Friday 19 December 2014

மெய்யுணர்வு




#ஞான மண்டலம்

 

மெய்யுணர்வு 


உலகம் உணர்வு மயம். பதியிலிருந்து பசுக்கள் வரை சங்கிலித் தொடர்பு போல் நீண்டு விரிந்து நிற்கின்றது உணர்வு. உணர்வின் மாற்றத்திற்குத் தக்கபடி உயிர் பல வடிவங்கொள்ளும். உணர்வு இரண்டு வகைப் படும். ஒன்று சிற்றுணர்வு அல்லது பொய்யுணர்வு. மற்றது உள்ளுணர்வாம் மெய்யுணர்வு. சிற்றுணர்வு மனம், புத்தி, காயங்களுடன் சம்பந்தப்பட்டு புறவாழ்வைத் தூண்டி நிற்கும். மெய்யுணர்வு இதயத்தின் ஆழ்ந்த பகுதியில் மெய்ப்பொருளை ஊடுருவி நின்று அகவாழ்வை உணர்த்தி நிற்கும். அறிவும் உணர்வும் ஒன்றோடொன்று சம்பந்தப் பட்டவை. உணர்வு விரிந்து இறுதியில் எப்பொருளில் கலந்து நிற்குமோ அதில் அறிவு வளர்ந்து முற்றுப்பெறும். அதாவது சிற்றுணர்வு மாறி மெய்யுணர்வு ஆகுங்கால் சிற்றறிவு மெய்யறிவாக மாறும். புறவுணர்வு புற வாழ்வினால் வரும் அற்ப சுகங்களைத் தந்து இறுதியில் துன்பத்தில் ஆழ்த்தி நிறுத்தும். உள்ளுணர்வு அகவாழ்வை உணர்த்தி அகப் பொருள் ஒன்றையே நாடி நின்று அதன் வழி வரும் முடிவில்லாத இறை இன்பத்தை அனுபவிக்கச் செய்யும். மனிதனில் இந்த இரண்டுவித உணர்வுகளும் கலந்து நிற்கின்றன. சிற்றுணர்வும் மெய்யுணர்வும் கலந்த கலவையின் வடிவமே மனிதன். மனித உணர்வில் ஒளியும், இருளும், அறிவும்,அறியாமையும் கலந்திருக்கும்.

புற உணர்வு மேலோங்கி நிற்குங்கால் நிலையற்ற குறுகிய இன்பங்களைத் தரும் விஷயாதிகளை நாடிச் செல்ல மனம் தூண்டி நிற்கும். உள்ளுணர்வு மேலோங்கி நிற்கும் பொழுது பந்த பாசங்களைக் கடந்த மெய்ப் பொருளின் இன்பத்தை நாடி மனம் உயர்ந்து செல்லும். நிலையற்ற பொருளை வருந்தி அடைவதும் அதன்பின் இழக்க நேரிடும் பொழுது சினம் கொள்வதும், சினத்தினால் கோபமும், கோபத்தினால் மனங் கலங்கிப் புத்தி தடுமாறுவதும், புத்தி தடுமாற்றத்தினால் அழிவும் உண்டாவதற்குச் சிற்றுணர்வின் ஆதிக்கமே காரணம். சமுகத்திற் காணும் புன்மையான குணங்களும், கபட முயற்சியால் வரும் அழிவுகளும் புறவுணர்வின் விளைவால் வருவனவே. சிற்றுணர்விற்குக் கீழ்ப் படிந்து நிற்கும் மனமானது நஞ்சு கலந்து அமைதியும் இன்பமும் காண முடியாமற் கலங்கி நிற்கும். உலகமனைத்தையும் அடக்கியாளும் வல்லமை பெற்றாலும் சிற்றுணர்வின் வழி நிற்பவன் தன்னில் ஒளியும் இன்பமும்,அமைதியும் காண்பது அரிது. புற வுணர்வுக்குப் பின்னால் சத்தியத்தை நாடி நிற்கும் மெய்யுணர்வின் வழி சென்று, உட்புருஷனின் தொடர்பால் வரும் அருட் சக்திக்கு நமது வாழ்வைத் திறந்து கொடுத்து நிர்போமாகில் ஒளியும், ஆற்றலும், தன்னறிவும் நிறைந்த ஒரு பகுதிக்கு நாம் உயர்ந்து சென்று அத்வைத இன்பத்தில் கலந்து நிற்போம்.

அநேக குறைபாடுகள் நிறைந்து, குழப்ப நிலையிலும் தீராத துன்பத்திலும் திரும்பத் திரும்பச் செல்லும் சங்கட நிலை மாற வேண்டுமாகில், சிற்றுணர்வைப் புறக்கணித்து உள்ளுணர்வின் வழி ஊடுருவிச் சென்று, உட்புருஷனைக் கண்டு தெளிந்து, அவன் ஆணையின் கீழ்ப்படிந்து வினையாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. துவேஷமும், வஞ்சனையும், வேற்றுமைகளும் வளர்ந்து அமைதி குறைந்து அழிவின் வரம்பை மோதி நிற்கும் மனித குலம் இருளில் நின்று ஒளிக்கும், அறியாமையினின்றும் அறிவுக்கும், வேற்றுமையிநின்று ஒற்றுமைக்கும், சென்று பூரண அமைதியும், அன்பும்,இன்பமும் நிறைந்த ஒரு புது உலகம் காண அருள் வழியை நாடிச் செல்ல வேண்டி யிருக்கிறது.

மனம், புத்தி, பிராணன்களில் வீறிட்டு நிற்கும் புன் னெறியை நீக்கி மெய்யுணர்வால் அப்பகுதிகளை நிரப்பி அதனால் வரும் பக்தி, ஞானம், ஆனந்தம் என்ற ஈஸ்வர குணங்களை வாழ்வுடன் சம்பந்தப் படுத்த முடியுமானால் கற்பனையில் இருக்கும் சகல நன்மைகளும் அனுபவத்துக்கு வந்தே தீரும். "உள்ளுணர்வு அல்லது மெய்யுணர்வின் வழியே அருள் வழியாம்". அருள் வழி செல்பவன் அருளாளன்.அவன் குறைவற்றிருப்பான். பந்த பாசங்களைத் தரும் சிற்றுணர்வின் முடிச்சறுத்து, உள்ளுணர்வின் வழி நடத்தலுக்கு நெஞ்சந் திறந்து கொடுப்போமாகில் அது நம்மை ஆணவ மலங்கள் நிறைந்த துன்பப் பாதையினின்று விலக்கியெடுத்து அருள் பொழியும் ஒளி பொந்திய பாதையில் வழி நடத்திச் சென்று இறுதியில் தனது இருப்பாகிய மெய்ப்பொருளில் அழுத்தி நிறுத்தும்.  சத்தியத்தின் அல்லது அந்தராத்மாவின் உணர்வுக்கு இசைந்து நின்று அது வழி வரும் அருட் சக்தி வழி நடத்திச் செல்லும் பொருட்டு நம்மை ஒரு சாதனமாய்க் கருதி நிற்பதே "சும்மா இரு" என்று சான்றோர்களால் கூறப்படுவதின் சாரமாகும்.

கிணற்றுத் தவளையின் பூலோக அறிவு போலிருக்கும் மனமும், புத்தியும் தனக்குப் பின்னால் உண்மையின் வழி நிற்கும் மெய்யுணர்வை ஆராய்ந்தறிய இடந் தருவ தில்லை. தகுந்த ஆத்ம சாதனங்களால் மெய்யுணர்வு அல்லது கடவுளுணர்வு விருத்தியடைந்து வருங்கால் பலவீனங்களும், அறியாமையும், இடர்களும் படிப் படியாய் விலகி நின்று அருளின்பந் ததும்பிப் பரவத் தொடங்கும். மெய்யுணர்வு கிளம்பி வருமிடத்து உட்பார்வையால் உன்னிப் பார்த்து, அறிந்து, தெளிந்து அதுவழி மெய்ப் பொருளின் இருப்பை அகமுகமாய்க் கண்டறிவதே "தன்னைத் தானறிதல்" என்றதன் பொருளாம். மெய்யுணர்வு கிளம்பிப் பரவத் தொடங்குங்கால் உட்பகுதிகள் அனைத்திலும் விளங்க முடியாத அமைதியும், இன்பமும், தூய்மையும் குடி கொள்ளும். மனப் பிராணன்களின் கிளர்ச்சிகள் அடங்கி அமைதி பெறும். மெய்யுணர்வின் வெளிப் பாட்டை விழிப்புட னிருந்து கவனித்து வருவோமாகில் பண்பற்ற அஞ்ஞான உணர்வு விலகி அமைதியும் இன்பமும் நிறைந்த ஒளிமயமான ஒரு தூய சக்தி நம்மில் இறங்கி வந்து அல்லது வெளிப்பட்டு நின்று சகல துறைகளிலும் அது தானாக நம்மை வழி நடத்திச் செல்வதைக் கண்கூடாகக் காணலாம்.

இது மிகச் சிரமமான காரியமாயிருந்தாலும் முயற்சியால் சாதிக்க முடியாததொன்றல்ல.ஆர்வத்தோடு தக்க சாதனா முறைகளை மேற்கொண்டொழுகினால் நிச்சயம் பயன் அளிக்கும். ஆத்ம சாதனா முறைகள் சகலதும் பொய் யுணர்வை அடக்கி மெய்யுணர்வை வெளிப்படுத்தும் பொருட்டே வகுக்கப் பட்டிருக்கின்றன. சிற்றுணர்வாம் பொய்யுணர்வு மெலிந்து மெய்யுணர்வு தடிப்பேற ராஜஸ, தாமஸ, குணங்களின் தன்மை மாறி அகந்தையின் எழுச்சியும் அடங்கி நின்று தெவீக குண விஷேசங்கள் மலர்ந்து நிற்கும். பொய்யுணர்வடங்கி மெய்யுணர்வின் வழி வரும் அருட் பொலிவுக்கு நம்மை முற்றாக அர்ப்பணித்து நிற்போமாகில் பழைய வாசனைகளையும், இன்னும் கேடுடைய யாவற்றையும் அதுவே விலக்கித் தந்து குறைவற்ற அருளின்பத்தில் நம்மை அணைத்துச் சேர்த்து நிறுத்தும். கேவல புத்தியால் பிரியும் படிப்பினாலும், தர்க்க வாதங்களினாலும் பலனில்லை. அவைகள் குழப்பத்தைப் பெருக்கும். தெளிவு காண முடியாது. சாதனையினாலேயே சாத்தியம் கைவரும். விதிப்படி "இதயத் தியானம்" பழகி வந்தால் மெய்யுணர்வின் வழி தெளிந்து காணும். மெய்யுணர்வின் எழுச்சியாலும் அருள் நிறைந்த ஒளியின் பொழிவினாலும் சக்தியும், ஞானமும் வாழ்வில் படர்ந்து நின்று குறைவற்ற தெய்வீக இன்பத்தை அனுபவிக்க இதயத் தியானத்தை மேற் கொள்வீராக.

No comments: