Saturday, 17 December 2011

வைக்கோல் பட்டறை..

சின்ன சிறுவனிவன்..
கன்னி கவிதைகளை..
எண்ணி எழுதையிலே - சிலர்
... எள்ளி நகைப்பார்.

என்ன ஏது என்று
எண்ணியறியாமலே..
திண்ணை காலியானால்..
தள்ளியும் படுக்கார்- தானும் படுக்கார்

புத்தன் அவனுக்கோர்
போதி மரம் - என
எத்தன் இவனுக்கோ - என்ன
விதித்ததென ஏங்கியிருக்கையிலே!

இத்தை உலகத்தில்
போதி மரம் என்று
ஒத்தை மரம் தான்
எஞ்சியிருப்பதைப்போல்...

சத்தக் கவிதைக்கு..
போதியும்.. பேதியும்..
சித்தக் கலக்கத்தில்..
ஒத்து வருவதா????

ரெகு ராமின் பாடலுக்கு ஒரு பதில்

ஞானம் பிறக்க நல்லாசிகள்

கன்னிக் கவிதைகள்
எண்ணிக் கவிபாடும்
சின்னஞ் சிறுவர்களே!
நீங்கள்
பண்ணிப் படைக்கின்ற
பாட்டையும் கேட்டையும்
பார்த்துக் கிடப்பதற்கா?
நாங்கள்
எண்ணித் தவங்கிடந்தோம்?
கண்ணில் படுகின்ற
கருத்துக்கள் பிழை என்றால்
உங்கள்
திண்ணைக் கதைஎதர்க்கு? போதிமர
எண்ணிக்கைதான் எதற்கு?
மண்ணைக் கவ்வியும்
எங்கள்
மீசையில் மண் ஒட்டல்ல
கோஷங்கள் இங்கெதற்கு?
வார்த்தை ஜாலங்கள் ஏனுனக்கு?
தாங்கள்
பாடும் கவிதைகள்
கன்னியா? கிழவியா?
காலங் கணிக்கட்டுமே! உனக்கு
ஞானம் பிறக்கட்டுமே!

அருள்ஜோதிச்சந்திரன்

Friday, 16 December 2011

எங்கே எனது போதிமரம்?


இறை தேடல்...

இறையென்று உண்டென்று நானறிவேனே

இறை தேடும் வழிதன்னை யானறியேனே

வழிதேடும் திசை கூட யாமறியோமே - திரும்பிய

திசையெல்லாம் சுவையாக கண்டேனே


பொருள் தேடும் பூமியில் - நான்

பொருள் வென்ற போதிலே

ஒரு திசை தன்னை வென்றேனே - இனி

பொருள் போதும் என்றேனே




புகழ் தேடும் மனிதருள் - நான்

புகழ் தேடி தானேயோ - இப்

புவிமாறி போனேனோ - இன்னும்

புகழ் தேடல் தொடருதே..




அருள் நாடும் உலகத்துள்

திரும்பிய திசை எல்லாம் நான் வென்று

இறுதியில் இறுமாப்பையும் கொன்று

அருள் கூடி இருள் நீங்கிச்செல்வேனோ - இல்லை




சிறு போக ஆசையில் சுழன்று

பொருள் தேடி.. பின் புகழ் தேடி..

வரன் தேடி..பின் இல் அறம் தேடி - மீண்டும்

சிறை நாடி செக்கிழுபட்டிருப்பேனோ


ரெகுராம்
Posted by Sidharthan at 15:25 1 comments:
அருள்ஜோதிச்சந்திரன் said...
ஒரு பதில்

இரை தேடும் உலகில்
இறை தேடல் உருவில்
உரையாடும் உந்தன்
கவியாடல் கண்டேன்.

குறை கூறி இங்கு
கவி பாட வில்லை
நிறைவாக எதையும்
நீ கூற வில்லை.

இறை யறிந்தாய் இறை
தேடும் வழி யறியாய் தேடிய
திசை எல்லாம் சுவை யறிந்தாய்
சுவைத்தவனை அறிந்தாயா?

பொருள் தேடி ஒருதிசை
வென்றாய் நீ - வாழ்க்கையின்
பொருள் தேடி எத்திசை
சென்றாய் நீ என்றும்?

புகழ் தேடி இப்புலம்
மாறி வந்தாய் நீ
பகல் தேடி கதிரவன்
பயணித்தல் அறிவாயா?

அருள் நாடும் உலகென்று
வைத்தாயே ஒரு ஆப்பு
அதுவே உன் கவிதைக்கு
ஒரு பெரும் முஸ்தாப்பு.

சிறு போக ஆசையில்
எல்லாமே அடங்கிவிட
பெரும் போக ஆசைகளை
பேரிட்டு எழுதிவிடு.

போதி மரத்தடியில் வெறும்
பேதிக்கு ஒதுங்காதே - பாவம்
இன்னும் சில புத்தர்களும்
ஒதுங்க சுத்தமாய் இருக்கட்டும்.

அருள்ஜோதிச்சந்திரன்

16 December 2011 18:33
Post a Comment

Saturday, 10 December 2011

மன வேதனை

தேவனைத் தொழுதேன் மனவேதனை அகல
நாதனைத் தொழுதேன் நரவேதனை அகல
ஆர்தனைத் தொழுதென் ஆரிடம் அழுதென்
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

மனதிலோ கவலை உடலிலோ முதுமை
அறிவிலோ அவலம் ஆத்மாவின் சபலம்
தனதில்லா பொருளை தனதென்றலையும்
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

உறவினைப் பகையென் றுணர்ந்த பின்னாலே
உறவினர் பகைவர்கள் உறவின் முன்னாலே
கரவில்லா அன்பை காண்பதற்கில்லை என்று
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

நெடுவழிப் பயணம் நெருங்கிய மரணம்
தருமொரு பாடம் சாதனையாக
கருவறை உறவும் கசந்ததைக் கண்டு
மானுடம் அழுதால் மறைபொருள் அழுமோ ?

அருள்ஜோதிச்சந்திரன் 10 /12 /2012

Wednesday, 18 August 2010

Yogar Swamikal Natsinthanai

தன்னை அறிந்தால் தவம்வே றில்லைத் 
தன்னை அறிந்தால் தான்வே றில்லைத் 
தன்னை அறியச் சகலமு மில்லைத் 
தன்னை அறிந்தவர் தாபத ராமே 

பொன்னை யன்றி பொற்பணி யில்லை 
என்னை யன்றி ஈசன்வே றில்லை 
தன்னை யன்றிச் சகம்வே றில்லைத் 
தன்னை அறிந்தவர் தத்துவா தீதரே 

ஆதியும் இல்லை அந்தமும் இல்லை 
நீதியும் இல்லை நெறியும் இல்லை 
சாதியையும் இல்லைச்  சமயமும் இல்லை 
ஓதி உணர்ந்தவர் உறுதி மொழியே 

நம்மையுந் தீமையும் நங்கட் கில்லைத் 
தொன்மையும் புதுமையும் தூயோர்க் கில்லை 
அன்னையுந் தந்தையும் ஆன்மாவுக் கில்லை 
சொன்ன சுருதியின் துணிபிது வாமே 

காலமு மில்லைக் கட்டு மில்லை 
மூலமு மில்லை முடிபு மில்லை 
ஞாலமு மில்லை நமனு மில்லைச் 
சால அறிந்த தவத்தி னோர்க்கே.

Saturday, 10 July 2010

ஒரு வசனம் விதைத்த கவிதை

There was death at its begining as there would be death again at its end.
முடிவில் மரணம் இருப்பதைப் போலவே ஆரம்பத்திலும் மரணம் உண்டு.



பெருநாதப் பிழம்பொளிரப் பிறந்ததண்டம்                                                                                
ஒருநாத ஓசையின்றி ஒடுங்கும் அணுக்கள்
இருநாமம் ஒன்றுபட்டால் அணுவண்டம்
இதில் நாங்கள் எங்கிருந்து எங்குவந்தோம்.

பரிணாமம் பழங்கதையாய் போகுங்காலம்
புரியாத புதிரெல்லாம் புரிந்துபோகும்
அறிவாலே அறிவையார் அறியவல்லார்
அறியாத அறியாமை ஆட்சிசெய்தால்.

தெரியாத பொருளை நாம்தேடுகின்றோம்
தெரிந்ததைத்தான் தேடலில் தெரிந்துகொள்வோம்
தெரிந்ததைநாம் தேடியேன் தெரியவேண்டும்
தேடுதலை நிறுத்துதலே தெளிவுதானே.

சார்புநிலை கொள்கையினைச் சற்றுப்பார்ப்போம்
சார்ந்தஒரு நிலையினில்தான் காலதூரம்
பிரமத்தின் சூத்திரத்தை விளங்கிக்கொள்ள
பிரமத்தை விட்டுநீ விலகவேண்டும்.

சூனியத்தின் சூட்சுமமும் சூனியந்தான்
முடிவிலியின் எதிரொலியும் முடிவிலிதான்
வாழ்க்கையின் முடிவுமொரு மரணமென்றால்
வாழ்க்கையின் தொடக்கமும் மரணந்தானே.

வித்தா அண்டமா என்ற வாதம்
விதைத்த வார்த்தைதான் விதண்டாவாதம்
சாவில் பிறப்பா? என்ற வாதம்
சாவில் பிறப்பாய் என்று மாறும்.

சாவில் பிறந்தேனா? நான்சாகப் பிறந்தேனா?
வாழ்வில் வந்ததெல்லாம் வாழ்வாய்வந்ததுவா?
வாழ்வாய் வந்ததெல்லாம் வாழ்வில் வந்ததென்றால்
வாழ்வில் வராததொன்று முடிவில் வருவதொன்றா?

முடிவில் வருவதொன்று முதலில் வந்திருந்தால்
முடிவே முதலா? முதலே முடிவா?
விடைநான் கண்டேன் விளங்கிக்கொண்டேன்
விளங்கிக்கொண்டேன் விடைபெறுகின்றேன்,





ஸ்ரீமத் சுவாமி கங்காதரானந்தாஜி


கலியுகத்தில் கடவுளின் கருணை பெற பஜனை வழி

ஸ்ரீமத் சுவாமி கங்காதரானந்தாஜி

நல்ல குருநாதன் என வழங்கித் திருக்கோணமலையில் சிவயோக சமாஜத்திலும் பன்குளக்குடிலிலும் நடராஜபுரத்திலும் ஐரோப்பியர் பலரை ஆட்கொண்டு எம்மவருக்குப் பத்திநெறி அறிவித்துப் பலநூல்கள் படிக்கவைத்துச் சித்தமலம் நீக்கிய சிவனேயென வாழ்ந்தவர் சுவாமிகள். தமிழரின் நுண்கலைகளை சிவயோகசமாஜத்தில் இருந்தவாறே உலகறியச் செய்தவர். அவர் கடைசியாக அருளிய உபதேசம்...

நாதல்ய யோகம் அல்லது நாம பஜனை என்பது பக்த ஜனங்களுடைய சித்த விருத்திகளை இருதய மருதமான ஆத்ம நாதத்தில் லயப்படுத்தி ஒடுக்குவதற்குரிய ஒரு லலிதமான ஆத்ம சாதனை.
எய்யும் அம்பு கூரியதானால் குறியில் ஆழமாய்த் தைப்பது போன்று கூர்மையான மனம் உடையவர்களால்தான் இறைவன் என்ற குறியைத் தவறாமல் அடைய முடியும்.
மனோலயம்...அதில்தான் மனம் ஒயுங்கிக் கூர்மை பெறுகின்றது. தீட்சா முறைகளும் கடினமான சாதனைகளும் இன்றி பாலர்களில் இருந்து வயோதிபர்கள் வரையும் பாடிப் பாடியவாறு மனம் இறைவன்பால் லயத்து ஒடுங்குவதற்கேற்ற எளிதான மார்க்கந்தான் பஜனை.

Saturday, 12 June 2010

அம்மா எங்களுக்கு நீயே முழு உலகு


எமை ஈன்ற அன்னைக்கு இன்றகவை நூறு
அமைகின்ற காரணம் கொண்டுவகையோடு
எமைச்சார்ந்த சுற்றங்கள் ஒன்றாகக் கூட
சுவைத்தமிழோடு நான்வந்தேன் நன்றாகப்பாட.

நன்றாக பாட்டிசைப்பார் நம்மன்னை என்றும் – குணக்
குன்றாக வாழ்ந்துயர்ந்தார் இவ்வுலகிலென்றும் – மனக்
குறைதீர்க்க மற்றவர்கள் வந்துரைக்கும் சொல்லை – பிறர்
செவிகேட்க்க உரைத்ததில்லை நம்மன்னை கொள்கை.

கைநயம் சமையல்கலைநயம் சொல்நயம் – சொல்லும்
கதைநயம் தையல்திறன்நயம் மணிகள்புணைநயம் – வெல்லும்
வினைநயம் உழுக்கெடுக்கும் விரல்நயம் கணிதப்புயல்நயம் – செல்லும்
பயணத்தில் சேர்ந்துவக்கும் மனநயம் மெல்லாமுண்டெம் அன்னைக்கே.

அன்னைக்கே என்றிருந்தோம் அன்று; இன்றுநம்
பிள்ளைகட்காய் வாழ்ந்தபோதும் அன்னையின் நினைவகலா
பிள்ளைகளாய் வாழ்கின்றோம் பிரிந்துகூடிச் சிறுபிள்ளைகள்போல்
சண்டையிட்டும் அறிந்துணர்வோம் நம்மன்னையின் பொறுமைதனை.

பொறுமைதனை போதித்தாள் பிறர்வாழ்வில் பரிவுதனைக் காண்பித்தாள் - நம்

அறிவுதனை நாளும் செதுக்கி அன்பு வயல் உழுவித்தாள்
அடைகாக்கும் கோழிதனை உவமைகாட்டி எமை
விடைதுரத்தும் காலமும் வருமென்றாள்; விடைதுரத்தாமலே விட்டகன்றாள்.

விட்டகன்றாள் விண்ணுக்கு வினைப்படியே போயமர்ந்தாள்
பட்டகன்றாள் மண்ணிற் படுந்துயரம் பார்த்தகன்றாள்
தொட்டகன்ற போதும் தொடாத தூரத்தே நின்று
பற்றகலாப்பாசத்தில் எமைவிட்ட நேசத்தின் திருவுருவே.

திருவுருவாம் எந்தையின் திருக்கரங்கள் பற்றியிங்கு
பெருகுவதாம் பிள்ளைகள் ஏழும் பெற்றுப் பிறப்பறுத்து
உருகுவதாம் பாசத்தில் எம்முள்ளங்களை உழலவிட்டு
விலகுவதா விதிப்பயணம்? விடைகூர் அம்மா.

அம்மா என்றுனையழைத்தோம், ஆனந்தித்தோம், அல்லல் மறந்தோம் – இன்று
அம்மா என்றாரழைத்தாலும் உன்முகமே நம்முள் தோன்றும்
அம்மா இவ்வுலகிற்கு நீ யாரோ ஒரு நபர், சிலருக்கு வெறும் உறவு
அம்மா எங்களுக்கு நீயே முழு உலகு. எமைக் காப்பாய் அம்மா.

For the whole world you may be nothing.
But for us you are the whole world.