Wednesday 4 February 2015

ஞான மண்டலம் கதிர்காம க்ஷேத்திரம் - 11



#ஞான மண்டலம்
கதிர்காம க்ஷேத்திரம் - 11


சகடம் போன்ற வாழ்க்கையில் எதுவும் நிலையாய் நிற்பதில்லை. மாறி மாறி வரும் மாரியும், கோடையும் போன்று சுக துக்கங்கள் வந்தும் போய்க்கொண்டும் இருக்கின்றன. இது பிராராப்த நியதி.

மனிதர் எவ்வளவு விழிப்பாயிருந்து கருமங்களாற்றிய பொழுதிலும், சில சந்தர்ப்பங்களில் துன்பங்களும் கஷ்டங்களும் ஒன்றுக்கு மேல் ஒன்றாக வந்து, செய்வதென்ன என்று தெரியாமல் தடுமாறித் தளர்ந்து போகும் நிலை வருவதுண்டு.

மனிதன் தன் சக்தியும் தன்னறிவும் இழந்து, மனக் கலக்கத்துடன் வாழ வேண்டி வரும் பொழுது, புத்துணர்வுக்கும் மனச்சாந்திக்குமாக ஒரு புகலிடம் தேவைப்படுகின்றது.

புகலிடம்:


அந்தப் புகலிடங்கள்தான் நமது மத கேந்திர ஸ்தானங்களாகிய ஆலயங்கள். 

பாலைவன சஞ்சாரிகளுக்கு பாலைவனத்தில் தென்படும் பசுந் தரைகள் போன்று, ஜீவித யாத்திரையில் கலைத்து தளர்ந்து போனவர்களுக்கு குளிர்மையூட்டி அவர்களுடைய வாழ்க்கையில் மீண்டும் ஒருமுறை தன்னம்பிக்கையும் உயிரோட்டமும் உண்டாக்குகின்றன ஆலயங்கள்.

இவ்விதமான மகா மகிமை பொருந்திய ஆலயங்களில் அதிபிரசித்தமானது திருமுருகனின் அருள் கதிரொளி ஒளிர்ந்து கொண்டிருக்கும் கதிர்காம க்ஷேத்திரம்.

பல்லாண்டு உத்தம தவ யோகிகளின் தவச்சுவாளைகளா லும்,தன்னையே தஞ்சம் என்றெண்ணி வரும் தன் அடியவர்களுடைய பக்தி உணர்வளைகளாலும் உருவேறி நிற்கும் இந்த ஆலய சந்நிதியை நோக்கி இன்னும் எண்ணற்ற பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.

மனமுருகி தரிசனம் செய்கின்றவர்களுக்கு தரிசன சுகமும் கிடைக்கின்றது.

க்ஷணைராய் எங்கிருந்து எவர் எந்த வேஷத்தில் வந்தவராகிலும் சரி, மண்ணில் கலந்திருக்கும் ஈர்ப்புச் சக்தி போன்று அருள் காந்த சக்தி கலந்திருக்கும் கதிர்காம சன்னிதான முன்றலில் காலடி வைத்ததும் க்ஷணை மெல்லாம் தீர்ந்து புத்துயிர் பெறுகின்றனர்.

புலன்களைக் கவரக் கூடிய வெளிக் கவர்ச்சிகள்  ஒன்று மில்லாத அம்பலத்தில் மறை பொருளாகவே மறைந் திருந்து ஞானம் செங்கதிர் வீசிக் கொண்டிருக்கும் ஞானக் கனியாகிய சேவலனை ஒருமுறை உருகி நினைத்தாற் போதும் பலமுறை செய்த பாபங்கள் எல்லாம் உருகிவிடும்.

திருமுருகனாலயத்தைச் சுற்றிக் கிடக்கும் மணற் புழுதியில் அங்கம் பட உருண்டு வருகின்றவர்களுடைய அங்கத்தால் செய்த பாபங்கள் எல்லாம் தேய்ந்து தீர்கின்றன.

மருந்தாலும், மந்திரத்தாலும் தீராததெல்லாம் அங்கு தீர்ந்து   விடும். இப்புனித பூமியினின்றும், இருந்தும், படுத்தும் தியானிக்கிறவர்களுடைய மனத் துயரமெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் நொடிப் பொழுதில் மறையும்.


பாத யாத்திரை:


வட மாகாணத்திலிருந்து முருக பக்தர்கள், சுமார் இரண்டரை மண்டல காலம் விரத, நோன்புகளுடன் பாத யாத்திரை செய்து கதிர்காம ஆலயத்தை அடைந்து வழிபாடியற்றும் தியாக பூர்வமான ஒரு பக்தி நெறி வேறெங்கும் காண முடியாததும், கதிர்காம முருகனுடைய ஏக சைதன்ய சக்தியால் மாத்திரம் உருவாகிய ஒரு பெரும் சாதனையாகும்.

பாத யாத்திரையில் பங்கு கொள்ளும் பக்தர்கள், வைகாசி பூரணையன்று வற்றாப்பளை அம்பாள் ஆலயத்தில் ஒன்று சேர்ந்து அன்றைய தினம் அங்கு நிகழும் பொங்கல், பூஜைகளில் பங்கெடுத்து அம்பாளை வழிபட்டு அங்கிருந்து யாத்திரையை ஆரம்பிக்கின்றனர்.

கரையோரமாகச் செல்லும் இந்த ஸ்தல யாத்திரைக்கார ருக்கு வழி நெடுகிலும் வேளா வேளைக்கு அமுதும், தான தர்மங்களும் குறைவில்லாமல் கிடைக்கின்றன.
பொத்துவில் வரையிலும் இது நடைபெறும். பொத்துவிலில் இருந்து புறப்பட்டு சின்னக் கதிர்காமம் போலகே காட்சி அளிக்கும் உகந்தமலை முருகனை வழிபட்டு, அங்கிருந்து அடர்ந்த வனங்கள் வழியாய், கொடியேற்ற தினத்தில் கதிர்காமம் சென்றடைகின்றனர்.

யாத்திரையின் பயன்:


இந்தப் புண்ணிய யாத்திரையின் பயனாக தீராத கர்ம வியாதிகள் தீர்ந்தவர்களையும், நீண்ட நாள் கிரக பீடைகளாலும் கடும் துன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுடைய துயரம் தீர்ந்து, உடலாலும் உள்ளத்தாலும் சுகத்துடன் வாழ்கின்றவர்களையும் நேரிற் பார்த்திருக்கின்றோம்.

இரண்டு மண்டல காலத்திற்கு மேல் நீண்டு நிற்கும் இந்தப் பாத யாத்திறரின் மகா விரதம் கதிர்காம மாணிக்க கங்கையில் தீர்த்தமாடுவதுடன் முடிவடைகிறது.

தான் இதுவரை தூக்கித் திந்து வந்த வினைப் பொதிகளை ஸ்ரீ முருகன் திருமலரடியில் சமர்ப்பணம் பண்ணி; கலை தீர்ந்தவராய் உள்ளக் களிப்புடன்; வீடு திரும்புகின்றனர்.

ஞான மார்க்கத்திற் சென்று தம்மைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியாத பாமர மக்களுக்கு கதிர மழைக் கந்தன் தனது பெருங் கருணையால் இவ்வாறொரு, இலகுவான வழியைக் காட்டி பேரருள் பொழிந்து வருகின்றான்.

இதை உணர்ந்து அவனது அருளமுத மழைத் தூறலில் நனைந்து சென்று ஜென்ம கிலேசங்களைத் தீர்த்து கடைத்தேறுவீர்களாக.

No comments: