Monday 28 October 2013

வஜனாம்ருதம் தொடர்ச்சி...

அஸதோ மா ஸத்கமய 
தமஸோ மா ஜ்யோதிர்கமய 
ம்ருத்யோர் மா அம்ருதம்கமய 
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி.



50. அறிவினாலும், அப்பியாசத்தினாலும் மனதைத் தன்வசப்படுத்தத் தெரிந்தவனுக்கு வாழ்க்கை என்பது காற்பந்து விளையாட்டுப் போன்று சுவைமிக்க விளையாட்டாகும்.

26. மனித வாழ்க்கை அருவருக்கத் தக்க நிலைக்குத் தாழ்ந்துவிடும் பொழுதும், சமுதாயப் பண்புகள் நஷ்டப்படும் பொழுதும் இவ்வுலகில் மனிதனாகப் பிறப்பதற்குரிய சந்தர்ப்பம் கிடைத்த நன்றிக்கடனுக்காவது நாம் மேலான வாழ்வு வாழக் கடமைப்பட்டிருக்கிறோம். இதை உணராமல் செய்யுஞ் செயல் எல்லாம் தன்னைத்தான் வஞ்சிப்பதாகும்.வஜனாம்ருதம்

27. தங்கள் தங்களுடைய தேசிய கலை, கலாச்சாரத்திற்குத் தனி மதிப்பளிக்கும் ஒரு அரசியலமைப்புக்கு மாத்திரந்தான் ஆதரவளிக்க வேண்டும். ஏன்?... இதில்தான் எங்களுடைய முழுச் சுதந்திரமும் தங்கியிருக்கின்றது.

28. காலமெல்லாம் பாலூட்டிவளர்த்த பாம்பும் ஒரு நாள் ஊட்டிய கரத்தில் கொத்தும். அவ்விதமே செய் நன்றி மறந்த மனிதனும்.

29. சான்றோர் மனம் புண்பட நடந்தால் தீர்த்தால் தீராத பிரம்ம சாபம் உன்னை விட்டு அகலாது.

30. உன் குற்றம் மற்றவர் குற்றமாவதில்லை.குற்றத்தை உணர்ந்தால் திருத்துவதும், திருந்துவதும் எளிது.

31. நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி, தெய்வம் உன்னைக் கணப்பொழுதிலும் கைவிடுவதில்லை. உயிர்த்துடிப்பின் ஆதார சத்தி தெய்வமாய் இருக்கும்பொழுது அது கைவிட்டால் நீ வாழ்வது எங்ஙனம்?

32. அழிய வேண்டியது அழியும் பொழுது அதனைப் பார்த்துத் துயரம் கொள்ளாதே.

33. புயல் சமுத்திரத்தில் கொந்தளிப்பை உண்டு பண்ணினாலும் சமுத்திரம் சமுத்திரமாகவே இருப்பது போன்று பக்குவம் அடைந்தவர்களுடைய மனமும்,வாழ்க்கையும் உலக விகாரத்தினால் கொந்தளிப்பதில்லை.

34. புனித யாத்திரைகள், ஆலய தரிசனம் போன்றவைகளை இறைவனோடு இணையும் முறையில், திரிகரண சுத்தியுடன் சிறுமைக் குணங்களை நீக்கிச் செய். அழுக்காறுகள் நீங்கும்வண்ணம் அது புனிதமாய் இருக்கட்டும்.

35. அந்தரங்க சுத்தி இல்லாத நாம ஜெபம் தியானம் போன்றவைகள் எள்ளளவிலும் பயன்
அளிப்பதில்லை. அது வெறும் நாடகமாயும், தன்னையும் மற்றவர்களையும் ஆத்மவஞ்சனைக்கு உட்படுத்தும் ஒரு தந்திரமாகவும் மாறலாம்.

36. நல்லொழுக்கக் குறைவால் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் துயரம், கடவுளே! கடவுளே! என்று சொல்லிக் கொண்டிருப்பதால் மட்டும் தீர்ந்துவிடாது. நற்செயலால் மனதைப் பரிசுத்தப்படுத்தும் பொழுது எல்லாம் சுகமாய் முடியும்.

37. பசி,தாகமில்லாத இறைவனுக்கு வேளா வேளைக்கு நீரும், உணவும் அளிக்கிறீர்கள். தூணிலும், துரும்பிலும் குடியிருக்கத் தகுதியுடையவனுக்குத் தனித்ததோர் இடவசதியும் செய்து கொடுக்கின்றீர்கள். உங்களுடைய அதே உணர்வும், செயலும்  மனிதனாகப் பிறந்தும், மனித உரிமையற்று நிர்க்கதியாய் ஊர்ந்து செல்லும் மனித உருவங்களுக்கு அளிக்கப்படுமானால், அதுவே இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சிறந்த நிவேதனமாகும்.

38. இரைப்பை பழுதடையும் வண்ணம் உண்டு உறங்கும்பொழுது, இலை தளைகளைத்தின்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஏழை மக்களைப் பற்றி நினையாத இருதயத்தில் இறைவன் கடுகளவும் நுழைவதில்லை.

39. மனதால் வாழ்கிறவன் மனிதன். நீதி நியாயத்திற்கு பொறுத்த மில்லாத ஆதிக்க மனமுடையவர்களுடைய மனதைவிட உங்களுடைய மனதை அதீத சக்தியுடையதாக மாற்றிவிடுங்கள். அங்ஙனம் நீங்கள் சுயரட்சகர்களாக மாறிவிடும் பொழுது விடுதலைக்குரிய வழிதானே பிறக்கும்.

40. சொல்லும் செயலும் சிந்தனையும் தாய் மொழிமூலம் செயற்படும் போது விடுதலையின் முதற்கதவு திறக்கப்படுகிறது.

41. மூர்க்கத்தனமான அசுரசக்தியைக் கூரிய புத்தியாலும் நுணுக்கமான உபாயத்தாலும் எளிதில் வென்றுவிடலாம்.


42. வாழ்க்கை உரிமைகளுக்குரிய சமசந்தர்ப்பம் மனிதனுக்கு மாத்திரமன்று, விலங்கினத்திற்கும் இருக்க வேண்டும்.அதைப் பகிர்ந்தளிக்கும் தேசம்தான் தர்மதேசம்.

43. தங்கள் தங்களை இன்னும் ஆழமான ரீதியில் அறிவதற்கும், நாள்தோறும் கூடுதலான கர்ம சக்தியைப் பெறுவதற்கும் பழகிக் கொள்ள வேண்டும். சொந்தப் பிரச்சனைகளை நேரடியாக பார்த்தறிவத்ற்கும், அதைச் சுயமாகவே தீர்ப்பதற்கும் இதைத் தவிர வேறு வழியில்லை.

44. கிடைக்கும் சுதந்திரம், சந்தர்ப்பம் இவற்றை சரிவர உபயோகப்படுத்தத் தவறினால் அது மீண்டும் கிடைப்பதரிது.

45. இராவணன், கம்ஸன், துரியோதனன், சூரன் போன்றவர்களுக்குத் தண்டனைக்குப் பின்புதான் பாவ மன்னிப்புக் கிடைத்திருக்கிறது.

46. பொருளின் தாரதம்மியங்களைக் கொண்டு வாழ்க்கையின் உயர்வு தாழ்வை நிச்சயிப்பது மடமை.மனதின் தராதரத்தைக் கொண்டுதான் அதை நிச்சயிக்க வேண்டும். மனத் தெளிவுடையவனுக்கு இலாபமும் நஷ்டமும் ஒன்றேயாகும்.

47. தேவையானதை வைத்துத் தேவையில்லாததை விட்டுவிடும் இயற்கையான அறிவு சகல ஜீவராசிகளிடத்திலும் இயல்பாக அமைந்திருக்கிறது. மனிதனில் அது விவேகம் அல்லது பகுத்தறிவு என்ற சிறப்பான குணத்துடன் இருந்தும் பேராசையால் அது அறியப்படுவதில்லை.

48. மனம் எப்பொருளில் கலந்திருக்கிறதோ அப்பொருளின் வடிவம் கொள்ளும்.

49. மனம் ஒரு நுண்மையான பொருளாதலால் அதை முறையாக ஆராய்ந்தால் எளிதில் அறியக் கூடியதேயாகும். 










No comments: