்ச உணர்வு என்பது பிரபஞ்ச வெளி மன இயக்கம்.

மன உள் வெளி பிரபஞ்சமாக விரிகிறது (the inner cosmos of the mind). பிரபஞ்ச வெளியின் அனந்த விரிவு மன இயக்கமாக எழுச்சி அடைகிறது (the cosmos as the mind ). இவ்விரண்டும் ஒரு தனித்த புள்ளியிலிருந்து உள் நோக்கியும், வெளியில் விரிந்தும் பெறப்படும் பிரயாணம் என்று சொல்வது புரிந்துகொள்ள சாத்தியமாகத் தரப்படும் விளக்கமாகக் கொள்ளலாமே தவிர, அது உண்மையின் முழுப் பரிமாணமும் ஆகாது. இது தனித்த ஒரு புள்ளியிலிருந்து இரு வேறு பரிமாணங்களில் சஞ்சரிப்பது அல்ல. இவ்விரு உலகங்களும் பரிமாணங்களும் ஒன்றேயாகும். உதாரணத்திற்கு, உள் நுழைந்து வெளி நீளும் ஒன்றேயான டெலஸ் கோப் போல, உட்சுழன்று, விரிந்தாலும் நீர்ச் சுழல்போல, சுழற்காற்றுப் போல எனக் கொள்ளலாம். பிரைக்ஞையின் உள்நோக்கிய பிரயாணந்தான், பிரபஞ்ச வெளியின் அகண்டத்தைப் பார்வையில் அணைக்கும் முயற்சிதான் மன உள் வெளியின் பிரபஞ்சத்திற்கு இட்டுச் செல்கிறது. உபநிஷத ஞானிகள் தம் சிந்தனையை உள்நோக்கிய தியானம் அகண்ட பிரபஞ்சத்தைத் தரிசிக்க உதவியது. பிரபஞ்சத்தின் அனந்த வெளியை நோக்கிச் சென்ற அமெரிக்க அஸ்ட்ரோ நாட்'கள் ஒவ்வொருவரும் திரும்பி வந்தும் கண்டது உள் நோக்கிய மனச் சஞ்ச்சாரம்தான். வெறும் மனித யந்திரங்களாக பயிர்சிக்கப் பெற்று உருவாகிய ஒவ்வொரு அஸ்ட்ரோ நாட்'டும் பிரமிக்கத்தக்க வகையில், கவிஞர்களாகவும் தியானிகளாகவும், உலகு துறந்த ஆன்மிகர்களாகவும், மனிதகுல நேயர்களாகவும் மாறிவிட்டனர். இவ்வாறு மாறுவார்கள் என யூகிக்கக்கூட, அவர்களது விண்வெளிப் பிரயாணத்திற்கு முந்தைய வாழ்க்கையில் ஏதும் வாய்ப்பு இருக்கவில்லை. விண்வெளியின் சஞ்சாரம் அவர்கள் மனவியக்கத்தை முற்றிலும் மாற்றிவிட்டது.விண்வெளியின் அகன்ற விஸ்தாரத்தில் (அதாவது) ஓர் இடபரிமாண அநுபவத்தில், உள் வெளி பிரபஞ்சத்தின் (அதாவது) உணர்வு பரிமாண அநுபவத்தின் தரிசனம் கிடைத்துள்ளது. ஏக சாதனா (இலக்கிய, மொழி ) விரதிகள் கவனிக்க வேண்டும்.

இங்குதான் நான் முன்னர் சொன்ன, வெளிவட்டத்தில் நிகழும் பரிமாண மாற்றத்தை, அல்ல, ஒன்றியைந்த கலப்பை, பார்க்கிறோம். திரும்பவும், பெருவட்ட அநுபவ உணர்வுலகு, சிறு வட்ட தொடக்கத்தைத் தன்னுள் அணைத்துக் கொண்டுள்ளது.

பிரமிள் பானுச்சாந்ரெனின் மன சஞ்சாரம், உள்ளுணர்வுப் பாங்கானது (intuitive). இடசஞ்சாரம் பிரபஞ்சத்தையே அணைத்து உறவாடும் தன்மையது. இந்த ஊஞ்ச்சலாட்டத்தை "நான்" கவிதையிலிருந்து, "கண்ணாடியுள்ளிருந்து" வரை காணமுடியும். தாயின் நினைப்பு, "ஒன்றுமற்ற பாழ் நிறைந்து உருளுகின்ற கோளமெல்லாம் அன்று பெற்றவளிடம்" கொண்டு சேர்க்கிறது. ஆருமற்ற, சூனியம், தளமற்ற பெருவெளி, "இல்" ஆகிற்று. குரல் மண்டிப் போனது, இருள் முனகும் பாதையில் பிறந்திறந்து ஓடுவது, நான் என எஞ்சுகிறது.

கண்ணாடியுள்ளிருக்கும் தன்னை நோக்கிய விசாரம் பிரபஞ்சத்தின் அகன்ற விஸ்தாரம் முழுமையுமே அரவணைத்துக் கொள்கிறது. இட விஸ்தாரம் மன இயக்கமாக எழுச்சி பெறுகிறது. உள் மன இயக்கம் இட விஸ்தாரமாக விரிகிறது.

கண்ணாடியின் படிம விஷேசம், பார்வை சாதனா விஷேசம் இங்கு கவனத்திற்குரியது. கண்ணாடி நமக்கு நம்மைக் காட்டுகிறது.நமது பிரதிபிம்பத்தை,நமது வெளித் தோற்றத்தைக் காட்டுகிறது. நமது வெளித்தோற்றத்தின் கூரிய ஆராய்வு, நம்மிலிருந்து நம்மை வேறுபடுத்தி, ஆராய்பவனிலிருந்து ஆராயப்படும் பொருளை தனித்துக் காட்டுகிறது. ஒரு கூரிய பார்வை, தன்னை, "தான்"ஐ மறந்த பார்வை, வெளித் தோற்றத்தை ஊடுருவுகிறது. இது மன உணர்வு, இயக்க பரிமாணம்.

அதே சமயம்,

வேறு நோக்கில், இடவிஸ்தாரமாக, கண்ணாடி 'தன்'னின் இருப்பை மறைத்து, எல்லையற்ற ஒரு அகண்ட பிரபஞ்சத்தை சிருஷ்டிக்கிறது.சுற்றியும் உள்ள கண்ணாடிகள் (கண்ணாடிச் சுவர்கள்) சிருஷ்டிக்கும் பிரபஞ்ச வெளி, அதனுள் தோன்றும் கோடானு கோடி பிரதிபிம்பங்கள்:

வெறுமை மீது 
ஒன்றை யொன்று உற்று நோக்கும் 
இரண்டு கண்ணாடிகளினுள் 
வெளியினுள் வெளி 
எங்கும் கோடானு கோடி 
பிரதிபிம்பங்கள் 
கர்ப்பக் கிரஹத்து 
வௌவால்களாய்த் தவிக்கும் நிழல்கள் 

இங்கு இட-மன வெளி பிரபஞ்ச விஸ்தாரத்தில், இட-கால-மன பரிமாணங்கள் மடிகின்றன. உக்கிரமடைகின்றன.காலம் ஸ்தம்பிக்கிறது. ஒளிவருட வேகமும் கொள்கிறது. எது உண்மை? எது தோற்றம்? எது சத்தியம்? எது நிதர்சனம்?நேற்று, இன்று, நாளை எல்லாம் ஒரே புள்ளியில் சமைகின்றன. உணர்வுகள்,பிம்பத் தோற்றங்கள், படிமங்களாக எழுந்து மறைந்து ...

இவ்வுனர்வுப் பிரவாஹம் படிமப் பிரவாஹம்,பிரபஞ்ச நீட்சி சிரமம் தரும். இப்பிரவாஹம் எனக்குள் பல ஞாபகங்களை எழுப்புகிறது. எல்லா ஞாபகங்களும் அலையாடி ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன. ஒன்று: விண்வெளியில் பிரயாணம் செய்த அஸ்ட்ரோ நாட்'கள், காஸ்மோ நாட்'கள் மூலம் தெரிந்த பிரபஞ்ச வெளி அநுபவங்கள், அவர்களது அப்போதைய மன எழுச்சிகள், பரவசங்கள், பின்னர் அல்டஸ் ஹக்ஸ்லியின் Doors of Perception என்ற புத்தகம். மெஸ்காளினைச் சாப்பிட்டுத் தன்னுள் அது நிகழ்வித்த  பிரக்ஞை மாற்றங்களை அநுபவங்களை அல்டஸ் ஹக்ஸ்லி அப்புத்தகத்தில் கூறியிருக்கிறார். அவரைப் போலவே ஹிப்பிகளும் நிர்மல ஆனந்தம் என, L.S.D.யையும், சரஸ்ஸையும் சாப்பிட்டு அனுபவம் தேடுகிறார்கள். இவ்வற்றின் உந்துதலைப் பற்றியெல்லாம் டிமொதி லிரி (Timothy Leary) எழுதியிருக்கிறார். இக்குறுக்கு வழிகளெல்லாம் மாரீஸத் தோற்றங்கள் என லீரியே ஒப்புக்குக் கொண்டிருக்கிறார். நம் மரபிலும், கஞ்சாவும், அபினியும் உண்ட யோகிகள் உண்டு. இந்த யோகிகளிடமிருந்துதான் ஹிப்பிகள் தங்கள் ஆனந்த மார்க்கத்தைக் கற்றனர். ஆனால் இவர்களுக்கெல்லாம் ஆதர்ஸனமாக இருந்தது நம் மரபின் புராதன ரிஷிகளின் தியான வழித்தேட்டை. தியான வழித் தேட்டை நிச்சயமானது. முறையும் உண்மையும் ஆனது. மனக் கட்டுப்பாட்டிற்கு அடங்கியது. அல்டஸ் ஹக்க்கியும், ஹிப்பிகளும் தேடுவது நிச்சயமில்லாதது. அநுபவம் எத்தகையதாக இருக்கும் என்பதை L.S.D.யோ மற்றதோ உட்கொள்ளுமுன் நிர்ணயிக்க இயலாதது. நிகழப் போவது நிர்மல ஆனந்தமா, அல்லது பயங்கர சொப்பனமா என்பது எவ்வளவு நீண்டகால, சரஸ், L.S.D.பழக்கத்திலும், பயிற்சியிலும் தீர்மானிக்க இயலாதது. ஹிப்பிகளுடன் உடன் சேர்ந்து சோதனை செய்த டிமொதி லீரி (Timothy Leary) இதையெல்லாம் உணர்ந்து சொல்லியிருக்கிறார். இந்த அநுபவ மனமயக்கம் பிரக்ஞையின் பேதலிப்பு. இருப்பினும் இவையெல்லாம் (ஹிப்பிகளின் அநுபவத்தில் பல சமயங்களில் நேரும் பயங்கர சொப்பனங்களைத் தவிர்த்து) ஒரு படிம ஒற்றுமை கொண்டவை. ஆனால் சுயமன எழுச்சி அற்றவை.

எதற்காக இவ்வளவும் சொல்ல நேர்ந்தது என்றால் பானுச்சந்ரெனின் "கண்ணாடியுள்ளிருந்து" காவியத்தில் தோன்றும் படிமங்கள் இவற்றையெல்லாம் ஞாபகப்படுத்தியும், ஆனால் ஒரு பெரிய வித்தியாசம்,மேற்சொன்னவர்கள் எல்லோரின் அக்கண அனுபவத்திற்கும், அவர்களது எஞ்சிய வாழ்க்கைக்கும் ஏதும் சம்பந்தமில்லை. ஒன்றிற்கொன்று உறவு கொண்டு பிறப்பன அல்ல. அது மாத்திரமல்ல இவை பானுச்சாந்ரெனின் கவிதை இயக்க முழுமையுடனும் இக்காவியத்தின் படிமப் பிரவாஹம் உறவு கொண்டது. எல்லாமே ஒரு முழுமையும், சம்பந்தமும் கொண்டவை.

"கண்ணாடியுள்ளிருந்து" குறுங்காவியத்தின் படிமப் பிரவாகமும், உணர்வு எழுச்சிகளும் ஒரே நாணயத்தின் இரு முகங்கள் அவை. பிரக்ஞை விழிப்பில் உள்ளுணர்வின் (intuitive) இயக்கத்தில் பிறப்பவை. ஒவ்வொன்றிற்கும் ஆதார நிதர்ஸனம் உண்டு.

"தசைச் சுவர்கள் வீசும் இப் 
புவன நிழல் வெளியில் 
சுடர்கள் ஆடுகின்றன 
ஒவ்வொரு சுடரும் 
பெண்குறி விரிப்பு 
தசை நிழல் பிளவு.
அவற்றை நோக்கி 
(எனத் தொடர்ந்து)

....   ....   ....   ....

கண்ணாடி 
இக்கணம்.
இக்கணம்,"  (வரை)

இது போல ஒவ்வொன்றிற்கும் ஆதார சிந்தனை உண்டு.

"மூடிய கதவின் 
சாவித் துவாரத்தில் 

(இங்கே ஒரு பக்கம் விடுபட்டிருக்கலாம்)

கள். மற்ற பரிமாணங்களும், அனுபவங்ககளும், கலைச் சாதனங்களும் இலக்கியத்துடன் சம்பந்தமற்றவை என்பவர்கள், எங்கோ பெரும் தவறு செய்கிறார்கள். இத்தகையவர்களின் இயக்கமும் சாதனையும் கலையாவதில்லை.

அது வெறும் தொழிற்திறன். சொல்வழி தொழிற்திறன். வியாபாரப் பொருள். சத்தியத்தின் தரிசனமற்றது. தச்சன் மரத்தைக் கையாளுவதைப் போல, சொல் அவர்களது படைப்புகளுக்கு ஒரு மரச் சாதனம். வியாபார raw material. இவ்வாறான அஞ்சறைப் பெட்டி நோக்கு (அனுபவம் ஓர் அறையில், படிப்பு ஓர் அறையில், சொந்த வாழ்வும் தர்மமும் ஓர் அறையில்,எழுத்து ஓர் அறையில்.....) இத்தொழில்  காரர்களுக்கு பல சௌகர்யங்களைக் கொடுக்கிறது.

மனித நேயமற்றவர்கள், சதிக்குணம் கொண்டவர்கள், சூழ்ச்சி மனத்தவர்கள், சுயநலக்காரர்கள், மற்றவர்களை அழுத்தி தான் முன்னேற விரும்புகிறவர்கள் எல்லாம் மிக அழகாக கேடிழைக்கப்படும்.பரிதவிக்கும் மனிதர்களுக்காக, அல்லல்படும் ஜீவன்களுக்காக இரக்கம் சொட்டச் சொட்ட கண்ணீர் உகுத்துக் கதைகள் புனையலாம், மிகுந்த தொழில் திறனோடு.

சுல்ச்சிக்காரனும், சதிகாரனுமான தச்சன் செய்த நாற்காலி பயனுள்ளதாகவே இருக்கும்.ஏன்னெனில் தச்சனின் மனத்திற்கும் நாற்காலிக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் கற்பழிப்பை அன்றாட வேலையாகக் கொண்டவர் செய்யும் ராமாயணக் காலட்சேபம் அசத்தியமாவது போல, வெறும் தொழில் ஆவது போல சூழ்ச்சிக்காரனும் சதிகாரனுமான ஒருவன் எழுத்தும் கைத்திறன் வாய்ந்த எழுத்தில், நிறைந்து வழியும் இரக்கமும் கருணையும் அசத்தியமானது.

ஏன்னெனில் தான் வாழ்வுக்கும் எழுத்துக்கும் பொதுவாகவும் ஒருமையாகவும் ஊற்றுக்கண்ணாகவும் இருக்கவேண்டிய மனவெழுச்சி,இங்கு முரண்படுகிறது. எழுத்துக்கு வரும்போது தான் வாழ்வுண்மைக்கு மாறான ஒரு அசத்திய மனவெழுச்சி தயார் செய்து கொள்ளப்படுகிறது.

அந்தத் தயாரிப்புப் பொருள் தொழிலுக்கு வேண்டிய raw material. அவன் எழுத்து வெறும் தச்சு வேலை.

இருப்பினும் எழுத்துக்கும் சொந்த வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்? எழுத்து நன்றாக இருக்கிறதா இல்லையா பார் என்கிறார்கள்.இது தொழில் திறனுக்கும் சத்திய தரிஸ னமேயாகும் கலைக்கும் வித்தியாசம் தெரியாத குறைதான்.

மனித நேயமும், 'தான்' அழிந்த பார்வையும் அடிப்படையான தர்மங்களும் சத்தியத்தின் பரிமாணங்கள் எனக் காணாது, 'இலக்கியக் குறி' கொண்டவர்களுக்கு மேற்கண்ட தொழில் திறனாளர்கள், இலக்கியாசிரியர்களாகத் தென்படலாம். சத்தியத்தின் இக்குறியிட்ட பரிமாணங்கள் அற்ற மனிதனும் அவன் தொழில் திறனான எழுத்தும் வேறுபடும் பொழுது அவ்வெழுத்து கலையோ.இலக்கியமோ ஆகாது என்பது இன்னும் நம் 'பெருந்தகைகள்' பலருக்குத் தெரியவில்லை. மனிதனும் எழுத்தும்,பார்வையும், அடிப்படை தர்மங்களும் வேருபடுத்தப்படமுடியாத ஒரு முழுமை. அம்முழுமை புரிந்துகொள்ளப்படும் பொழுது,பிரமில்  பானுச்சந்ரென் அவர் கவிதைகள், அவர் அநுபவ உலகம், அவர் எழுத்துக்கள், ஓவியங்கள், சிந்தனை நிலை, இன்னும் மற்றவை எல்லாமே வேறுபடுத்தப்படி முடியாத ஒரு முழுமையாக இருப்பதை  நாம் உணர்ந்துகொள்ள முடியும்.

வெங்கட் சாமிநாதன் 
புதுடில்லி 
ஜனவரி  16 1973

இன்னும் வர இருப்பது பிரமில் பானுசாந்ரெனின் 'கண்ணாடியுளிருந்து கவிதைகள் முப்பத்தெட்டு.


22/01/2014


இன்னும் வரும் 15/01/2014


இன்னும் வரும் 14/01/2014


இன்னும் வரும் 13/01/2014


இன்னும் வரும் 12/01/2014


இன்னும் வரும் 10/01/2014


இன்னும் வரும் 10/01/2014


இன்னும் வரும் 08/01/2014


இன்னும் வரும் 06/01/2014


இன்னும் வரும் 05/01/2014

இன்னும் வரும் 04/01/2014

இன்னும் வரும்...03/01/2014


இன்னும் வரும் 02/01/14

இன்னும் வரும்...01/01/2014

மனம் கெட்டால் மாநிலம் கெடும்




#ஞான மண்டலம்

மனம் கெட்டால் மாநிலம் கெடும்

பிரமாண்டமான இப்பிரபஞ்ச நியமங்களைப் பற்றிய ஒரு சாமானிய அறிவு உணர்வுக்காவது இம் மண்ணுலக மனிதன் ஒரு கணமேனும் தலைவணங்கி நிரற்பாநேயானால் இவ் வையகம் பெருஞ் சுகமடைய வழியுண்டு.
மனிதன் இப்பூவுலகில் வாழ்ந்தும் அதன் உண்மைகளை உள்ளபடி அறியாமல் ஒன்றை இன்னொன்றாகவே கருதி வாழ்வதால் ஏமாற்றங்கள் பல சம்பவிக்கின்றன.
உண்மையைக் கிரகிக்க முடியாத மனம், மாறி மாறி வரும் ஏமாற்றங்களால் தன்னம்பிக்கை இழந்து வாழுந் திறமையுமற்று இறுதியில் மன வெறுப்பால் தரந் தாழ்ந்த குணமுடையதாகவும் மாறி விடுகின்றது.

மனித சுபாவம்:
மனிதருடைய அந்தரங்க உணர்வு தனது சக ஜீவிகளிடம் அன்பும் சமரச பாவனையும் உடையதாயிருந்த போதிலும், சொந்த விருப்பு வேருப்புகளுக்குப் பங்கம் விளையும் பொழுது மனித சுபாவம் கொடிய விலங்குகளைவிட மூர்க்க குணமுடையதாகின்றது.
நேற்று வரையிலும் இனிமையாகவும் நன்மையாகவும் போற்றிப் புகழ்ந்து வந்தவைகள் எல்லாம் கசப்பும் பகைமையும் உடையவைகளாகவே மாறிவிடுகின்றன. பகைமை கொண்ட மனமும் பாகனில்லாத யானையும் ஒன்றே. இங்ஙகனம் சுயநலத்தால் வெறுப்பும் பகைமையும் கொண்டு சீறும் மனம் நல்லகுணங்கள் எல்லாமிழந்து மத யானை போன்று தனக்கும் சமுதாயத்திற்கும் பெருங் கேடுகளை விளைவிக்கின்றது.
இப்படியான கரவுக் குணத்திலிருந்தெழுந்த விளைவுகள் தனி மனிதனிலிருந்து உலக ரீதியில் தோன்றிக் கொண்டிருக்கும் சகல தொல்லைகளுக்கும் மூல காரணம்.

மிக அரிது:
காலம் போகப் போகச் சிறிதேனும் உள்ளக் களிப்புடன் அமைதி நிறைந்த ஆத்மார்த்தமான ஒருவரைக் காண்பதே அரிதாகிவிட்டது.
மனிதன் தன் தன் உணர்வுகளை, செயல்பாடுகளை உன்னிக் கவனிப்பதில்லை. மனம் தோற்றுவிக்கும் விருப்பு வெறுப்புகளின் பலாபலன்களை அலசி ஆராய்வதுமில்லை.
கேடுபிடிக்குரிய யதார்த்த காரணங்கள் வேறெங்கோ இருக்கையில், விருப்பு வெறுப்புகளை மாத்திரம் முன்வைத்துப் பிரச்சனைகளைத் தீர்க்கப் பார்த்தால் மேலும் புதிய பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும்.
மனிதன் மனச் சாட்சியை நேர் கோட்டில் வைத்துக் காரிய காரணங்களைப் பார்த்தறியப் பழக வேண்டும்.

மனித மனம்:
பால் அதிக சத்து நிறைந்த உணவாகினும் கெட்டால் நச்சுத் தன்மையடைகிறது.
மனத்தால் வாழுகின்றவன் மனித்ன். மனிதனுடைய மனம் கெட்டுவிட்டால் இவ்வையகம் முழுவதும் கெடும்.
அடிமனம் விஷக் கலப்பில்லாத அமிர்த துல்லியமானது. பேராசையும் அகங்காரமும் மனமென்ற பொதிக்குள் விஷத்தை ஊற்றிவிடுகின்றது.
அக்கினியின் ஒளியால் கவரப்பட்டு அதிலேயே மாண்டு மடிகின்ற விட்டில் பூச்சி போன்று உலக வாசனையால் தடிப்பேறிய அகங்காரமும் பேராசையும் அதற்குரியவரைச் சுட்டெரிக்கின்றன.


