Monday 26 January 2015

சிவாயநம






சிவாய நம என்று சிந்தித் திருப்போர்க்கு 
அபாயம் ஒருநாளும் இல்லை - உபாயம்  
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம் 
விதியே மதியாய் விடும்.

Those who stay contemplating as "shivAya namaH",
for them there is never any threat.
This strategy is the wise one.
All others would be subjected to the fate.









Thursday 22 January 2015

ஞான மண்டலம் இந்து





#ஞான மண்டலம்



இந்து 


பழமையிலும் புதுமையிலும் புகழ் பூத்து நிற்கும் இந்து என்ற நிறை வசனம் பூர்வீக காலத்திலிருந்தே உலகப் பேரறிஞர்களை வெகுவாகக் கவர்ந்து வந்திருக்கின்றது. அறிவு மண்டலத்தில் பலவாறான விமர்சனங்களுக்கும் கேந்திர பிந்துவாயிருக்கின்ற இச்சொல் அநேக கால கட்டங்களில் பல வர்க்கங்கள் மதங்கள் நாஸ்திகம் கடும் தாக்கங்களை ஏற்க வேண்டியிருந்தது. அத்தகைய தாக்கங்களுக்கு இடையிலும் சமுத்திர அலைகள் மத்தியில் அசைவற்று நிற்கும் கருங்கல் பாறை போன்று இன்றும் உலக வியாபார ரீதியில் அது தலை நிமிர்ந்து நிற்கின்றது. தோன்றியும் தோன்றாமலும் இருக்கின்ற சகல தர்மங்களையும் சகல சாஸ்திரங்களையும் உள்ளடக்கி நிற்கும் இந்து என்ற பதத்திற்கு சரியான அர்த்தமென்ன? அது யாரை அல்லது எதைக் குறிக்கின்றது.

" ஹீனம் தூ-ஷய தீதி ஹிந்து "அதர்மங்களை ஒழிக்கின்றவன் இந்து. " ஹிம் ஸாம்தமய நீதி ஹிந்து " ஹிம்சாபரமாய சகல கர்மங்களையும் நீக்கி ஜீவிகளை ஏகாத்ம பாவனையுடன் பார்க்கிறவன் ஹிந்து. ஹிம் ஸந்தி தர்மோ நிதி ஹிம்-ஸா " சனாதன தர்மங்களுக்குக் கேடு விளைவிப்பவரை ஒடுக்கி விடுகின்றவன் ஹிந்து. இந்து என்ற சொல்லுக்கு இந்துமத சாஸ்திரங்களில் இப்படிப்பட்ட அர்த்தங்களைக் காணக்கூடிய தாயிருந்தாலும் அவை யொன்றும் அதன் பொருளைச் சம்பூரணப் படுத்துவதா யில்லை. காரணம் அதன் உட்பொருள் வசனாதீதமானது. ஆத்மானுபூதியால் மாத்திரம் உணரக் கூடியது. அது மட்டுமல்ல இந்து என்ற பதப் பிரோயகத்தின் ஆரம்ப காலம் இதுவரையில் அனுமான நிர்ணயமாய் இருப்பதைத் தவிர கால நிர்ணயம் நிச்சயிக்கப் படவில்லை. நீட காலமாக பௌதீக ஆத்மீக அனுபங்களிற் கூடி வளர்ந்து வந்த இந்து மதம் அகண்ட பிரபஞ்சசாராம்சங்களைத் தன்னகத்து அனுபூதி மயமாக்கிய ஒரு சர்வக்ஞான கலசம். இதுவரை காலமும் தோன்றியிருக்கின்ற சகல ஆத்மீக பௌதீக ஒளிகளும், சகல மதங்களுடைய அடிப்படைச் சித்தாந்தங்களும் இந்துக்களுடைய வேதாந்த தரிசன சாஸ்திரம் என்ற மணி விளக்கிலிருந்து கொளுத்தியெடுத்த சுடர்கள் என்பது வெளிப்படையான ஒரு சாத்தியமாகும். வேதாந்த தரிசனங்களிற் பரவலாகக் காணும் பொருளாதார சமத்துவ சித்தாத்தங்களுடைய ஒரு பிராகிருத பாவம் மாத்திரந்தான் மாக்ஸீச தத்துவம் என்பதைக்கூட நீங்கள் அரியும் பொழுது வியக்கக்கூடும். வேதாந்த தரிசன சாஸ்திரங்களைத் தவிர மற்றதொரு சாஸ்திரங்களும் சம்பூரணமானவையல்ல.வேதாந்த தரிசனங்களில் காணும் அந்தர்முக சத்தியங்களை ஏற்காத நவீன சாஸ்திரங்களும் பூரணப்படுவ தில்லை.

சனாதன தர்மத்தை அனுசரித்து வாழ்கின்றவர்கள் எல்லாம் இந்துக்கள் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் பரம்பரை பரம்பரையாகவே இருந்து வருகின்றது. முற்றிலும் யதார்த்தமாய் இருக்கின்ற இக்கருத்தில் ஹிந்துக்கள் முழுத் திருப்தி உடையவர்களாய் இருக்கின்றனர். ஆகையால் சனாதன தர்மந்தான் இந்து அல்லது இந்துமதம். சனாதனம் அல்லது என்றும் இருக்கின்ற தர்மம் எபது இந்து சமுதாயத்தின் ஜீவித நிஷ்டயாய் இருக்கின்ற படியால்தான் இன்றுவரை யாதொரு உந்தலும் இல்லாமல் இந்து கால வெள்ளத்தில் ஒழுகிப் போகாமல் இன்றும் மிதந்து நிற்கின்றது. சனாதன தர்மத்தின் மூல சக்திகள் உயிர்களுடைய நிலை பேற்றிற்கும், மாணவ சமுதாயத்தினுடைய சேம நலத்திற்கும் அவ்வப்போது விலை மதிக்க முடியாத பலவற்றையும் ஈன்று கொடுத்திருக்கின்றது. இவைகள் உலக அரங்கில் இந்துக்களுக்கு நிலையானதொரு அந்தஸ்த்தை வழங்கியிருக்கின்றன. நாம் நமுடைய தர்மத்தைப் பற்றியும் கலை கலாச்சாரங்ககளைப் பற்றியும் பெருமை அடைகின்றோம். எனினும் கண்மூடித் தனமாகப் பழையதெல்லாம் நல்லவை என்றும், புதியவை எல்லாந் தீயவை என்றும் கருதுவது சரியில்லை. இந்த இரண்டு வழிகளிலிருந்தும் விலகி மூன்றாவது ஒரு வழியிற் சிந்தனையைச் செலுத்த வேண்டும். பழையதிலும் புதியதிலும் நல்லவற்றை மாத்திரம் தேர்ந்தெடுத்து இரண்டும் கலந்ததொரு புதிய வெளிச்சத்தில் நடந்து செல்ல வேண்டும்.

மாற்றமும் வளர்ச்சியும் இயற்கை நியதிகள் என்பதை அறிந்து செயலாற்றாவிட்டால் கால சக்கரம் நம்மை ஒரு மூலையில் உருட்டிவிடும். இந்து மதத்தின் சகல துறைகளும் காலா காலத்தில் படிப்படியாக மாற்றி அமைக்கப்பட்டு வந்ததுதான் இன்று காணும் உயர்நிலை. ஆகையால் அடிப்படையில் மாற்றமில்லாமல் தேவையான மாற்றங்களைச் செய்வதற்குத் தயங்கக் கூடாது. இதற்கேற்ற விசால மனத்தையும் அறிவையும் ஆற்றலையும் இந்துக்கள் பெற்றெடுக்க வேண்டும்.

சரித்திர காலந் தொடக்கம் விதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் இந்துக்கள் பல கோணத்தில் இருந்தும் தாக்கப்பட்டு வருகின்றனர். எனினும் இந்துக்களுடைய தாராள மனமும் பொறுமையும், விரோதிகளிடத்தில் இணங்கி வாழும் ஒருமைப் பாட்டுணர்வும்,அவர்களை மென்மேலும் மேன்மைப் படுத்தி இருக்கின்றது. நமது சனாதன தர்மத்தின் அத்திவாரம் மிக ஆழத்தில் பதிக்கப் பட்டிருப்பதால் இதுவரை ஏதொரு சக்திக்கும் அதைச் சிதைக்கவோ, நொருக்கவோ முடியவில்லை. எனினும் இடைக் காலத்தில் எமக்கிடையே வளர்ந்து வந்த சில பலவீனங்கள் சமுதாய ஐக்கியத்தில் ஆழமான சில பிளவுகளை ஏற்படுத்தி விட்டிருக்கின்றது. பிரபஞ்சத்தில் பரஸ்பர விரோதங்கள் என்று தோன்றக் கூடிய பலவற்றையும் இணைத்து வாழத் தகமையுடைய இந்துக்கள் தங்களுடைய சமுதாய முரண் பாடுகளைச் சமப் படுத்துவதில் தோல்வி கண்டிருக்கின்றனர்.

வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காணும் ஆத்மீக ரகசியங்களை உலகத்திற் கெடுத்தோதிய இந்துக்கள் இதில் தோல்வி கண்டிருப்பதன் காரணம் என்ன? இந்தத் தோல்வியின் யதார்த்த ரூபத்தை ஒரு ஆத்ம பரிசோதனை மூலம் கண்டறிவதால் மாத்திரந்தான் இந்தப் பிரச்சனையில் இருந்து விமோசனம் அடையலாம். இந்து சமாஜத்தில் இன்று காணும் சீர் கேடுகளுக்கு அந்நியரை குற்றஞ் சாட்டுவது நமது சுபாவமாய் இருந்து வருகின்றது. இதில் சில உண்மைகள் இருந்த போதிலும் தம்மிடம் இருக்கின்ற ஏதோ பலவீனந்தான் அவர்களுக்கு அத்தகைய தொரு சந்தர்ப்பம் அளித்திருக்கின்றது என்பதை அவதானமாகச் சிந்தித்து அரிய வேண்டியிருக்கின்றது.

குலம், கோத்திரம், ஜாதி, தீண்டாமை, மதத் தத்துவக் கொள்கைகள், குரு பராம்பரிய பேதங்கள், வழிபாட்டு முறைகள் போன்றவைகளில் இருந்தெழுந்த பிணக்கும் போராட்டமுந்தான் இந்துக்களுடைய ஐக்கியத்தைச் சீர்குலைத்து வருகின்றது.இந்தப் பலவீங்களை அன்னியர் தங்கள் சுயநலத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை. நமது ஐக்கிய சக்தியைப் பிளவு படுத்திக் கொண்டிருக்கும் உயர்வு தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் அறவே ஒழிக்க வேண்டும். இந்து ஆலயங்கள் இந்து சமுதாயத்தில் நடுநாடியாகவே இருந்து வருகின்றன. இதன் கற்பகக் கிரகத்தில் இருந்து ஒழுகி வரும் பிராண சக்தி சமுதாயத்தின் நாடித் துடிப்பைச் சீராக்குகிறது. சேத்திர சைதன்னியம் இருந்திருக்கா விட்டால் இந்து மதம் வரண்ட பாலை வனம் போன்று சூனிய நிலையை அடைந்திருக்கும்.

வர்ண பேதங்களும், முரண்பாடுகளும், சம்பிரதாய பேதங்களும் உடைய இந்துக்கள் எல்லாம் ஆலயத்தின் ஏக சைதன்ய சக்தியில் ஐக்கியப் படுகின்றனர். வெவ்வேறு திசையில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்துக்களுடைய நாடி நரம்புகளை ஒன்றிணைத்துச் சமுதாயத்தின் இரத்தா சயங்களை ஆலயங்கள் சுத்திகரித்துக் கொண்டிருக்கின் றன. இத்தகைய மகா மகிமை பொருந்திய ஆலய கர்மங்களும், நிர்வாக முறைகளும் எவ்வளவு தூரம் இலட்சிய சுத்தியோடும், ஆத்மார்த்தத்தோடும் நடை பெருகின்றதென்பது இன்று ஒரு விமரிசன விஷயமா யிருக்கின்றது. ஆலயங்ககளில் பிராண நாடியைப் பாதிக்கக் கூடிய இவ்விஷயத்தில் கண்மூடி மௌனிகளாய் இருப்பதும், அல்லது தெளிவும் சக்தியும் இல்லாத அபிப்பிராயங்களை வைத்துக் கொண்டிருப்பதும் எதிர்காலத் தலைமுறைகள் அவிசுவாசிகளாக மாறுவதற்குக் காரணமாயிருக்கின்றது. ஆலயமென்ற நடு நாடியின் இருமருங்கிலும் இயங்கிக் கொண்டிருக்கும் இடகலை பிங்கலை போன்ற பெரும் சுவாசக் கலைகளாகிய ஆலய குருமார்களும் தர்ம கர்த்தாக்க்களும் தான் ஆலயச் சுடரோளியைத் தூண்டி விடும் தூண்டு கோல்கள்.

