Friday, 7 November 2014

ஞான சுகம்


உலகம் நியதி தவறாமல் போய்க்கொண்டிருக்கின்றது. அதில் பிசகேற்படுவதில்லை. பிசகு இருந்தால் அது நம்முடையதன்றி உலகத்தினுடையதல்ல. ஒவ்வொருவரும் வைத்துப் பார்க்கும் கண்ணாடியின் நிற வித்தியாசத்திற்குத் தக்கவாறு எல்லாம் காட்சியளிப்பதன்றிச் சத்தியம் ஒன்றேதான். சத்தியம் இன்னதென்று மனதில் தெளிந்தால் வித்தியாசமாய்த் தோன்றியதெல்லாம் ஒன்றின் பிரதிபலிப்பென்ற உண்மையை விளங்க வேண்டும். இது விளங்கினால் மனிதனின் குதர்க்க சுபாவங்கள் தீர்ந்து சந்தேக நிவர்த்தி வரும்.மனத்திற்கு சாந்தியும் கிடைக்கும். சத்தியம் தெளிந்து நேர்முக ஞானம் வந்தால் கலக்கமெல்லாம் தீரும். கிலேசமிராது. இது விளங்குவதற்கேற்ற முறையில் வாழ்க்கையைத் திருத்தி அமைப்பதுதான் புருஷ தர்மம்.

மது, மாமிசம், விபச்சாரம், கொலை, களவு, கொள்ளை, இலஞ்சம் போன்ற மகா பாவங்களை அடிமனதிலிருந்து அறவே விளக்கி உண்மையைப் பேசித் தர்மத்தின் வழி வாழவேண்டும்.அசுத்தங்களை மனதில் வைத்து இறைவனை வழிபட்டால் அது கருணை காட்டாது. இரக்கமும் கொள்ளாது. மனதிலிருந்து கழிவுகளை நீக்கி வஜிபாடியற்றினால் ஆகாததும் ஆகும். வேண்டி நின்றால் பெரும் ஞானமும் கிடைக்கும். இந்த ஞானம் வெளிப்படும் வரையில் இருளில் தடவித் திரியும் குருடனைப் போன்றுதான் வாழ்க்கையும், வாழ்க்கை அனுபவங்களுமிருக்கும்.ஆகையால் குருடனைப் போன்று தட்டுத் தடுமாறி வாழ்ந்து மடியாமல் இருட்டிலும் ஒளி விட்டுக்கொண்டிருக்கும் சர்ப்ப மணி போன்று மாயா இருளடைந்த இந்த மயக்க உலகத்தில் ஞான ஒளியின் துணையால் சேர வேண்டிய கரையைச் சேர வேண்டும். இதற்காகத்தான் மனிதன் இங்கு தோன்றியிருக்கிறான். இந்த மேலான ஞான நிலவில் இளைப்பாறியிருந்தால் பிறவிக் கிலேசங்களெல்லாம் தீரும். ஆத்மாவுக்குப் பரம திருப்தியும் சுகமும் கிடைக்கும். கண் கூசாத இந்த நிழலிலிருந்து பார்த்தால் உலகத்தின் திருகுதாளங்கள்       எல்லாம் விளங்கும். அது விளங்க ஞானம் ஸ்திரப்படும். இது ஸ்திரப்படும் வரையில் ஜென்ம கிலேசம் இருந்தே தீரும். இவையெல்லாம் பலரும் பலகாலமாய்க் கெட்டுப் பழகிய பாடங்கள். இருந்தும் ஏதோ ஒருவனுக்குத் தவிர மற்றவர்களுக்கு இதில் உள்ளார்வம் உண்டாவதில்லை. அதற்குத் தக்க காரணம் உண்டு. புண்ணியக் குறைவு அதுதான் காரணம். அதனால் அந்த ஆர்வம் இல்லாதவர்களுக்கு ஞான வாசனை வருவதற்கு நிறையப் புண்ணிய கருமங்களைச் செய்து வரவேண்டும். கடுகளவேனும் சுயநலமில்லாமல் புண்ணிய சீலராய் வாழ்ந்தால் ஒரு நாள் ஞானக் கதவு நிச்சயம் திறக்கப்படும்.

மரங்கொத்திப் பறவை என்றொரு பறவை இருக்கின்றது.அதற்கு நல்ல மரத்தில் கூடுகட்டி முட்டையிட வேண்டுமென்றொரு ஆசையிருப்பதால் நல்ல மரங்களைத் தேடி எல்லா மரங்களையும் கொத்திப் பார்த்துக் கொண்டு திரியும். ஒரு மரத்திலும் திருப்தி வருவதுமில்லை.இதற்கிடையில் ஆகாயத்திலே முட்டையும் போட்டு முட்டை கீழே விழுந்து உடைகின்றது. இதைப் போலவே மனிதனும் எல்லாவற்றையும் ருசிபார்த்துத் திரிகிறான். ஒன்றிலும் போதும் என்ற திருப்தியும் சுகமும் உண்டாவதில்லை. நிரந்தரமான திருப்திக்குரிய ருசி எதிலிருகின்றது என்று அறிவதற்கிடையில் மரணம் மனிதனைக் கௌவிக் கொள்கின்றது. இதே நிலை மாறி மாறி நிகழ்ந்து கொண்டிருப்பதால் ஜீவனுக்கு ஈடேற்றங் கிடைப்பதில்லை. எத்தகைய சுகங்களை அனுபவித்தாலும் அவற்றிலெல்லாம் ஒரு பற்றாக்குறை அல்லது ஒரு திருப்திக் குறை இருப்பதாகத் தோன்றும். அந்தப் பற்றாக்குறைதான் ஜீவிதாசைகளைப் பரிபூரணப் படுத்தும் ஞானம். ஞானம் மிளிர்ந்தால் குறையிலும், நிறையிலும் நிரந்தரமான திருப்தி, நிரந்தரமான சுகம். இந்த அனுபவத்திற்கு வரவேண்டிய மனிதர் மரங்கொத்திப் பறவையைப் போல் வாழ்வதென்றால் அது பெரும் சங்கடத்தில் முடியும்.மனிதருடைய முயற்சியின்பங்களுக்குப் பரிபூரணத்துவம் வராது. ஆகையால் ஜென்ம சுகம் சம்பூரணமடைவதற்கு நேர காலத்துடன் ஞான வழியில் முயற்சிக்க வேண்டும். முகத்தில் தாக்கப்படும் அலை உணர்வுகளைக் கொண்டு அனுகூலப் பிரதிகூலங்களை அறிந்து வாழும் வௌவால் போன்று மனிதன் தான் மெய்யுணர்வு அலைகளுக்குள் ஐம்புல வாசனைகளைச் சுருட்டி எறிந்தால் மெய்யுணர்வு அலைகள் அவனை ஞானக் கரையில் ஏற்றி விடும். இனிமேலாவது கிடைத்த ஜென்மத்தைப் பாழாக்காமல் உறுதியான வைராக்கியத்துடன் அப்பியாசித்து ஞானமாகிய பெரும் பேற்றைப் பெறுக.



Sunday, 2 November 2014

ஞான மண்டலம் 2





மனிதன் என்ற சொல்லுக்கு அர்த்தமென்ன? எதை ஆதாரமாக வைத்து இச் சொல் வழங்கி வருகின்றது. கை, கால், கண் என்பவற்றுடன் ஒன்பது துவாரங்களுடன் கூடிய உயிர்த் துடிப்பிருக்கும் வெறும் ஒரு மாமிச பிண்டத்தை மாத்திரம் கருத்தில் கொண்டுதானா இப்பெயர் வழங்கி வருகின்றது? அல்லது அதைவிட ஆழமும் விசாலமுமான பொருள் வேறேதுமிருக்கின்றதா?ஒரு இயந்திரத்தை சரியான முறையில் இயக்குவதற்கு அதை பற்றிய தக்க அறிவிருந்தாற்றான்முறையாக அதனை இயக்க முடியும். அதேபோன்று மனிதன் தன்னைப் பற்றிய தெளிந்த ஞானமுடையவனாயிருந்தாற்றான் வாழ்க்கை என்ற இயந்திரத்தை நெறி தவறாமல் இயக்க முடியும். தற்சமயம் கல்வி முறைகள் உலகாயதப் பொருள்களை அறிவதற்கும் அதைச் சம்பாத்தியம் பண்ணுவதற்கும் உபயோகப்படுமே தவிர மனிதன் தன்னையும் தன் வாழ்க்கையைப் பற்றியும் அறிவதற்குச் சிறிதளவேனும் பயன்பெறக் கூடிய வகையிலில்லை. ஜீவிதத்தைப் பற்றிய யதார்த்த ஞானக் குறைவுதான் தனி மனிதனிலிருந்து சமுதாயம் முழுவதிலும் தோன்றிக்கொண்டிருக்கும் சகல சங்கடங்களுக்கும் மூலகாரணம். மனிதன் தெளிந்த தன்னறிவின் ஒளியைக் கொண்டு வாழ்க்கையைப் பார்க்க வேண்டும். அதன் வெளிச்சத்தில் தேட வேண்டியதைத் தேடியெடுத்து அனுபவிக்க வேண்டும். மனிதன் இவ்வழியில் வாழ்ந்தால் ஜீவிதம் சம்பூரண சுகமுடையதாய் அமையும்.

மனத்தைக் கொண்டு வாழ்பவன் மனிதன் ஆகையால் "மனம் போல மாங்கல்யம்" என்றதோர் பழமொழியும் இருக்கின்றது. மனம் மனிதனை ஆளாமல் மனிதன் மனத்தை ஆளுகின்ற திறமையும் சக்தியும் பெற்றால் வண்டரிக்காமல் பூத்து மலரும் நறுமலர் போன்று வாழ்வும் ஆனந்தப் பொன்மலராய் மலர்ந்து மணம் கமழும். மனம் என்ற பொருளை உன்னிப் பார்க்குக. அதில் சந்தோஷம், திருப்தி, அன்பு,ஐக்கியம் போன்ற பசுமையான சுகவுணர்வுகளும், பகை, பொறாமை, சினம், கோபம், வஞ்சனை முதலிய புன்னெறி உணர்வுகளும் நீர்க் குமிழி போன்று மறைவதும் தோன்றுவதுமாயிருப்பதை அவதானிக்கலாம்.இத்தகைய நல்லதும் கெட்டதுமாகிய எண்ணரிய எண்ணங்களின் பிரதிபலிப்பால் மனதின் சமநிலை அல்லது ஏகாக்கிருகை கலைந்து இயல்பான சாந்தியும் சுகமும் இழக்கப்படுகின்றது.மனம் குழம்பினால் ஜீவிதம் குழம்பும். சாசுவதமான இன்பத்தையும் அறிவாற்றலையும் செல்லரித்து விடுகின்ற உணர்வலைகளின் தாக்கம், மனிதனை வாழ்க்கையின் யதார்த்த வசங்களிலிருந்து இருளடைந்த மாயா மார்க்கங்களுக்குத் திசை திருப்பிவிடுகின்றது.

தூலப் பிராண சக்தி மனதைத் தாக்கும்பொழுது வெடித்துச் சிதறிப் பறந்து திரியும் பஞ்சுத் துகள்கள் போன்று மனமும் சிதறி விடுகின்றது. சிதறிய மனம் தொட்டடுத்து நிற்கும் விஷயாதிகளில் கலந்து அதனதன் குணரூப வடிவங்கொண்டு அதற்கேற்ற சுகதுக்கங்களை அனுபவித்து நிற்கும். புல்லுருவி போன்ற மனம் எதில் கலந்து நிற்கின்றதோ அதன் வடிவங் கொள்வதுதான் மனதின் இயல்பு. இப்படி விஷய வாசனைகளில் சென்று விழுந்த மனம் வாசனா குனங்ககளாகிய எண்ணச் சுழலில் சுழன்று சுழன்று சமுத்திர அலைகளிலகப்பட்ட றப்பர்ப் பந்து போன்று அங்குமிங்குமில்லாத நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும். இதுதான் பெரும்பாலும் மனிதருடைய மானசீக அனுபவம். சகாராப் பாலைவனங்களில் ஒரு வகையான நீண்ட முள்ளுடைய முட்செடிகள் இடையிடையே முளைத்து வருகின்றன. அங்கு வாழும் ஒட்டகங்கள் அச் செடியின் முட்களுக்கிடையிலிருக்கும் பொடியிலைகளைத் தின்ன முயற்சிக்கும்பொழுது முகத்தில் முட்கள் குத்தி இரத்தம் தாரை தாரையாக வழியத் தொடங்கும். இரத்தம் வழிய வழிய ஒட்டகம் அதைத்தான் தின்ன முயற்சிக்குமே தவிர தின்னும் ஆசையை விட்டுவிட மனமில்லாமல் அங்கேயே மாண்டு மடிகின்றது.இதைப் போன்றுதான் சிற்றின்பப் பற்றுடைய மனிதனின் நிலையும். ஆயினும் மனிதன் பகுத்தறிவற்ற மிருகமல்ல.பகுத்தறியும் விவேகமுடையவன்.நிலையற்ற அற்ப சுகங்களில் மயங்கி கைக்கெட்டியது வாய்க்கெட்டாமலும், வாய்க்கெட்டியத்தை உட்செலுத்த முடியாமலும் வேதனைப்படும் பாரிசவாத நோயாளிகளைப் போன்ருதானா பெரும் பெருகளையுடைய மனிதன் வாழ்ந்து மடிய வேண்டும்.

எண்ணங்களை வைத்துக் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கும் மனதை அவ் விளையாட்டரங்கினின்றெடுத்து ஆத்மாவின் பிரசாந்த மதுரமயமான வெளியரங்கில் வைத்து வாழுகின்ற மனிதன்தான் மனிதன். இதற்குரிய சக்தி மனிதனுக்கில்லை எனினும் மனிதனில் அது இருக்கின்றது.நீரில் கலந்திருக்கும் பால்போன்று மனதில் கலந்திருக்கும் அந்த மகா சக்திக்குக் கீழ்ப் பணிந்து அதன் வழி நடத்தலுக்கு நம்மை ஆளாக்கிக் கொண்டால் மார்க்க தரிசனம் சுகமாயிருக்கும்.அப்பெருஞ் சக்தியின் அருளாசியால் மனதை மாயா மயக்க உணர்வு மண்டலத்திலிருந்து ஆனந்தமயமான ஞானப் பேருணர்வு மண்டலத்தில் நுழைய விட்டால் அம மண்டலத்தின் ஈர்ப்புச் சக்தியால் ஈர்க்கப்பட்டு அது அங்கேயே சஞ்சாரஞ் செய்துகொண்டிருக்கும்.சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கும் பூமியும் இடையிடையே சூரியனை அண்டி வருவது போன்று இறையழகொழுகும் ஞானமய மண்டலத்தையடைந்த மனமும் அங்கேயே சுற்றிச் சுற்றி இறுதியில் அம்மண்டல ஞான பிந்துவாயொளிரும் சர்வேஸ்வரனில்,நீரில் கலந்த உப்புப் போன்று இரண்டறக் கலந்து விடுகின்றது. இதுவே யோகம் என்பது.இதற்குப் பின் மனம் ஒரு பொழுதும் இந்தக் கர்ம பூமியை நோக்கித் திரும்பி வருவதில்லை. ஜீவன் எண்ணற்ற ஜடங்கள் வழி பிரயாணம் செய்து தனது யாத்திரையை இனிது முடிக்கின்றது.சாயுச்சியமென்ற இந்நிலையை ஜீவன் அடையும் பொழுது ஜீவனின் வளர்ச்சி பரிபூரணமடைகின்றது.உயிகள் இயறகையாகவே ஒருநாள் இந்நிலையை அடைந்துதானாகவேண்டும். ஆயினும் விவேகமுடைய மனிதன் சம்சார சாகரத்திலிருந்து விரைவில் கரையேறுவதற்கு முயற்சி என்பதொன்று அவசியம் இருந்துதானாக வேண்டும்.இயற்கை நியதிகளுடன் தான் முயற்சியும் சேரும்பொழுது நீரும் உரமும் போட்ட செடியின் வளர்ச்சி துரிதப்படுவது போன்று ஜீவனுடைய வளர்ச்சியும் துரிதமடைகின்றது.இதற்காகத்தான் ஆத்மீக சாதனைகள் உருவாக்கப்பட்டிருகின்றன.

ஆத்மீக சாதனைகளென்றால் யோக ஞான மார்க்கங்களென்று மாத்திரம் கருதக்கூடாது. சமயாசார அனுஷ்டானங்களும் ஏனைய வழிபாட்டு முறைக்களெல்லாம் இதனை ஆதாரமாகக் கொண்டவை. ஆகையால் இதுதான் சரி, மற்றவையெல்லாம் பிழையென்று கூறுவதற்கில்லை. அவரவர்களுடைய பக்குவத்திற்கும் ருஜிக்கும் ஜீரண சக்திக்கும் ஏற்றவாறு எந்தவொரு மார்க்கத்தை வேண்டுமானாலும் கடைப்பிடித்தொழுகலாம்.செய்யும் சாதனைகள் உயிரணுக்களைத் தொடும் வண்ணம் செய்யப்பட்டால் எந்தவொரு சாதனையிலும் நிச்சயம் சித்தி கிடைக்கும்.கண்ணப்பர், சபரி, ஹனுமார், குகன் போன்றவர்கள் இதற்கு உதாரணமாயிருக்கின்றனர்.

எண்ணங்களாகிய சித்த விருத்திகளால் ஜீவன் சம்சார துக்கத்தை அனுபவிக்க வேண்டியிருக்கின்றது. சித்த விருத்திகளைத் தடை செய்தால் கிரகண பீடை நீங்கிய சந்திரனைப் போன்று மனம் ஒரு நிலைப்பட்டு ஒன்றாக பிரகாசிக்கும். தெளிந்து அசைவற்றிருக்கும் மனதில் பிரமப் பிரகாசம் தானாகவே ஒளிரும். இந்த ஒளியின் மகிமையால் கவரப்பட்ட மனம் காலக் கிரமத்தில் அதனில் கலந்து அது மயமாய் விடுகின்றது. இதுதான் பிறவிப் பேறென்று சாஸ்திரங்கள் புகழும் சாயுச்சியம் அல்லது முக்தி பதம்.நமக்கு அரிய மனித ஜென்மம் கிடைத்திருப்பது எதற்காகவென்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். பஞ்சமா பாதகங்களால் ஐம்பொறிகளையும் கெடுத்து ஜென்மத்தையும் பாழாக்கிவிடுவதற்காகவா?அல்லது கித்த ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்காகவா? இதனைப் பகுத்தறிய முடியாத ஜென்மம் பாபக் கறை படிந்ததேயாகும். சிந்தித்துத் தெளிவடைந்து கடைத்தேற முயற்சிக்க வேண்டும். வானம்பாடி வானத்தில் பறந்து திரியும் பரவையாயினும் பூமியில் இறங்கித்தான் இரை தேடுகின்றது. மனிதனும் தனது மனதை இறை மண்டலத்தில் சஞ்சாரம் செய்யவிட்டு இந்த கர்ம பூமியில் வாழும் வரை தன் தன் கர்மங்களைச் செவ்வனே செய்ய வேண்டும். முயற்சிக்கு முன்னுக்கும்,முயர்சியின்மைக்குப் பின்னுக்கும் கடவுள் நிற்கின்றார் என்பதை உணருவாயாக! பேசுவதிலும் கேட்பதிலும் வாசிப்பதிலும் மாத்திரம் நிற்காமல் சிறிதேனும் சாதனை செய்து பயனடைவாயாக!







Wednesday, 23 July 2014

ஞான மண்டலம்


விஞ்ஞானம் இப் பூவுலகத்திற்குப் புதியதாய் வந்த தொரு நவீன சாஸ்திரம் என்று கருதுவது பிழை. இதற்கு முன்பும் அது அநேக தரம் வந்தும் போய்க் கொண்டு மிருந்திருக்கின்றது. மின்சார சேமிப்பு நிலையங்கள் வெறும் சேமிப்பு நிலையங்களே தவிர, உற்பத்தி நிலையங்க ளல்ல. அது வேறொரு இடத்தில் உற்பத்தியாகிச் சேமிப்பு நிலையங்களுக்கு வினியோகிக்கப்படுகின்றது. விஞ்ஞான அறிவும் மனிதர்களுடைய மூளையிலிருந்துதான் உற்பத்தியாகின்றதெனக் கருதுவது மிகத் தவறு.வெறும் ஜடப் பொருளாகிய மூளை அறிவு மண்டலத்தில் ஒரு வானொலிப் பெட்டியின் 'வாலப் f' போன்றது. அதற்கு மேற்பட அதற் கொரு ஸ்தானமும் உபயோகமுமில்லை. அப்படியென்றால் இந்த அறிவெல்லாம் மூளைக்கு எங்கிருந்து வருகின்றது? பிரபஞ்சத்தின் கருவூலத்தில் இருக்கும் ஞானமய கோசத்திலிருந்து உருவாகி எமது பிண்டத்திலிருக்கும் ஞானமய கோசத்தின் வழியாக மூளைக்குச் செல்கின்றது. இந்த உண்மையை உணராமல் மனிதருடைய மூளைதான் விஞ்ஞானம் முதலிய அறிவுக்கு மூலகர்த்தா என்று நினைக்கும் பொழுது அவனுக்கொரு அகந்தை வருகின்றது. நான்தான் சிருஷ்டி கர்த்தா என்பதுதான் அந்த அகந்தை. இந்த ஆணவத் திமிர்தான் பொல்லா வினைகளை வரவழைக்கின்ற பெரும் பூதங்கள். மனிதன் காரண காரியங்ககளைப் பற்றிய யதார்த்த அறிவுடையவனாகும் பொழுது பெரும் குழப்பங்களை விளைவிக்கின்ற இந்த ஆணவத் திமிர் தானாகவே ஒடுங்கி ஒழியும்.

குறியில்லாமல் அம்பெய்தால் எய்த அம்பால் ஆபத்துக்களே விளையும். இவ்வாறானதுதான் வாழ்க்கையும். மனிதன் ஒரு உயர்ந்த இலட்சியத்துடன் வாழ வேண்டும். அன்றாடக் கடமைகளை இலட்சியத்தில் பொருந்தும் வண்ணம் செய்து கடமையின் பலாபலனாகிய இன்ப துன்பங்களை இலட்சியத்துக்காக சமர்ப்பணம் பண்ணவேண்டும்.இவ்விதம் வாழுகின்றவன் சீரிய குறிக்கோளையடைந்த ஒரு பெருமகனுக்குரிய சுதந்திரத்தையும் சுகத்தையும் அனுபவிக்கிறான்.

ஞானம் இதுதான் இலட்சியங்களில் சிறந்த இலட்சியம்.ஜீவித தர்மங்கள் இந்த இலட்சியத்துடன் இணையாவிட்டால் வாழ்க்கையின் அச்சாணி உடையும். பணமும் பொருளும் வாழ்க்கைக்கு அவசியமான போதினும் மனிதன் வெறும் பொருளாதாரப் பிராணியாக மாறுவது ஆபத்தானது. ஜீவாதாரத் தேவைகளில் தன்னிறைவெய்தினாற் கூட மனிதன் திருப்திப் படுவதில்லை.அதற்கப்பால் ஒரு இருதய தாகம் இருக்கிறது. மனிதருடைய மன வேட்கைக்கு முடிவு காணும் அந்த அந்தரங்க ஆத்மீக மூல உணர்வுகளை மனித சமுதாயம் புறக்கணிக்கும் போது நீர் வற்றி வரண்டுபோன குளத்தை விட்டு நீர்ப்பறவைகள் பறந்து செல்வது போன்று அமைதியும் அகமும் உலகத்தை விட்டுப் பறந்து செல்கின்றது. மனித இருதயங்கள் ஞான கலசங்கலாகப் பரினமிக்கும்போது சமுதாயங்களுக்கிடையில் தெய்வீக உறவு நிலவுச் சாந்தியும் சமாதானமும் வேரூன்றித் தழைக்கும்.

ஒரு ஆசிரியர் தனது மாணாக்கர்களின் கல்வித் தராதரத்தை அறிவதற்காக இடையிடையே பல சோதனைகளை நடத்துகின்றார். மாணாக்கர் கற்ற கல்வியில் எவ்வளவு துரம் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதைத் திட்டவட்டமாக ஒரு ஆசிரியருக்கு கிரகிக்க முடியாமையால் ஒரு பரிட்சை மூலம் கிரகிக்க வேண்டியிருக்கின்றது. இறைவனும் தனது பக்தர்களை அடிக்கடி சோதனை செய்து பார்க்கின்றார் என்பது இறை பக்தர்களின் நம்பிக்கை. இறைவனோ சர்வக்ஞன். எல்லாம் அறிபவனாகிய இறைவனுக்கு சோதனையென்றொரு மத்திமம் மூலமாகவா பக்தர்களின் உள்ளத்தை அறியவேண்டும்? முக்காலமும் உணர்ந்த முழு முதல் மூர்த்திக்கு நமது மனதிலிருக்கும் அதி சூக்குமமான அசைவுகளைக் கூட சொதனையொன்றுமில்லாமலே நன்கு அரிய முடியும். பின்னர் நம்மையெல்லாம் சோதிப்பது எதற்காக? அது நம்மை நாம் அறிவதற்கு. மற்றொன்றுக்குமாகவல்ல. இதை உணர்ந்தவர்களுக்குத் துன்பமும் துயரமும் இல்லை. மனக் கலக்கம் அன்னவர்களைத் தீண்டுவதுமில்லை.தெய்வம் நம்மை வருத்துவதன் நோக்கத்தை உணர்ந்து அதற்குக் கீழ்ப்படிந்து வாழ்கின்றவர்கள் ஞானத்தின் ஏழு படிகளாகிய சுபேச்சை, விஜாரணை, தனுமானசி, சத்துவாபத்தி, அசம்ஸத்தி, பதார்த்தாபாவனை, தூரியம் என்ற ஏழு நிலைகளையும் கடந்து சாயுச்சியம் என்ற பரம பதத்தை அடைகின்றனர்.

துரியோதனன் முழுமுதற் கடவுளாகிய கார்வண்ணனைத் தரிசித்தவன். அவன் ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய முப்பெரும் சக்தியை உணர்ந்திருந்தான். அது மாத்திரமல்ல. தினசரி ஸ்ரீ கிருஷ்ணனுடன் உறவாடும் அரிய சந்தர்ப்பங்களும் துரியோதனனுக்குக் கிடைத்திருந்தது. கிடைப்பதற்கரிய பெரும்பேறு அவனுக்குக் கிடைத்திருந்தும்,இறையவதாரமாகிய ஸ்ரீ ஹரிக்கு எதிர்மாறாகவே செயல் புரிந்தான். இறுதியில் பகவானுடைய பகைவனாகவே மாறிவிட்டான். படைத்தல், காத்தல்,அழித்தல் போன்ற முப்பெரும் சக்தி வாய்ந்த இறைவனுடன் நேர்முகமாகப் பகை கொள்வதற்குரிய துணிச்சல் எவ்வாறு உண்டாயிற்று? அவனுடைய கடும் ஆணவத்தாலும் பேராசையாலும் அந்தத் துணிச்சல் உண்டாயிற்று. இவ்விரு கொடிய குணங்களால் அவனுடைய ஆட்சியும் அந்தஸ்த்தும் உயிரும் பறிக்கப்பட்டன. உலகம் எத்தகைய நற்பேறுகள் எய்தினாலும்சரி, ஆணவத் திமிரும் பேராசையும் அடங்காவிட்டால் துரியோதனன் கதை போன்றுதான் முடியும். புராண இதிகாசங்களும் சரித்திர வரலாறுகளும் இதனை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.


சரணாகதி 


பல ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பயனாக ஒருவருடைய மனதில் பகவத் பக்தி தோன்றுகிறது. களஞ்சியத்தில் கிடக்கின்ற வித்து, அங்கு கிடந்தபடி முளைவிட்டுக் காய்த்துப் பலன் தருவதில்லை. பண்படுத்திய நிலத்தில் விதையை விதைத்து,நீரிறைத்து உரமும் போட்டுப் பக்குவமாய் வளர்த்தெடுத்தால்தான் அது பலன் தருகின்றது.
அதே போன்று, மனிதனுடைய மனதில் பீஜாவஸ்தையில் இருக்கின்ற பக்தியுணர்வை, ஞானானுஷ்டானங்களால் விருத்தி செய்து இறையருளைப் பெறவேண்டும்.
இந்தப் பிரதான தர்மத்தில் யாதொரு முயற்சியும் செய்யாத ஜனங்கள், கற்பூரம் கொளுத்தி,தேங்காயுடைத்து ஒரு தோத்திரத்தையும் பாடினால், ஆகாத காரியமெல்லாம் கடவு ஆக்கித் தரவேண்டுமென்று எண்ணுகின்றனர்.இந்த லட்சணத்தில்தான் அநேக பக்தர்களின் பக்தி விசுவாசங்கள் இருக்கின்றன.



துரியோதனாதியர் பாஞ்சாலியை வஸ்திராபகரணம் செய்தபோது ஒரு கையால் சேலையைப் பிடித்தபடி, மற்றக் கை உயர்த்தி கண்ணா! கண்ணா!! என்று அரற்றி அழுதாள். கண்ணன் வரவேயில்லை. இறுதியில் இரு கரங்களையும் உயர்த்தி, நெஞ்சுருகி அழுத் பொழுதுதான் கண்ணன் தரிசனம் கொடுத்தார்.
பாஞ்சாலியைப் போன்று தன்னை மறந்து, கண்ணை இழந்த நிலையில் கடவுளிடம் சரணாகதி அடையும் மனப் பக்குவம் நமக்கு வரும் பொழுது மாத்திரந்தான், இறைவனுடைய அருளாசிகள் கிடைக்கும்.

கடவுள் நமக்கு எல்லாவற்றையும் தருவார் என்ற நம்பிக்கையைவிட, எல்லாம் தந்திருக்கிறார் என்ற உண்மையை உணரும் பொழுது, எல்லாம் நமக்கு முன்னே இருப்பதாகத் தெரியும்.

நாம் இப்பூமண்டலத்திற்கு வருமுன், சீவியத்திற்குத் தேவையானவற்றை எல்லாம் ஒரு குறையும்மில்லாமல் நமக்கு முன்னே ஆக்கி வைத்தபின்தான் எங்களை இறைவன் இங்கு இறக்கி விடுகிறான்.

கர்ப்பப் பையிலிருந்து வெளிவரும் குழந்தைக்கு பசி, தாகம் தணிப்பதற்குரிய பாலமுதைத் தாயினுடைய தனத்தில் சுரக்க விட்ட பின்புதானே குழந்தையும் வெளிவருகின்றது.

இவ்வளவு தூரம் பெருங் கருணை காட்டிப் பாதுகாப்பளிக்கின்ற இறைவனுடைய மகா தயாள குணத்தை ஒரு கணம் நினைத்தால் போதும், மனம் அவன்பால் பற்றிப் பக்திமயமாவத்ர்கு.

இவ்வாறு உயிரினங்களை மறவாது கருணை கூர்ந்து சம்ரக்ஷனை செய்து வருகின்றவனை மறுத்து, கர்வங்கொள்கின்ற பொழுதுதான் வினையும் வந்து சூழ்கின்றது.அடுத்தவருக்கு ஒரு சிறு உபகாரம் செய்தால் அதற்கு பிரதிபலனை மனிதர் எதிர் பார்க்கின்றனர்.கிடைக்காதவிடத்தில் அவர்களை நன்றி கெட்டவர்களாகவும், பெரும் பகைவர்களாகவும் கருதிக் கொள்கின்றனர். அவ்விதமாயின் மனிதரைப் படைத்து, இமைப் பொழுதும் மறவாமல் காத்து வருகின்ற இறைவனுக்கு நெஞ்சார உபசாரம் செய்யாவிட்டால் அவனுக்கு மனிதர்கள் நன்றி கெட்டவர்களாகவும், பகைவர்களாகவும் தானே இருக்க வேண்டும். ஆனால் இறைவன் நம்மவர்களைப் போன்று அப்படியெல்லாம் நினைப்பதில்லை.

அவன் தன்னை நினைப்பவருக்கும், நினையாதவருக்கும் தன்னுடைய கருணா கடாக்ஷத்தைச் சமமாகப் பொழிகின்ற பெருங் குணமுடையவன்.

மனப் பயம், மனக் கலக்கம் வரும் பொழுதும், வராத பொழுதும் அவனையே தஞ்சமெறெண்ணி நின்றால் பொல்லாப்பு அகன்று வாழலாம்.

மனம் நொந்து போய்த் தளர்ந்த நிலையில் இறைவன்பாற் கொள்ளும் சரணாகதியைத் தவிர, மனத் துயரம் தீர்ப்பதற்கு வேறென்ன வழி? வரேன்ன கதி? இதனை மக்கள் நன்கு சிந்தித்து செயல் பட்டால், முக்தி இன்பம் பெறலாம் என்பது திண்ணம்.

Friday, 16 May 2014

அசாதாரணமான ஒரு சாதாரண மனிதர்



பேராசிரியர் சி.சிவசேகரம் அவர்களால் எழுதப்பட்டது.

அசாதாரணமான ஒரு சாதாரண மனிதர் 

இயற்கை அற்புதமானது. அதன் விதிகள் அற்புதமானவை. அவற்றை மீறிய நிகழ்வுகள் என்ற வகையில் அற்புதங்கள் என எதுவும்மில்லை. நாம் இயற்கையை அறிய அதன் விதிகளை அறிய முயல்கிறோம். அதேவேளை அவ்விதிகளை மீறும் அற்புதங்களுக்காக காத்திருக்கிறோம்.அவற்றை நிகழ்த்துவதற்கு இயற்கையில் மிக சாதாரணமான படைப்பான மனிதரிடையே எவரையாவது எதிர் நோக்கி இருக்கிறோம். ஜோசியக்காரர்கள் வருகிறார்கள். வித்தைக்காரர்கள் வருகிறார்கள். துறவு வேடம் பூண்டோர் வருகிறார்கள். நாம் அவர்களிடம் மயங்குகிறோம். பகுத்தறிவுக்கு எட்டாதது என்று நாம் கூறும் பரம்பொருளின் இருப்பை நிலைநிறுத்த தர்க்க முறையிலான வாதங்களையும் விஞ்ஞானத் தகவல்களையும் துணைக்கு அழைக்கிறோம். மனித இருப்பு வெகு சாதாரணமானது என்பதாலேயே அது அற்புதமானது. எளிய விஷயங்களைப் புரிந்து கொள்வதற்கான முயற்சி இல்லாமலே அறிவதற்கு எட்டாத விஷயங்கள் பற்றி நம்மால் தீர்ப்பு வழங்க இயலுமாகிறது. இவ்வாறான முரண்கள் ஆன்மிகம், ஞானம், யோகம் என்ற பேர்களில் ஊக்குவிக்கப்படுகின்றன. தெளிவான சிந்தனையும் நேரான மதியும்  தீர்க்கக்கூடிய விஷயங்களுக்கு யார் யாரையோ தேடி அலையும் நிர்ப்பந்தம் எமக்கு.

புற வளர்ச்சிக்கு மேலாக அக வளச்சியையும் உலக ஞானத்திற்கு மேலாக ஆன்மீகத்தையும் சமுதாயப் பொறுப்புகட்கும்,நீதிக்கும் மேலாக தவயோகத்தையும் வலியுறுத்துகிற சாமிமாரைப் பணக்காரர்களும், பிரமுகர்களும் சூளுகிறார்கள். விளம்பர யுகம் யாரை விட்டுவைக்கிறது. கைக் கெட்டுத் தொலைவிலுள்ள சுடர்விலக்கைவிடத் தொலைவில் மின்னும் வண்ண விளக்குகள் நம்மைக் கவருகின்றன. இவ்வாறான மயக்கங்களினின்று நாம் மீளுமுன் நம் கைக்கு எட்டக் கூடியன காணாமற் போய்விடுகின்றன. சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் பற்றி நான் எழுதுவதற்கு ஜோதி என்னைக் கேட்டது மட்டுமே காரணமல்ல. நான் அறிந்த நல்ல மனிதர்களுள் அவர் ஒருவர் என்பதும் அவரிடமிருந்து கற்கவேண்டிய நிறைய உள்ளது என்பதும் முக்கியமானவை.

அவரைப் பெயர் குறிப்பிட்டு எழுதுவதோ, பேசுவதோ இதுவே முதன்முறையாக இருக்கலாம். அவரது பிள்ளைகளுடைய பெயரைக் குறிப்பிட்டு, இவரை அவரது அப்பா என்றோ அவரது குடும்பத்தினருடன் போகும்போது அப்புச்சி என்று அவரது பிள்ளைகள் அழைப்பது போலவோ தான் அழைப்பது வழக்கம். அம்மா சந்திரசேகரத்தார் என்று சொல்வது நினைவு. மற்றப்படி அந்த வீடு அயல் எல்லாம் புளியடிமச்சி என்ற பெயராலேயே குறிப்பிடப்படும். அசாதரமானவை என்று நாம் வழமையாகக் கருதும் எதுவிதமான பண்பும் அவரிடமில்லை. பணம், பட்டம், பதவி என்றவாறான அளவுகோளால் மதிப்பிடும் வெற்றிகள் அவருக்குரியனவல்ல. அவற்றின் மீதான மோகமும் அவரிடமிருந்ததாகத் தெரியவில்லை. அதேவேளை மனிதரது தேவைகளும் உணர்வுகளுஞ் சார்ந்த ஆபாசங்கட்கு அப்பாற்பட்டவராகவும் அவர் இருக்கவில்லை. தனக்குத் தெரிந்த வாழ்க்கையை தனக்குத் தெரிந்த நெறிகட்கமைய ஆரவாரமில்லாமலேயே வாழ்ந்தவர் என்று சொல்லலாம்.

அவரது உலகநோக்கு மரபு சார்ந்ததும், பழமை பேணுவதுமான ஒன்று. அதை எல்லார் மீதும் திணிக்கும் நோக்கம் அவரிடம் இருந்ததில்லை.தன்னுடைய வயதையும் அனுபவத்தையும் மற்றவர்களை அடக்கும் ஒரு ஆயுதமாக அவர் பிரயோகித்ததாக நினைவில்லை. வயதுக்கேற்ற மரியாதை என்பது மனிதருடன் பேசுவதிலும் பழகுவதிலும் உள்ள பண்பு என்று மட்டும் வரையறுத்துக் கொள்ளாமல் அதிகாரத்துக்கான தகுதி என்று கருதுகிற மனோபாவம் அவரிடம் இருக்கவில்லை. இதனால் அவருடன் எந்த நேரத்திலும் எந்த சூழலிலும் எதைப்பற்றியும் சமத்துவமான முறையில் பேச இயலுமாயிருந்தது.என்னைவிட நாற்பத்தாறு வயது மூத்தவர் என்ற உணர்விற்கே இடமில்லாமல் பன்னிரண்டு பதின்மூன்று வயதில் கூட அவருடன் உரையாட முடியுமாயிருந்தது.

அவர் கோபப்படாதவரோ கடுமையான மொழி பேசாதவரோ இல்லை. நியாயவீனமானவையும் ஏமாற்றும் கடுமையான கோபத்தை வரவழைப்பதுண்டு. சிலசமயம் நெருக்கமானவர்களுடன் குரலை உயர்த்திப் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். புளியடிமச்சியுடன் இவ்வாறான சூடான வாக்குவாதங்கள் அடிக்கடி நிகழும். ஆனால் அவர்களைப் போல நெருக்கமான கணவன் மனைவி என்று பலர் இல்லை.

பிறர் பொருள் மீது ஆசைப்படாதவர்கள் கூட மற்றவர்களது நல்ல நிலையைப் பார்த்துப் பொறாமைப்படுவதுண்டு. தன்னுடைய நிலையை மற்றவர்களது நிலையுடன் ஒப்பிடுகிற அக்கறைகூட அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. பொய்ப் புகழ்ச்சிக்கான தேவையும் அவருக்கு இருக்கவில்லை. பிள்ளைகளுடைய படிப்பு, தொழில் போன்ற அலுவல்களிலும் அவர் அதிகம் குறுக்கிடவில்லை. இதனால் அதிகம் கெட்டுப் போனதாகவும் தெரியவில்லை. சில பெற்றோர்களினளவுக்கு மிகுதியாக குறிப்பிட்டிருப்பதாயின் அதன் விளைவுகள் எவ்வாறு அமைந்திருக்குமென யாரும் வேண்டுமானால் ஊகிக்கலாம். ஆனால் உறுதியான முடிவுகட்கு வருவது கடினம்.

வேகமாக மாறி வருகிற சமுதாயச் சூழலில் மூர்க்கத்தனமான பொருள் முதல்வாத விழுமியங்கட்கு நாம் பலியாகி வருகிறோம். மரபின் பெயரால் வெறும் சடங்குகளையே பற்றிக்கொண்டு நம்மையே இழந்து வருகிறோம். அந்த மரபில் மனித வாழ்வும் மனித உறவுகளும் தொடர்பான சமுதாய விழுமியங்கள் பற்றிய ஆழமான அக்கறையில்லாதபோது மரபின் நல்ல பண்புகளை இழந்து புதிய சூழலில் தவறான பண்புகளையே நாம் தழுவிக்கொள்ளும் அபாயம் உண்டு. இந்த வகையில் நவீன உலகத்துக்குள் வர ஆயத்தமில்லாத நிலையிலும், அதனுடன் பகையின்றித் தன் வாழ்வைத் தனக்குத் தெரிந்த விதிகட்கு அமையத் தனக்கு உண்மையாக வாழ்கிறவர்கள் போற்றத்தக்கோர். சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் அவர்களுள் ஒருவர். அவரது பெருந்தன்மை பற்றி அம்மா பலமுறை குறிப்பிட்டிருக்கின்றார். அவரது குறைபாடுகலாகக் காணப்பட்டவை பலவற்றை மீள நோக்கினால் அவை அவரது குறைபாடுகள் அல்லாமல் எங்களது பார்வையின் குறைபாடாகவும் கருத இடமுண்டு. அவருடைய  அந்தக் குறைபாடு மற்றவர்களுக்குக் கேடு செய்யும் வகையிலாவதில்லை. உலகில் உள்ள கபடும் வஞ்சனையும் பற்றி அவர் அறிவார். ஆயினும் தன்னை அவற்றில் ஈடுபடுத்திக்கொள்ள அவர் என்றுமே ஆயத்தமாக இருக்கவில்லை. இதைவிடப் பெரிய  வெற்றி என வாழ்க்கையில் அதிகம் இல்லை.

அவரிடமிருந்து திருக்கோணமலையின் பழைய நாட்கள் பற்றிக் கொஞ்சம் கேட்டறிந்திருக்கிறேன். சம்பிரதாயங்களின் பேரால் நடக்கும் பம்மாத்துக்கள் பற்றிய அவர் கூறிய நகைச்சுவையான கதைகளையும் கேட்டிருக்கிறேன். மேலும் கேட்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு நிகழவில்லை.வாழ்வின் பல நெருக்கடிகளின் மத்தியில் அவரால் தடுமாற்றமின்றி வாழ முடிந்தது.இது நாம் கற்க வேண்டிய ஒன்று. இதை நன்கு அரிய முடிந்தால் ஞானிகளாகவும் சித்தர்களாகவும் உலா வருகிறவர்களின் பின்னால் ஓட வேண்டிய தேவை இராது என நினைக்கிறேன்.

Thursday, 1 May 2014

வஜனாம்ருதம் தொடர்ச்சி-5

THURSDAY, 01 MAY 2014
வஜனாம்ருதம் தொடர்ச்சி 5 




ஆன்மீகப் புத்தகமோ 
அத்வைத வித்தகமோ 
"நான்" கடந்த தத்துவமோ 
ஞானத்தின் மெய்த்தவமோ 
தேன் கடந்த தித்திப்போ 
தேவ நிலை சித்திப்போ 
வான் கலந்த குருமணியே!
வாழ்த்துகிறோம்! வணங்குகிறோம்!!

214. இதில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளை நீங்களாகவே உங்களில் கண்டறிந்து சுயம் செயல்படுத்துவீரகளாக.

"பரமேஸ்வர ஸ்மரணம்"

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"

201. சீரிய குணந்தான் செல்வங்களில் சிறந்த செல்வம்.


202. தனது இதயத்தைப் பரிசுத்தப் படுத்தி எடுப்பதுதான் நிலையான சம்பத்து. அது எதனாலும் அழிக்கப்படுவதில்லை.



203. என்னதான் இருந்தாலும் நல்ல குணம் இல்லாவிட்டால் ஜீரண சக்தி குறைந்தவர்கள் உண்ணும் உணவு போன்று பிரயோசனமற்றது.

204. நீ ஒரு சக்திக் கனலாக மாறும் பொழுது உன்னை நோக்கி வரும் பிரச்சனைகள் தானாகவே கருகிவிடும்.



205. உலகம் உலகியல் தேவைகளில் தன்னிறைவு எய்தினாலும்,ஆத்மீக சைதன்யத்தின் உட்செறிவு இல்லாவிட்டால், சமுதாயத்தின் நிலை நாய்க்கூட்டத்தினுள் வீசப்பட்ட மாமிசத்துண்டு போலாகிவிடும்.


206. ஆத்ம சித்திகள் மனம் புத்தியைக் கொண்டு அப்பியாசித்து அடையக் கூடியதன்று. மனம் புத்திகள் அகந்தையால் செயற்படுபவை.ஆகையால் அகங்கார நாசத்திற்குப் பின் தோன்றும் விசேஷ பேறுகள்தான் ஆத்ம சித்திகள்.


207. நீ ஏதோ ஒரு துறையில் சிறிதளவு அறிவு பெற்றிருக்கலாம். அதை வைத்துக்கொண்டு படித்தவன், அறிவுடையவன்,நாகரீகமானவன் என்றெல்லாம் அகங்கரித்தால் அது உன்னை சர்வநாசத்தில் ஆழ்த்திவிடும்.


208. நீ எதைக் கற்றைந்தாலும் உன்னுடைய சொந்தப் பிரச்சனைகளுக்கு நீயாகவே தீர்வு கானமுடியாதிருந்தால் கற்றதின் பயன் என்ன?

210. மனதைச் சரியான முறையில் கட்டுப்படுத்துவதற்குரிய பயிற்சியும், மனித சக்திகளுக்கெல்லாம் ஆதாரமாய்  இருக்கின்ற கடவுள் சக்தியில் முழு நம்பிக்கையும் இல்லாவிடத்தில் மற்றெல்லாம் இருந்தாலும் நிலையான சுகமும் சாந்தியும் உண்டாவதில்லை.


211. இன்று வரையில் நீ செய்துவரும் கர்மங்களில் அதிக பங்கும், உன்னுடைய சரீரம், மனம் இவைகளின் சக்தியைக் குறைக்கக் கூடியதும், சொந்த ஆத்மாவை வஞ்சிக்கக் கூடிய செயல்களும்தான் செய்து வருகின்றாய். ஒரு நாளைக்கு ஒருதரமாவது தனிமையிலிருந்து ஆழமாய் சிந்தனை செய், இந்த உண்மை விளங்கும். எனவே சிந்தனை செய்து தெளிவுபடுத்திய பிறகு மனம், சரீரம், புத்தி இவைகளைப் பலப்படுத்தக்கூடியதும், ஆத்மாவின் சுகத்திற்கேற்றவாரும் உரிய கர்மங்களை மாத்திரம் செய்தால் சுகமுடன் வாழலாம்.


212. முறையறிந்து செய்தால் ஒரு சிறு செயல் மூலமாக இறைவனுடைய திருவருளை எளிதில் பெறலாம்.


213. நீ இறைவனை நோக்கி கீழ் வருமாறு பிரார்த்தனை செய். என்னுடைய பலவீனத்தாலும், அஞ்ஞானத்தாலும் பல குற்றங்கள் செய்தும், நல்லது பலதும் செய்யாமலும் விட்டேன். கருணைகூர்ந்து என்னை மன்னித்து விடு. இங்ஙனம் உன்னுடைய நெஞ்சுருகும் வண்ணம் பிரார்த்தனை செய்து வந்தால் இந்தப் பிறவியிலேயே பாவங்கள் நீங்கி திருப்தியும் சுகமும் பெறலாம்..


214. இதில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளை நீங்களாகவே உங்களில் கண்டறிந்து சுயம் செயல்படுத்துவீரகளாக.

"பரமேஸ்வர ஸ்மரணம்"

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"



வஜனாம்ருதம் - இரண்டாம் பாகம் 

1.
இறைவனைக் காண்பது கடினமான காரியமன்று. அதனைப் பார்ப்பதற்குரிய கண்ணாடியாகிய ஹிருதயத்தைப் பரிசுத்தப்படுத்துவதுதான் மிகக் கடினமானது.


2.
இறைவன் பொருட்டு தனக்கு மிகப் பிரியமானதை விட்டு விடுவதற்கும்,மிகவும் வெறுப்பானத்தை ஏற்றுக் கொள்வதற்கும் தயாராயிருப்பவனே யதார்த்தமான இறைபக்தன்.


3.
ஞானம், அது ஒரு இரவில் அடையக் கூடிய காரியமல்ல. நாகமணியைச் சுற்றிக் கிடக்கும் நாகம் போன்று, ஜீவனைச் சிற்றுக் கிடக்கும் தீய வாசனைகள் கடுந் தவத்தால் நீங்கும் பொழுது மாத்திரந்தான் ஞானம் பிரகாசிக்கும்.


4.
பார்க்கப் பார்க்க, பழகப் பழக அலுப்பும் வெறுப்பும் தட்டாமலிருப்பது எதுவோ அதுதான் சாஸ்வதமான அன்பும் இன்பமுந் தரும் முழுமுதற் தெய்வம்.


5.
புலனுணர்வுகள் கடுகளவேனும் இருக்கும் வரை ஞான ஒளியைக் காண்பதென்பது வெறும் ஒரு மனச் சங்கற்பம்.


6.
பக்தியென்பது மன உணர்வுகளை மீறிச் செல்லும் பொழுது அனுபவப்படுகின்ற ஒரு தனித்த பேரானந்தம்.


7.
இந்தப் பிரபஞ்சத்தை நாங்களோ எங்களுடைய பாட்டனாரோ படைக்கவில்லை. அதைப் படைத்தவன் இன்னொருவன் இருக்கிறான். நீ அணிந்திருக்கும் ஆடைகளை நிர்மாணிப்பவரை நேரில் கண்டிருக்காவிட்டாலும் அப்படியொருவர் இருக்கின்றார் என்பதை நம்பித்தானாக வேண்டும். இப் பிரபஞ்சம் சூனியத்திலிருந்து தோன்றவில்லை. இதைப் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான் என்ற பிரத்தியட்ச ஞானம் உண்டாகும் பொழுது நீயும் மற்றவர்களும் கர்த்தாக்களல்ல, வெறும் கருவிகளேயென்ற அறிவு வரும்,அகங்காரம் ஒழியும்.


8.
அடிக்கடி உனது குருவினிடத்தில் அமர்ந்திருந்து குரு முகத்திலிருந்து வரும் வார்ததைகளை ஹிருதயம் கொடுத்துக் கேள். அது உனது மனச் சலனங்களை தீர்த்து மனத்தென்பைத் தரும்.


9.
உனது துன்பங்களைத் தீர்க்கும் சக்தி உனக்கில்லாமல் இருக்கலாம். ஆயினும் அதனைத் தீர்க்கக் கூடிய ஒரு சக்தி உன்னிடம் இருக்கின்றது. அதற்கு உன்னைச் சுயாதீனப்படுத்தினால் காற்றில் பறந்து போகும் சாம்பல் போன்று துன்பங்களெல்லாம் பறந்து விடும்


10.
முழு மாணவ சமுதாயத்தையும் நம்முடன் வாழுகின்ற தெய்வமென்று கருதிக் கொண்டால் உயிர் ஐக்கியம் தானாகவே உண்டாகும்.


11.
நெஞ்சில் திருக்கை வால் ஏற்றுத் திரிபவர்களிடத்தில் எட்டத்தில் நின்று கொள்.


12.
பூமி முழுவதிலும் எவ்வளவோ குப்பை கூளங்கள் மண்டிக் கிடக்கின்றன. அவையெல்லாம் உன்னால் சுத்தஞ் செய்ய முடியுமா? இல்லை. ஆனால் பூமியின் ஒரு பகுதியாகிய உனது முற்றத்தை தினசரி கூட்டிச் சுத்தமாய் வைத்திருக்க முடியும். அதே போன்று உலகத்தவர்களுடைய மனதை உன்னால் சுத்திகரிக்க முடியாவிட்டாலும் உனது சொந்த மனதின் அழுக்காறுகளை நீக்கிச் சுத்தமாய் வைத்திருக்க முடியும்.


13.
மனிதருடைய மனக் குற்றங்கள்தான் இவ்வுலக துன்பங்களையெல்லாம் சிருஷ்டிக்கின்றன. ஜனங்கள் மனக் குற்றமற்றவர்களாயிருந்தால் இப்பூவுலகம் உண்மையில் ஒரு பூவுலகமாகவே இருக்கும்.