உலகின் நிலை:
கேடுகள் பூமியில் இருந்தும் வானத்தில் இருந்தும் உருக்கொள்வதில்லை. அவைகள் மனித மனத்தில் இருந்து சிருஷ்டிக்கப்படுகின்றன.
பேராசையும் சுயநலமும் கேடுகளை வளர்த்தெடுக்கின்றன.
இவ்விரு நீச குணங்களுடைய பராமரிப்பில் வளர்ந்து வருகின்ற உலகம் சர்வ நாசத்திற்கு ஊர்ந்து செல்லக் கூடும்.
மிலேச்ச குணங்கள் கண்களைத் திசைமாறிப் பார்ப்பதற்குப் பழக்கி வைத்திருக்கின்றபடியால் அது நேரான மார்க்கத்தைப் பார்ப்பதற்குரிய ஒளியை இழந்து வருகின்றது.
ஜனங்களுடைய நல்ல சுபாவந்தான் உலக சேமத்தின் ஆதார பீஜம். இதை ஒவ்வொருவரும் திடமாகவே கருத்தில் ஊன்ற வேண்டும்.
மனிதர் களங்கமற்ற நற்குண சீலராய் வந்தால் கலகமும் கலக்கமும் இருக்க மாட்டா.எதார்த்தம் இவ்வாறிருக்கையில் வெவேறு மார்க்கங்களில் யோக செமங்களைத் தேடப் பார்ப்பது அர்த்தமற்றதாய் விடுகின்றது.
ஆத்மீக சிஷ்டணங்கள் சமய ஆசார அனுஷ்டானங்கள் எல்லாம் மனக் கசடுகளை உருக்கி மனிதர்களை நல்ல சுபாவ சுத்தியுடையவர்களாக்குவத்ர்கு உரிய உபாயங்களாகும்.
மனிதர் சர்வ சக்திகளையும் உபயோகித்து நற்குணங்களை விருத்தி செய்ய வேண்டும்.

உபத்திரவங்கள்:
துர்க்குணம் உடையவர்கள் வாழுகின்ற இடங்களில் பெரும் உபத்திரவங்கள் நிகழ்கின்றன. இதுதான் இன்றைய உலகநிலை.
மென்மேலும் மனக்கசடுகள் வளர்ந்துகொண்டேபோனால் மனிதனுக்கும் விஷக் கிருமிகளுக்கும் அதிக வித்தியாசமில்லாதுவிடும்.
நமது உணர்வு மாற்றத்திற்காக காலம் காத்து நிற்பதில்லை. இனியாவது மனிதர்கள், சமுதாயம் போய்க்கொண்டிருக்கும் பாதையைப் பற்றிச் சரியான அறிவுடையவர்களாகாவிட்டால் எதிர்காலம் அமங்கல கரமான பல சம்பவங்களால் பாதிக்கப்படும்.
மனிதருடைய துர்க்குணங்களே சாசுவதமான சுகத்திற்கும் சுதந்திரமான வளர்ச்சிக்கும் இடையூறாயிருக்கின்றன.
உலக சமுதாயத்தின் இரு பெருங் கண்களாகிய அரச தர்மமும் ஆத்மீக தர்மமும் அந்தரங்க சுத்தியுடன் சரியான இலட்சியத்தில் செயல்பட்டால் உயர்ந்த சீலமுடைய ஒரு மனித சமுதாயத்தை உருவாக்குவது சுலபமானதாகும்.
மனிதர் துர்க்குனங்களிலிருந்து முக்தராகுவதுதான் உலக சமாதானத்திற்கும் மாயக் கலப்பில்லாத சாந்த மதுரமான வாழ்க்கைக்கும் ஏக மார்க்கம்.


Monday 17 November 2014

இல்லறம்




இல்லறம்

ஆகாய விமானம் பூமியில் சிறிது நேரம் ஓடிய பின்புதான் மேலெழுந்து பறக்கின்றது. விமானம் மேலெழுந்து பறக்கின்ற சக்தியும் வேகமும் ஓடுகின்ற ஓட்டத்தில்  இருந்துதான் பெறுகின்றது.

அதே போன்று இப்பூவுலக வாழ்க்கையைக் கிராமமாய் வாழ்ந்து முடிப்பவர்களுக்குத்தான் மேலான ஞான வாழ்க்கைக்குரிய சக்தியும் மனபரிபாகமும் கிடைக்கின்றது.
இல்லற தர்மத்தின் ஒவ்வொரு படியையும் ஒழுங்காக ஏறிச் செல்கின்றவர்களே இறுதியில் ஞானத்திற்கு அருகதையுடையவர்களாயிருப்பார்கள்.

சகல சராசரங்களும் திவ்விய ஞானத்தை நோக்கிப் பருணமித்துக் கொண்டிருக்கின்றன.

பரிணாம வளர்ச்சியின் மேல்நிலைக்கு வந்திருக்கின்ற மனிதன் தனது சம்பூரண வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதற்காகச் சில விஷேச தர்மங்களைக் கடைப்பிடித்து வாழ வேண்டும்.

இல்லற தர்மம்:

அவைகளை அனுசரித்து வாழ்கின்றவர்களே உத்தமமான மனிதர்கள். உத்தமமான மனிதன்தான் ஞானவானாக பரிணமிக்க முடியும்.
மனிதனை மேல்நிலைக்கு உயர்த்துகின்ற தர்மங்களில் இல்லற தர்மமே முதல் தர்மம்.
இந்த ஆரம்ப தர்மத்தைச் செவ்வனே நிறைவேற்றி முடிக்காதவர்கள் எவ்வுலகத்திலிருந்தாலும் சரி, அவர்கள் கர்ம தோஷத்தினால் சதா துன்பப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கு கெதி மோட்சம் என்பதில்லை.
முதல் தர்மமாகிய இல்லற தர்மத்தின் மகிமையையும் பெருமையையும் எடுத்துக் காட்டுவதற்காகவே நமது தெய்வங்களும் அவதார புருஷர்களாகிய இராமரும், கிருஷ்ணரும் மற்றையோரும் இல்லற வாசிகளாவே திகழ்ந்தனர்.
பிரசித்தமான கர்ம யோக மார்க்கம் இல்லற தர்மத்திற்கு ஒரு அழுக்கற்ற கண்ணாடிபோல் பிரகாசிக்கின்றது.
கர்மயோக மார்க்கத்தை அறிந்து அதன் வழி வாழுகின்ற இல்லற தர்மிகள், இந்த விசாலமான சம்சார சாகரத்தை வெகு சாதுரியமாய்க் கடந்து நற்கதியடைவார்கள்.
ஒவ்வொருவருக்கும் தமது சொந்தக் கடமையிலிருந்து தேசக் கடமை வரையிலும் பலவாறான கடமைகள் இருக்கின்றன.
தன் தன் கடமைகளைச் செயற்படுத்தும்போது வரும் இடையூறுகளைத்தான் வாழ்க்கைப் பிரச்சனைகள் என்று சொல்கின்றோம்.
இப்போது மனிதர்கள் பெரும் மூளைசாலிகளாகவே வளர்ந்து வருகின்ற போதிலும், வாழ்க்கைப் பிரச்சனைகளும் எல்லை மீறி வளர்ந்து வருகின்றன. கெட்டிக்காரர்கள் கூட வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு முன் தடுமாறி நிற்பதைக் காணும் பொழுது, இவர்களுடைய அறிவாற்றல்களெல்லாம் வாழ்க்கை மர்மங்களை அறிவதற்குப் பயனற்றவை எனத் தோன்றுகிறன.

காட்டுப்பன்றி

ஒரு காட்டுப்பன்றி தனது குட்டிகளுக்குப் பாலூட்டும் பொழுதெல்லாம், தனது வீரபராக்கிரமன்களைக் குட்டிகளுக்குப் புனைந்து கூறுவது வழக்கம்.
ஒருநாள் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கையில் ஒரு வெடிச் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டவுடனே தாய்ப்பன்றி குட்டிகளையும் விட்டு ஓடிப் போய்விட்டது.
பின்பு பன்றிக் குட்டிகள் தாய்ப் பன்றியைத் தேடிப்பிடித்து தங்களை விட்டோடியதன் காரணத்தை விசாரித்தன.
தாய்ப் பன்றி "என் அருமை மக்களே! வெடிச் சத்தத்திற்கு முன் எனது துணிச்சலெல்லாம் பறந்து விடுகின்றது" என்று கூறியது.
இதே போன்றுதான் வாழ்க்கைப் பிரச்சனைகளுடன் நேர்முகப் பரீட்சை நடத்தும் பொழுதுள்ள மனிதர்களுடைய நிலையும்.
விஞ்ஞானம், அரசியல் போன்ற உலகாயத அறிவுகளெல்லாம் இப் போராட்டத்திற்கு முன் முழந்தாளிடுகின்றன. அவ்விடத்தில் மகா மேதைகளும் தளர்ந்து விடுகின்றனர்.
வாழ்க்கைத் தர்மங்களைச் சரிவரக் கற்றுக்கொள்ளாத காரணத்தால் இன்று தனி மனிதனிலிருந்து உலகம் முழுவதிலும் குழப்பங்களும்,தற்கொலைகளும்,வெட்டுக் குத்துக்களும் நடைபெறுகின்றன.
மனிதன் செயலாற்றும் திறமைசாலியாய் மட்டுமிருந்தால் போதாது. அதிலிருந்தெழும் பிரச்சினைகளைச் சாதூரியமாய்த் தீர்த்துக் கருமமாற்றும் நுண்ணறிவும் ஆற்றலும் பெறவேண்டும்.
இதனைப் பெறாவிட்டால் மேலும் அனர்த்தமும், வெறுப்பும், விரக்தியும்தான் வாழ்க்கையில் கண்ட பலனாயிருக்கும்.

கர்ம ரகசியம்:

கருமமாற்றும் நியதி நியமங்களையறியாமல் வந்த விரக்தியும் வெறுப்பும் அயோத்தியில் வைத்து இராமனுக்கும், குருஷேத்திரத்தில் வைத்து அர்ச்சுனனுக்கும் உண்டாயின.தக்க தருணத்தில் இராமனுக்குத் தனது குலகுருவாகிய வசிடரிடத்திலிருந்தும், அருச்சுனனுக்குக் கிருஷ்ணரிடத்திலிருந்தும் கர்ம ரகசியங்கள் உபதேசமாகக் கிடைத்தன.
வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர்கள் மீண்டும் கர்மத் திறமையுடையவர்களாயினார்கள்.
அதே கர்ம ரகசியங்களை மானிடர் தமது வாழ்க்கையிலும் பகிர்ந்தெடுக்க வேண்டும்.அப்பொழுதுதான் தன் தன் கடமைகளில் குறுக்கிடும் பிரச்சனைகளைத் தீர்ப்பதென்பதற்குரிய நுண்ணறிவும் கர்மத் திறமையும் கிடைக்கும்.
குடும்பச் சண்டையிலிருந்து தேசியக் கலவரங்கள் வரை தோன்றுகின்ற சகல பிரச்சனைகளுக்குரிய காரண காரியங்களும் இராமாயண காவியத்தில் அதி நுட்பமாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன.
மனிதருடைய மனம் செயற்பட்டுக்கொண்டிருக்கும் காலம்வரையில் இராமாயண சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும்.
இராமர் மனித வாழ்க்கைக்கு ஒரு உதாரண புருஷர். இந்த மகா புருஷன் கையாண்ட வாழ்க்கை நெறிகளை ஏனைய மனிதர்களும் வாழ்க்கையில் கையாளுவார்களேயாகில் இம்மண்ணுலகில் தாமரை இலையில் நீர் போல் வாழ்ந்து சாஸ்வதமான சத்தியத்தை இங்கேயே அனுபூதிமயமாக்கலாம்.

.



Monday 10 November 2014

அநாதியான சிவயோக மார்க்கம்



அநாதியான சிவயோக மார்க்கம்

இன்று நடைமுறையிலிருக்கும் நானாவித மதங்களுடைய தத்துவச் சிந்தனைகளும், ஆரியாஷ்டாங்க (பௌத்த தர்மம்) நெறிகள் உட்பட சகல யோக மார்க்கங்களும் அநாதியான சிவயோக மார்க்க விளக்கொளியில் நின்று காலாகாலத்தில் கொளுத்தியெடுத்த தீபச் சுடர்கலாகும். சகல மதங்களுடைய ஆத்மீக தத்துவ தரிசன மார்க்கத்திற்கும், எல்லாவிதமான சந்நியாச (துறவறம்) தர்மத்திற்கும் இந்த சுத்த சிவயோக மார்க்கந்தான் ஆதிமூல காரணமாயிருந்தது.கலியுகாரம்ப காலத்திற்கு முன் சிவயோக நெறிகள் உலகம் முழுவதும் பரவியிருந்ததற்குப் புராண, இதிகாச, சரித்திரச் சான்றுகள் பல இருக்கின்றன. ஜம்புத்தீவம் (ஆசியா), புஷ்கர தீவம் (வட  அமேரிக்கா), குச தீவம் (அவுசஸ்திரேலியா), ,க்ரௌஞ்ச தீவம் (ஆபிரிக்கா) முதலிய பெரிய கண்டங்களிலும் சகஸ்தானம் (பேஷியா),, காந்தார தேசம், (பாபிலோனியா), நீல தேசம் (எகிப்து), பாலஸ்தீனம் முதலிய தூர தேசங்களில் இந்த யோக மார்க்கம் பிரசித்தமான ரீதியில் பரவியிருந்தது.சிவயோக திருக்கூட்டங்கள் ஆங்காங்கு சென்று குகைகளில் தங்கியிருந்து தவயோக மியற்றியவாறு சிவயோக வித்தியாசாலைகளை அமைத்து சிவயோக நெறிகளை ஸ்தல வாசிகளிடம் பிரச்சாரஞ் செய்து வாழ்ந்தனர்.அக்காலத்தில் அநாகரிகமான முறையில் வாழ்ந்திருந்த ஸ்தலவாசிகளைத் தார்மீக நெறியில் வாழ நெறிப்படுத்திக் கொண்டிருந்தனர். சுத்த சைவ போசனிகளா யிருந்த சிவயோகத் துறவிகள் விவசாயம், வைத்தியம், பார்பன்னைகள் முதலியவைகள் மூலமாகச் சமுதாயச் சேவையும் செய்து வந்தார்கள்.

ஆத்மாவின் ஜீவ சங்கற்பத்தால் தோன்றிய நான், எனது என்ற சுயநலத்தைத் துறந்து உலக சுகத்திற்கும் ஆத்மாக்களுடைய விடுதலைக்கும் தங்களை அர்ப்பணித்து வாழ்கின்றவர்களே சந்நியாசிகளாவர். நேபாள தேசத்தில் பிறந்த சதாசிவ குமரேஸ்வரன் என்ற மகா சிவயோகி சிவயோக மார்க்கத்தின் யோக கர்த்தாவாகவும், பரமாச்சாரியருமாயிருந்தவர். காலாந்தரத்தில் ஈசானன் என்று அறியப்பட்டு வந்த ஞான நிஷ்டையுடைய இந்த யோக மார்க்க சிவாச்சாரியார் கலியுகாரம்பத்திற்கு முன் வாழ்ந்தவர். பாசுபதம், சைவம், சாக்தம், ஈசானம், ஐஸ்வரியம், பைரவம், கபாலிகம், வாமதேவம், பதஞ்சலம், ஸ்தவிர பௌத்தம் (தேர புத்தம்) போன்ற பிரத்தியோக மார்க்கங்களுக்கெல்லாம் தாய்மையான ஞானபாதம் (Gnostic), சிராமணிகம் (சமணம்) போன்ற விதேச நாமங்களால் அறியப்படும் சந்நியாச தர்மங்களெல்லாம் சிவயோக சந்நியாச மார்க்கத்திலிருந்து பகிர்ந்தெடுக்கப்பட்டவைகளேயாகும்.

பாரத தேசத்திற்கு வெளியில் வாழ்ந்து வந்த சிவயோகிகளைப் பிற்காலத்தில் மூர்க்க குணம் படைத்த ஹிப்புறு வர்க்கத்தினர் மெல்ல மெல்லக் கொன்றொடுக்கினார்கள். அதனால் தூர தேசங்களில் சிவயோக நெறிகள் மங்கி விட்டன. பாரத நாட்டில் பிரகாசத்திலிருந்த சிவயோக தத்துவ சாஸ்த்திரங்கள் கலியுகம் ஆரம்பித்த சிறிது காலத்திற்குப் பின் ஏற்பட்ட பிரளயத்தால் முக்கால் பங்கும் அழிந்துவிட்டது. பாரத யுத்தம் கி.மூ.3௦80இல் நடைபெற்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய தேகவியோகம் கி.மூ.3067இல் நிகழ்ந்தது. பகவானுடைய தேகவியோகத்திற்குப் பின்னர்தான் முன் குறிப்பிட்ட பிரளயம் நிகழ்ந்தது. அதற்குப்பின் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்த சிவயோக நெறிச் சாஸ்த்திரங்களை நகுலீசமுனி போன்ற சில மகா யோகிகள் நர்மதாநதிக் கரையோரங்களிலும், விந்திய மழைப் பிரதேசங்களிலும் பிரசாரஞ் செய்து புனர்ஸ்தாபனம் செய்தார்கள்.

புத்தாவதாரத்திற்குப் பின் முற்றிலும் சைவமாயிருந்த சிவயோக நெறிகள் சில மாற்றங்களுடன் புனரமைப்புச் செய்யப்பட்டு ஆரியாஷ்ட்டாங்க யோகமென்ற (பௌத்த தர்ம யோகம்) ஒரு தனி பௌத்த யோக மார்க்கம் உருவாக்கப்பட்டது. சிவயோக மார்க்க நெறிகள் பரவியிருந்த தேசங்களிலெல்லாம் ஆரியாஷ்ட்டாங்க யோகிகளாயிருந்த புத்த பிக்குகள் சென்று அதிதீவிரமாகப் பிரசாரம் செய்தமையால் சிவயோக மார்க்க நெறிகள் பலவீனமடையத் தொடங்கின. எனினும் இன்று உலகம் முழுவதும் பல ரூபத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் யோக மார்க்கங்களெல்லாம் ஆதிச் சிவயோக மார்க்க அக்கினிச் சுவாலையினின்றெழுந்த பொறிகளாகும். இந்துக்களுடைய தத்துவ தரிசனத்தாலறியப்பட்ட சிவயோக மார்க்கமும் அதிலிருந்து உடலெடுத்த ஆரியஷ்ட்டாங்க யோகமும் சனாதனா தர்மம் என்ற ஒரு தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள்.

யோகம் என்றால் என்ன? அது மனித சமுதாயத்திற்கு எவ்வகையில் பயன்படுகின்றது? நமது மனம் இறைவனிடத்தில் இரண்டறக் கலந்திருந்தால் அது யோகம் எனப்படும். பிறவித் துன்பங்களுக்குக் காரணமாயிருக்கின்ற சித்த விருத்திகளைத் தடைசெய்வதால் ஜீவனுடைய தனித்துவம் நீங்கி ஜீவன் சிவத்தோடு ஐக்கியப்படுகின்றது. சீவ உபாசனையால் இந்த ஐக்கிய நிலை அடைவது சிவயோகம் எனப்படும்.

சித்த விருத்திகளைத் தடைசெய்யாமல் மனம் யோக நிலை அடைகின்றது. மனம் இடையறாது உருவாக்கிக் கொண்டிருக்கும் எண்ணரிய எண்ண அலைகளைச் சித்த விருத்திகள் ஒழிந்த மனதில், தெளிந்த நீரில் பிரகாசிக்கும் சந்திர பிம்பம் போன்று இறையொளி நன்றாக ஒளிர்கின்றது. இத்தகைய பெரும் பேறு பெற்ற மனம் வசந்த கால சுகத்தை நுகரும் பூங்குயில் போன்று புலநுகர்ச்சிகளை நீக்கிச் சதா இறையின்பத்தில் லயத்திருக்கும். காலகதியில் சதாசிவமாகிய இறைவனில் இரண்டறக் கலந்து அதுவாகவே மாறிவிடும். இதுதான் ஜீவாத்மாக்களுடைய பரம லட்சியமாயிருக்கின்ற சிவயோக பதம் அல்லது ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியம்.

பிறவித் துன்பங்களைத் தீர்த்து சாசுவதமான சுகத்தைத் தரும் இந்த யோக உணர்வு இயற்கையாகவே ஒவ்வொரு ஜீவனிலும் மறைமுகமாக மறைந்திருகின்றது. ஒருவர் உலகியலின்பங்களையும் வேண்டும் வண்ணம் அனுபவித்து பின்னும் இன்னும் ஏதோ ஒன்றை அனுபவிக்க வேண்டியிருப்பதாகவுள்ள ஆவல் அவரிடம் ஒன்றிருப்பதாக உணர்கின்றார். எனினும் அது இன்னதென்பதை மனக் குழப்பத்தால் அறிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு மனிதர்களுடைய இருதயக் கருவறையிலும் மறைந்திருந்து தூண்டிக் கொண்டிருக்கும் இந்த வாஞ்சைதான் இறை இன்பத்துக்குரிய அந்தர்முக தாகம்.

நெல்லையும் பதரையும் வேறு பிரித்தறிய முடியாத விவசாயிகள் போன்று மனிதர்கள் மாயா வசத்தால் பலத்தையும் எடுப்பதற்கும் பிடிப்பதற்குமாய் ஓடியோடி முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அயராமல் முயற்சிகள் பலசெய்தும் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை, வாய்க்கெட்டியது வயிற்றுக்கெட்டவில்லை என்றநிலையில் காலம் கழிந்து கொண்டிருக்கிறது. நீரென்று கருதி கானல் நீருக்குப் பின்னால் திரிந்து மடியும் மான் கூட்டங்களைப் போன்று மேலும் மேலும் துயரங்களைத் தரும் அற்ப சுகத்திற்குப் பின்னால் சென்று வரக்தியுடனும், அதிருப்தியுடனும் ஜீவன் பிரிகின்றது.

எண்ணரிய பரிணாம வளர்ச்சிக்குப் பின் மிக அபூர்வமாகக் கிடைத்த புனிதமான மனித ஜென்மம் இவ்வாறு வீணாகிக்கொண்டிருகின்றது. ஆகையால் சாசுவதமான சுகத்தைத் தரும் ஜீவித தர்மங்களை அனுசரித்து வாழ்ந்து, ஜீவித லட்சியத்தை அநுபூதி மயமாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். முக்கரணங்களைச் (மனம், வாக்கு, காயம்) சித்திகரித்துப் பலப்படுத்தக் கூடியதும் அனைவராலும் அப்பியாசிக்கக் கூடியதுமாகிய சில பரிசீலனங்கள் (இயமம், நியமம், ஆசனம்)போன்றவை யோக மார்க்கங்களில் இருக்கின்றன. இவைகளையாவது சித்த சுத்தியுடன் நித்தியமும் பழகி வந்தால் சிறந்த மனச் சுகத்துடனாவது வாழலாம். இத்தகைய ஆன்மீகப் பரிசீலனங்களுக்கு நமது சிந்தையைச் செலுத்தத் தவறினால் எதிர்கால சமுதாயம் விலங்குணர்வுகளை விட  மோசமடையும்.