இவர்கள் போதிய இலட்சிய சுத்தியோடும் ஆத்மார்த்தத்தோடும் ஈஸ்வரார்ப்பன புத்தியோடும் ஆலய கைங்கரியங்களை நிர்வகிக்கத் தவறும் பட்சத்தில் சேத்திரங்கள் விரைவில் இரவுச் சந்தைகளாக மாறிவிடும். இதில் பரவலாகக் காணப்படும் சீர்கேடுகளைத் தகுந்த முறையில் திருத்தி அமைப்பதற்கு ஆலய பக்தர்கள் சிரத்தை எடுக்க வேண்டும். தவறினால் வளர்ந்து வரும் நமது பசுமை நிறைந்த இளம் உள்ளங்களில் மதத்தைப் பற்றிய தப்பபிப்பிராயங்கள் ஏற்பட்டு சூனிய வாதிகளாக மாறிவிடுவர்.பக்தர்களுடைய பக்தி விஸ்வாசங்களைத் தவறான வழியில் சுரண்டி எடுத்து ஆலயங்களை வளர்க்கப் பார்ப்பது ஆலயங்களுக்கும் மதத்துக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்துவதாயிருக்கும். இந்து மதத்தை எதிர்நோக்கி இருக்கும் இன்னொரு அபாயமும் இருக்கின்றது.
#ஞான மண்டலம்

இந்து

பெரும்பாலான இந்துக்கள் கிராமப் புறங்களில் தான் வாழ்கின்றனர். அவர்கள் அஞ்ஞானத்தாலும் வறுமையாலும் மத ரீதியான ஐக்கியத்தையிழந்து கூறு கூறாகப் பிரிந்து கொண்டிருக்கின்றனர். உதிர்ந்து விழும் இத் துண்டுகளைக் கொத்தித் தின்னக் கூடிய கழுகுகள் ஏற்கனவே ஆங்காங்கு கூடு கட்டி வாழ்ந்து வருவதையும் அறிந்திருக்க வேண்டும். நகர மத்தியில் வசதியான நாற்காலிகளில் மாத்திரம் கொண்டிருக்கும் நமது மத தத்துவ சம்ஹிதைகளும், புகழ் பெற்ற மத இயக்கங்களும் ஆதரவற்று ஒளியிழந்து வரும் கிராம இந்துக்கள் மத்தியில் ஒரு கை விளக்கையாவது கொளுத்தி வைக்க முயற்சி செய்தால் இருளடைந்த அவர்களுடைய வாழ்விலும் ஒரு விடி வெள்ளி உதிக்கலாமல்லவா? தனி நபர்களை மாத்திரம் மோட்சத்திற்கனுப்பிவைக்க முயற்சிக்கின்றவர்கள் சமுதாய மோட்சத்திலும் ஒரு சிறு கண் பார்வை செலுத்தினால் சமுதாயம் மோட்சத்திற்கு அருகதை உடையதாய்த் தீரும். சுதந்திரத்திற்குப் பின்னர் இந்துக்களுடைய எண்ணிக்கை கணிசமான அளவிற்குக் குறைந்திருக்கிறது என்பது ஆழமாகச் சிந்திக்க வேண்டிய விஷயம். பல தலை முறைகளாய் எங்களை நோக்கி ஒழுகி வந்த விதேசச் சிந்தைனைகளும் பழக்க வழக்கங்களும் இந்துக்களுடைய பாரம்பரியச சிறப்புகளைச் சாரமாய்ப் பாதித்திருக்கின்றன. இன்னும் நாம் அதே ஒழுங்கில்தான் ஒழுகிக் கொண்டிருக்கின்றோம். இந்த அடிமைத்துவ நிலை எங்களுடைய சுய அறிவிலும் சிந்தனையிலும் முரண்பாடுகளையும் மயக்கத்தையும் உண்டாக்கி இருக்கின்றதும் அல்லாமல் சுதந்திரமாகிய மூல வேரையும் அறுத்து விட்டிருக்கின்றது. இனியாவது சொந்தக் கால்களில் நிற்பதற்கும், சுயமாகச் சிந்திப்பதற்கும், செயலாற்றுவதற்கும் முயற்சிக்க வேண்டும். இந்து என்று சொல்வதற்கு வெட்கப்படும் சில பகுத்தறிவாளர்கள் காலம் மாறுவதை அறிவதில்லை. இந்துக்கள் உடையதாய் இருக்கின்ற எதையும் நிந்தனைக் கண்கொண்டு பார்க்கின்ற இந்த நவீன பகுத்தறிவாளர்கள் விஞ்ஞான மண்டலத்தில் நிமிஷம் தோறும் மாறிக் கொண்டிருக்கும் மாற்றங்களை அறியத் தவறி விடுகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஏட்டுப் பிரதிகளாய் இருக்கின்ற இவர்கள் இருபதாம் நூற்றாண்டின் நவீன விஞ்ஞான கூட்டங்களில் இந்துமத வேதாந்த தரிசனங்களைச சாஸ்திர ரீதியாக நிரூபித்து வருகின்றனர் என்பதை அறிய வேண்டும். இங்ஙகனம் நவீன விஞ்ஞான சித்தாத்தங்கள் வேதாந்த தரிசனங்களை நோக்கிப் பருணமித்து வருகின்ற இவ்வேளையில் விஞ்ஞான அறிவில் அரிச்சுவடிப் பாடத்திளிருக்கின்ற நம்மவர்களில் பலர் மத யதார்த்தங்களில் கண்மூடிகளாயிருப்பது முழு முட்டாள்தனமாகும்.

மத ஞானமில்லாத பௌதீக சாஸ்திரமும், பௌதீக சாஸ்திரமில்லாத மத ஞானமும் மனித சமுதாயத்தின் சரியான வளர்ச்சிக்கு உதவுவதாய் இருப்பதில்லை. ஆகையால் எதிர்கால உலகம் ஞான விஞ்ஞான யோகத்திலிருந்து உடலெடுத்த பழமையும் புதுமையுங் கலந்த ஒரு நவீன உலகமாயிருக்கும். இதன் அறிகுறியாக பௌத்த சுபீட்சம் நிறைந்த மேல் நாடுகளிலிருந்து தங்களுடைய கலை கலாச்சாரங்களைப் புறக்கணித்து இந்து ஆத்மீகக் குருமார்களை நாடி வந்து குவியும் மேல் நாட்டு இளைஞர்களைப் பார்த்தால் இதன் தாற்பரியங்களை நீங்கள் ஊகித்தறியலாம். வளர்ந்து வரும் இளம் வயதினர்கள் தங்களுடைய ஜீவித மூலகங்களை நோக்கி இறங்கிச் செல்வதற்கு இவ்வளவும் போதுமானது.

இனி எங்களுடைய வேதாந்த தரிசனங்களின் சாரம் என்ன? பரமாத்மா என்பது ஏகமான, நிலையான ஒரு சத்திய வஸ்த்து. அது சர்வ சராசரங்களினுடைய இருதய குகையில் இருக்கின்றது. உள்ளேயிருப்பது போல் வெளியிலும் இருக்கின்றது. அது சலிக்கின்றது. சலனமில்லாமலும் இருக்கின்றது. எக்காரணம் கொண்டும் பிளவு படாத ஏக சக்தி எனினும் புலன்களுடைய பௌதீகா னுபவங்களில் அது பலவாறாகத் தோற்றப்படுகின்றது. இதுதான் பிரபஞ்சத்தின் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் இவைகளுக்கு மூல காரணமாய் இருக்கின்ற பரமாத்மா, இவ்வாறு பலவாறாக தோற்றப்படுகின்ற துவைத்த பாவம். ருசிக்கும் சாமியாப் பாட்டுக்கும் தக்கபடி படிப்படியாக வளர்ந்து அத்வைதம் என்ற ஏகாத்ம வாதத்தில் முடிகின்றது. இதுதான் வேதாந்த தரிசனம் தரும் ஏகாத்ம வாத சித்தாந்தம். இது முழு மனித வர்க்கத்தை மாத்திரமல்ல, சகல ஜீவ ராசிகளையும் ஒரு குடும்பமாக இணைத்து வாழ வைப்பதற்குரிய அற்புத ஆற்றலுடையது. அமங்கலகரமானதொரு முகூர்த்தத்தை நோக்கிச் சென்று  கொண்டிருக்கும் இவ்வுலகத்தைப் பாதுகாப்பதற்குரிய சக்தி, இந்த ஏகாத்ம வாத சித்தாந்தத்தைத் தவிர வேறெதற்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த லட்சியத்தின் கீழ் ஆத்மீகத் தலைவர்களும் மதாசாரியர்களும், மத ஸ்தாபனங்களும் எல்லாம் ஒன்று திரண்டு செயலாற்ற வேண்டும்.

இது விஷயத்தில் ஜனங்களை ஒன்று திரட்டி அறிவுடைய வர்களாக்கித் தீர்க்கும் பொழுது சமுதாயத்தில் உடைந்து இருக்கும் பிணைப்புகள் எல்லாம் இணைந்து சரியாகி விடும். இந்து சமுதாயம் ஒருமுகப் பட்ட பெரும் சக்தியா கவே வடிவெடுக்கும். பிராமணர்களுக்கு இருக்க வேண்டிய பிரம்ம சிந்தனையும், சத்திரியர்களுக்கு இருக்க வேண்டிய வீரமும், வணிகர்களுக்கு இருக்க வேண்டிய வர்த்தக விவசாயத் திறமையும், சூத்திரர்களுக்கு இருக்க வேண்டிய தொண்டாற்றும் விசால மனமும் எவரொருவரிடத்தில் இருக்கின்றதோ அவர்தான் உத்தமமான இந்து.

சுருங்கக் கூறின் இந்து மதத்தின் பல துறைகளிலும் நிலவி வருகின்ற பாகு பாடுகளும், ஆலய கைங்கரியங்களிலும் நிர்வாகத் துறைகளிலும் வளர்ந்து வருகின்ற சீர்கேடுகளும், கிராமிய இந்துக்களுடைய பரிதாப கரமான நிலையம், மத அறிவின்மையால் இளம் வயதினர்களுக்கு இடையில் தோன்றிக் கொண்டிருக்கும் தப்பபிப்பிராயங்களும், சம்பூரணம் அடையாத விஞ்ஞான அரிவாள் வரும் சூனிய வாதம் போன்றவைக்கு முடிவு காணும் வண்ணம் சக்தி வாய்ந்த ஒரு மார்க்கத்தைக் கண்டறிய வேண்டி இருக்கின்றது. இதுதான் இன்றைய அவசரமான தேவை யும் நோக்கமும். இந்து என்ற அபிமானமும் மனப் பூர்வமான இருதயமும் இருக்கு மாகில் இதற்குரிய சக்தி உங்களிடமே இருக்கின்றது.
உங்களுடைய இருதய நாடிகளைப் பூர்வீக இருஷிகளின் இருதயத்துடன் இணைக்குக. இவர்கள் விட்டுச் சென்ற ஆத்மீகச் சுவடிகளை நன்றாக்க் கற்றுணர்ந்து அதில் இரண்டறக் கலந்து விடுங்கள். உங்கள் கலை கலாச்சாரத்துக்கு முத்து மணிகளாக இருப்பவைகளைப் பேரபிமானத்துடன் தயங்காமல் ஏற்றுக் கொள்ளும் பொழுது உங்களுடைய சூக்கும சரீரத்தில் ஒரு சுதந்திரமான யதார்த்த இந்து உருவாகிறான். இந்தப் பரிபூரண சுதந்திரந்தான் ஒரு இந்துவின் பரம இலட்சியம். இதில்தான் உங்களுடைய ஐக்கியமும் திருப்தியும் சாஸ்வதமான இன்பமும் தங்கி இருக்கின்றது. இதை உணர்க. அனுபவிக்குக. வருங்கால உலகம் தனது ஆத்மாவின் குளிர்மைக்காக உங்களை நோக்கித்தான் வரப் போகின்றது. அதற்கிடையில் உங்கள் கொதிவலிகளைத் தீர்த்து, ஒரு யதார்த்த இந்துவாகத் தலை நிமிர்ந்து நில்லுங்கள்.

Monday 19 January 2015

ஞான மண்டலம் "பலாபலன்களில் பற்றுதல் வையாதே"





"பலாபலன்களில் பற்றுதல் வையாதே"


கர்ம பலனைத் துறப்பதால் வரும் பேரானந்தப் பெரும் பேற்றுக்கு நம்மை ஆளாக்கித் தீர்ப்பதற்கு கர்ம ரகசியத்தைப் பற்றி அறிவது அவசியமாகும். கர்ம பலன் சாராமல் கர்மம் செய்யும் அதி நுட்பமான கர்ம நியமங்களை தத்துவார்த்த ரீதியாக வரித்துக் கூறும் ஓர் அரிய நூல் பகவத் கீதை. பகவத் பிரசாதமாகக் கிடைத்த அந்த அபூர்வ நூலின் சாராம்சம் கர்மம் செய் பலாபலன்களில் பற்றுதல் வையாதே. கர்ம பலனைத் துறந்து சமசித்தனாய் இருப்பவனுடைய கடும் வினைகள் தீர்ந்து நித்தியா சுகம் கிடைக்கும். இறப்பு பிறப்பொழிந்து இறை சம்பந்தமும் கிடைக்கும். ஜீவன் அடைய வேண்டிய இறுதி நிலையும் இதுதான். கீதா தர்மங்கள் வாழ்க்கைத் தர்மங்களைப் புறக்கணிப்பதில்லை. கர்மத்தில் விரக்தி மனோபாவமில்லாமல் சுய தர்மத்தை முயாகச் செய்வதற்குரிய ஊக்கம் அளிக்கின்றது. அங்ஙனம் சுயதர்மத்தை  முறைதவறாமல் செய்கின்றவர்களுக்கு நாளடைவில் சுயமாகவே ஞானம் சித்திக்கும் என்பது கீதையின் கருத்து. வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்க்கத் தெரியாமல் மதி மயங்கி விரக்த்தியடைந்திருப்பவர் களுக்கு சுய நம்பிக்கையும் உற்சாகமும் தாராளமாகக் கீதை அள்ளி வழங்குகின்றது. கர்மத்தத் துறப்பதும் பலன் கருதாமல் கர்மமாற்றுவதும் எவராலும் செய்ய முடியாத காரியம். இவ் விஷயத்தில் யோகியும் போகியும் ஒரே சார்புடையவர்கள். ஊண், உறக்கம், தொழில், வழிபாடு, தவ யோகமெல்லாம் பலன் கருதிச் செய்பவை. பயன் கருதாமல் கருமமாற்ற முடியாதென்றிருக்கையில் கர்ம பலனைத் துறப்பதென்பதின் அர்த்தமென்ன? பயன் எதுவாயினும் சரி அதில் விருப்பு வெறுப்பு இல்லாமல் சமசித்தனாய் இருப்பதென்பது அதன் உட்பொருள். இதை நடைமுறைப் படுத்துவது மிகக் கடினமான காரியமாகிலும் சிரமமான பயிற்சி, உறுதியான மனம், திருவருள் துணை கொண்டு சாதிக்கலாமென்று கீதை வலியுறுத்திக் கூறுகின்றது. உண்மைப் பொருளாகிய பகவான் கீதோபதேசம் மூலமாக நமக்கு உறுதிமொழி அளிக்கும் பொழுது நாம் அதில் நம்பிக்கை இல்லாமல் இருப்பதற் குரிய காரணங்களில்லை. வினைப் பயனை விட செயலின் பலாபலனைப் பற்றி மனம் உருவாக்கிக் கொண்டிருக்கும் "ப்ரதீகரணம்" அதிக துன்பத்தை விளைவிக்கக் கூடியது. கர்ம பலனைப் பற்றி எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணிக் கொண்டிருக்கும் மனோ வாசனை "ப்ரதீகரணம்" எனப்படும். மனம் உருவாகிக் கொண்டிருக்கும் "ப்ரதீகரண" அலைகள் கிரியா சக்தியைப் பலஹீனப்படுத்திக் காரியத் தடையும் மனக் குழப்பமும் விளைவிக்கின்றன. மனதின் "ப்ரதீகரண" சக்தியைக் குறைத்து கர்ம பலனைத் துரப்பதற்குரிய வழியென்ன?
'பிரசாத்தால் சர்வதுக்கானாம் ஹானி' கர்ம பலன் சுகமோ துக்கமோ அது எதுவாயினும் சரி கிடைப்பதை திருவருள் பிரசாதமாய் ஏற்றுக் கொள்ளப் பழகினால் துயரம் தீரும். ஆலய வழிபாட்டிற்குப் (ஆலயம் வழிபடுகிரவர்களுக்குப்) பின் பிரசாதம் கிடைக்கிறது. சில சமயம் சக்கரை அமுது, பஞ்சாமிருதம் போன்ற சுவை மிக்க இனிய பிரசாதம் கிடைக்கும். வேறு சிலவேளையில் கிடைப்பது நீர், குழை, மலர் போன்றவையாய் இருக்கும். அது எதுவாயினும் சரி கிடைக்கும் பொருளின் குறை நிறை தராதரம் ஏதுமே நினைக்காமல் நிறை மனதுடன் ஈஸ்வர பிரசாதமென்ற மனோபாவனையுடன் அதை ஏற்றுக் கொள்கிறோம். அதே மனோபாவனையுடன் தினசரி செய்யும் கர்ம பலன் எதுவாயினும் சரி வருவதெல்லாம் திருவருள் பிரசாதமென்ற மன சங்கல்பத்துடன் ஏற்கப் பழகினால் வினைப் பயன் சாராத எல்லையில்லா இன்பமும், ஆழ்ந்த உள் அமைதியும் நித்ய அனுபவமாயிருக்கும். இறுதியில் முத்தி நிலையைத் தருகிற ஞானம் இயல்பாகவே உதிக்கும்.
மனிதர் தமது சுய விருப்பு வெறுப்புகளைச் சாதிப்பதற்காக எத்தனையோ கர்மங்களை வருந்திச் செய்கின்றனர். அதனால் வரும் கடுந் துன்பங்களைப் பொறுக்கவும் ஏற்கவும் பழகிக் கொள்கின்றனர். மேலும் பிறவித் துன்பங்களைப் பெருக்கும் இத்தகைய செயலைச் செய்கின்ற மனிதன் முன்வினையைத் தீர்த்து பின்வினை சாராமல் அல்லலொழிந்து நித்தியா சுகமும், சாந்தியும் தரும் இந்தப் பயிற்சியைச் செய்து கடைத்தேறினால் என்ன?
மனித சரீரத்தில் நிறைந்திருக்கும் ஜீவன் மென்மையானது. மரணத்திற்குப் பின் ஜீவனுக்கு மீண்டும் மனித சரீரம் கிடைக்குமோ என்பது சந்தேகம். சம்சார சமுத்திரத்தைக் கடப்பதற்குரிய மனித சரீரமென்ற பெருத்தமான தோணியும் குருவென்ற சுக்கானும் இறை அருள் என்ற சாதகமான காற்றும் கிடைத்தும் கரையேற முயற்சிக்காத மனித ஜென்மம் தற்கொலைக்கு ஒப்பானது.


Wednesday 7 January 2015

ஞான மண்டலம் கீதையின் அருளுரை



#ஞான மண்டலம்

கீதையின் அருளுரை 


ஸ்ரீ பகவத் கீதையைப் பற்றி இங்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. பாரத யுத்தத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ் ணன் அருச்சுனனுக்கு உபதேசித்தருளிய இப் புனித நூல் சகல உலகத்தவராலும் அறியப்பட்டது. வராக புராணத்தில் சாட்சாத் விஷ்ணுவால் விளக்கப் பட்ட கீதையின் மகத்துவத்தின் ஒரு சிறு பகுதி இச சிறு நூலின் கடைசி யில் சேர்க்கப் பட்டிருக்கின்றது. வியாச பகவான் இயற்றிய மகா பாரதத்தில் வரும் பீஷ்ம பர்வத்தில் கீதா தத்துவம் விளக்கப் பட்டிருக்கின்றது. பதினெட்டு அத்தியாயங்களில் எழுநூறு சுலோகங்களால் கீதை எழுதப் பட்டிருக்கின்றது. இக பரங்களைப் பற்றி அரிய வேண்டிய சகல விளக்கங் களையும் மனிதன் கடைத்தேற வேண்டிய சகல வழிவகை களையும் இதில் பகவான் கிருஷ்ணன் திருவாய் மலர்ந் தருளியிருக்கிறார். கீதை தனி ஒரு சமயத்தவருக்கோ, இனத்தவருக்கோ சார் புடையதன்று. இதன் உபதேசங்களும் கருத்துக்களும் சகல மனித சமூகத்தவருக்கும், சமயத்தவருக்கும் உரியது. ஏற்றுக் கொள்ளத் தக்கது. சொந்தமானது. கீதையை முழுதும் படித்துப் பயன் பெற முடியாத அன்பர்களுக்கு அதன் முக்கிய கருத்துக்களை யாவது இதனால் அறிந்து பயனடையலாம் என்று கருது கின்றோம். கீதையின் முக்கிய போதனைகளும், சாதனா முறைகளும் இச் சிறு நூலில் தரப் பட்டிருக்கின்றன. மெய்யன்பர்கள் யாவரும் மன ஒருமையுடன் ஊன்றிப் படித்து அவ்வழி நின்று இறைவனருளால் பூரண விடுதலை யின் மிகச் சிறந்ததை அடைவீர்களாக.

சாங்கிய யோகம்: (ஆத்ம தத்துவ விளக்கம்)

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.

சுலோகம் 3. 
பார்த்தா! கோழையின் இயல்பை அடையாதே. இது உனக்குப் பொருந்தாது. இழிவான மனத் தளர்ச்சியை நீக்கி எழுந்து நில்.

அருச்சுனன் கேட்டது:


சுலோ.6. 

சிறுமை என்ற குறையால் நல்லியல்பு இழந்தவனாய் அறநெறி இன்னதென்று உணராமல் கலங்கிய அறிவுடன் உன்னைக் கேட்கின்றேன்.

சுலோ.7. 

கண்ணா! எது எனக்குச் சிறந்ததென்பதை நீ நிச்சயப் படுத்திக் கொள்வாயாக. நான் உனது சீடன். உன்னிடம் தஞ்ச்சமடைகின்றேன். உபதேசித்தருள்க.

கண்ணன் உபதேசித்தது:


சுலோ. 12
முன்பு எப்பொழுதாவது நான், நீ, இங்குள்ள வேந்தர் யாவரும் இல்லாதிருந்த தில்லை. இனி இந்தச் சடலங்கள் அழிந்தாலும் நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.

சுலோ. 14
குந்தியின் மகனே! குளிர் வெப்பம், சுகம் துக்கம், யாவும் இயற்கையின் நடைமுறையால் தோன்றி மறைவான. என்றும் நிலை பெற்றிருபனவல்ல. பாரதா! அவற்றைப் பொறுத்துக் கொள்ளப் பழகு.

சுலோ. 15
எவன் இவற்றால் கலங்காமல் இன்ப துன்பங்களைச் சமனாகக் கொள்வானோ அந்தத் தீரன் சகா நிலைக்கு (மோட்சத்திற்கு) தகுந்தவனாகின்றான்.

சுலோ. 16
இல்லாதது உள்ளதாகாது. உள்ளது இல்லாததாகாது. பேரறிஞர்கள் இவை இரண்டிற்குமுள்ள வேற்றுமைகளை உணர்வார்கள்.

சுலோ. 2௦
ஆத்மா பிறப்பதுமில்லை. இறப்பதுமில்லை. இது முன் இல்லாதிருந்து பிறகு பிறந்ததுமல்ல. ஆத்மா பிறப்பு இறப்பற்றது. குன்றாதது. வளராதது. காயம் அளிக்கப்பட்டாலும் அவன் அழியான்.

சுலோ. 22
பழைய துணிகளைக் கழற்றி எறிந்து புதியதைப் போட்டுக் கொள்வது போல் ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியவற்றில் புகுகின்றது.

சுலோ. 27
பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் நிச்சயம் எனில் இத் தவிர்க்க முடியாத விஷயத்தில் நீ வருந்துவது தகுதியன்று.

சுலோ. 28
உயிர்கள் தொடக்கத்தில் தோன்றாமலும் இடையில் தோன்றியும் முடிவில் தோன்றாமலும் இருக்கின்றன. இதைக் குறித்து நீ துயரப்படுவானேன்.

சுலோ. 3௦
பாரதா! எல்லாவற்றிலும் உறைகின்ற இந்த ஆத்மா கொல்ல முடியாதது. ஆகையால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டாம்.

சுலோ. 33
அரப் போராகிய இதனைச் செய்யாது விட்டால் தவ தர்மத்தையும் கீர்த்தியையும் இழந்த பாவத்தை அடைவாய்.

சுலோ. 35
நீ பயத்தினால் போரை விட்டு விலகியதாக மகாரதர் எண்ணுவார்கள். உன்னை எவர்கள் போற்றினார்களோ அவர்களால் இகழப்படுவாய்.

சுலோ. 37
அரப் போரில் மடிந்தால் வானுலகை எய்துவாய். ஆகையால் போரின் பொருட்டு உறுதி கொண்டு எழுந்திரு.(நம் வாழ்வும் ஒரு போராட்டம் தானே?)


மனிதனின் துக்கத்துக்கும் அளிவுக்குமுள்ள காரணங்களை பகவான் சொல்கிறார்:


சுலோ. 62.
விஷய சுகங்களை நினைப்பதால் பற்றுண்டாகிறது. பற்றுதல் ஆசையாகவும், ஆசை சினமாகவும் வடிவெடுக்கின்றது.

சுலோ.63.
சினத்தால் மனக் குழப்பமும், மனக் குழப்பத்தால் மறதியும், மறதியினால் புத்தி நாசமும், புத்தி நாசத்தால் மனிதனுக்கு அழிவும் உண்டாகின்றது.

சுலோ.66.
மனோலயம் இல்லாதவனுக்கு ஆத்ம போதமும் ஆத்ம பாவனையுமில்லை. ஆத்மத்தியானம் இல்லாதவனுக்கு சாந்தியில்லை. சாந்தியில்லாதவனுக்குச்  சுகமேது?

சுலோ.68.
எவன் ஒருவன் ஆசைகளை அறவே அகற்றி நான் எனது, என்பதற்று அகங்காரமின்றி நடமாடுகிரானோ அவன் அமைதி பெறுகிறான்.

தியான யோகம்:


சுலோ.5.
தன்னைத்தான் உயர்த்திக் கொள்க. தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டாம். தனக்குத் தானே நண்பனுமாவான், பகைவனுமாவான்.

சுலோ.6.
தன்னைத் தான் வென்றவனே தனக்குத் தான் நண்பன், தன்னைத் தான் வெல்லாதவன் தனக்குத் தான் பகைவன் போல் கேடு விளைவிப்பான்.

சுலோ.7.
தன்னை வென்று சித்தம் தெளிந்தவனுக்குக் குளிர் வெப்பங்களிலும், சுகம் துக்கம், இகழ்ச்சி புகழ்ச்சிகளிலும் ஈஸ்வர தரிசனம் நிலைத்திருக்கும்.


தியான யோகப் பயிற்சி விளக்கம்:


சுலோ.11.
சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிக தாழ்வில்லாமலும், மான் தோல், துணி, தர்ப்பை இவைகளை விரித்து அதன்மேல் உறுதியாய் ஆசனத்தமர்ந்து

சுலோ.12.
மனதை ஒருமுகமாக்கி புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்திச் சித்தசுத்தியின் பொருட்டு யோகம் பயில்க.

சுலோ.13.
உடல், தலை, கழுத்து நேராக அசைவின்றி வைத்து உறுதியுடன் மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு திசைகளைப் பாராமல்

சுலோ.14.
மன அமைதியுடையவனாய் அச்சத்தைப் போக்கி பிரமச்சரிய விரதம் பூண்டு மனதை வசப்படுத்திச் சித்தத்தை என்பால் வைத்து என்னையே குறியாகக் கொண்டு யோகத்தில் இருக்கக் கடவாய்.

சுலோ.15.
இவ்விதம் எப்போதும் மனதைத் தியானத்தில் பயிற்றி உள்ளத்தைக் கட்டுப்படுத்திய யோகி, என்பாள் நிலைபெற்றதாகிய மிகச் சிறந்த விடுதலையால் உண்டாகும் ஆறுதலை அறிவான்.

சாதகன் அனுசரிக்க வேண்டிய நியமங்களின் சுருக்கம்:


சுலோ.16.
மிகைப்பட உண்போனுக்கும், உணவற்றோனுக்கும் யோகமில்லை. அதிகம் உறங்குபவனுக்கும், அதிகம் விழித்திருப்பவனுக்கும் யோகம் கைகூடுவதில்லை.

சுலோ.25.
உறுதியான புத்தியால் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல அமைதி பெறுக. எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவாய்.

சுலோ.26.
எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழல்கின்றதோ அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆன்மாவின் வாசத்துக்குக் கொண்டு வருக.

சுலோ.28.
இங்ஙனம் குற்றங்களைப் போக்கி எப்போதும் ஆத்மாவில் லயத்திருப்பானாகில் அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் எய்துவான்.

மனிதன் இயல்பு விளக்கப்படுகிறது:


அர்ச்சுனன் உரைத்தது:
சுலோ.34.
கண்ணா! மனம் சஞ்சலமுடையது. தவறு செய்யும் இயல்புடையது. வலிவுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுபடுத்துவது போல் மிகக் கடினமான காரியமென்று நான் கருதுகிறேன்.

கண்ணன் கூறியது:
சுலோ.34.
பெருந்தோளாய்! மனத்தைக் கட்டுதல் அரிதுதான். அலையும் சுபாவமுடையதுதான். ஆனால் குந்தியின் மகனே! அதைப் பயிற்சியினாலும் வைராக்கியத்தினாலும் உறுதியினாலும் கட்டிவிடலாம்.

சுலோ.36.
தபசிலும் ஞானத்திலும் யோகி சிறந்து விளங்குகின்றான். கர்ம யோகத்திலும் அவன் சிறந்தவன். ஆதலால் அர்ச்சுனா நீ யோகியாகுக.

பகவான் திருவாய் மலர்ந்தது:

சுலோ.7.
எவரெவர் அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்து என்னையே தஞ்சமாகக் கொண்டு சிதறா மனத்துடன் என்னையே தியானித்து வழிபடுகின்றார்களோ அவர்களை நான் மரண சம்சாரக் கடலில் நின்றும் விரைவில் தூக்கி விடுவேன்.

சுலோ.8.
மனதை என்பால் நிறுத்து. புத்தியை என்னுட் புகுத்து.இனி நீ என்னிடத்தே வசிப்பாய்.ஐயமில்லை.

இதுகாறும் கூறியவற்றை அனுசரிக்க முடியாதவர்கள் செய்யக் கூடியவை:


சுலோ.9.
இனி மனதை என்னில் உறுதியாக நிறுத்த வல்லமை இல்லை என்றால் பழகிப் பழகி என்னை அடைய விரும்பு.

சுலோ.1௦.
பழகுவதில் நீ திறமையற்றவனாகில் என் பொருட்டு தொழிலைச் செய்வதைக் குறிக்கோளாகக் கொள்க. என் பொருட்டு கர்மம் செய்தாலும் நீ பெரு நிலையடைவாய்.

சுலோ.11.
இதுவும் உன்னால் செய்ய இயலாவிட்டால் என்னிடம் அடைக்கலம் புகுந்து, தன்னடக்கம் பயின்று எல்லாச் செய்கைகளின் பலன்களையும் எனக்கு அர்ப்பணம் செய்து நில். நீ நற்கதியடைவாய்.

பக்தனின் சுபாவமும் இலட்சணமும்:


சுலோ.19.
புகழ்ச்சி, இகழ்ச்சி, மானம், அவமானம், குளிர், வெப்பம், சுகம், துக்கம் இவற்றைச் சமனாகக் கருதும் பற்றற்ற மௌனி; கிடைத்ததில் போதுமென்ற நிறைவுடையவன்; தனக்கென்று ஒரு இடம் தேடாதவன்; நிச்சய புத்தியுடையவன் இத்தகைய சுபாவமுடைய பக்திமான் எனக்கினியவன்.

சந்யாச யோகம்:
ஒருவன் எளிதில் கடைத்தேற வழி:


சுலோ.56.
எத்தொழிலைச் செய்தாலும் என்னையே சரணமாகக் கொண்டவன் எனதருளால் அழிவற்ற பரம பதத்தை எய்துகிறான்.

சுலோ.58.
என்னைச் சித்தத்தில் வழுத்திக் கொண்டிரு. எனதருளால் எல்லாத் தடைகளையும் தாண்டிச் செல்வாய் அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயெனில் பெரும் நாசத்தை அடைவாய்.

சுலோ.62.
பாரதா! எல்லாப் பாங்கிலும் என்னையே சரண் புகு. எனதருளால் பரம சாந்தியாகிய நித்தியா இன்பத்தை எய்துவாய்.

சுலோ.63.
இங்ஙனம் மகா இரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ந்து எப்படி விருப்பமோ அவ்விதம்  செய்.

சுலோ.64.
இன்னும் ஒரு முறை எல்லாவற்றிலும் ஆழ்ந்து எனது இறுதி வசனத்தைக் கேள். நீ எனக்குற்ற நண்பன். உனக்கு நல்லதைச் சொல்லுகிறேன் கேள்.

சுலோ.65.
உன் மனதை எனதாக்குக. என்னிடம் பக்தி பூண்டு என் தொடனாகுக. என்னையே வணங்கு; என்னையே அடைவாய். நிச்சயம் உனக்கு உறுதி கூறுகிறேன்.நீ எனக்கு இனியவன்.

பகவானின் இறுதி வசனம்:


சுலோ.66.
எல்லா அறங்களையும் விட்டு என்னையே சரணடைக. சகல பாவங்களில் நின்றும் நான் உன்னை விடுவிக் கின்றேன். துயரப் படாதே.

ஸ்ரீ பகவத் கீதா மகத்துவம்:
விஷ்ணுவினால் திருவாய் மலர்ந்தருளப் பெற்றது:


கேள்வி: பகவானே! பரமேசா!! சம்சார தோஷத்தால் கட்டுண்டு கிடக்கும் ஒருவன் உயர்ந்த பக்தியைப் பெறுவது எங்ஙனம்?

விடை:
எவனொருவன் கீதா பயிற்சியில் இன்புறுவானோ அவன் முன் ஜென்ம கர்ம தோஷத்தால் தவிப்பினும் அவன் முக்தனாவான்.இவ்வுலக சுகத்தையும் அனுபவிப்பான்.

முறைப்படி கீதா பாராயணம் செய்து தியானம் செய்கின்ற வனை மகா கொடிய பாவங்களும் தீண்டாது.

பகவத் கீதை எங்கிருக்கிறதோ, எங்கு கீதா போதனை நடைபெறுகிறதோ, அங்கு புண்ணிய தீர்த்தங்கள் அனைத்தும் வந்து சேர்ந்த பலனும் மற்றும் புண்ணியங்க ளும் வந்து கூடுகின்றன.

கீதா பாராயணமும் பயிற்சியும் செய்து கொண்டிருப்பவன் வெகு சீக்கிரத்தில் பூரண விடுதலை அடைகிறான். மரணத் தறுவாயில் 'கீதை' என்று உச்சரிப்பவர் உடனே பரம பதமடைவர்.

கொடிய பாவங்கள் செய்தவனும் கீதையின் கருத்தைக் கேட்பதில் விருப்பங் கொள்வானாகில் அவன் செய்த பாவங்கள் நீங்கி ஸ்ரீ வைகுண்டமேகி மகா விஷ்ணுவுடன் இரண்டறக் கலந்திருப்பான்.

Monday 5 January 2015

ஞான மண்டலம் பாரதக் கதை தரும் போதனை



#ஞான மண்டலம்


பாரதக் கதை தரும் போதனை 


மனித ஜீவிதம் ஒரு அமர்க்களம். சுகம் துச்சம் இரண்டுக்கும் இடையே நடைபெறும் இப் போராட்டத்தின் மத்தியில் நின்று வாழ்க்கையை ஆனந்த மயமாக்கித் தீர்க்க வேண்டும்.
இதுதான் வாழ்க்கையின் யதார்த்த தத்துவ தரிசனம்.
பாரதப் போர்முனையில் வைத்துக் கிருஷ்ணன் அர்ச்சுனனுக்கு இதற்குரிய சித்தானந்தத்தை உபதேசித்தார்.

மகாகாவியம்:

அர்ச்சுனன் போர்க்களத்தில் வைத்தே அதை அநுபூதி மயமாக்கினான். பாரதக் கதை ஒரு வெறும் கதையல்ல.அது ஒரு முழுமையான ஜீவித சாஸ்திரம்.
இந்த மகா காவியம் தரும் ஜீவித மார்க்கங்களை மனித சமுதாயம் கடைப்பிடித் தொழுகுமேயானால் உலகம் உய்யும்.
பாரதக் கதையில் வரும் உத்தம பாத்திரங்களாகிய பஞ்சபாண்டவர்கள் அனுபவித்த கஷ்ட நஷ்டங்கள் கொஞ்ச மல்ல.
அரசாட்சி, உடைமைகள், மானாபிமானம் எல்லாம் இழந்து வசிப்பதற்கு ஒரு இடமும் வீடும் இல்லாமல் வனத்திலே நாடோடிகளாய்த் திரிந்தனர்.
மனக் கலக்கமின்றி ஆனந்த மயமான மனத்துடன் யாவற்றையும் வரவேற்றனர். மனந் தளராமல் அவ்வளவு தூரம் பொறுமையோடு சாந்த சீலராய் வாழ்வதற்கு இறைவனிடத்தில் பக்தியும் சரணாகதியுமே காரணமா யிருந்தன.
பக்தியும் சரணாகதியும் மனிதரை அப்பேர்ப்பட்ட மன பரிபாகம் உடையவர்களாக்கித் தீர்க்கின்றன.
மனிதன் தனது துன்பங்களை ஒழிக்க முயற்சிப்பதற்கு முன் அவைகளைப் பொறுமையோடு சகிப்பதற்குரிய மனப் பக்குவத்தைத்தான் முதல் பெற வேண்டும்.
அதற்குப் பயன் படக்கூடிய பக்தியைத்தான் உண்மையான பக்தியென்று சொல்லலாம்.
பக்தர்கள் தமக்கு மிகப் பிரியமாதையும், இறை பக்திக்காக அர்ப்பணம் பண்ணத் தயாராயிருக்கும் தியாகசீலமுடைய வர்களாக மாறும் பொழுது மாத்திரந்தான் பகவத் பக்தியின் பரிபூரண சுகம் பக்தர்களுக்குக் கிடைக்கும்.

அங்குசம்:


யானையை அங்குசத்தால் மடக்குவது போன்று தொல்லைகளைச் சிருஷ்டிக்கும் மனதைப் பக்தி என்ற அங்குசத்தால் மடக்கிச் சுயாதீனப் படுத்தும் பக்தன், சமுத்திர அலைகளுக் கிடையில் மிகச் சந்தோஷமாக நீந்திக் கரையேறும் சிறந்த ஒரு நீச்சல் வீரனைப் போன்று இம் மண்ணுலக வாழ்க்கையின் வெப்பம், குளிரால் தாக்கப் பட்டாமல் நீந்திக் கரையேறுகின்றான்.
ஆகையால் பக்தர்களுடைய பக்தி விசுவாசங்களைப் பாண்டவர்களைப் போன்று நிலை குலையாமல் உறுதிப் படுத்தினால் இப் பூவுலகப் பிரச்சனைகள் எல்லாம் பக்தனுக்கு அர்ச்சனை மலர்கள் போன்றவையாகவே இருக்கும்.
பாரத மகா காவியம் போன்ற நுல்களைக் கற்றறிவதால் மாத்திரம் பெரும் பயன் என்ன?
பாரதக் கதையை நன்றாகக் கற்றறிந்த ஏழைப் பிராமணன் இருந்தான்.பெருத்த குடும்பம். வறுமையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்தப் பிராமணனுக்கு வறுமையைப் போக்குவதற்கு அவனுடைய மனைவி ஒரு ஆலோசனை கூறினாள்.
"மிகவும் நல்லவராகிய நம் மன்னர் ஒரு பெரும் புலவர் சபையை வைத்திருக்கிறார். நீக்கள் மன்னரிடம் போய் புலவர் சபையில் பாரதக் கதையை விரிவுரை செய்வதற் குரிய ஒரு சந்தர்ப்பத்தைக் கேளுங்கள். கிடைத்தால் அதற் கொரு மானியத்தையும் தந்து கொண்டிருப்பார். அதைக் கொண்டு நாம் சீவிக்கலாம்" என்று கூறிப் பிராமணனை வழியனுப்பினாள்.
பிராமணன் மனனரிடத்தில் சென்று வந்த நோக்கத்தைத் தெரிவித்தான். மன்னர் அதற்கு சம்மதித்தார். ஆனால் அதற்கு முன் பாரதக் கதையை நன்கு மீண்டும் படித்து விட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பி விட்டான்.
ஏகாந்த இடத்திற்குச் சென்று தனிமையிலிருந்து பாராயணம் செய்யத் தொடங்கினான் அந்தப் பிராமணன்.
நாளடைவில் பாரதக் கதையின் உட்பொருளில் இரண்டறக் கலந்து குடும்பம், வறுமை யாவற்றையும் மறக்கலாயினான்.
இறுதியில் இவ் வையக ஆசைகளெல்லாம் பிராமணனை விட்டு அழிந்தொழிந்தன.மாசு படியாத இறையின்பத்தில் லயித்தான்.
கற்ற ஞானம் வாழ்வாக மலரும் போதுதான் கற்றதனால் பலன் ஏற்படும்.
இப்பிரபஞ்ச்சத்தைப் பந்தாக்கி விளையாடிக் கொண்டி ருக்கும் இறைவனுடைய திருவிளையாடலை ஞானா னுபூதியினால் உணர்ந்தவர்களுக்கு இவ்வையக வாழ்வு பேரானந்தம் தரும் ஒரு விளையாட்டு.
பேராசையால் மத யானைகள் போன்று கலகஞ் செய்து திரியும் மனிதர்கள், கற்றவைகளில் நல்லவற்றை ஜீவித மயமாக்கினால் இந்த உலகம் ஆனந்த மயமாயிருக்கும்.