Monday 23 September 2013
Ullathellaam ingonre
உள்ளதெல்லாம் இங்கொன்றே
ஆழ்துயில் தொட்டு அறிதுயில் மட்டும்
ஆத்மானுபவம் பட்டேன்
மூழ்வதுஎங்கே மீள்வதுஎங்கே
உள்ளதெல்லாம் இங்கொன்றே!
கருவறை தொட்டுக் கல்லறை மட்டும்
கண்ணிருந்தும் நான் குருடே
கருமையுமென்ன வெண்மையுமென்ன
காண்பதெல்லாம் இங்கொன்றே!
ஆராரோ தொட்டு அழுகுரல் மட்டும்
யாராரோ சொல்லக் கேட்டேன்
அறிவுரைஏது அருளுரைஏது
செவிடன் காதூதும் சங்கே!
பால்சுவை தொட்டு மதுச் சுவைமட்டும்
பலவித சுவைகளைத் தொட்டும்
இனிப்பது ஏது கசப்பது ஏது
சுவை அறியாத வாழ்வே!
பிறந்தமண் மணமும் இறந்தபின் மண்ணும்
பிழைபடா நாசியில் முட்டும்
சுகந்தங்கள் பாதி கந்தங்கள் மீதி
நுகர்ந்திடும் நுகர்வும் பொய்யே!
அன்னையின் ஸ்பரிசம் தந்தையின் ஸ்பரிசம்
ஆண்பெண் ஸ்பரிசங்கள் எல்லாம்
எல்லையில்லாத இன்பங்கள் தாமோ?
இல்லை இவையும் இங்கு பொய்யாமே!
பொய்மையில் தொட்டு மெய்மைக்கு மட்டும்
போவதே ஜீவனின் திட்டம்
அதில் உண்மையும்மில்லை பொய்மையும்மில்லை
உள்ளதெல்லாம் இங்கொன்றே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment