Monday 10 November 2014

அநாதியான சிவயோக மார்க்கம்



அநாதியான சிவயோக மார்க்கம்

இன்று நடைமுறையிலிருக்கும் நானாவித மதங்களுடைய தத்துவச் சிந்தனைகளும், ஆரியாஷ்டாங்க (பௌத்த தர்மம்) நெறிகள் உட்பட சகல யோக மார்க்கங்களும் அநாதியான சிவயோக மார்க்க விளக்கொளியில் நின்று காலாகாலத்தில் கொளுத்தியெடுத்த தீபச் சுடர்கலாகும். சகல மதங்களுடைய ஆத்மீக தத்துவ தரிசன மார்க்கத்திற்கும், எல்லாவிதமான சந்நியாச (துறவறம்) தர்மத்திற்கும் இந்த சுத்த சிவயோக மார்க்கந்தான் ஆதிமூல காரணமாயிருந்தது.கலியுகாரம்ப காலத்திற்கு முன் சிவயோக நெறிகள் உலகம் முழுவதும் பரவியிருந்ததற்குப் புராண, இதிகாச, சரித்திரச் சான்றுகள் பல இருக்கின்றன. ஜம்புத்தீவம் (ஆசியா), புஷ்கர தீவம் (வட  அமேரிக்கா), குச தீவம் (அவுசஸ்திரேலியா), ,க்ரௌஞ்ச தீவம் (ஆபிரிக்கா) முதலிய பெரிய கண்டங்களிலும் சகஸ்தானம் (பேஷியா),, காந்தார தேசம், (பாபிலோனியா), நீல தேசம் (எகிப்து), பாலஸ்தீனம் முதலிய தூர தேசங்களில் இந்த யோக மார்க்கம் பிரசித்தமான ரீதியில் பரவியிருந்தது.சிவயோக திருக்கூட்டங்கள் ஆங்காங்கு சென்று குகைகளில் தங்கியிருந்து தவயோக மியற்றியவாறு சிவயோக வித்தியாசாலைகளை அமைத்து சிவயோக நெறிகளை ஸ்தல வாசிகளிடம் பிரச்சாரஞ் செய்து வாழ்ந்தனர்.அக்காலத்தில் அநாகரிகமான முறையில் வாழ்ந்திருந்த ஸ்தலவாசிகளைத் தார்மீக நெறியில் வாழ நெறிப்படுத்திக் கொண்டிருந்தனர். சுத்த சைவ போசனிகளா யிருந்த சிவயோகத் துறவிகள் விவசாயம், வைத்தியம், பார்பன்னைகள் முதலியவைகள் மூலமாகச் சமுதாயச் சேவையும் செய்து வந்தார்கள்.

ஆத்மாவின் ஜீவ சங்கற்பத்தால் தோன்றிய நான், எனது என்ற சுயநலத்தைத் துறந்து உலக சுகத்திற்கும் ஆத்மாக்களுடைய விடுதலைக்கும் தங்களை அர்ப்பணித்து வாழ்கின்றவர்களே சந்நியாசிகளாவர். நேபாள தேசத்தில் பிறந்த சதாசிவ குமரேஸ்வரன் என்ற மகா சிவயோகி சிவயோக மார்க்கத்தின் யோக கர்த்தாவாகவும், பரமாச்சாரியருமாயிருந்தவர். காலாந்தரத்தில் ஈசானன் என்று அறியப்பட்டு வந்த ஞான நிஷ்டையுடைய இந்த யோக மார்க்க சிவாச்சாரியார் கலியுகாரம்பத்திற்கு முன் வாழ்ந்தவர். பாசுபதம், சைவம், சாக்தம், ஈசானம், ஐஸ்வரியம், பைரவம், கபாலிகம், வாமதேவம், பதஞ்சலம், ஸ்தவிர பௌத்தம் (தேர புத்தம்) போன்ற பிரத்தியோக மார்க்கங்களுக்கெல்லாம் தாய்மையான ஞானபாதம் (Gnostic), சிராமணிகம் (சமணம்) போன்ற விதேச நாமங்களால் அறியப்படும் சந்நியாச தர்மங்களெல்லாம் சிவயோக சந்நியாச மார்க்கத்திலிருந்து பகிர்ந்தெடுக்கப்பட்டவைகளேயாகும்.

பாரத தேசத்திற்கு வெளியில் வாழ்ந்து வந்த சிவயோகிகளைப் பிற்காலத்தில் மூர்க்க குணம் படைத்த ஹிப்புறு வர்க்கத்தினர் மெல்ல மெல்லக் கொன்றொடுக்கினார்கள். அதனால் தூர தேசங்களில் சிவயோக நெறிகள் மங்கி விட்டன. பாரத நாட்டில் பிரகாசத்திலிருந்த சிவயோக தத்துவ சாஸ்த்திரங்கள் கலியுகம் ஆரம்பித்த சிறிது காலத்திற்குப் பின் ஏற்பட்ட பிரளயத்தால் முக்கால் பங்கும் அழிந்துவிட்டது. பாரத யுத்தம் கி.மூ.3௦80இல் நடைபெற்றது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய தேகவியோகம் கி.மூ.3067இல் நிகழ்ந்தது. பகவானுடைய தேகவியோகத்திற்குப் பின்னர்தான் முன் குறிப்பிட்ட பிரளயம் நிகழ்ந்தது. அதற்குப்பின் அங்கும் இங்குமாகச் சிதறிக் கிடந்த சிவயோக நெறிச் சாஸ்த்திரங்களை நகுலீசமுனி போன்ற சில மகா யோகிகள் நர்மதாநதிக் கரையோரங்களிலும், விந்திய மழைப் பிரதேசங்களிலும் பிரசாரஞ் செய்து புனர்ஸ்தாபனம் செய்தார்கள்.

புத்தாவதாரத்திற்குப் பின் முற்றிலும் சைவமாயிருந்த சிவயோக நெறிகள் சில மாற்றங்களுடன் புனரமைப்புச் செய்யப்பட்டு ஆரியாஷ்ட்டாங்க யோகமென்ற (பௌத்த தர்ம யோகம்) ஒரு தனி பௌத்த யோக மார்க்கம் உருவாக்கப்பட்டது. சிவயோக மார்க்க நெறிகள் பரவியிருந்த தேசங்களிலெல்லாம் ஆரியாஷ்ட்டாங்க யோகிகளாயிருந்த புத்த பிக்குகள் சென்று அதிதீவிரமாகப் பிரசாரம் செய்தமையால் சிவயோக மார்க்க நெறிகள் பலவீனமடையத் தொடங்கின. எனினும் இன்று உலகம் முழுவதும் பல ரூபத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் யோக மார்க்கங்களெல்லாம் ஆதிச் சிவயோக மார்க்க அக்கினிச் சுவாலையினின்றெழுந்த பொறிகளாகும். இந்துக்களுடைய தத்துவ தரிசனத்தாலறியப்பட்ட சிவயோக மார்க்கமும் அதிலிருந்து உடலெடுத்த ஆரியஷ்ட்டாங்க யோகமும் சனாதனா தர்மம் என்ற ஒரு தாயின் வயிற்றில் பிறந்த குழந்தைகள்.

யோகம் என்றால் என்ன? அது மனித சமுதாயத்திற்கு எவ்வகையில் பயன்படுகின்றது? நமது மனம் இறைவனிடத்தில் இரண்டறக் கலந்திருந்தால் அது யோகம் எனப்படும். பிறவித் துன்பங்களுக்குக் காரணமாயிருக்கின்ற சித்த விருத்திகளைத் தடைசெய்வதால் ஜீவனுடைய தனித்துவம் நீங்கி ஜீவன் சிவத்தோடு ஐக்கியப்படுகின்றது. சீவ உபாசனையால் இந்த ஐக்கிய நிலை அடைவது சிவயோகம் எனப்படும்.

சித்த விருத்திகளைத் தடைசெய்யாமல் மனம் யோக நிலை அடைகின்றது. மனம் இடையறாது உருவாக்கிக் கொண்டிருக்கும் எண்ணரிய எண்ண அலைகளைச் சித்த விருத்திகள் ஒழிந்த மனதில், தெளிந்த நீரில் பிரகாசிக்கும் சந்திர பிம்பம் போன்று இறையொளி நன்றாக ஒளிர்கின்றது. இத்தகைய பெரும் பேறு பெற்ற மனம் வசந்த கால சுகத்தை நுகரும் பூங்குயில் போன்று புலநுகர்ச்சிகளை நீக்கிச் சதா இறையின்பத்தில் லயத்திருக்கும். காலகதியில் சதாசிவமாகிய இறைவனில் இரண்டறக் கலந்து அதுவாகவே மாறிவிடும். இதுதான் ஜீவாத்மாக்களுடைய பரம லட்சியமாயிருக்கின்ற சிவயோக பதம் அல்லது ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியம்.

பிறவித் துன்பங்களைத் தீர்த்து சாசுவதமான சுகத்தைத் தரும் இந்த யோக உணர்வு இயற்கையாகவே ஒவ்வொரு ஜீவனிலும் மறைமுகமாக மறைந்திருகின்றது. ஒருவர் உலகியலின்பங்களையும் வேண்டும் வண்ணம் அனுபவித்து பின்னும் இன்னும் ஏதோ ஒன்றை அனுபவிக்க வேண்டியிருப்பதாகவுள்ள ஆவல் அவரிடம் ஒன்றிருப்பதாக உணர்கின்றார். எனினும் அது இன்னதென்பதை மனக் குழப்பத்தால் அறிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு மனிதர்களுடைய இருதயக் கருவறையிலும் மறைந்திருந்து தூண்டிக் கொண்டிருக்கும் இந்த வாஞ்சைதான் இறை இன்பத்துக்குரிய அந்தர்முக தாகம்.

நெல்லையும் பதரையும் வேறு பிரித்தறிய முடியாத விவசாயிகள் போன்று மனிதர்கள் மாயா வசத்தால் பலத்தையும் எடுப்பதற்கும் பிடிப்பதற்குமாய் ஓடியோடி முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அயராமல் முயற்சிகள் பலசெய்தும் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை, வாய்க்கெட்டியது வயிற்றுக்கெட்டவில்லை என்றநிலையில் காலம் கழிந்து கொண்டிருக்கிறது. நீரென்று கருதி கானல் நீருக்குப் பின்னால் திரிந்து மடியும் மான் கூட்டங்களைப் போன்று மேலும் மேலும் துயரங்களைத் தரும் அற்ப சுகத்திற்குப் பின்னால் சென்று வரக்தியுடனும், அதிருப்தியுடனும் ஜீவன் பிரிகின்றது.

எண்ணரிய பரிணாம வளர்ச்சிக்குப் பின் மிக அபூர்வமாகக் கிடைத்த புனிதமான மனித ஜென்மம் இவ்வாறு வீணாகிக்கொண்டிருகின்றது. ஆகையால் சாசுவதமான சுகத்தைத் தரும் ஜீவித தர்மங்களை அனுசரித்து வாழ்ந்து, ஜீவித லட்சியத்தை அநுபூதி மயமாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். முக்கரணங்களைச் (மனம், வாக்கு, காயம்) சித்திகரித்துப் பலப்படுத்தக் கூடியதும் அனைவராலும் அப்பியாசிக்கக் கூடியதுமாகிய சில பரிசீலனங்கள் (இயமம், நியமம், ஆசனம்)போன்றவை யோக மார்க்கங்களில் இருக்கின்றன. இவைகளையாவது சித்த சுத்தியுடன் நித்தியமும் பழகி வந்தால் சிறந்த மனச் சுகத்துடனாவது வாழலாம். இத்தகைய ஆன்மீகப் பரிசீலனங்களுக்கு நமது சிந்தையைச் செலுத்தத் தவறினால் எதிர்கால சமுதாயம் விலங்குணர்வுகளை விட  மோசமடையும்.

No comments: